Wednesday, 7 January 2026

மாரி மலை முழைஞ்சில்...

 

மாரி மலை முழைஞ்சில்...


தமிழ் இலக்கியப் பரம்பரையில் மிருக உவமைகளில் புலியைவிடச் சிங்கமே அதிகமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. வீரத்திற்கும், கம்பீரத்திற்கும், அரசத் தன்மைக்கும் அடையாளமாகச் சிங்கமே கவிஞர்களின் மனதை அதிகம் கவர்ந்தது. அந்த மரபில் ஆண்டாள் தனிச்சிறப்பு பெற்றவள். இப்பாசுரத்தில் அவள் சிங்கத்திற்கே நாலரை அடிகளை ஒதுக்கி, அதன் முழு இயல்பையும் கண்ணனுக்கான உவமையாக விரித்து நிறுத்துகிறாள்.


ஆண்டாள் உண்மையில் சிங்கத்தை நேரில் கண்டிருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அவள் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அருகாமையில் அமைந்த பகுதி. அங்குள்ள காடுகள் அடர்ந்த வனங்கள்; புலிகள் வாழும் நிலப்பரப்பே அது. சிங்கங்கள் இயல்பாக வாழ்வது விரிந்த புல்வெளிகளும், அரிதான மரங்களும் கொண்ட சமவெளிப் பகுதிகளில் (marshland forests that are not dense). மேலும் புலியும் சிங்கமும் ஒரே நிலப்பரப்பில் இணைந்து வாழ்வதில்லை என்பதும் அறியப்பட்டதே. ஆகையால் ஆண்டாள் இயற்கைச் சூழலில் சிங்கத்தை கண்டிருக்க வாய்ப்பு மிகக் குறைவு. அதேபோல், சிங்கம் மழைக்காலத்தில் உறங்கிக் கிடக்கும் என்றும், வேட்டையாடாமல் நீண்ட நாட்கள் வாழும் என்றும் சொல்வது அறிவியல் அடிப்படையில் பொருந்தாது. சிங்கம் உறங்கினாலும் அது முழுமையான நித்திரை அல்ல; “Lions do not hibernate” என்பதே இயற்கை உண்மை.


ஆனால் இவை எல்லாம் இங்கு முக்கியமல்ல. இப்பாசுரம் இயற்கை வர்ணனை அல்ல; இது தத்துவ உவமை. கோபியர் பாடும் இப்பாடல், கிருஷ்ண சிம்மத்தின் கம்பீரத்தை, அவனது பரத்துவத்தையும், அரசரசத் தன்மையையும் வெளிப்படுத்தும் ஒரு ஆன்மிக வர்ணனை.


சூடிக் கொடுத்த நாச்சியார், மாயக்கண்ணன் துயிலெழுவதை, குகையிலிருந்து விழித்தெழும் சிங்கத்தின் எழுச்சியுடன் ஒப்பிட்டு, உவமையின் உச்சியைத் தொடுகிறாள். இதை லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை உள்ளார்ந்து கொண்டு ஆண்டாள் பாடிய பாசுரம் என்று ஸ்ரீமட உரையாசிரியர்கள் விளக்குவர்.


மழைக்காலத்தில் மலைக் குகையைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, மன்னிக் கிடந்து உறங்கும் அந்தச் சீரிய சிங்கம், தூக்கம் கலைந்து, தீப்பொறி பறக்கச் சிவந்த விழிகளைத் திறந்து, மணமிகு பிடறி மயிர் அலைபாய நாற்புறமும் உடலை அசைத்து, நெட்டுயிர்த்து, பின்னர் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையைவிட்டு வெளியேறுவது போல — காயாம்பூ நிறமுடைய மாயக்கண்ணனே! நீயும் உன் திருமாளிகையை விட்டு இங்ஙனே எழுந்தருள வேண்டும் என்கிறார்கள் கோபியர்.


‘வர்ஷா காலம் அரசர்கள் படைவீடு விட்டுப் புறப்படாதது போல, சிம்ஹமும் மழைக்காலத்தில் குகையைவிட்டு வெளியே வராது’ என்று வியாக்யானம் கூறுகிறது. ஆனால் இங்கு கண்ணன் சாதாரண சிம்ஹம் அல்ல; அவன் கிருஷ்ண சிம்ஹம்.


ஆண்டாள் முன்னமே அவனை “யசோதை இளஞ்சிங்கம்” என்று குறிப்பிடுகிறாள். இங்கு அவன் மிருகராஜன் மட்டுமல்ல; அரசர்களுக்கெல்லாம் அரசன். அவன் கட்டிலின் கீழ் உலகின் அரசர்கள் காத்திருக்கின்றனர் என்று முந்தைய பாசுரமே சொல்லிவிட்டது. உரையாசிரியர்கள் கண்ணனுடைய நடையை சதுர்க்கதி என்று வர்ணிக்கிறார்கள் — காளையின் விறு, யானையின் மதிப்பு, புலியின் சினம், சிங்கத்தின் தேஜஸ் ஆகிய நான்கும் ஒருங்கே கூடிய நடை.


“கடற்கரையில் வார்த்தை” என்று ஸ்ரீராமனையும், “தேர்தட்டில் வார்த்தை” என்று கண்ணனையும் சொல்லுவர். இங்கு கோபியர் கேட்பது சிம்மாசன வார்த்தை. பள்ளியறையில் சொல்லும் சொல் மாற்றப்படலாம். ஆனால் அரசவையில், சிம்மாசனத்தில் அமர்ந்து அரசன் அளிக்கும் வாக்கு உலகம் அறிந்ததாகவும் மாற்றமறாததாகவும் இருக்கும். அதனால்தான், “நீ சிம்மாசனத்தில் அமர்ந்து பேச வேண்டும்” என்று சிறுமியர்கள் வலியுறுத்துகிறார்கள்.


அந்தச் சிம்மாசனம் கோப்புடையது — பேரருமை கொண்டது. பரமபதத்தில் உள்ள தர்மாதிபீடத்திற்கே ஒப்பானது. தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, பொருள், பொருளின்மை என எட்டு கால்களைக் கொண்ட ஆசனம் அது. அதில் அமர்ந்து தான் பகவான் அடியவர்களின் குறை நிறைகளை ஆராய்ந்து அருள் செய்ய வேண்டும்.


“மன்னிக் கிடந்துறங்கும்” என்ற சொல்லுக்கு ‘நிலைகொண்டு உறங்குதல்’ என்பது நேரடியான பொருள். ஆனால் ‘மன்னி’ என்ற சொல்லுக்கு அகந்தை, கோபம், துக்கம், செருக்கு என்ற பல பொருள்களும் உண்டு. இங்கு அது அச்சமற்ற கம்பீர நிலையைக் குறிக்கிறது. சிங்கம் உறங்கும்போதும் உடலை ஒடுங்கச் செய்யாது; யாரும் தன்னை நெருங்க முடியாது என்ற தன்னம்பிக்கையுடன் குகையில் படுத்திருக்கும். அதுவே “சீரிய சிங்கம்”.


மற்றொரு விதமாக, ‘மன்னி’ என்பது நீக்கமற நிறைந்து வியாபித்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.


இந்தப் பாசுரத்தில், அந்தக் கிருஷ்ண சிம்ஹத்தை, அவன் பெருமைக்குரிய சிம்மாசனத்தில் அமரச் செய்து, தங்கள் தேவைகளையும் குறைகளையும் கேட்டு ஆராய்ந்து அருள் செய்யுமாறு ஆண்டாள் வேண்டுகிறாள். விழித்தெழும் பரமனின் கம்பீரமும், அவன் வீறு நடையும், இதைவிடச் சிறப்பாக வர்ணிக்க இயலுமா என்பது ஐயமே.


கண்ணனின் ஆளுமை, வலிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஆண்டாள் அவனைச் சிங்கத்துடன் ஒப்பிடுகிறாள். அவன் மென்மை, அழகு, கருணை ஆகியவற்றைச் சொல்லும்போது, “பூவை பூவண்ணா” என்று விளிக்கிறாள். இதுவே கோதை நாச்சியாரின் கவிநயம்.


“இங்ஙனே போந்தருளி” என்பது கண்ணனின் கம்பீர நடையைச் சுட்டுகிறது. அவன் கிடந்த அழகை கோபியர் பார்த்துவிட்டார்கள்; இனி அவன் நடையழகை அனுபவிக்க வேண்டாமா? அதனால்தான் அவனை அவன் திருமாளிகையிலிருந்து நடந்து அரசவை மண்டபத்திற்கு வருமாறு வேண்டுகிறார்கள். பக்தர்கள் மண்டபத்தில் கூடியிருக்க, பரமனும் அங்கேயே எழுந்தருள வேண்டுமே!


மேலும், விடியலில் எழுந்து, நோன்பு காத்து, திருநாமங்களைப் பாடி, ஒவ்வொருவரையும் எழுப்பி, காவலரின் அனுமதி பெற்று, நந்தகோபர், யசோதை, நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி, இறுதியில் கண்ணனிடம் வந்து நிற்பது — இதன் மூலம் ஆண்டாள் ஒன்றை நுட்பமாக உணர்த்துகிறாள். சரணாகதி என்பது வெறுமனே “எல்லாம் அவன் செயல்” என்று அமர்ந்து விடுவது அல்ல; அதற்கு சுயமுயற்சியும், பக்தியுடனான உழைப்பும் அவசியம் என்பதே அந்த உள்கருத்து.



