Thursday, 1 January 2026

அம்பரமே, தண்ணீரே....

அம்பரமே, தண்ணீரே....



ஆடை, நீர், அன்னம் — இம்மூன்றும் உலகில் வாழும் யாவருக்கும் தடையின்றி, குறையின்றி கிடைக்க வேண்டுமென்ற தர்மத்தைத் தன் உள்ளத்தில் தாங்கியவனே நான் என்கிறார் நந்தகோபன். அதையே ஆண்டாளும் தன் பாசுரங்களில் வலியுறுத்துகிறாள். மனிதன் உடையின்றி, தண்ணீரின்றி, உணவின்றி வாடிக்கொண்டிருந்தால், அவனுக்குப் பரமார்த்த விஷயங்களில் ஈடுபட நேரமோ மனப்பக்குவமோ உண்டாகாது. அவன் இறைவனைத் தேடுவதற்குப் பதிலாக, இம்மூன்றையே தேடி அலைவான். ஆகையால் ஆண்டாள் காணும் உலகம் — தீங்கற்றது; மழை காலந்தோறும் பொழியும்; செந்நெல் ஓங்கும்; வயிற்றுப் பசி, உடல் வறுமை என்பன அறவே இல்லாத உலகம். அத்தகைய சூழலில்தான் கண்ணனை நினைக்கவும், அவனை நாடவும் அவகாசம் உண்டாகிறது.



இங்கே இன்னொரு நுண்ணிய பொருளையும் ஆண்டாள் சொல்லிவிடுகிறாள். நாச்சியார் திருமொழியில் அவளே, “மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு…” என்று பாடுகிறாள். கண்ணனை விரதம் கொண்டு நினைக்கும் வேளையில், வெளிப்புற சுத்தம், உடல் ஒழுங்கு முதலியவற்றில் அவள் கவலைப்படவில்லை. அவள் உலகம் தெரிந்தவள்; கலவியின் ரஸத்தையும் அறிந்தவள். ஆனால் திருப்பாவை ஆண்டாள் — இன்னும் உலகத்தில் முழுதாய் புகாத பருவத்தில் நிற்கும் பாலகி. நம்மை அவள் இவ்வளவு ஈர்க்கக் காரணம் என்னவென்றால், நாமும் நம் உள்ளார்ந்த ஆசையில், அந்தக் குழந்தைமனத்திற்கே திரும்பிச் செல்ல விரும்புவதால்தான். உரையாசிரியர்கள் எத்தனை எத்தனை உள்பொருள்களை எடுத்துரைத்தாலும், முதலில் நம்மை கட்டிப்போடும் விஷயம் ஆண்டாள் பயன்படுத்திய தூய, எளிய, நேரடியான தமிழ்ச் சொற்களே.


நேச நிலைக் கதவம் திறக்கப்பட வேண்டுமெனில், வாயில் காப்போன் சம்மதம் தேவை. அதன்படி, அனைவரும் ஒன்றுகூடி அந்த அந்தரங்க மாளிகைக்குள் பிரவேசித்து, ஸ்ரீ நந்தகோபாதியாரையும் பிறரையும் துயிலெழுப்ப முனைகின்றனர். அந்தப் பள்ளியறையின் அமைப்பு இவ்வாறு சொல்லப்படுகிறது: முதற்பகுதியில் நந்தகோபர், இரண்டாம் பகுதியில் யசோதையார், மூன்றாம் பகுதியில் ஸ்ரீகிருஷ்ணன், நான்காம் பகுதியில் பலராமன் — இவ்வாறு ஒவ்வொருவரும் சயனித்திருக்கின்றனர்.


கன்னியர் வந்து கண்ணனை அபகரித்துக் கொண்டு போய்விடக் கூடாதென்பதற்காகவே, நந்தகோபர் முன்னிலையிலே படுத்திருப்பதாக வ்யாக்யானங்கள் ஆழ்ந்த பொருளோடு உரைக்கின்றன. முன்பு ஆண்டாள் பத்து கோபியரை எழுப்பினாள்; இப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து, அதே வரிசையில் — நந்தகோபர், யசோதையார், கண்ணன், பலராமன் — இவர்களை எழுப்ப முற்படுகின்றனர்.



அப்பொழுது ஒரு சந்தேகம் எழலாம்: “அப்படியென்றால், இந்தப் பெண்கள் கண்ணனை அபகரித்துச் செல்ல மாட்டார்களா?” என்று.


