Thursday, 15 January 2026

India’s Recent PSLV Setbacks: What They Mean—and What Needs to Happen Next

 

India’s Recent PSLV Setbacks: What They Mean—and What Needs to Happen Next




India’s space programme has long been admired for its engineering discipline and resilience. However, the back-to-back mid-flight anomalies of PSLV-C61 (May 2025) and PSLV-C62 (January 2026) mark an unusual and concerning phase for the country’s most reliable launch vehicle.

Both missions resulted in the loss of high-value Earth-observation satellites intended for strategic and national security use, directly affecting India’s space-based surveillance and navigation capabilities.

A Pattern That Deserves Attention

Between 2017 and 2026, Indian Space Research Organisation conducted 44 missions, of which five failed. What stands out is that all five failures were linked to national security or strategic payloads, and three occurred within just one year (Jan 2025–Jan 2026).

Individually, each failure had a different technical cause. Taken together, their clustering raises legitimate questions—not of intent or interference, but of systemic stress, process gaps, or quality assurance blind spots that must be addressed head-on.

The Cost Goes Beyond Money

These failures are expensive—each mission likely costs tens to hundreds of millions of dollars, and re-flying them requires similar investment again. But the larger cost is strategic delay:

  • Slower deployment of surveillance, navigation, and hyperspectral imaging capabilities

  • Dependence on foreign commercial satellite services in the interim

  • Congestion of future launch schedules

  • Opportunity loss for India’s rapidly growing private space ecosystem

Importantly, these failures occurred in rocket stages, subsystems, and satellite platforms that have been in service for decades, reinforcing a hard truth of aerospace engineering: rocketry is a zero-error business.

PSLV-C62: What We Know So Far

The PSLV-C62 mission, carrying the EOS-N1 (Anvesha) hyperspectral satellite along with multiple commercial payloads, deviated from its planned trajectory following disturbances near the end of the third stage (PS3). ISRO acknowledged the anomaly quickly and initiated data analysis.

While terminology like “disturbance” or “deviation” is technically accurate, clarity matters. An unaccomplished mission is a failure, and acknowledging it plainly is the first step toward faster learning and stronger recovery.

Resilience Across the Ecosystem

Encouragingly, India’s private space companies responded with maturity and resolve. Firms like Dhruva Space and Skyroot Aerospace publicly emphasized learning, readiness to re-manifest payloads, and confidence in ISRO’s ability to bounce back.

This response reflects a maturing space ecosystem—one that understands both the technical and emotional risks inherent in launch activity.

It is also worth noting that LVM3 (Gaganyaan-class launcher) continues to maintain a 100% success record, offering reassurance that reliability still exists within the broader launch portfolio.

Where Transparency Matters Most

One issue drawing increasing attention is the absence of publicly released Failure Analysis Committee (FAC) reports for recent missions such as PSLV-C61 and NVS-02. Historically, ISRO’s willingness to publish detailed failure analyses has been a cornerstone of its credibility and learning culture.

At a time when:

  • PSLV is marketed globally for rideshare launches

  • Strategic missions are increasing in complexity

  • Human spaceflight (Gaganyaan) is approaching

restoring transparent, detailed failure reporting is essential—not for blame, but for trust, accountability, and systemic improvement.

What Needs to Be Done—Clearly and Urgently

This moment calls for course correction, not defensiveness. Key priorities should include:

  1. Clear root-cause identification of PS3 anomalies and confirmation that corrective actions fully break the failure chain

  2. Public release of failure analysis summaries, as was done historically

  3. Independent cross-reviews of solid motor, cryogenic, and satellite propulsion subsystems

  4. Stronger configuration control and quality audits for long-serving “legacy” components

  5. Faster replacement strategies for lost strategic capabilities (SAR, hyperspectral, NavIC)

  6. Reduced public signalling of sensitive mission details, balancing transparency with security

Looking Ahead

Space is unforgiving. Setbacks are part of the journey—but how openly and decisively an organisation responds defines its future.

India’s space programme has recovered from worse situations in the past, precisely because it combined engineering rigour, intellectual openness, and institutional humility. Those strengths are still present—and must now be reaffirmed.

The setback stings. The questions are uncomfortable. But the path forward is clear: acknowledge failure, learn faster, fix decisively, and move ahead with confidence.

After all, it’s still rocket science—and that has never been easy.

Wednesday, 14 January 2026

வங்கக்கடல் கடைந்த!

 





வங்கக்கடல் கடைந்த!


திருப்பாவை முழுவதும் பாவை நோன்பின் அனுஷ்டானமாக, ஆய்க்குலத்தில் அவதரித்த சிறுமியர் சிலர் உறுதியுடன் சங்கல்பம் செய்து, முதலில் பரமாத்மாவை சரணடைந்து அவன் திருக்குணங்களையும் திருப்புகழையும் பாடுகின்றார்கள். அதன்பின், ஒருவரொருவராக அல்லாது, சமூகவாய்ந்த பாகவத ஸங்கமாகத் தோழிகளை எழுப்பி ஒன்றுகூடுகின்றார்கள்.



அவ்வாறு தோழிகளுடன் கூடிச் சென்றபின், நந்தகோபன், யசோதை, நப்பின்னை பிராட்டி முதலியோரை எழுப்பி, அவர்களது அனுக்ரஹத்துடன் நந்தகுமாரனாகிய கண்ணனை எழுப்புகின்றார்கள். எழுந்த கண்ணனிடம், “எங்களுக்கு பறை அருளவேண்டும்; அதனுடன் நோன்புக்குரிய சன்மானங்களையும் தந்தருள வேண்டும்” என்று வேண்டுகின்றார்கள்.



ஆனால் அவன் அருளை வழங்கத் தொடங்கியவுடன், “பறை ஒன்றே எங்களுக்குப் போதுமானது அல்ல; எப்போதும் உன்னோடு நிரந்தர சம்பந்தத்தில் நிலைபெற வேண்டும்; உனக்கு எந்த விதமான கவனச்சிதறலும் இல்லாமல் நிரந்தர கைங்கர்யம் செய்ய வேண்டும்; அதுபோலவே, எங்களில்லாமல் நீயும் இருக்க இயலாது என்பதையும் நாங்கள் அறிவோம்” என்று தங்களது பரமப்ராப்தி அபிலாஷையை வெளிப்படுத்துகின்றார்கள்.



இவ்வாறான இக் கிருஷ்ண லீலாநாடகத்தைப் போல அமைந்த திருப்பாவையின் இறுதிப் பாசுரம், இதனைப் படித்து, கேட்டுப் பாடி, அனுபவிப்பவர்களுக்கு உண்டாகும் பலனை எடுத்துரைக்கும் பலசுருதிப் பாசுரமாகும். மேலும், இதில் ஆண்டாள் தேவியின் திருநாமமும், பெரியாழ்வாரின் திருநாமமும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதால், இப்பாசுரம் “திருநாமப் பாசுரம்” என வைஷ்ணவ சம்பிரதாயத்தில் அழைக்கப்படுகிறது.



இவ்விதமாக, காவிய மரபிற்கேற்ப இறுதி பாசுரத்தில் கோதாதேவி தம் திருநாமத்தையும், தம் குலப்பிறப்பையும், தாம் அருளிச் செய்த இப்பணியின் தன்மையையும் சுருக்கமாக வெளிப்படுத்துகின்றாள். மேலும், இப்பாசுரம் முழுவதையும் அனுசந்திப்பதால் கிடைக்கும் பரம பயனையும் இச்சரம பாசுரம் விளக்குகிறது. அதாவது, இத்திருப்பாவையை எளிமையாக அனுசந்திப்பவர்களும் கூட, இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும், கருணைமிகு எம்பெருமானும் அவன் திருக்காருண்ய சக்தியான ஸ்ரீமஹாலக்ஷ்மீ தேவியும் பரிபூரண அனுக்ரஹத்தைப் பொழிவார்கள் என்பதே இதன் தாத்பரியம்.



இத்திருப்பாவையை முறையாகக் கற்றோ, பக்தியுடன் பாராயணம் செய்பவர்க்கு, தாமே கோபிகையாக இருந்து நோன்பினை அனுஷ்டித்ததற்குச் சமமான பலன் உண்டாகும் என்றும் வ்யாக்யானகாரர்கள் விளக்குவர். இவ்விஷயத்தில் பட்டர் ஸ்வாமி அடிக்கடி உபதேசித்த உவமையொன்று உண்டு: பசுவானது உயிரற்ற புல்லால் நிரப்பப்பட்ட கன்றின்மீதும் தன் உயிருள்ள கன்றின்மீது காட்டும் அதே கருணையுடன் பாலைச் சொரியும்; அதுபோலவே, ஆண்டாள் தேவியின் அனுகாரத்தைக் கைக்கொள்ளும் சக்தியும், கோபிகைகளின் அனுஷ்டானத்தை முறையாகச் செய்யும் ஆற்றலும் நமக்கில்லையாயினும், பரமாத்மா தன் கருணையை நம்மீதும் சமமாகப் பொழிவான் என்பதே இப்பாசுரத்தின் அநுபவ ரகசியமாகும். (தூ மாஜி மாவுலி... என்ற அபங்கத்தில் துக்காராம் மகாராஜ் இதையே சொல்கிறார்.