Monday, 5 January 2026

அங்கண்மா ஞாலத்து!

 

அங்கண்மா ஞாலத்து!...




உலகம் விரிந்தது; அழகினால் நிறைந்தது; அனுபவ இன்பங்களால் மனதை மயக்கும் தன்மை உடையது. அத்தகைய உலகத்தில், ஒருவன் எவ்வளவு அனுபவித்தாலும், எவ்வளவு செல்வங்களைத் தனக்கென்று சேர்த்தாலும், அவையெல்லாம் இறுதியில் வாழ்க்கையின் பரம லட்சியமாக மாறுவதில்லை. மனித வாழ்வின் உண்மையான குறிக்கோள், தன்னைத் தானே அறிதல் என்பதே. இன்றைய காலத்து மானுட சிந்தனைகள் எடுத்துரைக்கும் மாஸ்லோவின் தேவைக் கும்பகமும் (Maslow's pyramid - Hierarchy of Needs) கூட, இதே உண்மையையே வேறொரு சொல்லாட்சியில் வலியுறுத்துகிறது.


இந்த தன்னறிதல் என்னும் தத்துவத்தைத்தான் ஆண்டாள், “அங்கண்மா ஞாலத்து” எனத் தொடங்கும் பாசுரத்தில், அகங்கார நிவ்ருத்தியாக விளக்குகின்றாள். உலகை ஆளும் பேரரசர்களாக இருந்தாலும், அவர்களிடத்தில் வேரூன்றியிருக்கும் அபிமானமும், தற்பெருமையும் அழிந்தாலே உண்மையான தன்னறிதல் பிறக்கும் என்பதை அவள் பாடலின் மூலம் உணர்த்துகிறாள்.



அப்படியெனில், தன்னை அறிதல் என்பது எவ்வாறு நிகழ்கிறது? இதற்குத் தெளிவான விடையை நம்மாழ்வார் அருளிசெய்கிறார்: “யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன்; யானே நீ, என் உடைமையும் நீயே…” என்று அவர் சொல்வதைக் கொண்டு, “யானே நீ” என்பதற்கு அஹம் பிரம்மாஸ்மி என்ற அத்வைதப் பொருள் கொள்ளக் கூடாது என்று ஆசார்யர்கள் உறுதியாக விளக்குகின்றனர். இவ்வாறு பொருள் கொள்ளுவது, பாடலைப் பிரித்து மட்டும் வாசிப்பவர்களின் தவறான பார்வை. “யானே நீ” என்பதன் உண்மைச் சாரம் — நான் உனக்குச் சொந்தமானவன்; என்னுடையதென நான் கருதுவது அனைத்தும் உன்னுடையதே; நீ என்னுள் ஆத்மாந்தர்யாமியாக இருந்து என்னை நடத்துகின்றாய் — என்பதே. இதுவே வைணவ சித்தாந்தம் வலியுறுத்தும் சேஷத்வ ஞானம்.



அப்படியானால், இறையடியை அடைவதுதான் தன்னறிதலின் ஒரே வழியா? மக்களுக்குச் சேவை செய்வதும் தன்னறிதலின் ஒரு வடிவமல்லவா? — நிச்சயமாக என்கிறார் என் தந்தை. “கடல்வண்ணன் பூதங்கள்” அனைத்தும் ஒருநாள் தங்களை அறிந்தே தீரும்; அது அவனுடைய திருவுள்ளத்தின் நியதி. நம்மாழ்வார், “என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் கவி பாடிய ஈசன்” என்று சொன்னபடி, ஜீவனுள் புகுந்து, அவன் வாயாகத் தன்னையேப் பாட வைத்தவன் பரமன்.



முன்னைய பாசுரத்தில், ஆண்டாள், பகவானுடைய திருவாசலில் வந்து நிற்கும் பகைவர்கள்கூட, தமது ஆணவம், அகந்தை முதலியவற்றை இழந்து, வலிமை சுருங்கி, தாழ்ந்து நிற்பதை உபதேசமாகக் காட்டினாள். ஈச்வர சன்னிதியில் நிற்கும் பொழுது, தன்னாட்சி, தன்னலம் எனப்படும் அகங்காரங்கள் அழிவதே இயல்பு என்பதைக் காட்டும் வ்யாக்யானம் அது.



இப்பாசுரத்தில், அதைவிட மேலான தத்துவமான அனன்யார்ஹ சேஷத்வம் — தமக்கு வேறு எந்தச் சரணமும் இல்லை; ஸ்ரீமன் நாராயணனே ஒரே ஆதாரம் — என்பதை ஆண்டாள் ஆணித்தரமாக நிறுவுகிறாள். பிற தேவதைகள், பிற ஆதாரங்கள் என்பவற்றில் சிறிதும் சாராமை கொண்டு, முழுமையாகப் பகவானிடமே சரணடைந்து, அவனுக்கே சேஷபூதராக இருப்பதே ஜீவனுடைய ஸ்வரூபம் என்கிறாள். இதுவே உண்மையான பக்தியும், கைங்கர்யமும்.




“அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்து” எனப் பாடும்போது, உலகை ஆண்ட மன்னர்களும், தங்களைத் தாங்கிக் கொண்டிருந்த அபிமானங்கள் சிதைந்து, உன் திருப்பள்ளிக்கட்டிலின் அருகே பணிவுடன் கூடிநிற்கும் காட்சியை ஆண்டாள் மனக்கண்களில் வரைவதுபோல் உணர்த்துகிறாள். அது மகாபாரத யுத்தத்திற்கு முன், கண்ணன் துயிலெழக் காத்திருந்த பாண்டவர்கள்–கௌரவர்கள் நினைவைக் கொண்டு வருகிறது.



ஆனால் தேவர்களும், மன்னர்களும் தேவைக்காக வந்தார்கள்; கோபியரோ, வழியே கண்ணன் தான். அவர்களுக்கு வேண்டியது அவனது “செந்தாமரைக் கடைக்கண்” பார்வை. அந்த அருள் பார்வை, அவர்களிடம் மிச்சமிருக்கும் அஞ்ஞானத்தையும், உலக பந்தங்களையும், பாவங்களையும் முழுதாய் அழிக்கும் சக்தி உடையது.




“சாபம் இழிந்தேலோர்” என்கிறாள் கோதை. ஆய்ப்பாடியில் கண்ணனோடு வாழ்ந்த கோபியருக்கு என்ன சாபம்? — தன்னிலை உணர்ந்த பின், அவனைப் பிரிந்திருப்பதே சாபம். அந்தச் சாபத்திலிருந்து விடுவித்து, தம்மை அவனுடன் ஒன்றச் சேர்க்க வேண்டும் என்ற துடிப்பே இப்பாசுரத்தின் உயிர். “கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?” என்ன ஒரு அனுபவ ஒப்புமை! இதே ரசத்தில் தான் திருப்பாணாழ்வாரும், “கரியவாகி… அப்பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே” என்று அரங்கனைத் தரிசித்த கணத்தில் தன்னை மறந்து உருகினார்.




“சிறுச்சிறிதே” என்று சொல்லுவதிலும் ஆண்டாளின் அன்பும் கவலையும் ஒன்றாகப் புலப்படுகிறது. மெதுவாக விழித்தெழும் கண்ணனை அதிக நேரம் ரசிக்க வேண்டும் என்பதும், அவனுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதுமான இரட்டை உணர்வு அதில் ஒளிந்திருக்கிறது.




பரமனின் திருக்கண்கள் அழகின் சிகரம் மட்டுமல்ல; அவை அடியார்கள்மேல் அருள் பொழியும் திரு அவயவங்கள். அதனால் தான், ஆழ்வார்கள் அனைவருமே அவன் சிவந்த அழகிய கண்களின் காதலர்களாக இருந்தனர்.




இவ்வாறு, ஆச்சார்ய உபதேசங்களை கடந்து, நப்பின்னை பிராட்டியின் புருஷகாரத்தைப் பெற்று, அடியார் கூட்டத்தோடு ஒன்றாகச் சரண் புகுந்த கோபியர், முக்தியின் கடைநிலையில் நிற்கிறார்கள். அடியாரோடு சேர்ந்து சரணடைதல் என்பது வைணவத்தின் உயரிய கோட்பாடு.



“அபிமான பங்கம்” என்பது அகங்கார நாசமே. பெருக்காரணை சுவாமிகள் கூறும் எட்டு அபிமானங்களிலிருந்து விடுபட்டவரே பரமனுக்குத் தகுந்த அடியார். இந்தப் பாசுரம், தத்துவ வரிசையில் 22வது தத்துவமான அகங்கார நிவ்ருத்தியையே மையமாகக் கொண்டது.