இவ்விடத்தில் வ்யாக்யானச் சக்கரவர்த்தியான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஒரு அரிய நிகழ்வை நினைவூட்டுகிறார். ஸ்ரீகிருஷ்ணபகவானின் பேரனாகிய அனிருத்தன் அளவிட முடியாத அழகுடையவன். அவன் பாணாசுரனுடைய மகள் உஷையின் தோழியால், தன் அரண்மனையில் நித்திரை செய்துகொண்டிருந்தபோதே அபகரிக்கப்பட்டான். இப்படியான சம்பவம் பேரனுக்கே நேர்ந்ததென்றால், திருவாய்ப்பாடியில் ஐந்து இலட்சம் கோபியரின் பிரேமாபிமானத்திற்குரியவனாய், அழகின் எல்லையாய் விளங்கும் ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி சொல்ல வேண்டுமோ?



“எமக்கு ஆடையும், நீரும், பல்வகை அன்னங்களையும் வாரி வழங்கும் எங்கள் தலைவனே நந்தகோபரே! எழுந்தருள வேண்டும்” என்று கோபியர் வேண்டுகின்றனர்.


வஞ்சிக் கொடி போன்ற மென்மையும் உறுதியும் கொண்ட இடையையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியாக விளங்குபவளும், நந்தகுலத்திற்குத் தீபமாகத் திகழ்பவளும், ஸ்ரீகிருஷ்ணனை எங்களுக்குக் கொடுத்த யசோதைப் பிராட்டியே, எழுந்தருளாய்!


திரிவிக்ரம அவதாரத்தில் வானளாவி வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த தேவர்களின் தலைவனே! இப்போது மனித வடிவில் அவதரித்துத் துயில்கொள்கின்றாயே, எழுந்தருள்வாயாக!


செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையுடைய செல்வத் திருமகனாய், பலதேவா! உன் தம்பி கண்ணனும் நீயும் இனியும் உறங்கலாகாது; எழுந்தருள வேண்டும்!


இந்தப் பாசுரத்தில் நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் — இந்நால்வரும் வரிசையாக எழுப்பப்படுவது, சம்பிரதாய ரீதியில் ஆழ்ந்த உள்பொருளைக் குறிக்கிறது. அதாவது,

  • நந்தகோபர் – ஆசார்யன்

  • யசோதை – திருமந்திரம்

  • கண்ணன் – திருமந்திரத்தின் பொருள்

  • பலராமன் – அதன் சாரமான அஷ்டாட்சரம்

என்று கொள்ள வேண்டும் என்பது உள்உரை.



யசோதை ஆயர் குலப் பெண்களுக்கு சிறிதளவு துன்பம் வந்தாலும் உடனே கலங்கும் கருணை வடிவம். கோபியரின் உள்ளத்தை அறிந்தவள். அதனால் தான் “கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து”, “குலவிளக்கு” என்று ஆண்டாள் அவளைப் போற்றுகிறாள். அதேபோல் ஆயர் குலத்தைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கும் நந்தகோபரை, பரமனுக்கும் பெரிய பிராட்டிக்கும் ஒப்பாக உயர்ந்த நிலையில் வைத்து பாடுகிறாள்.



“அம்பரம்” என்பது தூய ஆடை மட்டுமல்ல; என்றும் பிரகாசிக்கும் பகவானின் திருமுக மண்டலத்தையும் குறிக்கும். அந்த ஒளியை உணரத் தகுந்த பக்குவம் பெற மனத்தில் ஊற்றப்படும் நீரே பக்தியின் பாசனம். அன்னம் என்பது பிற அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யம். இம்மூன்றையும் எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை வழிகாட்டுபவன் ஆசார்யன். அவனே நந்தகோபன்.



நம்மாழ்வார் “உண்ணும் சோறு, பருகுநீர், தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன்” என்று அருளிச் செய்தது போல, எல்லாவற்றையும் கண்ணனாகவே காட்டிய வழிகாட்டி நந்தகோபன்தான். ஆகையால் “நீ முதலில் எழுந்திருந்து எங்களை கண்ணனிடம் அழைத்துச் செல்” என்று சிறுமியர் வேண்டுகின்றனர்.



ஆறாயிரப்படி உரை கூறுவது: பெண்களுக்கு தனியாக தானம் கொடுக்க மாட்டார்கள்; கணவனோடு சேர்த்தே அனுபவிக்க வேண்டும். ஆகையால், “நீ எங்களுக்கு அறம் செய்ய வேண்டுமென்றால், முதலில் கண்ணனை எங்களுக்கு அளி; அப்போதுதான் உன் தானத்தை நாங்கள் அனுபவிக்க முடியும்” என்று அவர்கள் கூறுவதாகக் கொள்ள வேண்டும்.