“வங்கக் கடல் கடைந்த மாதவனை”: இங்கு கோதாதேவி, தேவர்கள் அமுதம் பெறும் பொருட்டு பாற்கடலைக் கடைந்த நிகழ்வை நினைவூட்டுகிறாள். அந்தச் சமயத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீமஹாலக்ஷ்மி பிராட்டி அவதரித்து, எம்பெருமானால் நித்யபத்னியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள். பரமன் வங்கக்கடலை கடைந்தது தேவர்களுக்கு அமுதம் எடுத்துத் தர மட்டுமல்ல, தனக்குரியவளான திருமகளையும் மீட்டெடுத்து தன் திருமார்பில் தரித்துக் கொள்ளவும் தான்.  வெளிப்படையாக அது பாற்கடல் கடைதலாகத் தோன்றினாலும், உள் பொருளாக அது பக்தி என்னும் மத்துகோலால் மனம் என்னும் கடலைக் கடைந்து, பிரேமபக்தி மற்றும் கைங்கர்யானந்தம் என்னும் அமுதத்தைப் பெறுதலே ஆகும்.



அக்கடலில் தோன்றும் கப்பல்கள், ஸம்ஸார சாகரத்தில் அலைக்கழிக்கப்படும் ஜீவர்களைச் சுட்டுகின்றன. அந்தக் கரை கடக்க, பரமாத்மாவே நாவிகனாக வேண்டுமென்பதையும் இது உணர்த்துகிறது. “பாற்கடலில் கப்பல்கள் ஏன்?” எனில், அவை ச்வேதத்வீப வாசிகளின் பயணத்திற்காக இருந்திருக்கலாம்; அல்லது கடைதலின் போது எழுந்த மலைகளும் அலைகளும் கப்பல்களைப் போல் தோன்றியிருக்கலாம்.



அன்றைக்கு தேவர்களின் பொருட்டு இவ்வளவு பெரும் காரியத்தைச் செய்த எம்பெருமான், தம் அந்தரங்க பக்தர்களான நம்முடைய அபிலாஷையை ஏன் நிறைவேற்றமாட்டான்? அன்றைய கடைதல் தெய்வீக தாயை அடைவதற்கான ஒரு பாவனை; இன்றைய நோன்பு, கோபிகைகள் அவனுடைய திவ்ய கைங்கர்யத்தை அடைவதற்கான ஒரு பாவனை. அந்தக் கடைதலின் பயன் “மாதவன்” ஆகுதல்; அதுபோல இந்நோன்பின் பயன் அவனுடைய நித்திய சேவையை அடைவதே. ஜீவர்கள் எம்பெருமானை அடைய தெய்வீக தாயின் புருஷகாரமே அத்தியாவசியம்; ஆகையால் அவள் எப்போதும் எம்பெருமானுடன் இருப்பதே நமக்கு மிகப்பெரிய வரமாகும்.



“கேசவனை”: பரமபதநாடிப்பாடியில் (இரண்டாம் பாசுரத்தில்) எம்பெருமானின் திருவடியில் தொடங்கிய கோபிகைகள், இங்கே அவன் திருமுடிவரைப் போற்றி நிறைவுசெய்கின்றார்கள். அவனுடைய திவ்ய கேசம், அவன் பிராட்டிகளாலும் ரசிக்கப்படும் அழகுடையது. பாற்கடல் கடைந்தபோது அவன் கேசக்குழல் அசைந்த காட்சி தெய்வீக தரிசனமாக இருந்தது. கேசி என்ற அசுரனை அழித்ததன் மூலம் நம் தடைகளையும் நீக்க வல்லவன் என்பதை “கேசவன்” என்னும் நாமம் உணர்த்துகிறது. மேலும், பிரம்மா–ருத்ராதிகளுக்கும் மேற்பட்ட பரத்துவத்தையும் இந்நாமம் சுட்டுகிறது.



கேசவா மாதவா என்பது சொல்நடை. ஆனால் இங்கு மாதவனை, கேசவனை என்று சொல்லி, மாதவனை முதலில் சொல்கிறார் கோதாபிராட்டி. திருப்பாற்கடலை மந்தாரமலையினை அச்சாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது மந்தாரமலை கீழ்நோக்கி இறங்கப் பெருமாள் கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து உதவினார் .



அப்படி தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதிலிருந்து பல பொருட்கள் வெளிவந்தது. ஆலகாலம் விஷம், கற்பக விருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் (இந்திரனுடைய யானை, குதிரை) பாரிஜாத மரம், தன்வந்தரி, அமிர்தம் வந்தது. இன்னொரு முக்கியமானவர் வந்தார் அவர் - மஹாலக்ஷ்மி. அவர் வந்தவுடன், விஷ்ணு மஹாலக்ஷ்மியை  தமது மார்பில்(ஸ்ரீ வக்ஷஸ்தலம்) அணைத்துக் கொண்டார். ஆகா அவர் மாதவன் ஆகிறார். 



நீங்களே பார்த்திருப்பீர்கள். வீட்டு வேலையை ஆரம்பிக்கும் முன் பெண்கள் கூந்தலை இழுத்து முடிந்து டைட்டாக கொண்டை போட்டுப்பார்கள். நம் விஷ்ணுவும் அதே போல மந்தார மலையைத் தாங்க செல்லும் முன், “மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ” என்று திருமங்கை ஆழ்வார் அனுபவிக்கும் கூந்தலை நன்றாக முடிந்துகொண்டு சென்றார். தாம் செய்துகொண்டிருந்த காரியத்தில் ஈடுபட்டிருந்ததால் கேசம் கலைந்தது கூட தெறியாதிருந்தார். மஹாலக்ஷ்மியை மார்பில் அணைத்தவுடன் கேசத்தை முடிந்தார்.. எனவே மாதவனுக்கு பிறகு கேசவன்...



“திங்கள் திருமுகத்து செயிழையார் சென்று இறைஞ்சி”: கோபிகைகளின் திருமுகம், எம்பெருமானின் சங்கதியால் பூர்ணசந்திரனைப் போல ஒளிவிடுகிறது. அவர்கள் அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர்; ஏனெனில் 27-ஆம் பாசுரத்தின்படி, அவை நப்பின்னை பிராட்டியாலும் ஸ்ரீகிருஷ்ணனாலும் அருளப்பட்டவை. இவ்வாறு பரமப்ரீதியுடன், அன்பும் பக்தியுமாகக் கண்ணனை அணுகி வணங்குகின்றார்கள். திருப்பாவை ஆரம்பத்தில் “கதிர் மதியம் போல் முகத்தான்” என்று உவமை சொன்ன ஆண்டாள் இதில் ”திங்கள் திருமுகத்து” என்கிறார். இந்த ஒரு பாசுரம் தவிர, திருப்பாவையில் எங்குமே ”திருமுகத்து” என்ற பிரயோகம் கிடையாது. லட்சுமி மார்பில் வந்த பிறகு உவமையும் கிடையாது. பெருமாளின் முகம் திங்கள் ‘திரு’ முகத்தானது.



“அங்கப் பறை கொண்ட ஆற்றை”: அங்கே அவர்கள் தம் இலக்கை—பறை என்று சொல்லப்படும் நித்திய கைங்கர்யத்தை—எவ்வாறு அடைந்தார்கள் என்பதைக் குறிப்பதாகும்.



“அணி புதுவை பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை”: இங்கே “பட்டர்பிரான்” என்பது விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரைக் குறிக்கும். பாண்டியராஜ சபையில் வைணவ பரத்துவத்தை நிலைநாட்டியதாலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்திரசாயி கிருஷ்ணனுக்குத் தினமும் மாலைகள் செய்த கைங்கர்யத்தாலும் அவர் இப்பெயரைப் பெற்றார். குளிர்ந்த, புதிய தாமரைமாலையால் அலங்கரித்தல், அவரது கைங்கர்யத்தின் சின்னமாகும்.



ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு அதிசய தலம்—அங்கே பரமாத்மா, தெய்வீக தாய் (ஆண்டாள்), ஜீவாத்மா (கருடாழ்வார்) மூவரும் ஒரே மேடையில் தரிசனம் தரும் பெருமை உடையது.



“கோதை சொன்ன”: கோபிகைகளின் மன வேதனைகளையும் பரவசங்களையும் அனுபவித்து நிறைவு பெற்ற ஆண்டாள் அருளிச்செய்த பாடல்கள் என்பதால், இவை குற்றமற்றவை. வேதங்கள் ஸ்வயம்பூவாகத் தோன்றினாலும், திருப்பாவை கோதையின் திருநாவிலிருந்து தோன்றியதால், அனுபவ ரீதியில் வேதங்களுக்கும் மேலான சிறப்பை அடைகிறது. க்ஷீராப்திநாதனைவிட ஸ்ரீகிருஷ்ணன் பரமபுருஷன் என்பதும் இவ்வழி உணர்த்தப்படுகிறது.



“சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே”: எவ்வாறு உலகத் தாய் ஆண்டாளாக அவதரித்தாளோ, அவ்வாறு உபநிஷத்துக்கள் திருப்பாவையாக அவதரித்தன. “மாலை” என்பது இப்பிரபந்தத்தின் சௌந்தரியத்தையும் ஸ்தோத்திரத் தன்மையையும் குறிக்கும். கண்ணன் கோதைக்கு ஒரு மலரையே தந்தான்; ஆனால் கோதை அவனுக்கு முப்பது பாடல்களைக் கொண்ட மாலையை அளித்தாள். மாலையில் ஒரு மணி இழந்தாலும் அழகு கெடும் போல, ஒரு பாசுரம் கூட விடுபட்டால் திருப்பாவையின் ரசம் குறையும். பொருளறியாமலே ஒருமுகச்சித்தத்துடன் ஓதினாலும் கூட, எம்பெருமானின் அருள் கிடைக்கும் என கோதை உறுதிப்படுத்துகிறாள்.