அபிமான பங்கமாய் வந்து - மாந்தரிடம் எட்டு வகையான மாயைகள் அல்லது குற்றங்கள் (அபிமானங்கள்) இருப்பதாக பெருக்காரணை சுவாமிகள் கூறுவார்:
1. உடலும் ஆத்மாவும் ஒன்றே என்பது
2. நம்மால் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பது
3. பரமனை விடுத்து வேறு ஒருவருக்கு நாம் கீழ்பணிந்தவர் என்ற எண்ணம்
4. நம்மைக் காக்க/உய்வு தர ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு அனுகூலர்களாலும் (நற்சுற்றம்) முடியும் என்ற எண்ணம்
5. சரணாகதி மற்றும் பக்தி என்ற வழிகளைத் தவிர்த்து வேறு வழிகளில் முக்தி பெற முடியும் என்ற மாயை.
6. (அழியக் கூடிய) சிற்றின்ப சுகங்களின் மீது ஆசைப்படுவது
7. நம் சக்தியே நம்மைச் செலுத்துகிறது என்ற மாயை
8. அடியவருக்கு உரிய மரியாதை தராமல் இருப்பது



மேற்கூறிய எட்டிலிருந்து விடுபட்டு நிற்பவரே, பரமனுக்கு உகந்த அடியார்க்கு அடியார் ஆவர். இந்த (22வது) பாசுரம் அபிமான பங்கத்தை பற்றிப் பேசுகிறது. தத்வங்களின் வரிசையில் அகங்காரம் என்பது 22வது தத்வம் என்பது குறிப்பிடவேண்டியது.



“திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்” என்ற உவமை, பரமனின் கருணையும் வீரியமும் ஒன்றாக விளங்கும் தன்மையைச் சுட்டுகிறது. இதையே ஆண்டாள் “செப்பமுடையாய், திறலுடையாய்” என்று வேறொரு பாசுரத்தில் போற்றுகிறாள். முதல் பாசுரத்தில் வரும், "கதிர்மதியம் போல் முகத்தான்" என்ற பதமும் பரமனின் இந்த இருநிலைத் தன்மையையே குறிக்கிறது! நம்மாழ்வாரும், “உளனென இலனென…” என்று அவனது இருநிலைத் தன்மையை விளக்குகிறார்.


அங்கண் இரண்டும் கொண்டு நோக்குதியேல்” — இது பரிபூர்ண அருளான விஷ்ணு கடாட்சம். ஒரு கண் ஞானத்தைப் பெருக்க, மற்றொரு கண் அஞ்ஞானத்தை அழிக்க.



அடுத்த பாசுரத்தில் (மாரி மலை முழைஞ்சில்) கண்ணன் விழித்தெழ, கோபியர் அவனை உடனே சிம்மாசனத்தில் (கோப்புடைய சீரிய சிங்காசனத்திலிருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து!) ஏற்றி விடுகிறார்கள்.




இறுதியாக, வைணவப் பெருந்தகைகள் கூறுவது: திருப்பாவையின் 22வது பாசுரத்தை தினமும் பக்தியுடன் ஓதுவோரின் பாவங்கள் அனைத்தும், பரமனின் திருவருளால் கரைந்து போகும்.



Sunday, 4 January 2026

ஏற்ற கலங்கள்

 ஏற்ற கலங்கள்...




வைஷ்ணவனுக்கு, ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டாளைப் படிப்பது என்பது, செய்யத்தகாத காரியம். ஆச்சாரியன் இன்றிப் படிப்பது, ஆண்டாளுக்குச் செய்யும் அநாதரம் ஆகும். கம்பன், சீதாதேவியை அலங்கரிக்கும் தோழியர்களைப் பற்றி “அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு செய்தார்” என்று கூறினான். அந்த அழகு இயல்பாகவே இருந்தாலும், அலங்காரம் செய்யாமல் விட்டுவிடவில்லை. அதுபோலவே, ஆண்டாள் பாசுரம் தன்னிச்சையான தெய்வீக அழகைக் கொண்டதாயினும், அதற்கு உரை செய்வது ‘அழகிற்கு அழகு சேர்ப்பது’ ஆகும்.



விபீஷணனை விடப் பெரிய பக்தன் யார் இருக்க முடியும்? அவனே அரக்கர்கள் அளவற்ற பெருந்தவம் செய்தவர்கள் என்று அகத்துள் வியந்து நிற்கிறான். “பெருந்தவம் இயற்றினோர்க்கும் பேர்வு அரும் பிறவி நோய்க்கு மருந்து என நின்றான் தானே…” என்று கம்பன் சொல்லும் போது, விபீஷணன் உள்ளம் கொள்ளும் ஆச்சரியம் வெளிப்படுகிறது. அருந்தவம் உடையவர்களாகிய அரக்கர்களையும் கண்டு, அவர்களுக்குக் கூட அருளளிக்க வல்லவன் எம்பெருமான் என்று அவன் நினைக்கிறான். இதே உணர்வுதான் ஆண்டாளின் ‘ஏற்ற கலங்கள்’ பாசுரத்திலும் பிரதிபலிக்கிறது. “ஆற்றாது வந்து அடிபணியும் மாற்றாருக்கு அவன் புரியும் அருளை எங்களுக்குக் கொடு” என்று ஆயர்பாடிச் சிறுமியர் வேண்டுவது, விபீஷணன் மனநிலையையே நினைவூட்டுகிறது. அருந்தவம் உடையவர்களுக்கு அளிக்கப்படும் அருளை, தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற சரணாகதி உணர்வே அதில் நிறைந்து காணப்படுகிறது.



இதற்கு முந்தைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில், பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே எழுப்பினார்கள். இப்பாசுரத்தில், பிராட்டி தானும் எழுந்திருந்து, கோபியர்களுடன் இணைந்து பகவானை எழுப்புவதாக உரை சொல்வர். அல்லது, இப்பாசுரத்திலும் பகவான்–பிராட்டி இருவரையும் இணைத்தே பாடுவதாகவும் கூறுவர். பக்தர்களிடமிருந்து எம்பெருமான் விலகியிருப்பது என்பது நினைத்துக் கூடப் பார்க்க இயலாதது. கோபியர் கண்முன்னே கண்ணனை அனுபவித்து, அந்த அனுபவ ரஸத்தில் பாடுகிறார்கள் என்பதைக் கவனித்தால், இப்பாசுரத்தின் ஆழம் நன்கு விளங்கும். ஆச்சாரியனையும் பிராட்டியையும் சரணடைந்து, அவர்களின் பரிபூர்ண அனுகிரகம் பெற்ற பின்னரே, ஒரு வைஷ்ணவனுக்குப் பரமனின் திருவுள்ளம் கிட்டி, முக்தி கைகூடும். அந்த நுட்பமான தத்துவமே இப்பாசுரத்தில் பக்தனின் சரணாகதி நிலையாகப் போற்றப்படுகிறது.



சுரந்த பாலை ஏந்திய குடங்கள் பொங்கி வழிய, தவறாது பால் சுரக்கும் பெரும்பசுக்கள் நிறைந்த நந்தகோபனின் திருமகனே! தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்திருப்பாயாக! வலிமையும் கருணையும் ஒருசேரக் கொண்டவனே! பூமியில் அவதரித்த ஒளிமிக்க வடிவத்தையுடையவனே! உன் வலிமையைப் பார்த்த மாத்திரத்தில் தங்கள் வலிமையை இழந்து, உன் திருவாசலையே கதியாகக் கொண்டு, உன் திருவடிகளில் சரணடையும் பகைவர்களைப் போல, உன்னைப் போற்றித் துதி பாடியவண்ணம் நாங்கள் வந்துள்ளோம். அருள்புரிவாயாக!



இப்பாசுரத்தில் கண்ணனை எழுப்ப கோபியருடன் நப்பின்னையும் இணைகிறாள். பரமனை எழுப்பி, கோபியரின் வேண்டுதலை அவனிடம் எடுத்துச் சொல்ல ஏற்ற தருணத்தையே தாம் எதிர்பார்த்துக் காத்திருந்ததாக நப்பின்னை விளக்குகிறாள். இதைக் கேட்ட கோபியர் பேருவகை கொண்டு, இன்னும் முனைப்புடன் “ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!” என்று கண்ணனைப் போற்றிப் பாடுகின்றனர். ஆயர்குலத்தில் ஒருவனாக வாழ்ந்தாலும், அவன் பரம்பொருள் தன்மை இப்பாசுரத்தில் தெளிவாக வெளிப்படுகிறது.



அன்னங்கராச்சார் சுவாமிகள், இந்தப் பாசுரத்தின் உட்கரு ஆச்சாரிய–சிஷ்ய உறவின் மேன்மையைப் போற்றுவதாகக் கூறுவார். ஆச்சாரியனுக்குத் திரு எம்பெருமானாரையும், உத்தம சீடர்களுக்குக் கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார் முதலியோரை உதாரணமாகச் சொல்வார்.



“மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்” என்ற சொற்றொடர், சீடர்கள் தங்கள் பகவத்–பாகவத அனுபவங்களையும் ஞானத்தையும், ஆச்சாரிய உபதேசத்திற்குச் சற்றும் மாறாது உலகிற்கு அளிக்கும் தன்மையை உணர்த்துகிறது. பால் சொரியும் என்பதில் பாலின் வெண்மை போல ஞானத்தின் தூய்மை குறிக்கப்படுகிறது. பசுக்கள் என்பது ஆச்சாரியனையும் சீடனையும் ஒருசேரக் குறிக்கும். ஒரு நல்ல சீடன் தான் பின்னர் ஆச்சாரியனாகிறான். இப்பாசுரத்தில் நான்கு ஆச்சாரிய–சிஷ்ய தலைமுறைகள் குறிப்பாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.