அடுத்ததாக யசோதை. அழகிலும், அறிவிலும், அன்பிலும் பெண்களிலேயே தலைசிறந்தவள். “கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து.” கண்ணனை வளர்த்த பேறு பெற்றவள். அவள் கணவனோடு ஒரே கட்டிலில் அல்ல; தனியாகச் சயனித்திருக்கிறாள். இதை முமுக்ஷுப்படி விளக்குகிறது: தாய், கணவனின் படுக்கையையும், பிள்ளையின் தொட்டிலையும் விட்டு விடாதவள். அதுபோல யசோதை நந்தகோபனையும், கண்ணனையும் விட்டு அகலாதவள். ஆறாயிரப்படி சொல்வது — நந்தகோபனின் படுக்கைத் தலைவாசலையும், பிள்ளையின் தொட்டிலின் காற்கடையையும் அவள் அலட்சியம் செய்யவில்லை. அவர்கள் வளர்ந்தவர்களாக இருந்தாலும், தாய்க்கு என்றும் குழந்தைகள்தான். கண்ணன் அவளுக்கு அணிவிளக்கு; கோலவிளக்கு; குலவிளக்கு.



“இருவிசும்பினூடு போய் எழுந்து…” என்று மங்கை மன்னன் திருநெடுந்தாண்டகத்தில் கூறுவது போல, உலகங்களை அளந்த பரமன் இங்கே மனித வடிவில் துயில்கொள்கிறான். ஆண்டாளும் அதையே சொல்கிறாள். “அம்பரம்” என்பது ஆகாயம். ஆனால் இங்கே, உலகத்துக்காக உறங்காத தாய் போல, அடியார்களுக்காக எப்போதும் விழித்திருப்பவன் நீ. மனித அவதாரம் எடுத்ததால் மட்டும் நித்திரை உண்டாயிற்று. இப்போது காலை வந்துவிட்டது; இனி உறங்க வேண்டிய அவசியமே இல்லை என்று சிறுமிகள் சொல்லுகின்றனர்.



“செம்பொற் கழலடிச் செல்வா” என்று பலதேவனை அழைக்கிறார்கள். ஆதிசேஷ அவதாரமான அவன், ராமாவதாரத்தில் லக்ஷ்மணனாக இருந்து, உறங்காது சேவை செய்தவன். இப்போது அண்ணனாக வந்து கண்ணனைக் காக்கிறான். ஆகவே அவர்கள் கேட்கிறார்கள்: 
“நீ முன்பு உறங்காதவன். இப்போது உறக்கம் ஏன்?”

ஆழ்வார் சொன்னது போல —
“சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம், நீள்கடலுள் புணையாம்…”

என்று எங்கும் துணையாக இருப்பவனே நீ. படுக்கைக்கே படுக்கை நீயாக இருக்க, உனக்கு உறக்கம் ஏது?



அம்பரம் பரமபதத்தையும், தண்ணீர் வைகுண்டத்தில் பாயும் விரஜா நதியையும், சோறு உபநிஷத் ஞானத்தையும் குறிக்கும் என்று அண்ணங்கராச்சார் சுவாமிகள் விளக்குவார். இவற்றையெல்லாம் அளிக்கவல்லவன் ஆசார்யன். அதனால் நந்தகோபன் ஆசார்யனாக நிற்கிறான். ஆகவே அவனை முதலில் எழுப்புவது — நமது ஸ்வரூபஞானத்திற்கு ஆசார்யன் இன்றியமையாதவன் என்பதை வலியுறுத்துவதாகும்.



இன்னொரு வகையில்,
அம்பரம் – ஆத்மசுத்தி
தண்ணீர் – அதனை வளர்க்கும் உபாயம்
சோறு – பரமபுருஷார்த்தமான முக்தி

என்று பொருள் கொள்ளலாம். இம்மூன்றையும் அருள வல்லவன் ஆசார்யன் என்பதால் நந்தகோபன் அதற்குரிய உருவகமாகிறான்.