இது தனிமையில் அல்ல, சங்கமாக அனுபவிக்க வேண்டியது. கடினமான சம்ஸ்கிருதத்தில் அல்ல; எளிய, செம்மையான தமிழில், முப்பது பாசுரங்களாக அருளப்பட்டது.



“இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் செங்கண் திருமுகத்து”: இன்றும் ஆண்டாள் பாசுரங்களை ஓதுவோர், நான்கு மலைபோன்ற தோள்களும், செந்நிற கண்களும், அழகிய திருமுகமும் உடைய எம்பெருமானின் திருவருளைப் பெறுவார்கள். பக்தர்களுடன் பரவசம் கொண்டபோது அவன் தோள்கள் பெருகுவது போல விரிகின்றன. கிருஷ்ணாவதாரத்தில் பகைவர்கள் அவனை இரு கைகளுடன் கண்டனர்; ஆனால் கோபிகைகள், அர்ஜுனன் போன்ற அந்தரங்க பக்தர்கள் அவனை நால்கைகளுடன் அனுபவித்தனர். அவன் செங்கண்கள் ஆனந்த நிறைவின் அடையாளம். "ஈரிரண்டு மால்வரைத்தோள்" என்று ஆண்டாள் சொன்னதில் ஒரு சுவை இருக்கிறது! அதாவது, திருப்பாவையைத் தப்பாமல் உரைக்கும் அடியவரை, இரு கைகள் போதாது என்று பரந்தாமன் தனது நான்கு கைகளால் அரவணைப்பானாம்! 



“செல்வத் திருமாலால்”: எம்பெருமானின் செல்வம் உபய விபூதிகளாகிய லீலாவிபூதி, நித்யவிபூதி. மேலும் அவன் செல்வத்தின் தேவியான மகாலக்ஷ்மியின் நாதன்; அவளுக்கே அவன் செல்வமாக இருப்பவன். அது போலவே, "திருமுகத்துச் செல்வத்திருமாலால்" என்று சொல்லும்போது, திரு(மகளின்) சம்பந்தத்தாலேயே பரமன் செல்வத் திருமால் ஆகிறான் என்பதை உணர்க! ஆக, திருப்பாவை ஓதும் அடியவர் லட்சுமி கடாட்சம் பெற்று இன்புறுவர்.



“எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்”: இவ்வுலகிலும் மறுவுலகிலும், எங்கும் எப்போதும் எம்பெருமானின் திருவருளைப் பெற்று, நித்தியானந்தத்தை அனுபவிப்பார்கள்.



ஸ்ரீகிருஷ்ணன்–ஆண்டாள் திவ்ய ஐக்யத்தை மனக்கண்ணால் அனுபவிப்பதே நமக்குக் கிடைக்கும் பேரின்பம். அதனாலேயே, இந்நாளில் ஆண்டாள்–ரங்கநாதன் (கிருஷ்ணன்) திருக்கல்யாணம் அனைத்துத் திவ்யதேசங்களிலும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது.



ஸ்ரீமஹாவிஷ்ணு, பாற்கடலைக் கடைந்தபோது, அக்கடலில் இருந்த கப்பல்களுக்கு எவ்வித அசைவோ, சலனமோ உண்டாகாதபடி அதி அதிசயமான முறையில் கடைதலை நிகழ்த்தினான். மந்தார மலை மத்துகோலாகவும், வாசுகி நாகம் கயிறாகவும் இருந்து, தன் பரமசக்தியால் கடைதலை நிறைவேற்றி, ஸ்ரீமஹாலக்ஷ்மி பிராட்டியைத் தன் நித்யபத்னியாக அடைந்தான்.
அதேபோல, இப்போது எம்பெருமான் “ஸம்ஸார சாகரம்” எனப்படும் வாழ்க்கைக் கடலைத் தன் அபார கருணையால் கடைந்துள்ளான். இதில் சேதனனான ஜீவனின் சரீரத்திற்கு எவ்விதக் கிளர்ச்சியும், துன்பமும் ஏற்படாதபடி, தன் ஸங்கல்பத்தையே மத்துகோலாகவும், தன் திருவருளையே கயிறாகவும் கொண்டு, ஸ்ரீமஹாலக்ஷ்மியைவிடவும் அரிய பொருளான ஜீவாத்மாவையே தன் அடைவாகப் பெற்றான். இது எம்பெருமானின் ஜீவகருணையின் உச்சநிலையை வெளிப்படுத்துகிறது.



அவ்வாறு, ஞானம், பக்தி, வைராக்யம் ஆகியவற்றால் ஒளிவிடும் முகங்களை உடைய எம்பெருமானின் பக்தர்கள், அளவிலா பிரேமையால் அவன் திருச்சந்நிதிக்கே சென்று, வெளிப்படையாக “பறை” வேண்டியவர்களாக இருந்தாலும், உண்மையில் சுயநலமற்ற நித்திய கைங்கர்யமே தங்களது புருஷார்த்தம் என அடைந்தார்கள். கோபிகைகள் எம்பெருமானை அணுகி, தங்கள் அபிலாஷையை எவ்வாறு நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பதனை, ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தரின் புதல்வியான ஸ்ரீ ஆண்டாள், மிக இனிமையாகப் பாடி அருளினார்.



இந்தத் திருப்பாவை, சங்கமாகப் பாடத்தக்கதுமான, காலத்தால் அழியாத பெருமை கொண்ட, தமிழ்ச் செய்யுள்களால் ஆன மாலையாகிய பிரபந்தமாகும். இதிலுள்ள முப்பது பாசுரங்களையும் ஒன்றையும் விடாது ஓதுவோர், இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும், செங்கண்களும், அழகிய திருமுகமும், நாலு மலைபோன்ற தோள்களும் உடைய, ஸ்ரீமஹாலக்ஷ்மி நாதனான ஸ்ரீகிருஷ்ணனின் திருவருளால் நித்தியானந்தத்தைப் பெறுவார்கள்.



திருப்பாவை மார்கழி மாதத்தில் மட்டும் அல்ல; ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் வாழ்நாள் முழுவதும் தினமும் ஓதப்படவும், தியானிக்கப்படவும் வேண்டிய திவ்ய பிரபந்தமாகும். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மகா ஆசார்யரான ஸ்வாமி ராமானுஜர், சிறுமியான ஆண்டாள் அருளிச்செய்த இத்தெய்வீகப் பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் அவர் “கோயில் அண்ணன்” என்றும், “திருப்பாவை ஜீயர்” என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார்.



இதனால், திருப்பாவை என்பது பாடலாக மட்டுமல்ல; ஜீவனை எம்பெருமானிடம் ஒப்படைக்கும் பரமோபதேசமாகும் என்பதே வைஷ்ணவ வ்யாக்யானத்தின் சாரமாகும்.


Tuesday, 13 January 2026

சிற்றம் சிறுகாலே!





சிற்றம் சிறுகாலே!



பக்தி இலக்கியப் பரம்பரையில், ஆண்டாளுக்கு முன்னோடியாக காரைக்கால் அம்மையார் திகழ்ந்திருந்தார் என்பதில் ஐயமில்லை. ஆண்டாள் “சிற்றம் சிறுகாலே” பாசுரத்தில் வெளிப்படுத்தும் பரமார்த்த தத்துவத்தை, அதற்கு முன்னரே காரைக்கால் அம்மையாரும் தம் அனுபவ மொழியில் எடுத்துரைத்திருப்பதை நாம் காண்கிறோம். “அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்” என்றும், “அவர்க்கே நாம் அன்பாவதல்லால் மற்றொருவர்க்கு ஆகாப்போம்” என்றும், பவர்ச்சடை மேல் பாகாப்பொழ் சூடும் பரமேஸ்வரனைத் தவிர வேறு யாருக்கும் அடிமையாவதில்லை என, அவருடைய அற்புதத் திருவந்தாதி பரமபக்தியின் உச்ச நிலையைப் புலப்படுத்துகிறது. மேலும், “உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று, பிறவி பிறவிகளெல்லாம் சிவபெருமானுக்கே உரித்தான தாச்யத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையை அங்கே வாக்குறுதி செய்கிறது.



இவ்வாறு, காரைக்கால் அம்மையார் சிவபக்தியில் வெளிப்படுத்திய பரமாத்ம நிஷ்டையே, வைணவ சம்பிரதாயத்தில் ஆண்டாளால் ஸ்ரீகிருஷ்ண பக்தியாக முழுமையாக மலர்ந்ததென வ்யாக்யாதாகர்கள் கூறுவர். ஆண்டாள் பாடிய “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்னும் வாக்கியம், இதே பரமார்த்த தாச்ய சித்தாந்தத்தின் வைணவ வடிவமே ஆகும். ஆண்டாளின் கவிதை மிக உயர்ந்ததென்பதை, அவர் திருப்பாவையை அருளிய காலம் முதலே, தமிழ் மொழியையும் வைணவ சித்தாந்தத்தையும் உணர்ந்த சான்றோர் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அது வெறும் கவிதை அல்ல; வேதாந்தார்த்தத்தை அனுபவ மொழியாக மாற்றிய அமுதம்.