பகவான், பக்தியில் சிறியவன்–பெரியவன், புதியவன்–பழையவன் என்ற வேறுபாடுகளைப் பார்ப்பதில்லை. யார் கொண்டாலும் குறைவின்றி உள்ளத்தில் நிறைந்து விடுகிறான். அவனை நினைக்காதவர்களையும் கூட அவன் காக்கிறான். இந்த அளவிலான வள்ளன்மையை எண்ணி முடிக்க இயலாது. அதற்கு உதாரணமாகப் பசுக்களை ஆண்டாள் எடுத்துக்காட்டுகிறாள். உன் வீட்டு பசுக்களுக்கே இத்தகைய குணம் இருக்க, அவற்றின் உரிமையாளரின் மகனான நீ எங்களில் ஒருவனல்லவா? என்று அவனது விபவ அவதார மாயையில் திளைக்கிறாள்.



அடுத்தடுத்த வரிகளில், அந்த அவதார மாயையைத் தாண்டி, அவன் அருளாலேயே இவர்களுக்கு ஸ்வரூப ஞானம் மலர்கிறது. “ஊற்றம் உடையாய்!” என்று சொல்லி, சிறிதும் அயராது உலக வியாபாரத்தை நடத்தும் அவனது ஊக்கத்தை வியந்து போற்றுகிறாள். ஜீவர்களைப் படைத்து, காத்து, அவர்களுக்கு புலன்களையும் இன்பங்களையும் அளிப்பதில் அவன் காட்டும் உற்சாகத்தை நினைத்து ஆச்சரியப்படுகிறாள். விபீஷண சரணாகதியில், எதிர்ப்புகளைக் கடந்து அவனை ரக்ஷித்த எம்பெருமானின் உறுதி நினைவிற்கு வருகிறது.



“பெரியாய்!” என்ற சொல்லில், வேதங்களை ஆண்டாள் நினைக்கிறாள். வேதம் அனந்தம்; அவனும் அனந்தன். வேதம் அனாதி; அவனும் அப்படியே. வேதமே அவனது சுவாசம் என்றாலும், அதற்கும் மேலான பெருமையுடையவன் என்று இங்கே புகழ்கிறாள். பூர்வாசார்யர்கள், இப்பெருமையையும் அதற்கேற்ற அவன் சுலபத்தன்மையையும் சேர்த்தே பலவிதமாக விளக்குகின்றனர்.


ஊற்றமுடையாய் - தன்னிடம் சரணடைந்தவரின் குற்றம் குறைகளை ஆராயாத பெருமாளின் திருக்குணம் உணர்த்தப்படுகிறது

பெரியாய் - தயையும் வலிமையும் ஒரு சேர அமைந்த தயாநிதியும், பராக்கிரமசாலியும் ஆவான் பரமன். அடியவரை ரட்சிக்க இவ்விரண்டும் அவசியமில்லையா!

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே - பகவான் இப்பூவுலகில் எடுத்த அவதாரங்களையும், தோற்ற நிலைகளையும் குறிக்கிறது.

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! - இவ்வாக்கியத்தில் உள்ள 5 பதங்களுக்கு அபினவ தேசிகன் சுவாமிகள் அழகான விளக்கம் அளித்துள்ளார்.

ஊற்றம் உடையாய்! - பர(த்துவ) வாசுதேவனாக, அவனது (உலகம் மற்றும் உயிர்கள்) படைக்கும் தொழிலை போற்றும் உட்குறிப்பாம்.

பெரியாய்! - பரமனது 4 வியூகத் தோற்ற நிலைகளை குறிக்கிறது.

உலகினில் - ஸ்ரீராமன், கிருஷணன் என்று பரமன் எடுத்த பூவுலக (விபவ அவதாரங்களைச் சொல்கிறது. தோற்றமாய் நின்ற - இப்பூலவுலகில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில், பரமன் அர்ச்சாவதார (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) நாயகனாக அருள் பாலிப்பதைக் குறிக்கிறது.

சுடரே! - பரமன் ஒளி வடிவில் அந்தர்யாமியாக(எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) ஜீவாத்மாக்களில் இருப்பதைக் குறிக்கிறது!

மாற்றார் வலி தொலைந்து - அடியவர் அகந்தை, உலகப்பற்று, பொறாமை, தீய நட்பு என்று அனைத்தையும் துறந்து

உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன்னடி பணியும் - உன் கல்யாண குணங்களால் கவரப்பட்டு, நீயே (பரமனே) உபாயமும் (வழி) உபேயமும் (முக்தி) என்று உணர்ந்து, வேறு கதியின்றி உன் திருவடிகளில் சரண் புகுந்தோம்

போற்றியாம் வந்தோம் - பல்லாண்டு பாடுவதை / மங்களாசாசனம் செய்வதைக் குறிப்பதாம்.

இப்பாசுரத்தின்படி, பரமனின் திருவடி நிழலுக்கு வெகு அருகில் கோபியர் வந்து விட்டனர்!

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று...

 

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று...




ஆதியில், மனுஷன் தன் சொந்த உருவத்தைத் தண்ணீரில் கண்டுகொள்ளுதல், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பேயே நிகழ்ந்திருக்கும். உலோகங்களைப் பயன்படுத்திய காலத்திலேயே, சுத்தமான உலோகங்களிலும் அவன் தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். உலோகக் கண்ணாடிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துருக்கியில் இருந்தன; கண்ணாடியின் ஒருபக்கம் உலோகதரத்தைத் தடவி பிரதிபலிக்கும் முறை 1700 ஆண்டுகளுக்கு முன்னேத் தெரிந்தது; எளிய மக்களுக்கான கண்ணாடி லைபிக் என்னும் ஜெர்மன் வேதியலால் 1835இல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்டாளின் சிறுமியர் கேட்பது தட்டொளி. உலோகக் கண்ணாடி.



திருப்பாவையில், இதுவே நப்பின்னை பிராட்டியை துயிலெழுப்பும் கடைசிப் பாசுரம். ஆனால் கண்ணன் தெளிவாய்த் துயில் விலகுவது இன்னும் இரு பாசுரங்கள் ஆகும். கோதை நாச்சியார், பரமனை இரு தடவைத் துயிலெழ வேண்டி அழைக்கிறாள் – "கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்" என, "வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்" என – சரணடைவதே முதன்மை என்பதை முன்னிறுத்தி.



கோபிகையர் நப்பின்னையின் செயல்களை, அவளுடைய ஸ்வரூபத்துக்கும் ஸ்வபாவத்துக்கும் ஏற்றதல்ல எனக் குற்றம் சாட்டியபொழுது, நப்பின்னை, மௌனமே தன் ஆபரணமாகக் கொண்டு, ஸ்ரீகிருஷ்ணனிடம் உரையாட ஏற்ற காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அந்நிலையில், நப்பின்னை மனவருத்தம் கொண்டிருக்கிறாள் என எண்ணிய கோபிகையர், அவளின் மனநிலையை உணராமல், ஸ்ரீகிருஷ்ணனையே எழுப்பினால் எல்லாம் நன்னடையாகும் என்று கருதி, அவனை எழுப்புவதற்காக அவனுடைய குணமஹிமைகளைப் பாடத் தொடங்கினார்கள்.



ஆனால் ஸ்ரீகிருஷ்ணனும் மௌனமே ஏந்தி இருந்தான். அதைக் கண்ட கோபிகையர், “நப்பின்னையை நாம் கண்டித்ததினால் ஸ்ரீகிருஷ்ணனே நம்மேல் கோபம் கொண்டிருக்கிறானோ?” என எண்ணினர். அப்படியானால், அவன் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்ற நன்னோக்கில், நப்பின்னையின் பெருமைகளையும், அவளுடைய உயர்ந்த குணங்களையும் புகழ்ந்து பாடுவதன் மூலம், ஸ்ரீகிருஷ்ணனை சமாதானப்படுத்த விரும்பினார்கள்.



இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவான் ரக்ஷகத்வத்துக்கும், பிராட்டியின் புருஷகாரத்துக்கும் அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டிருப்பது தத்துவமன்று என்று துவங்கிய ஆண்டாள் இந்த பாசுரத்தில் அதன் தொடர்ச்சியாக அந்த திவ்ய மிதுனமான தம்பதிகளை போற்றி மங்களாசாசனம் செய்கிறாள்.



இங்கே இந்த திவ்ய தம்பதிகளுக்குள் போட்டியென்றெல்லாம் சொல்வது நமக்கு தத்துவத்தை விளக்கவதற்காகத்தான் – ஒரே ப்ரஹ்மம் – நிர்விசேஷமாக சின் மாத்ரமாக – அத்வதீயமாக ஒன்றாகவே இருக்கிறது – அதுவும் நிர்குணமாக இருக்கிறது என்று சொல்வது ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்லுகிற அனேக வேத வாக்யங்களை தள்ளி வைப்பது போல் ஆகும். அது தத்துவம் அன்று. பகவானும் பிராட்டியும் திவ்ய மிதுனமாக – இரட்டையாகவே இணை பிரியாமல் இருக்கிறார்கள். வேதம் பகவானின் அனந்தமான கல்யாண குணங்களைச் சொல்லுகிறது. இப்படி குண சம்ருத்தி உள்ள ப்ரஹ்மத்திடம் குணக்லேசம் உடைய நாம் எப்படி சென்று சேர்வது? அதற்குத்தான் பிராட்டி புருஷகாரம் – சிபாரிசு செய்கிறாள்.



இப்படி இரண்டு பேர்கள் இருப்பதால் உடனே நம் மனதில் ஐயம் எழ வாய்ப்பிருக்கிறது – இரண்டு பேர் என்றால், அதில் யார் பெரியவர்? ஒருவர் செய்யும் செயலை மற்றவர் தடுப்பரோ? என்றெல்லாம் தோன்றக்கூடும். அது தத்துவமன்று என்கிறாள் ஆண்டாள். 



பகவானுக்கு செப்பமுடையவன்! திறலுடையவன்! என்றெல்லாம் அவன் வீர பல பராக்ரம ப்ரக்யாதிகளை சொல்கிற ஆண்டாள், பிராட்டியைச் சொல்லும்போது, மென்முலையாள், செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! என்று அவள் ஸ்த்ரீத்வ பூர்த்தியை சொல்கிறாள். பகவானே ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார வ்யாபாரங்களை எடுத்துக் கொண்டிருக்கிறான். பிராட்டி அதில் அவனோடு சேர்ந்து அவனுக்கு உற்ற துணையாகவும் அவனுக்கு சந்தோஷத்தை – பூர்த்தியை தரக்கூடியவளாகவும் இருக்கிறாள் என்பதை இங்கே சுத்தாந்த சித்தாந்தமாக ஸ்தாபனம் செய்கிறாள்.



"தேவர் கூட்டத்தையும், அவர்களூக்குத் தலைவர்களாக விளங்கும் முப்பத்துமூன்று தேவர்களையும், இடர்கள் நெருங்குவதற்கு முன்னமே, அவர்கள் அச்சத்தை விலக்கி, காத்தருளும் நாயகனே கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச் செய்பவனே! குற்றமில்லாதவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! எங்கும் நிறைந்தவனே! பகைவருக்கு துன்பங்களைக் கொடுப்பவனே! உறக்கம் விட்டு எழுவாயாக! கவிழ்த்த செப்பைப் போன்ற மென்மையான மார்பகங்களையும், சிவந்த உதடுகளைக் கொண்ட வாயையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! துயில் விட்டெழுவாய்! எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும்(விசிறியையும்) கண்ணாடியையும் வழங்கி, உன் கணவனான கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நோன்பு நீராட வழி செய்வாயாக!"



அடுத்தபடியாக, பிராட்டியை மிகவும் போற்றிப் பாடி (ஒரு தடவையே) அவளைத் துயிலெழ வேண்டி (செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்), சென்ற பாசுரத்தில் நப்பின்னையை சற்று கடிந்து சொன்னதற்கு (நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்!) பரிகாரம் செய்து விடுகிறார் ஆண்டாள்!



“உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்…”என்று பாடி, கோபியரது உய்வுக்கு புருஷகாரம் செய்யும்படி (பரிந்துரைக்குமாறு) நப்பின்னையிடம் ஆண்டாள் விண்ணப்பிக்கிறாள்!



“உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு” என்கிற இந்த வாக்கியத்திற்கு, பூர்வாசார்யர்கள், “உக்கமும் தந்து, தட்டொளியும் தந்து, உன் மணாளனையும் தந்து” என்று விசேஷமான அர்த்தத்தைச் சொல்கிறார்கள். இது சாதாரணமான மனித உறவாக இருந்தால், “எங்கள் கணவனை எங்களுக்குக் கொடு” என்று மனைவியரே கேட்க முடியாத நிலையில், ஒரே கணவனைப் பற்றி ஐந்து லட்சம் கோபிகைகள் ஒன்றுகூடி வந்து கேட்க இயலுமா? இது லௌகீக சம்பந்தம் அல்ல; முழுக்க முழுக்க தெய்வீக சம்பந்தம்.



பகவான் அத்தகைய பரிபூரண ப்ரஹ்மம். எல்லோருக்கும் துளி துளியாக எடுத்துக் கொடுத்தாலும், அவன் குறையாமல் நிற்கும் அப்பழுக்கற்ற முழுமை. தசரத மகாராஜன், “ராமனைத் தந்தேன்” என்று விஸ்வாமித்திரரிடம் எவ்வித தயக்கமும் இன்றி ஒப்படைத்தது போல, “உன் மணாளனை எங்களிடம் எடுத்துக் கொடுத்து விடு” என்று கோபிகைகள் வேண்டுகிறார்கள். இதன் மூலம், பகவானின் மீது பிராட்டிக்கு உள்ள அசாதாரணமான உரிமையும் அதிகாரமும் இங்கே தெளிவாக எடுத்துக் காட்டப்படுகிறது.



அசேதனங்களைப் போலவே, பகவானையும் பக்தர்களிடம் சேர்த்துவைக்கக் கூடியவள் அவளே. உக்கம் என்பது விசிறி; தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி. உக்கம் கைங்கர்யத்திற்குரியது; தட்டொளி ஸ்வரூபத்தை வெளிப்படுத்துவது. அதாவது, கைங்கர்ய ஞானமும் ஸ்வரூப ஞானமும் பிராட்டியின் திருவருளால் பெற்றே ப்ரஹ்மத்தை அடைய முடியும். அதுவே மோக்ஷம். அத்தகைய மோக்ஷத்தை அருள வேண்டி, மஹாலக்ஷ்மியான நப்பின்னையிடமே கோபிகைகள் பிரார்த்திக்கிறார்கள்.



வைஷ்ணவ சம்பிரதாயப்படி, திருமகளும் மற்ற ஜீவாத்மாக்களைப் போல பரமாத்மனாகிய நாராயணனைச் சார்ந்தவளே என்றாலும், அவளின்றி பரமன் பரிபூரணனாக வெளிப்படுவதில்லை என்ற உன்னத தத்துவத்தை ஆண்டாள் இப்பாசுரத்தில் மிக அழகாகச் சொல்கிறாள். பிராட்டியின் முன்னிலையில் மட்டுமே ஜீவாத்மாக்களுக்கு முக்தி சாத்தியமாகிறது. இப்பாசுரத்தில், பரமன் பக்தர்களை பேணும் பாங்கும், பகைவரை அழிக்கும் வீரியமும் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளன. இவ்விரண்டும் வெளிப்பட வேண்டுமெனில் இரண்டு குணங்கள் அவசியம்:



செப்பம் மற்றும் திறல். செப்பம் என்பது குறையற்ற, அப்பழுக்கற்ற பூரண தன்மை (Perfection). திறல் என்பது எங்கும் நிறைந்து அனைத்தையும் சரியாக அளந்து ஒழுங்குபடுத்தும் ஆற்றல். இதே கருத்தை நம்மாழ்வாரும், “செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா” என்று தமது பாசுரத்தில் உறுதிப்படுத்துகிறார். 



இங்கு கோபிகைகள், “முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று” என்று தேவர்களை ஏன் குறிப்பிடுகிறார்கள்? அதன் உள் நோக்கம்: “தேவர்களுக்கு அமுதம் வேண்டும், தேவலோக பதவி வேண்டும், பலம் வேண்டும்; ஆனால் எங்களுக்கோ உன்னைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்” என்பதும், “உன் அருளால் தேவர்கள் சாகாவரம் பெற்றனர்; ஆனால் நாங்களோ, உன் திருவருளையே நாடி இப்பூவுலகில் தவித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் துயரை நீக்குவாயாக” என்பதும் தான்.


இவ்வாறு, கோபிகைகளின் உள்ளக் குரல், பக்தியின் பரிபூரண நிலையை இங்கு ஆழமாக வெளிப்படுத்துகிறது.


முப்பத்து மூவர் - தேவர் கூட்டத்துக்கு தலைவர்கள் 33 பேர், 8 வசுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வினி தேவர்கள்

முன் சென்று - தீவினைகள் நோக்கி நாங்கள் செல்வதற்கு முன்பாகவே, இன்னல்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே

கப்பம் தவிர்க்கும் கலியே - அச்சங்களை விலக்கி அபயமளிக்கும் பரமன்

செப்பமுடையாய் - நேர்மையான சொரூபம் கொண்டவன், வலிமை மிக்கவன்

திறலுடையாய் - எங்கும் நிறைந்த பரம்பொருள், சாதுரியம் மிக்கவன், உலக ரட்சகன்

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா - அனைவரையும் சமமாக பாவிப்பவனாக இருந்தாலும், அடியவருக்குத் துன்பம் தரும் பகைவர்களின் செருக்கை அழிப்பவன். தீயவர் தன் மீது கொள்ளும் பகைமையைக் கண்டு பரமன் ஒருபோதும் கோபம் கொள்வதில்லை!

விமலன் - இதனுடன் சேர்த்து மொத்தம் 4 சொற்கள் உள்ளன: அமலன், விமலன், நிமலன், நிர்மலன்.

அமலன் - நம் தீவினைகளை அழிப்பவன்

விமலன் - அஞ்ஞானம் நெருங்க முடியாதவன்

நிமலன் - பகைவர்களுக்கு அச்சத்தைத் தருபவன்

நிர்மலன் - தன்னிடம் சரணடைந்தவரின் குறைகளை ஆராயத தன்மை கொண்டவன்!

செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் - திருமகளின் சௌந்தர்யமான (அனைத்து

அழகையும் தன்னுள் கொண்ட) தோற்றத்தைப் போற்றுவதாம்.

நப்பின்னை நங்காய் திருவே - சொல்லிச்சொல்லாத சௌந்தர்யங்கள் எல்லாவற்றிலும் பூர்த்தியானவளே! நங்காய்! அழகு அவளாலே, குணங்கள் அவளாலே, மேன்மை அவளாலே, நீர்மை அவளாலே, அப்படி திருவுக்கு நிகரானவளே! திருவே!

உக்கமும் தட்டொளியும் தந்து - அகங்கார மமகாரங்களை நீக்கி மெய்ஞானத்தை அருளி

இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய் - உடனே எங்களுக்கு மோட்ச சித்தியை அருள வேண்டும் என்று அடியவர் கட்டளையிடுகின்றனர்! "நீராட்ட" என்பது பரமனுடன் ஒன்றறக் கலப்பதையே உள்ளர்த்தமாக கொண்டிருக்கிறது



Saturday, 3 January 2026

குத்து விளக்கெரிய!

 

குத்து விளக்கெரிய!



தமிழ் இலக்கிய மரபில் பெண்களின் பருவநிலைகள் நுண்ணிய வகையில் வகுக்கப்பட்டுள்ளன. பேதை முதல் பேரிளம்பெண் வரை பருவங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வயதுக்கும், உளநிலைக்கும் உட்பட்டவை. சிலப்பதிகாரம், கண்ணகி திருமணமான வேளையில் அவளுடைய வயதைத் துல்லியமாகச் சுட்டுகிறது. அதுபோலவே, ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனுடன் ஐக்கியம் பெற்றபோது அவள் பதினைந்து வயதே ஆனவள் என்பதும் மரபில் கூறப்படுகிறது. ஆகையால், திருப்பாவையில் தோன்றும் ஆயர் சிறுமியர், மங்கைப் பருவத்தின் தொடக்கத்திலும் அல்லது அதற்கு முன்புமான வயதினரே எனக் கொள்ளுதல் பொருந்தும்.



நப்பின்னை பிராட்டி திருமணமானவளாக வர்ணிக்கப்படுவதால், அவள் மடந்தைப் பருவத்தில் இருப்பவள் என்ற ஊகம் வியாக்யானத்திற்கு இடமளிக்கிறது.



ஆயர் குடில்களில் குத்துவிளக்குகள் எரிவது இயல்பே. ஆனால் தந்தத்தால் செய்யப்பட்ட கோட்டுக்கால் கட்டிலும், மெத்தென்ற பஞ்சசயனமும், அச்சூழலில் இருப்பதற்கான சாத்தியம் குறைவு. ஆகையால், நப்பின்னையின் படுக்கைச் சிறப்பை நேரடியாக எடுத்துக்கொள்ளாமல், அவள் திருவிடத்தில் காணப்படும் தெய்வீக வைபவத்தை உணர்த்தும் உவமையாகக் கொள்ளுதல் வியாக்யான ரீதியாகச் சிறந்தது. ('பஞ்சசயனம்' என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தை என்பது நேரடியான பொருள்.) 



நப்பின்னை கதவைத் திறந்த பின்பே சிறுமியர் உள்ளே வந்திருப்பர் என்றால், கண்ணன் அவள் மார்பில் சாய்ந்து உறங்கிய நிலையை அவர்கள் எவ்வாறு கண்டனர் என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கு, “உள்ளே நுழைந்தவுடன், படுக்கையின் நிலையும், மலர்கள் சிதறிக் கிடந்த தோற்றத்தையும் கண்டு, இவ்வாறு அவர் உறங்கியிருப்பார்” என்று அவர்கள் கற்பனை செய்து பாடியதாகக் கொள்ளலாம் என்று உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.



“நாற்புறமும் குத்துவிளக்குகள் எரிய” எனும் தொடக்கம், வெளிப்படையாக அறையின் அழகைச் சுட்டினாலும், உள் பொருளில் அது ஞான ஒளியையும், ஆச்சார்ய உபதேசத்தையும் உணர்த்துகிறது. ஐந்து முகங்களையுடைய குத்துவிளக்கு, பரமனின் ஐந்து நிலைகளையும் குறிக்கிறது என்ற உள்ளுரையும் சொல்லப்படுகிறது.



“பஞ்சசயனம்” என்பதும் வெளிப்படையாக மென்மையான படுக்கையைச் சுட்டினாலும், உள் பொருளில் பரமார்த்த சித்தாந்தங்களை உணர்த்தும் சொல். பரமாத்ம நிலை, ஜீவ நிலை, சாதன மார்க்கம், பந்தக வினைகள், முக்தி அனுபவம்—இவை ஐந்தும் இதில் குறிக்கப்படுகின்றன.



கோபியர், முன்னர் ஒரு பாசுரத்தில் கண்ணனை மட்டும் எழுப்ப முயன்றனர்; அடுத்ததில் பிராட்டியை மட்டும் துயிலெழுப்பப் பாடினர். இரண்டிலும் பயன் ஏற்படவில்லை. ஆகையால் இப்பாசுரத்தில், “மலர்மார்பா” என்றும் “மைத்தடங்கண்ணினாய்” என்றும், பரமனையும் பிராட்டியையும் ஒன்றாகக் கூட்டித் துயிலெழுப்ப முனைகிறார்கள். வைணவ சித்தாந்தத்தில், பகவான் மற்றும் பிராட்டி இருவரின் திருவுள்ளம் சேர்ந்தால்தான் ஜீவனுக்கு முக்தி என்பது இங்கு உள்ளுரையாக விளங்குகிறது. பிராட்டியின் பரிந்துரை—புருஷகாரம்—அத்தியாவசியம் என்பதே இதன் தத்துவப் பொருள்.


இருப்பினும், இவ்வளவு விண்ணப்பங்களுக்குப் பிறகும் கதவு திறக்காததற்குக் காரணம், தெய்வ தம்பதிகள் இருவரும் “யார் முதலில் சென்று அருள்புரிவது” என்ற அன்பு போட்டியில் தாமதிப்பதே என வியாக்யானம் ரசத்துடன் கூறுகிறது.


சில உரையாசிரியர்கள், நப்பின்னை கதவைத் திறக்க முயன்றபோது, கண்ணன் அவளை இழுத்து தடுத்து, “உன் அடியார்களை நீயே பார்த்துக் கொள்; என் அடியார்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற திருவுள்ளத்துடன் நடந்துகொண்டான் என்கிறார்கள். ஆனால் அந்த இழுப்பில், இருவரும் படுக்கையில் விழ, நப்பின்னையின் நெருக்கம் கண்ணனுக்கு வெளி உலகை மறக்கச் செய்தது. பிராட்டியும் அவன் அணைப்பை விட்டு விலக விரும்பவில்லை. இதனால், கோபியர் மீண்டும் நப்பின்னையை நினைவூட்டிப் பாட வேண்டியதாகிறது. பிராட்டியை உணர்த்தும் பாசுரமே, பரமனையும் உணர்த்தும் பாசுரமாக அமைந்தது.


“நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா” என்ற சொற்பிரயோகத்தில், பிராட்டியின் தாய்மைக் கருணையும், பரமனின் கருணை வடிவமும் ஒருசேர சுட்டப்படுகின்றன. ‘கொங்கை’ என்ற சொல்லின் வாயிலாக, பிராட்டி தன் கருணையால் பக்தரைப் பேணும் இயல்பு குறிப்பாக உணர்த்தப்படுகிறது. பரமனிடம் ஆலோசிக்காமலலேயே பிராட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள். ஆனால் பெரும்பாவம் செய்தவர்களைக் கூட, பரமனிடம் ஆலோசிக்காமல், ஒருபோதும் பிராட்டி தண்டிக்க மாட்டாள். அப்பேர்ப்பட்ட கருணை மாதா அவள். "மலையப்பா! உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை" என்று ராஜாஜி போற்றிய தாய் அவள்! பராசர பட்டர் மிகவும் உகந்த பாசுரம் இது. இந்த பாசுரத்தின் அடிப்படையில் தான், திருப்பாவைக்கு அவர் எழுதிய வடமொழித் தனியனான “நீளா துங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத் போத்ய க்ருஷ்ணம்” என்பது அமைந்தது, என்பது குறிப்பிட வேண்டியது.



இவ்வாறு, வெளிப்படையான பொருளில் விரசம் இல்லாதவாறும், தத்துவார்த்தத்தில் குழப்பமின்றியும், மேலிடக் கிடைக்கும் அர்த்தத்திலேயே ஆழமான உண்மைகளை உணர்த்தக் கூடிய இடத்தை ஆண்டாள் விட்டுச் சென்றிருக்கிறாள். அதுவே அவளது கூர்மையான கவிதைச் சக்தி.