ஆழ்வார் வ்யாக்யாதாகர்கள் அனைவரும், இந்தப் பாசுரத்தை (29) திருப்பாவையின் உச்சியெனவும், முடிவுக்கு முந்தியதாயினும், கருத்தார்த்தத்தில் அதீத முக்கியத்துவம் உடையதெனவும் ஏற்றுக் கொள்கிறார்கள். இப்பாசுரத்தில் கோதை நாச்சியார், இந்த விரத அனுஷ்டானத்தின் பயன் வெறும் பறை பெறுதலல்ல; அதற்கு அப்பாற்பட்டதாக, காரணநிர்பேக்ஷமான, நித்யமான ஸ்நேஹமும் கைங்கர்யமும் ஸ்ரீகிருஷ்ணனுக்கே உரித்தென உறுதியாக அறிவிக்கிறாள்.



ஜீவன் தன் இருப்பிற்கே ஸ்ரீகிருஷ்ணனை ஆதாரமாகக் கொண்டதாய், அவன் வாழ்க்கையின் லக்ஷ்யம் அவனுடைய திருவுள்ளத்திற்கு மட்டுமே உகந்த வகையில் சேவை செய்வதே என்பதும் இங்கு வெளிப்படையாக விளக்கப்படுகிறது. விரிந்தாவனத்து பெரியோர், மழை பெறுவதற்காகவும், நல்ல கணவர்கள் கிடைப்பதற்காகவும், இந்த விரதத்தைச் செய்யுமாறு இளம்பெண்களுக்கு உபதேசித்தனர். ஆனால் அந்த இளம்பெண்களோ, அனைத்தையும் ஒதுக்கி வைத்து, பரமாத்ம ஸ்நேஹத்தில் முழுமையாக தங்களை இழந்துவிட்டார்கள். இவ்வாறு லௌகீகமான லக்ஷ்யம், பரமார்த்தமான, ஸ்ரீகிருஷ்ணனை நேசி சேவிக்க வேண்டுமென்ற அதீத இச்சையாக மாறிவிட்டது.



அவர்கள் ஸ்வர்கம் என்ற கருத்தையே மறுத்து, அவனை நேசி சேவிக்க மேலும் மேலும் பிறவிகளை ஏற்கத் தயங்காத மனப்பாங்கை வெளிப்படுத்துகின்றனர். முதல் பாசுரத்தில் (பாசுரம் 1) வாழ்க்கையின் உச்ச லக்ஷ்யம் சிறிது மறைமுகமாகக் கூறப்பட்டது. இப்பாசுரத்தில் அந்த மறைமுகத் திரை முற்றிலும் அகற்றப்பட்டு, மனித வாழ்க்கையின் உச்ச புருஷார்த்தம் என்னவென்பது கோதை நாச்சியாரால் தெளிவாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது. இதுவே முழு பிரபந்தத்தின் சிகரம்; விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் சாரமே இப்பாசுரத்தில் அடங்கியுள்ளது.



6 முதல் 15 வரையிலான பாசுரங்களில் ஆண்டாள், பகவதர்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தின் மகிமையை எடுத்துரைத்தாள். இப்பாசுரத்தில், அதற்கும் மேலாக, பகவானுக்கே நேரடியாகச் செய்யும் கைங்கர்யத்தின் உயர்வைச் சுட்டிக்காட்டுகிறாள்—அதுவும் நம் சுகத்திற்காக அல்ல; அவனுடைய திருவுள்ளத்திற்காக மட்டுமே.



பகவானையே ஒரே சரணமாகக் கொண்டவர்களுக்கு, சாதன விஷயத்தில் இரண்டைத் தவிர்க்க வேண்டுமென இங்கு உபதேசிக்கப்படுகிறது: கர்ம, ஞான, பக்தி யோகங்களையே சாதனமாகக் கருதுவதும்; நம்முடைய சரணாகதி செய்கையே சாதனமென எண்ணுவதும். புருஷார்த்தமான பயன் விஷயத்தில், அவனைச் சேவிப்பதைத் தவிர வேறு எந்த இலக்கும் இருக்கக் கூடாது; அந்த சேவையும் நம் ஆனந்தத்திற்காக அல்ல, அவனுடைய ஆனந்தத்திற்காக மட்டுமே ஆக வேண்டும்.



இதுவே கோதை நாச்சியார் அருளிய திருப்பாவையின் பரம ரஹஸ்யம்.



புலராக்காலத்தில் எழுந்து உன்னை வந்து தொழுகின்றோம். எங்களிடையே அவதரித்து, எங்களால் செய்யப்படும் எளிய கைங்கரியங்களையும் பெருமனத்தோடு ஏற்றுக் கொண்டாய்; இது எங்களுக்கு அளவற்ற ஆனந்தம். ஆயினும், இத்தோடு நாங்கள் நிற்க மாட்டோம். இன்று முதல் எடுக்கும் எல்லாப் பிறவிகளிலும் உன்னோடு அநுக்கமாகவே இருந்து, உன் திருவடிகளுக்கே சேவை செய்து வாழ்வோம். உன்னைத் தவிர வேறு எந்தப் பயனையும் நாடாமல் இருக்க, அந்த உறுதியை எங்களுக்கு நீயே அருள வேண்டும்.



இந்தப் பாசுரத்திற்கு உரை எழுதிய அண்ணங்கராச்சாரியார், இதன் உள்ளர்த்தத்தை ஆழமாக விரித்துக் கூறுகிறார். “ஏழுலகையும் தனிக்கோலால் ஆளும் பரமாத்மா, அந்தப் பரமபதத்தைக் கைவிட்டு, இவ்விடைக்குலத்தில் வந்து அவதரித்ததற்கு ஒரு பயன் இல்லையோ? எங்களிடத்தில் கைங்கரியம் கொள்ளாமல் இருந்தால், உன்னுடைய இப்பிறவியே பயனற்றதாகி விடுமன்றோ?” என்கிறார்.



முந்திய பாசுரத்தில், “நீ எங்கள் குலத்தில் பிறந்ததால் நாங்கள் புண்ணியம் பெற்றோம்” என்று மகிழ்ந்த ஆண்டாள், இப்பாசுரத்தில் இன்னொரு படி மேலே சென்று, “உனக்கும் இப்பிறவி பயனாக வேண்டும்” என்று கூறுகிறாள். இது பக்தியின் உச்சநிலை—தனக்கான நன்மையை விட, பகவானின் அவதாரப் பயனை நோக்கும் மனோபாவம்.



‘பெற்றம் மேய்த்துண்ணும்’ என்ற சொல்லுக்கு ஆறாயிரப்படி அளிக்கும் வ்யாக்யானம் மிகச் சிறப்பானது. “பிறவியற்ற பரமபதத்தில் இருந்து பிறவிக்கு பயந்து உன்னையே சரணடைந்தவர்களிடமா வந்தாய்? பாற்கடலில் நித்திரை கொள்ளும் நிலையை விட்டு, அரச குலத்தில் தர்மம் காக்கும் ராஜகுலப் பிறவியிலா வந்தாய்? இவையெல்லாம் அல்லாமல், வாலால் உழக்குக் கூலி வாங்கி, பசு மேய்த்து வயிறு வளர்க்கும் எங்கள் எளிய ஆயர்குலத்திலே நீ பிறந்ததற்குக் காரணம் என்ன?” என்று ஆசார்யர் கேள்வி எழுப்புகிறார். (மொத்தம் எத்தனை பசுக்களை மேய்த்தோம் என்ற கணக்கிடத் தெரியாததால், மேய்ந்த ஒவ்வொரு பசுவின் வாலைப் பிடித்து ஒவ்வொரு ஆழாக்காகக் கூலி வாங்குவார்களாம்.)



‘வாலால் உழக்கிற்கு’ என்ற சொல்லின் பொருள், ஆயர்களுக்குக் கணக்கறிவு இல்லை என்பதல்ல; அவர்கள் மேய்த்த ஒவ்வொரு பசுவிற்கும் தனித்தனியாகக் கூலி வாங்கும் அளவுக்கு எளிமையும் நேர்மையும் உடையவர்கள் என்பதே. எண்ணிக்கை கணக்கிடத் தெரியாததால் அல்ல; எண்ணிக்கையைச் சேமிக்க விரும்பாத நிர்மல மனம். 



“நாங்கள் பறை கேட்கிறோம்” என்று சொன்னால், அதன் உட்பொருள் வேறு என்பதை உனக்குத் தெரியாதா? காதலி காதலன் வீட்டிற்குச் சென்று “தாகமாக இருக்கிறது” என்று கேட்டால், அவன் வெறும் தண்ணீர் கொடுத்து அனுப்பி விடுவானா? என்று ஆறாயிரப்படி நுட்பமாகக் கேட்கிறது. வெளிப்படையான சொல்லை விட, உள்ளார்ந்த ஆசையே இங்கு முதன்மை.