குத்துவிளக்கெரிய - ஆச்சார்ய உபதேசத்தை குறிப்பில் உணர்த்துகிறது. இன்னொரு விதத்தில் (சம்சார இருளை விலக்க வல்ல)ஒளிரும் ஞானத்தைச் சொல்வதாம். குத்து விளக்கின் 5 முகங்கள், பரமனின் 5 நிலைகளை, அதாவது, பரத்துவ (வைகுண்ட நிலை), வியூக (வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த என்று நான்கு வகைப்படும்), விபவ (அவதார நிலைகள்), அர்ச்ச (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) மற்றும் அந்தர்யாமி (எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) குறிப்பதாகவும் உள்ளுரை உண்டு.


இன்னொரு விதத்தில் "குத்து விளக்கெரிய" என்பது தனது ஒளியால் தானே மிளிர்ந்து கொண்டு, அதே சமயத்தில் அடியவருக்கும் பரமனின் திருவடிவத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கருணை வடிவான திருமகளை குறிப்பில் உணர்த்துவதாம்!!


அன்னங்கராச்சார் சுவாமிகள் "குத்து விளக்கு" (பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படத் தக்கது என்பதால்!) என்பது எம்பெருமானாரை (ராமானுஜரை) குறிப்பதாக உரை எழுதியிருக்கிறார். தோரண விளக்கு (ஒரே இடத்தில் இருப்பதால்!) என்பது அவரது குருவான திருக்கோட்டியூர் நம்பியைக் குறிப்பதாம்.



ஒரு குத்து விளக்கில ஆண்டாள் எவ்வளவு விஷயங்களை வைத்திருக்கிறாள் பாருங்கள் :-)



கோட்டுக்கால் கட்டில் - கட்டிலின் நான்கு கால்கள் தர்ம(கடமை), அர்த்த(செல்வம்), காம(ஆசை), மோட்சம்(முக்தி) என்ற 4 சம்சார ஆதார நிலைகளை உணர்த்துவதாக உள்ளுரையாம்.



இன்னொரு விதத்தில், இவை "நான்" என்ற அகந்தையின் 4 நிலைகளை (நானே செய்பவன், நானே அனுபவிப்பவன், நானே ஞானமிக்கவன், நானே பக்தன்) உணர்த்துவதாம். பரமன் இவற்றுக்கு மேல் இருப்பவன்! "நான்" என்று கூற தகுதி உடையவன் பரமன் ஒருவனே, பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசம் அருளியபடி!



மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி - பஞ்சசயனம் பஞ்ச பூதங்களை (அ) ஐவகை உயிர்களை (தேவ, மானுட, மிருக, தாவர, ஜட) குறிப்பதாக உட்கருத்தாம். பரமன் இவற்றுக்கெல்லாம் மேல் உள்ளான் என்பதை "மேலேறி" என்பது உணர்த்துகிறது!



கொத்தலர் பூ - பரமனையும், பிராட்டியையும் சுற்றிக் குழுமியுள்ள தேவர்கள், முனிவர்கள், அடியவர் கூட்டத்தைக் குறிக்கிறது.


மலர் மார்பா - பரமனின் கருணை வடிவைக் குறிக்கிறது.


வாய் திறவாய் - திருவருளுக்காக தொழுது நிற்கிறோம், எங்கள் சரணாகதியை ஏற்றுக் கொள்வாய்! நம்மாழ்வாரின் திருவாய்மொழி வாக்கியத்தை "தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து* உன் தாமரைக் கண்களால் நோக்காய்*" நினைவு கூர்க!


மைத்தடங்கண்ணினாய் - கிருஷ்ண பக்தியில் (மை) உருகி நிற்கும் உத்தம அடியவரைக் குறிக்கிறது.


நீ உன் மணாளனை - ஆச்சார்யனை (குருவை) குறிப்பில் சொல்வதாம்.


எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் - எங்கள் அஞ்ஞான இருளை விலக்க வல்ல குருவின் உபதேசத்தை அடியவர் நாங்கள் பெற தடையாக இருத்தல் கூடாது!



எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவம் அன்று - பரமனை விட்டு பிரியாத நிலை வேண்டும் வேண்டும் அடியவர் மனநிலையை குறிப்பில் உணர்த்துவதாம்! அதுவே பேரின்பம் (தத்துவம்). மீண்டும் சம்சார பந்தத்தில் சிக்கிக் கொள்வது தத்துவமன்று!!!


"அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு" என்று விஷ்ணுசித்தர் பாடியதை நினைவு கூர்க 


தகவேலோ - பரமனின் முழுமையான அருளின்றி, மேற்கூறியது (முக்தி) நடைபெறாது.


மேலும், இங்கு "நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா" என்ற கோதை நாச்சியார் வாக்கியம், "அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா" என்ற நம்மழ்வரின் பாசுர வரியை நினைவூட்டுகிறது தானே!


தத்துவம் = தத் + த்வம் = பரமன் + பிராட்டி எனும்போது, திருமாலும் திருமகளும் பிரிக்கமுடியாதவர் என்பது விளங்குகிறது.


சூடிக் கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம்!




Friday, 2 January 2026

“உந்து மதகளிற்றன்”

 

“உந்து மதகளிற்றன்” 



முந்தைய பாசுரத்தில், ஆண்டாள் முதலில் நந்தகோபரை எழுப்பி, பின்னர் யசோதை, அதன்பின் பலராமன், இறுதியில் கண்ணன் ஆகியோரின் வழியாக பகவானை அடைய முயன்றாள். ஆயினும், அவள் முயற்சி பயனளிக்கவில்லை. காரணம் என்னவெனில் —
பகவானை ஆச்ரயிப்பதற்கு முன், பிராட்டியின் புருஷகாரம் அவசியம் என்ற சனாதன நியமத்தை அச்சமயம் கோதை மறந்திருந்தாள்.


கிருஷ்ணனை அடைய விரகத்தால் துடித்த கோபிகைகள், தம்மையே மறந்த நிலையிலிருந்தவர்கள். தம்மையே மறந்தவர்களால் முறையையும் மறப்பது இயல்பே. ஆனால் பின்னர் அறிவு தெளிந்து, “பகவானை அடைவதற்கு அவன் தேவியின் மத்தியஸ்தமே எளியவும் நிச்சயமானவும் ஆன வழி” என்பதை உணர்ந்து, இப்பதினெட்டாம் பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியைத் துயிலெழுப்பத் தொடங்குகிறாள்.


பிராட்டியின் புருஷகார மகிமை

தீயை நீரால் அணைக்கலாம். ஆனால் நீரே வெப்பமடைந்தால், அதனை குளிரச் செய்ய மீண்டும் நீரே வேண்டுமல்லவா? அதுபோலவே, ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே ஏற்படும் இடைவெளியைச் சீர்செய்யக் கருணைமிகு தாயான திவ்ய மாதாவின் மத்தியஸ்தம் அவசியம். ஆனால் அந்தத் தாயை அடைய வேறு எந்த இடைச்செயலும் தேவையில்லை. அவள் எந்நேரமும் காரணமற்ற, எல்லையற்ற தயையால் ஜீவர்களை அருளால் மூடுபவள்.


ஆண்டவனுடைய அருளைப் பெற, அவன் தேவியின் புருஷகாரம் அவசியம் என்பதையே ஸ்ரீமத் ராமாயணம் முதலான சாஸ்திரங்கள் பல இடங்களில் வலியுறுத்துகின்றன. பத்திராச்சல ராமதாசர் ராமனைப் பற்றி எண்ணற்ற கீர்த்தனைகள் பாடினாலும், “நனு ப்ரோவுமணி செப்பவே…” என்று சீதாபிராட்டியைச் சரணடைந்த பின்பே ராமபிரான் அருள் புரிந்தார் என்பது இதற்குத் தெளிவான எடுத்துக்காட்டு.


நப்பின்னை யார்? – சாஸ்திர ஆதாரம்

ஆழ்வார்களில் ஒன்பது பேர் நப்பின்னைப் பற்றிப் பாடியுள்ளனர்.

திருமங்கை ஆழ்வார்,“ஒருமகளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும்” என்று கூறுகிறார்.

நம்மாழ்வார், “பூமகள், மண்மகள், ஆய்மகள்” என்று பாடுகிறார். இங்கு “ஆய்மகள்” என்பதே நப்பின்னை என்பதில் ஐயமில்லை.


திருமாலுக்கு திருமகள், பூமகள் போல மூன்றாவது தேவியாக நப்பின்னை விளங்குகிறாள். வடமொழி ஹரிவம்சம் நூலில் அவள் நீளாதேவி என அழைக்கப்படுகிறாள். கண்ணன் ஏழு ஏறுகளை வென்று அவளை மணந்தான் என அந்நூல் கூறுகிறது. அவள் நந்தனின் மைத்துனன் கும்பகன் (கும்பகோன்) என்பவனின் புதல்வி என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதாபாகம் தென்னிந்திய பிரதிகளில் விரிவாகக் காணப்படுகிறது. வடநாட்டில் “நீளாதேவி” என்ற பெயரே அறியப்படவில்லை என்று ஹார்டி தமது Viraha Bhakti என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.


ராமானுஜர் தமது சரணாகதி கத்யத்தில்
“ஏவம் பூத பூமி நீளா நாயக”
என்று சொல்லி, ஸ்ரீதேவியோடு சேர்த்து பூதேவி, நீளாதேவியையும் பகவானின் நாயகிகளாக ஏற்றுக் கொள்கிறார்.