இதுவரை, ஆண்டாள் தன் உள்ளார்ந்த ஆசையை “பறை வேண்டும்” என்ற பூடக வார்த்தையிலேயே மறைத்து வைத்தாள். நோன்புக்கு “பறை” வேண்டும் என்பது, பரமனின் அருகே செல்லும் ஒரு சாக்கு மட்டுமே. இப்போது, திருப்பாவை முடியும் தருவாயில், இனி மறைப்பதற்கென்று எதுவும் இல்லை. பரமபதத்தின் கடைநிலைக்கு வந்து விட்டாள். ஆகவே, “கண்ணா! இன்று மட்டும் அல்ல; எக்காலத்திலும்—ஏழேழ் பிறவிகளிலும்—நீயே எங்கள் உறவு. உனக்கு மட்டுமே நெருக்கமானவர்களாக இருந்து, உனக்கு மட்டுமே ஊழியம் செய்து, உன்னோடு கூடவே இருப்போம். இந்த நிலை எங்களிடத்தில் நிலைத்திருக்க, அந்த வைராக்கியத்தை அருள வேண்டியது உன் சித்தமே” என்று, கோபியர் சொல்லுவதாகக் காட்டி, எல்லாப் பொறுப்புகளையும் அப்பரமன் மேலேயே சாதுர்யமாகச் சுமத்தி விடுகிறாள் கோதை நாச்சியார்.



ஆண்டாள் எங்கேயும் “பிறவி வேண்டாம்” என்று சொல்லவில்லை. “மனிதப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே” என்று அப்பர்பிரான் சொன்னதையே, ஆண்டாளும் இங்கு ஒலிக்கிறாள். மறுமறு பிறவி வேண்டும்—ஆனால் அந்தப் பிறவிகள் அனைத்திலும் உன்னை நினைத்து, உனக்கே எளிய தொண்டு செய்ய வேண்டும். அந்தத் தொண்டு என்ன? பெரும் வாதங்களும், கனமான நூல்களும் அல்ல. முரட்டுத் தொண்டல்ல. மிக எளிய, சிறிய, குற்றேவல். இங்கு “குற்றேவல்” என்பது பரமனுக்கு, தம் சக்திக்கு ஏற்ற அளவில், தம்முடைய அகங்காரமின்றி செய்யும் சேவை என்ற பொருளில் கொள்ளப்படுகிறது.



ஆண்டாள், தன்னிடம் வித்யாகர்வம் போன்ற அகங்காரம் வந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாள். “மற்றக் காமங்கள் எனக்கு பிறவிகளில் வந்தாலும், அவற்றை மாற்றி விடு. என்னை எளிய பக்தையாகவே ஏற்றுக் கொள்” என்று பணிவுடன் வேண்டுகிறாள். இதுவே வைஷ்ணவ பக்தியின் உச்சம்—அகங்காரமற்ற சேவை, பயனற்ற பயனற்றல்லாத பிறவி.



“நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று திருப்பாவையின் முதல்பாசுரத்திலேயே உரிமையோடு உரைத்த ஆண்டாள், இங்கே 29-ஆவது பாசுரத்தில் வந்து, “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்… உனக்கே நாமாட் செய்வோம்” என்று தன் பிரார்த்தனையின் இலக்கை அறுதியிட்டு நிறைவு செய்கிறாள். முதலில் உரிமை; இறுதியில் நிர்ணயம். இதுவே கோதையின் பக்தி வளர்ச்சியின் வழித்தடம்.



எளிய சொல்லில் கூறின்— அடியவர் கூட்டத்தோடு பரமனிடம் சரணாகதி, அவனுக்கே பல்லாண்டு பாடுதல், அவன் அருளால் கிடைக்கும் மோக்ஷம், அதற்குப் பின் சதாகாலமும் பகவத் கைங்கரியம்: இதுவே கோதையின் திருப்பாவை பிரபந்தத்தின் சாரார்த்தம்.



இந்த 29-ஆவது பாசுரம் பகவத் தாஸ்யத்தை வெளிப்படையாகப் போற்றுகிறது. இதற்கு முன் பதினைந்தாம் பாசுரமான “எல்லே இளங்கிளியே”யில் பாகவத தாஸ்யம்—அடியார்க்கு அடிமை செய்தல்—விளக்கப்பட்டது. ஒன்று பகவானுக்கு அடிமை; மற்றொன்று பகவானுடைய அடியார்களுக்கு அடிமை. இவ்விரண்டும் சேர்ந்து தான் வைஷ்ணவ சித்தாந்தத்தின் முழுமை. அதனாலேயே, இவ்விரு பாசுரங்களும் திருப்பாவைக்கு பெருமை சேர்க்கும் சிறப்பு பாசுரங்களாக வைணவப் பெருந்தகைகளால் போற்றப்படுகின்றன.



இப்போது, ஆண்டாள் 29-வது பாசுரத்தில் “சிற்றஞ்சிறுகாலே” என்கிறாள். அப்படியானால், ஆறாம் பாசுரம் தொடங்கி பதினைந்தாம் பாசுரம் வரை, கோபியர் ஒவ்வொருவராக துயிலெழுப்பப்படுகிற அந்தக் காலம் எத்தகைய காலமாக இருந்திருக்க வேண்டும்? அது மிக மிக அதிகாலை. இரவெல்லாம் தூங்காது, விடியலுக்கு முன்னமே நோன்புக்குத் தேவையான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்து, கோபியர் கூட்டத்தை எழுப்பி, வாயிற்காப்பானை வணங்கி, ஆசார்ய உபதேசமும் பிராட்டியின் கருணையும் பெற்று, சிறிதேனும் விவேகம் பெற்று, செய்வன–செய்யாதன எனப் பிரித்து அறிந்து, நோன்பை நெறி பிறழாமல் நிறைவு செய்து— இத்தனை காரியங்களை மிகுந்த வருத்தத்தோடு செய்து முடித்த பிறகும், “சிற்றஞ்சிறுகாலே” கண்ணனிடம் ஓடோடி வந்து நிற்கும் அந்த நிலையை, கோதை நாச்சியார் எவ்வளவு நயமாக நமக்கு குறிப்பில் உணர்த்துகிறாள்!



இதுவே, ஆசார்யர்கள் காட்டும் வழி — செய்வதையும் அவன் அருள்; நிலைப்பதையும் அவன் அருள். அடியவனுக்கு உரியது—விருப்பத்தைச் சொல்லுதல். அதை நிறைவேற்றுவது—பகவான் சித்தம்.



இப்பாசுரத்துடன், கோதை நாச்சியார், கோபியர் பாத்திரத்தில் கிருஷ்ணனிடம் திருப்பாவையில் வேண்டுவதை முடித்துக் கொள்கிறார். கடைசி பாசுரத்தில் (வங்கக் கடல் கடைந்த மாதவனை), ஆண்டாளாகவே பாடி, திருப்பாவையை நிறைவு செய்கிறார் !



நோன்புக்காக பறை வேண்டுவதின் சரியான அர்த்தம் இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது. அதாவது

(i) உன் திருவடிகளில் கைங்கர்யம் செய்திருத்தல்

(ii) உன்னை விட்டுப் பிரியாதிருத்தல்

(iii) மேற்கூறிய இரண்டுக்கும் ஒவ்வாத ஆசைகளை / எண்ணங்களை நீக்க வேண்டுதல்

ஆகியவையே ஆகும்.


இப்பாசுரத்தில், சொரூப விரோதியும், பிராப்ய விரோதியும் விலகுவது சொல்லப்பட்டுள்ளது.


த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் சென்ற பாசுரத்தில் (கறவைகள் பின் சென்று) வெளிப்பட்டது. இதில், பிற்பகுதியான உபேய சொரூபம் (பரம்பொருள் வடிவம்) வெளிப்படுகிறது !


'சிற்றஞ்சிறுகாலை'யே எம்பெருமானைக் குறித்த ஞானம் / பக்தி மிகும் சமயம் என்பதாலேயே, ஆண்டாள் அந்த நேரத்தை, பரமனைப் பற்றி வணங்க வெண்டிய பொழுதாகப் பாடியுள்ளார் என்று பெரியோர் உரைப்பர். ஹரிநாம சங்கீர்த்தனத்திற்கு உகந்த நேரமும் அதுவே !



போற்றும் - எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காது பல்லாண்டு பாடுதலைக் குறிக்கும்



குற்றேவல் செய்தல் - பரமன் இட்ட ஏவலைச் செய்தல், நம்மாழ்வார் கூறியது போல, 'ஒழுவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை' செய்தல் !!!


உன்றன்னோடு உற்றோமேயாவோம்' என்பது மூல மந்திரத்தில் பிரணவத்தையும், 'உனக்கே நாமாட் செய்வோம்' என்பது நாராயண சப்தத்தையும், 'மற்றை நம் காமங்கள் மாற்றேலோ' என்பது 'நம' சப்தத்தையும் உள்ளர்த்தங்களாகக் குறிக்கின்றன. ஆக, முழு வாக்கியமும் சேர்ந்து "ஓம் நாராயணாய நமஹ" என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கிறது.



மொத்தத்தில், கோபியர் பரமாத்வான கிருஷ்ணனிடம் மோட்ச சித்தி ஒன்றை மட்டுமே பாவை நோன்பின் வாயிலாக வேண்டி வணங்கிக் கேட்கின்றனர்.




Monday, 12 January 2026

கறவைகள் பின் சென்று!

 




கறவைகள் பின் சென்று!


ஆழ்வார்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தார்கள். வடமொழி வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் சொல்லப்படும் பரம்பொருளே, தமிழ்ப் பாசுரங்களில் புகழப்படும் பெருமாள் என்பதில் அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.


அதனை நம்மாழ்வார் தெளிவாகச் சொல்கிறார்: 
“இல்லை நுணுக்கங்கள் ஏயிதனில்
பிறிதென்னும் வண்ணம்
தொல்லைநன் நூலில்
சொன்ன உருவும் அருவும் நீயே” -- என்று.


அதாவது, மிகப் பழமையான வேதங்களில்கூட, உன்னைவிட நுண்ணியதும் உயர்ந்ததுமாக வேறொன்றில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வேதங்கள் கூறும் உருவமும், அதே வேதங்கள் சுட்டும் அருவமும், இரண்டும் நீயே என்பதே இதன் பொருள். ஆனால் நம்மாழ்வார், உபநிஷத்துக்களில்  சொல்லப்படும் “நேதி, நேதி” என்று கைப்பற்ற முடியாத, நெருங்க முடியாத
ஒரு தத்துவமாக மட்டும் பகவானைக் காணவில்லை. அதனால்தான் அடுத்த இரு அடிகளில், “அல்லித் துழாயலங் கலணி மார்பா, என் அச்சுதனே வல்லதோர் வண்ணம் சொன்னால், அதுவே உனக்காம் வண்ணமே” என்று உரைக்கிறார்.


“மார்பில் தாமரையும் துளசியும் அணிந்தவனே! நாங்கள் உன்னை எந்த வடிவில் எப்படி வர்ணித்தாலும், அந்த வடிவமே உனக்குரிய வடிவமாகிறது” என்று அவன் ஸௌலப்யத்தையும்,
எளிமையையும் அழகாக எடுத்துரைக்கிறார்.


ஆழ்வார்களின் இந்தத் திருப்பாசுரங்களை ஒன்று சேர்த்து பிரபந்தமாக தொகுத்தவர்கள், இவை தமிழ் வேதம் என்பதிலும் மிக உறுதியாக இருந்தார்கள். அதனால்தான் இவை திராவிட வேதம், திராவிட உபநிஷத்துக்கள் என்று அழைக்கப்பட்டன. மேலும் வைஷ்ணவ மரபில், வேதங்களை விடவும் பகவானுக்கு இந்தத் தமிழ்ப் பாசுரங்களே மிகவும் உகந்தவை என்று நம்பப்பட்டது. ஆழ்வார்கள் சொன்ன இந்த உண்மைகளை பின்னர் வந்த வைஷ்ணவ ஆசார்யர்கள் இவ்வாறு விளக்கினார்கள்: "கீதையில் கூறப்படும் கர்மம், ஞானம், பக்தி என்ற மூன்று மார்க்கங்களும் பகவானை அடைய உதவினாலும், அவை முழுமையான வழி அல்ல. முழுமையான, ஒரே உபாயம்; பிரபத்தி, அதாவது முழு சரணாகதி மட்டுமே. அதுவே பகவானிடம் ஜீவனை நேரடியாக கொண்டு சேர்க்கும் வழி.


இந்தப் பிரபத்திக்காக நீ உயர்ந்த சாதியில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பெரிய வித்வத்தும் இருக்க வேண்டியதில்லை. மாறாக, அவை சில சமயம் அகங்காரமாக மாறி தடையாகவும் இருக்கக்கூடும். கீதையில் பெரும்பாலும் இறைவனுக்கும் அவனை அடைய விரும்பும் ஒரு தனிப்பட்ட ஜீவனுக்கும் இடையிலான உறவையே விளக்கப்படுகிறது. ஆனால் ஆழ்வார்கள், “கூட்டமாகவும் பகவானை அடையலாம்” என்று சொல்லுகிறார்கள்.


தொண்டக் குலம், கடல்வண்ணனை வழிபடும் பக்தர் குழாம் என்று கூட்டுச் சரணாகதியை அவர்கள் முன்வைக்கிறார்கள். அந்த உச்சநிலையையே ஆண்டாள் நமக்கு காட்டுகிறாள். ஆயர் குலச் சிறுமிகள், தனித்தனியாக பகவானை அடைய விரும்பவில்லை. குழாமாகவே அவனை நாடுகிறார்கள். அவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். ஆனால் “எங்களுடன் மட்டுமே அவன் நெருக்கமாக இருப்பான்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்குண்டு. அந்த நம்பிக்கையே அவர்களின் யோகமும், அவர்களின் சாதனையும், அவர்களின் செல்வமும் ஆகிறது.


மூப்பினோரின் நலனுக்காக வேண்டிய பறையை அருளியபின் கோதாதேவி, தங்கள் உள்ளார்ந்த பெருவிருப்பமான புருஷார்த்தத்தையே வேண்டப் போகிறாள் என்று கண்ணபிரான் நன்கு அறிந்திருந்தான். ஆகையால், “நீங்கள் அடைய விரும்பும் இலக்கைச் சேர ஏதேனும் சாதன–அனுஷ்டானம் உண்டோ?” என்று அவன் கேட்டான்.


அதற்கு இப்பாசுரத்தில் கோதாதேவி தெளிவாக அறிவிக்கிறாள் — நாங்கள் முற்றிலும் அஞ்ஞானிகள்; எங்களால் எதையும் சாதிக்க இயலாதவர்கள். எங்களிடம் உள்ள ஒரே நல்வினை, ஒரே செல்வம், ஒரே சார்பு— நீயே, கண்ணா! எங்கள் குறைபாடுகளையும் வெறுமைகளையும் நிரப்பக் கூடிய பூரணனும் சக்திமானும் நீயே என்பதே எங்கள் நிலை.



இந்தப் பாசுரத்தில் கோதாதேவி, கண்ணபிரானே “உபாயம்” (பிராபகம்) என்று பிரகடனம் செய்கிறாள்; அடுத்த பாசுரத்தில் அவனே “உபேயம்” (பிராப்யம்) என்றும் உரைக்கிறாள். இந்த எளிய ஆய்ப்பெண்கள் ஞான மார்க்கத்தையும் கர்ம மார்க்கத்தையும் பக்தி யோகத்தையும் கூட பின்பற்றவில்லை. அவர்கள் செய்தது ஒன்றே— முழுமையான சரணாகதி (பிரபத்தி). பிரபன்னன் என்றால் தன் தகுதியின்மையையும், அறிவின்மையையும், முக்தியைத் தனக்குத் தானே செய்துகொள்ள இயலாத அசக்தியையும் உணர்ந்தவன். ஒருமுறை கண்ணபிரானிடமே முழு நம்பிக்கையுடன் தன்னை ஒப்படைத்துவிட்டால், அந்த வீழ்ந்த ஜீவனை ரட்சிப்பது பகவானின் கடமை ஆகிறது.



இந்தப் பாசுரம் உபாயத்தையே விளக்குகிறது. அதாவது நம்மை நேரடியாக இலக்கிற்குக் கொண்டு சேர்க்கும் சாதனத்தை விளக்குகிறது. அந்த உபாயம் வேறு எதுவுமல்ல; ஸ்வயம் பகவானே. அவனுடைய மகிமையும் கருணையும் எங்கள் தாழ்மையையும்அசுத்தத்தையும் எண்ணிக்கையற்ற மடங்கு மீறியவை. பகவானின் அனுக்ரஹம் முழுமையாக அவனுடைய இச்சைக்கு அடங்கியது.



நல்ல கர்மங்களோ, ஞானமோ, பக்தியோ, அல்லது சரணாகதியே கூட அந்த அனுக்ரஹத்தை வற்புறுத்த முடியாது. உபாயம் பகவானே என்றாலும், அந்த அனுக்ரஹத்தை பெறத் தகுதி அடைய
நாம் செய்ய வேண்டியது உண்டு. அகிஞ்சன்யம்: “என்னிடத்தில் ஒன்றும் இல்லை” என்ற உணர்வு. (நமஸ்தே என்று நாம் சொல்வதின் பொருளும் இதுவே. என்னுடையது எதுவும் இல்லை). 



அநன்யகதித்வம்  “நீ தவிர வேறு வழியில்லை” என்ற தெளிவு. ஸ்ரீமன் நாராயணனிடமே ஒரே சார்பு என்ற உறுதியான நிலை. நம்முக்கும் அவனுக்கும் உள்ள பிரிக்கமுடியாத சம்பந்தத்தை உணர்ந்தபின், அவனுடைய அளவற்ற நன்மையையும் கருணையையும் தியானித்து, நம்முடைய பலஹீனத்தையும் பாபங்களையும் நினைந்து, கடந்த தவறுகளுக்காக தாழ்மையுடன் மன்னிப்புக் கோரி, அவனுடைய திருவடிகளில் அடைக்கலம் வேண்டுவதே இந்த உபாயத்தின் சாரம்.



பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், எங்கள் (ஆயர்) குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே! உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு) ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக !



கண்ணனுக்குத் தர தங்களிடம் ஏதும் இல்லை என்ற தங்கள் "கை முதல் இல்லா" தன்மையை கோபியர் "கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்" என்று முதலடியிலேயே சொல்லி விடுகின்றனர்! ஒரு விதத்தில் ஆண்டாள் நாச்சியாரின் ஆற்றாமை இப்பாசுரத்தில் இழையோடுகிறது. "இறைவா" என்ற (முதன்முறையாக ஆண்டாள் பயன்படுத்தும்) சொல்லாட்சியைக் கவனிக்கவும்! "இன்னும் என்ன செய்தால் என்னை ஏற்றுக் கொள்வாய்?" என்று கண்ணனிடம் வேண்டுகிறாள்!