பராசர பட்டர்,

“நீளாதுங்க ஸ்தனகிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்”

என்று, நீளாதேவியின் திருமேனியில் தலை வைத்து துயில்கின்ற கண்ணனை வர்ணிக்கிறார். இதுவே ஆண்டாள் சொன்ன

“கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா”
என்ற அடியின் வேதாந்த சாயல்.



தமிழ் இலக்கியங்களில் நப்பின்னை

சிலப்பதிகாரத்தில்,

“மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்…”
என்று நப்பின்னை குறிப்பிடப்படுகிறாள்.

சீவக சிந்தாமணியில், முருகன் வள்ளியை மணந்ததுபோல கண்ணன் நப்பின்னையை மணந்தான் என்ற உவமை வருகிறது.

“பின்னை” என்ற சொல்லுக்கு
பின்னால் வந்தவள்,
பூமாதேவியின் தங்கை,
அல்லது அழகிய பின்னல் கூந்தலுடையவள்
என்ற பல பொருள்கள் உண்டு.

திருவள்ளுவமாலையில் அவள் “உபகேசி” என அழைக்கப்படுகிறாள்.



அவதார வேறுபாடுகளில் புருஷகாரம்

  • பரமபதத்தில் – மூன்று தேவிகளிடமும் சரணடைந்த பிறகே பரமாத்மனை அடைய முடியும்.

  • க்ஷீராப்தியில் – ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் திருவடிகளில் பணிந்த பின்பே நாராயணனை அணுக வேண்டும்.

  • ராமாவதாரத்தில் – சீதாபிராட்டியின் வழியே ஸ்ரீராமனை அடைய வேண்டும்.

  • வராகாவதாரத்தில் – பூதேவியின் மத்தியஸ்தமே வழி.

  • கிருஷ்ணாவதாரத்தில் – கோகுலத்தில் ஒரே தேவியாக இருந்த நப்பின்னைப் பிராட்டியே புருஷகார பூதையாக விளங்கினாள். ஆகவே ஆண்டாள் இப்பாசுரத்தில் அவளையே எழுப்புகிறாள்.



பாசுர விளக்கம்

மதம் கொண்ட யானையின் நடையை உடையவனும், பகைவரை நோக்கிப் பின்னடையாத தோள் வலிமை கொண்டவனுமான நந்தகோபரின் மருமகளே! மணம் கமழும் கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டியே! நீயாகவே தயை செய்து எழுந்து கதவைத் திறவாயாக! கோழிகள் கூவுகின்றன — காலம் விடிந்துவிட்டது. குருக்கத்தி கொடிகள் படர்ந்த பந்தலின் மேல் குயில்கள் குரலெழுப்புகின்றன. மலர்ப் பந்தைத் தழுவிய மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனின் திருநாமங்களைப் பாட வந்திருக்கிறோம். செந்தாமரையை ஒத்த உன் சிவந்த மென்மையான கைகளில் அணிந்த வளையல்கள் இனிமையாக ஒலிக்க, மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறப்பாயாக!



“நந்தகோபாலன் மருமகளே” என்ற அழைப்பு

ஆண்டாள், “நந்தகோபாலன் மருமகளே” என்று சொல்லுவதில் ஆழ்ந்த நயம் உள்ளது. பிறந்த வீட்டைவிட புகுந்த வீட்டிலேயே நப்பின்னை பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தாள் என்பதை உணர்த்தும் சொல் அது.

மேலும், “உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்” என்று நந்தகோபரின் வீரத்தைப் போற்றி, அத்தகைய வீரனின் மருமகளாகிய நப்பின்னையை அழைத்தால் அவள் மனம் உருகாதா? — அதுவே கோபியரின் நம்பிக்கை.



பந்தார்விரலி – புலன்களின் உவமை

“பந்தார் விரலி” என்று சொல்லும்போது, கண்ணனுடன் பூப்பந்து விளையாடி, அவனை வென்று, ஒரு கையால் கண்ணனையும் மற்றொரு கையால் பந்தையும் தழுவிக் கிடந்த நப்பின்னையின் அழகிய நிலை வர்ணிக்கப்படுகிறது.

ஐம்புலன்களும் இங்கு நுட்பமாகக் குறிக்கப்படுகின்றன:

  • கந்தம் கமழும் குழலி – மூக்கு

  • உன் மைத்துனன் பேர் பாட – நாக்கு

  • சீரார் வளையொலிப்ப – செவி

  • வந்து திறவாய் – கண்

  • பந்தார்விரலி – தொடுதல்

அனைத்து புலன்களும் பரமனில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் தத்துவம்.



ஏக சேஷித்வம்

திருமாலும் திருமகளும் பிரிக்க இயலாத ஒரே தத்துவம். உபாயமும் அவர்களே, உபேயமும் அவர்களே. இதுவே வைணவ சித்தாந்தத்தின் “ஏக சேஷித்வம்”.



“கோழி” என்ற குறியீடு

“வந்து எங்கும் கோழி அழைத்தன காண்” — இங்கு கோழி ஒரு உவமை.

வைணவன்
• நாரையைப் போல – ஞானியைச் சார்வான்
• கோழியைப் போல – வேத சாரத்தைப் பிரித்தறிவான்
• உப்பைப் போல – பகவத், பாகவத, ஆச்சார்ய சேவையில் கரைந்திருப்பான்
• ஊமையைப் போல – அகங்காரம் இன்றியவன்

என்று பெரியோர் கூறுவர்.

கோழி மூன்று முறை கூவும் — அது

  1. திருமந்திரம்

  2. த்வயம்

  3. சரமச்லோகம்

என்ற மூன்றையும் தினமும் சிந்திக்க வேண்டுமென்பதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதேபோல் பரத்துவம், வைணவத்துவம், சரணாகதித்துவம் என்ற மூன்று தத்துவங்களையும் உணர்த்துகிறது.



  • உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் – சரணாகதியை ஏற்றுக் கொள்ளத் தகுந்த பரமபுருஷன்

  • நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! – புருஷகார பூதையான திருமகளைச் சுட்டுகிறது

  • கந்தம் கமழும் குழலி! கடை திறவாய் – தடைகளை நீக்கி வழி செய்

  • வந்து எங்கும் கோழி அழைத்தன காண் – உன்னைச் சரணடைந்துள்ளோம்

  • மாதவிப் பந்தல் மேல் குயிலினங்கள் – வேத–உபநிஷத்துக்கள் நாதமெழுப்புகின்றன

  • பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாட – மாயை அகன்று சேவைக்கு உரியவர்களாக எங்களை ஆக்கு

  • செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப – மங்களகரமான அனுக்ரஹம் அருள

  • வந்து திறவாய் – பரமனிடம் எங்களைச் சேர்த்து வை



உடையவர் ராமானுஜர், திருப்பாவையுடன் உயிரோடு இணைந்தவர். அதனால் அவருக்கு “திருப்பாவை ஜீயர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. பிக்ஷைக்கு செல்லும் போதும் அவர் திருப்பாவையைச் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்; பாதுகைகள் அணிவதையும், அதனால் திருப்பாவைக்கு அபசாரம் நேரும் என எண்ணி தவிர்த்தார்.


ஒருமுறை திருக்கோட்டியூரில் “உந்து மதகளிற்றன்” பாசுரத்தைப் பாடியபடி பெரிய நம்பியின் இல்லத்திற்குச் சென்றார். கதவைத் திறந்தது பெரிய நம்பியின் மகள் அத்துழாய். அவளது கைவளையொலி கேட்டவுடன், “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப” என்ற அடியைப் பாடி முடித்த ராமானுஜர், அவளை நப்பின்னையாகவே பாவித்து, உடனே சாஷ்டாங்கமாக விழுந்து மயங்கினார்.


அந்த நிகழ்வை அறிந்த பெரிய நம்பி, “இது உந்துமத களிற்றன் பாசுரத்தின் மஹிமை” என்று உணர்ந்தார். ஆகவே இந்தப் பாசுரம் இருமுறை பாடப்பட வேண்டும் என்ற மரபும் ஏற்பட்டது.


இந்தப் பாசுரம் வலியுறுத்தும் மையக் கருத்து ஒன்றே:

👉 நப்பின்னையைப் புருஷகாரமாக ஏற்றுக்கொள்ளாமல் பகவானை அடைய முயன்றால், அது பயனற்றது.

சூர்ப்பணகை, சீதையை விட்டு ராமனைப் பெற முயன்றாள் — அவளுக்குக் கிடைத்தது அவமானம்.
ராவணன், ராமனை விட்டு சீதையைப் பிடிக்க முயன்றான் — அவனுக்கும் அதே கதி.
விபீஷணன் மட்டும் இருவரையும் சேர்ந்தே சரணடைந்தான் — அவனுக்கே அருள் கிடைத்தது.


அதுபோல, நாமும் திருமகளோடு சேர்ந்த திருமாலையே உபாயமாகவும் உபேயமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


மாரி மலை முழைஞ்சில்...

  மாரி மலை முழைஞ்சில்... தமிழ் இலக்கியப் பரம்பரையில் மிருக உவமைகளில் புலியைவிடச் சிங்கமே அதிகமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. வீரத்திற்கும...