கறவைகள் பின் சென்று கானஞ் சேர்ந்துண்போம்” என்று ஆய்ப்பெண்கள் சொல்வதிலே அவர்களின் வழி முழுவதும் வெளிப்படுகிறது. உயர்சாதியினர், குருக்களின் பின்னால் சென்று
சாஸ்திரங்களை நாடி, அறிவைத் தேடுவார்கள். ஆனால் நாங்களோ பசுக்கள் எங்கே சென்று எதைத் தேடி உண்கின்றனவோ, அவைகளின் பின்னாலே சென்று கிடைத்ததை ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு திருப்பதி, திருவரங்கம் போன்ற திவ்யதேசப் பயணம் இல்லை. எங்கள் வழி காடு. அங்கே நீராட சௌகரியமுண்டா? ஆசௌசம் இல்லாமல் ஆராதிக்க இயலுமா?



இப்படிப்பட்ட எளிய வாழ்க்கையே எங்களுடைய நிலை என்று அவர்கள் தாழ்மையுடன் அறிவிக்கிறார்கள்.



“அறிவொன்றுமில்லாதோம்” என்று சொல்வது தன்னைத் தாழ்த்திக் கூறுவது அல்ல. எது சரி, எது தவறு, எது பாவம், எது புண்ணியம் என்று தேர்ந்தெடுக்கக் கூடிய விவேக அறிவு எங்களிடம் இல்லை என்பதே பொருள். உபாய சூன்யம்; அதுவே எங்கள் ஒரே சொத்து. வழி என்ன, எப்படிச் செல்ல வேண்டும், எதைப் பிடிக்க வேண்டும் என்பதே தெரியாதவர்கள். இதைத்தான் நம்மாழ்வார், “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவும் இலேன்” என்று சொன்னார்.



இந்த அறிவின்மையே பகவானுக்கு உகந்ததாகிறது. ஏனெனில் அறிவு குறைந்த இடத்தில்தான் அஹங்காரம் இல்லை. ஆனால் எங்கள் குலம் செய்த ஒரே பெரிய புண்ணியம் என்னவென்றால்—
நீ எங்கள் குலத்தில் பிறந்தாய். அது மட்டும் அல்ல; நீ பிறந்ததினாலே இந்த குலம் முழுவதும் வீடு பெறுகிறது. உயர்கிறது. உய்யப்படுகிறது. “உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடர் ஆயர் கொழுந்தே” என்று பெரியாழ்வார் பரவசமாகச் சொன்னார்.


ஆறாயிரப்படி சொல்கிறது: “நீ ஸூக்ருதமாய் நின்று இக்குலத்தை எடுக்கைக்கு ஆண் பெண் சட்டி பானை என்றுண்டோ?” அதாவது, உன்னுடைய இச்சை. நீயே எங்களைத் தேர்ந்தெடுத்தாய். எங்களிடம் தகுதி தேடியதில்லை.


“குறைவொன்றுமில்லாத கோவிந்தா!” என்று அழைக்கிறார்கள். உண்மையில் உலகின் எல்லாக் குறைகளும் எங்களிடமே இருக்கின்றன. ஆனால் உலகின் எல்லா நிறைவும் உன்னிடமே இருக்கிறது. அப்படியிருக்க குறை உன்னிடம் எப்படி இடம் பெறும்? 


“உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது” என்பது இந்தப் பாசுரத்தின் அச்சாணி. அதேபோல் முழு வைஷ்ணவ தத்துவத்தின் அச்சாணியும் இதுவே. உனக்கும் எங்களுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் அறுக்க முடியாது. எங்களால் முடியாது. உன்னாலும் நிச்சயமாக முடியாது. உன்னையும் எங்களையும் பிணைத்திருக்கும் இந்த உறவு அறுக்க முடியாத கயிறு.


“நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே! நீ என்னை அன்றி இலை” என்று திருமழிசை ஆழ்வார் உறுதியாகச் சொன்னது இதற்காகத்தான். ஆய்ப்பெண்கள் இறுதியில் ஒரு வேண்டுகோளை வைக்கிறார்கள். எங்கள் சொற்கள் அறிவின்மையாலும், சிறுபிள்ளைத்தனத்தாலும், அன்பின் மிகுதியாலும் வந்தவை. அதனால் அவற்றை குற்றமாக எடுத்துக் கொள்ளாதே என்று பணிவுடன் கேட்கிறார்கள்.


“பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெருபவோ?” என்று கம்பன் சொல்வது போல. இங்கே “சிறுபேர்” என்றால் நாராயணன் என்ற நாமம். அவனுக்கு கோவிந்தா! கோபாலா! என்று அழைத்தால்தான் மிகவும் பிடிக்குமாம். அவைகள்தாம் அவனுக்குப் பெரும் பேர்கள். பிராமணர் வழக்கில் தவறுதலாக “நாராயணா” என்று அழைத்துவிட்டால், “அதற்காக எங்கள்மீது சீற்றம் கொள்ளாதே” என்று அந்த ஆய்ப்பெண்கள் அன்போடும் பயத்தோடும் பிரார்த்திக்கிறார்கள்.



Sunday, 11 January 2026

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...

 




கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...


கோயில்களில் இப்பாசுரம் ஓதப்படும் திருநாளன்று, நெய் வளமுடன் இனிய சர்க்கரைப் பொங்கலைச் செய்து நிவேதித்து பகிர்வது, காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு பரம்பரைச் சம்பிரதாயமாகும். அத்தகைய மங்கல நிகழ்வை எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை, இங்கு கோபியர்கள் தாமே பகவானிடம் எடுத்துரைக்கின்றனர்.



முன்னரான “வையத்து வாழ்வீர்கள்” என்ற பாசுரத்தில்,
“நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்” என்று சிறுமியர்கள் எடுத்துக் கொண்ட கடும் தபோநிஷ்டையை நாம் நினைவுகூரலாம். அந்தச் சபதத்தின் பூர்த்தியாக, இப்பாசுரத்தில் அவர்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறிய மகிழ்ச்சியில் பாடுகின்றனர். அதாவது, பாசுரத்தின் தொடக்கத்தில் கூறப்பட்ட தவநிலைக்கு எதிர்மறையான—ஆனால் உண்மையில் அதன் நிறைவாக விளங்கும்—ஒரு நிலையைக் காட்டுகிறது இப்பாடல்.



முந்தைய பாசுரத்தில் விரதத்திற்குத் தேவையான உபகரணங்களையெல்லாம் கோபியர்கள் விவரித்தனர். இப்பாசுரத்தில், அந்த விரதத்தின் பலனைச் சுட்டிக்காட்டுகின்றனர். தெய்வீக தம்பதிகளான எம்பெருமான் மற்றும் பிராட்டியால் அருளப்பட்ட மனமகிழ் ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து, பரமாத்மாவுடன் ஒருங்கிணைந்து அருகருகே அமர்ந்து, அமிர்தோபமான அன்னத்தைப் பரிமாறிக் கொண்டு, அதிலே கலந்த நெய் முழங்கையோரம் வழியப் பங்குபெறுவதே அந்த விரதத்தின் பலன் என அவர்கள் விளக்குகின்றனர்.



கோவிந்த நாம சங்கீர்த்தனத்தின் மஹிமை: 

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா!” என்று இப்பாசுரத்தில் தொடங்கும் கோவிந்த நாம சங்கீர்த்தனம், 28-வது பாசுரத்தில், “குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன் தன்னோடு” என்று ஒரு முறை ஒலித்து, 29-வது பாசுரத்தில்,“இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா”
என்று பரிபூரணமாக நிறைவடைகிறது.



“கூடாரை வெல்லும் சீர்” – சீலமும் சௌரியமும்: “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்பது மிக ஆழமான பொருள் கொண்ட வாக்கியம்.


எம்பெருமான் அனைவரையும் வெல்வது குணத்தினாலே.
கூடுவாரை—அதாவது தன்னை அணுகி நிற்பவர்களை—சீலத்தினாலே வெல்வான்.
கூடாதாரை—அதாவது எதிராக நிற்பவர்களை—சௌரியத்தினாலே (வீரத்தினாலே) வெல்வான்.



ஆறாயிரப்படி உரை, “சௌரியம் அம்பிற்கு இலக்காகும்; சீலம் அழகிற்கு இலக்காகும்” என்று கூறுகிறது. மேலும், “அம்பிற்கு இலக்கானார்க்கு மருந்திட்டு ஆற்றலாம்” என்பதன் மூலம், எதிரியாக இருப்பவர்களுக்கும் கூட இறைவன் அருமருந்தாக இருப்பான் என்ற அர்த்தத்தைத் தருகிறது.


கோவிந்தன் பசுக்களைப் பாதுகாப்பது போலவே, பக்தர்களையும் பராமரிப்பான். கன்றுகளை அவன் இன்னும் அதிக கவனத்தோடு காப்பான். அதுபோலவே, அவனடியில் அடைக்கலம் புகும் அறியாத சிறுமியர்களையும் எந்தக் குறையும் இல்லாமல் பாதுகாக்கிறான்.



“கூடார்” யார்? – நால்வகைப் பிரிவு

“பகைவரை வெல்லும் சிறப்புடையவனே” என்று சொல்லும்போது, “பகைவர் என்றால் யார்?” என்ற கேள்வி எழலாம். இங்கு கூடார் என்போர் ஒரே வகையினர் அல்ல. அவர்கள் நால்வகை:

  • பரமனை அறியாதவர்கள்
  • அறிந்தும் பயத்தால் அணுகாதவர்கள்
  • அறிந்தும் விபரீத குதர்க்கங்களால் குழம்பியவர்கள்
  • அறிந்தும் பரமனை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள்


இவர்களனைவரையும் தத்தம் நிலைக்கு ஏற்ப வெல்வதே எம்பெருமானின் சீலச் சிறப்பு.



கண்ணனே பரிசு

சிறுமியருக்குக் கிடைத்த பரிசு—கண்ணன் தானே! அவன் வருவான் என்று ஊரே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன், முந்தைய பாசுரத்தில் சொன்னபடியே, அழகிய விளக்கு, அரையர்கள் பாட்டு, கொடி, மேற்கட்டி, பறை ஆகிய அனைத்தையும் பரிசாக வழங்கினான். அதோடு நின்றுவிடாமல், கோவிந்தனாக இருந்து அவர்களைத் தானே பராமரிக்கிறான்.


“ஊரே வியந்து எங்களைப் புகழ்கிறது” என்று கோபியர்கள் கூறுகின்றனர். மிக முக்கியமாக, இந்தப் பகுதியில் ஆண்டாள், “இதைக் கொடு, அதைக் கொடு” என்று எதையும் குறிப்பாகக் கேட்கவில்லை! “நான் உனக்குச் சூடிக் கொடுத்த மாலைகளுக்கு இணையான சம்மானம் வேண்டும்” என்று சுட்டிக்காட்டுகிறாள் போலிருக்கிறது.



அந்த உயர்ந்த சம்மானம்—கண்ணனே!



நாடு புகழும் பரிசுகள்

கண்ணன் நாடு புகழும் பரிசுகளை அளிப்பதில் வல்லவன்.
சுதாமாவிடம்—அவன் கேட்காதபோதும்—அவன் வழங்கிய பரிசு உலகறிந்ததல்லவா? திரௌபதியின் மானத்தைக் காத்ததும்,
பஞ்சபாண்டவர்களுக்கு யுத்த வெற்றியை அருளியதும், எல்லாம் அதே கருணையின் வெளிப்பாடே.



இதையே துக்காராம் மஹராஜ், “பதீத மீ பாபி…” என்ற அபங்கத்தில் உருக்கத்தோடு பாடுகிறார்—
“சுதாமாவின் தரித்திரத்தை ஒழித்தாய்;
திரௌபதியின் மானத்தை காத்தாய்;
ப்ரஹ்லாதனின் வாக்கை உண்மையாக்கினாய்;
அப்படியே இந்தப் பாவியையும் கரையேற்றுவாய்!” என்று.



அலங்காரமும் அனுபவமும்

“சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப் பூவே, பாடகமே”
என்று சொல்லப்படும் நகைகளும், அதன் பின் அழகிய ஆடைகளும்— இவையனைத்தையும் சிறுமிகளுக்குப் பரிவோடு அணிவிப்பது கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் தான் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர். சிறுமிகள் சரியாக அணியமாட்டார்கள் என்ற கவலையால்!



“என்றனைய பல கலனும் யாம் அணிவோம்” என்று கோபியர்கள் கூறுவதில், பெண்டிர்க்குரிய இயல்பான அலங்கார ஆசையும்,
நீலமேக வண்ணனுக்கேற்ற அழகுடன் தன்னைச் சீரமைக்க விரும்பும் ஆண்டாளின் உள்ளமும் பளிச்சிடுகிறது.


நாச்சியார் திருமொழியிலேயே ஆண்டாள், 
காறை பூணும் கண்ணாடிகாணும்* தன் கையில் வளைகுலுக்கும்*
கூறையுடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய்திருத்தும்*
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்* தேவன்திறம்பிதற்றும்*
மாறில் மாமணிவண்ணன்மேல்* இவள் மாலுறுகின்றாளே.*

தன்னை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடிக் கிணற்றில் தன் வடிவழகைக் காணும் ஆசையை வெளிப்படுத்தியிருப்பதை நினைவுகூரலாம்.



நெய் வழியும் விருந்து – அனுபவ ரஸம்

பின்னர் விருந்து. பாற்சோறும், முழங்கையோரம் வரை நெய் வழியும் சோறும். அதை உண்ண முடியாமல் சிறுவர் சிறுமியர் திணறுவது போல.

ஒரு பக்தர் பட்டரிடம், “இவ்வளவு நெய்யை எப்படிச் சாப்பிட முடியும்?” என்று கேட்டபோது,


“அவர்கள் சாப்பிட்டார்கள் என்று யார் சொன்னார்கள்?”
என்று பட்டர் பதிலளித்தாராம். "கண்ணனைப் பார்த்த பரவசத்தில், அவர்கள் தங்களை மறந்துவிட்டார்கள்" 


ஆண்டாள் எங்கும் “உண்டார்கள்” என்று சொல்லவில்லை—அதுவே நுண்ணிய ரஹசியம்.


பெரியாழ்வாருடன் ஒற்றுமை

இப்பாசுரத்திற்கு இணையான கருத்துடன் பெரியாழ்வார் தனது திருப்பல்லாண்டில் பாடியிருப்பதைப் பாருங்கள்—தந்தை, மகள் உள்ளங்களில் எத்தனை ஒற்றுமை!


நெய்யிடை நல்லதோர் சோறும்* நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு * காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து *என்னை வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப்* பல்லாண்டு கூறுவனே.


இறுதி தத்துவம்

மேலும், பகவத் சேவை செய்யும் ஒரே விருப்பத்தில் கண்ணனை சரண் புகுந்த கோபியர்க்கு, சிற்றின்பங்களான புத்தாடை உடுப்பதிலும், அக்கார அடிசிலை முழங்கையில் நெய் வழிய உண்ணுவதிலும் அப்படி என்ன ஆசை என்ற கேள்வி எழலாம். அவை எல்லாம் பாவை நோன்பு நிறைவடைவதற்கான குறியீடுகள் மட்டுமே. கோபியரின் விருப்பம் கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல் மட்டுமே! இதிலும், அடியவருடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல் என்ற வைணவக் கோட்பாடு கோதை நாச்சியாரால வலியுறுத்தப்படுகிறது.


இன்னொரு விதத்தில் நோக்கினால், அவை எல்லாமே பரமன் தந்தது என்பதால் அவற்றை உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு சுகிப்பதில் தவறொன்றும் கிடையாது. கோபியரின் நோன்பு பரமன் திருவருளால் சுபமாக நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது.


கோபியர்களுக்கு ஆடை, நகை, உணவு—all are symbols.
உண்மையான விருப்பம்—கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல்.
அடியவர்களுடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல்—இதுவே வைணவத்தின் உச்ச கோட்பாடு.


நோன்பு நோற்கும் முன், (2-வது பாசுரத்தில்) 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற கோபியர் இப்போது நோன்பு பூர்த்தியாகி விட்டதால் 'பாற்சோறு மூட நெய் பெய்து' செய்த அக்கார அடிசிலை உண்போம் என்கின்றனர் !!!


'பறை' என்பது பொதுவாக பகவத் கைங்கர்யத்தைக் குறிக்கும்


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா - அடியார்களை மட்டுமன்றி, தன்னுடைய கல்யாண (சௌர்யம், சௌசில்யம், சௌந்தர்யம் ...) குணங்களால் ஆகாதவரைக் கூட பரந்தாமன் தன் வசப்படுத்தி ஆட்கொள்வான் என்பதை குறிப்பில் உணர்த்துகிறது.


சூடகம் - காப்பு; தோள்வளை - திரு இலச்சினை (ஒரு வைணவனின் சங்கு-சக்கர சின்னத்தைக் குறிப்பதாக உள்ளர்த்தம்)


தோடு - திருமந்திரம் (பிரணவாதார வடிவைக் குறிப்பதால், ஞானம் என்ற உள்ளர்த்தமுண்டு)


செவிப்பூ - த்வயம் (பக்தியைக் குறிப்பது)


பாடகம் - சரம சுலோகம் (காலில் அணியும் அணிகலனைக் குறிப்பதால், சரணாகதியைக் குறிப்பதாகவும் சொல்லலாம்)


பல்கலன் - ஒரு வைணவனுக்குரிய ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் (தோடு / செவிப்பூ / பாடகம் என்ற மூன்றும் சேர்த்து!) என்ற குணங்களைக் குறிப்பதாம்.


ஆடை - அடியவர் பரமனுக்கு உரிமையானவர் என்பதை உணர்த்துவதாம்.


பாற்சோறு - பகவத் சேவை (கைங்கர்யம்) என்று உள்ளர்த்தம்


மூடநெய் பெய்து - ஆத்மார்த்தமாக, அகந்தையின்றி செய்யப்படும் (பகவத் சேவை)


கூடியிருந்து குளிர்தல் - (கோபியர்) மோட்ச சித்தியை அடைதல்




“கூடாரை” என்று தொடங்கும் பாடல், “கூடியிருந்து குளிர்ந்தோம்”
என்று நிறைவடைவது அதற்கே சான்று.


பக்தர்கள் சேர்ந்து இருந்தாலே— பசி இல்லை, பிரிவு இல்லை.
அந்தச் சேர்க்கை தரும் ஆனந்தமே, ஆண்டாளின் தெவிட்டாத பாடலின் மையம்.


India’s Recent PSLV Setbacks: What They Mean—and What Needs to Happen Next

  India’s Recent PSLV Setbacks: What They Mean—and What Needs to Happen Next India’s space programme has long been admired for its engineer...