இலக்கணப்படி “அம்பரமும் தண்ணீரும் சோறும்” என்று பாடியிருக்கலாம். ஆனால் ஆண்டாள் “அம்பரமே தண்ணீரே சோறே” என்று பாடினாள். இதன் மூலம் இரண்டு கருத்துகளை உணர்த்துகிறாள்:


ஒன்று — இம்மூன்றில் ஒன்றைக் கேட்டாலும், மற்ற இரண்டையும் சேர்த்தே நந்தகோபன் வழங்குவான்.
இரண்டு — அவன் ஆயர் குலத்தாருக்கு அளவுக்கு மீறி, வாரி வழங்கும் கருணையாளன்.


மேலும், “அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா” என்று பாடும்போது, கோபியர் பொருட்களை வேண்டி வரவில்லை. ஆடையாகவும், நீராகவும், உணவாகவும் — எல்லாமாக இருக்கும் கண்ணனையே தங்களுடன் அனுப்பி உய்விக்குமாறு நந்தகோபரிடம் வேண்டுகின்றனர். அதனால்தான் “எம்பெருமான் நந்தகோபாலா” என்று, பகவானின் நாமத்தையே சொல்லி அழைக்கிறார்கள். அவர்கள் வந்திருப்பது கண்ணனுக்காகத்தான் என்பதும் இதனால் தெளிவாகிறது.



ஸ்ரீவைஷ்ணவ ரகசியங்களும் இங்கே குறிப்பாக வெளிப்படுகின்றன என்று பெரியோர் கூறுவர்:

அம்பரம் – ஓம் (ப்ரணவம்)
தண்ணீர் – நமோ (சரணாகதி)
சோறு – நாராயணாய (பரத்துவம்)


குருபரம்பரை சம்பிரதாயத்தில், இப்பாசுரம் எம்பெருமானார் — ஸ்ரீ ராமானுஜரை — துயிலெழுப்புவதாகவும் கொள்ளப்படுகிறது. அதனால்தான் “பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே” என்று ஆண்டாளுக்கே மங்களாசாசனம் பாடப்படுகிறது. அடியார்களை உய்விக்க அவதரித்த எம்பெருமானாரை, “அம்பரமே தண்ணீரே சோறே” என்று கோதை நாச்சியார் இங்கே போற்றுவதாகவும் கொள்ளலாம்.



எம்பெருமானார் திருமந்திரம், த்வயம், சரமச்லோகம் என்ற மூன்றாகவே விளங்குவார் என்று அண்ணங்கராச்சார் சுவாமிகள் கூறுவார். அதுபோலவே, இப்பாசுரத்தில் துயிலெழுப்பப்படும் பலராமனும் — ஆதிசேஷ அவதாரமாதலால் — எம்பெருமானாரோடு ஒத்த சாயை கொண்டவராகக் கருதப்படுகிறார்.



இவ்வாறு, இந்தப் பாசுரம் வெளிப்படையாகப் பார்த்தால் சிறுமியர் எழுப்பும் காட்சி போல இருந்தாலும், உள்பொருளில் அது ஆசார்யத் தத்துவம், சரணாகதி ரகசியம், பரமபுருஷார்த்த விளக்கம் ஆகிய அனைத்தையும் தன்னுள் கொண்ட ஒரு ஆழமான வைஷ்ணவ உபதேசமாக விளங்குகிறது.

Wednesday, 31 December 2025

நாயகனாய் நின்ற

 

நாயகனாய் நின்ற





ஆண்டாள் தம்மைத் தமிழ்க் கவிஞையென்று தாமே வெளிப்படையாக அறிவிக்கின்றாள். திருப்பாவையில் “சங்கத் தமிழ்” எனச் சொல்லி, நாச்சியார் திருமொழியில் “செந்தமிழ்”, “தூய தமிழ்” எனத் தமது பாவனை மொழியின் மேன்மையை உரைத்தருளுகிறாள். ஆகவே, ஆண்டாளின் பாடல்களில் அகமும் புறமும் இயற்கையாக ஒன்றிணைந்து, எவ்விதக் கற்பனைக் கட்டாயமுமின்றி சுயமாக இயங்குகின்றன.



ஆயினும், திருப்பாவையின் அக உலகம், நாச்சியார் திருமொழியின் அக உலகத்துடன் ஒத்ததல்ல. திருப்பாவையில் வருபவர்கள் இளமைப்பருவத்தின் வாசற்படியை இப்போதுதான் கடந்த சிறுமியர். அவர்கள் காணும் உலகம் வியப்பையும் ஆனந்தத்தையும், அதே சமயம் பல கேள்விகளையும் எழுப்புவதாக உள்ளது. அவர்கள் எங்கு சென்றாலும் தனித்தனியாக அல்ல; கூட்டமாகவே செல்கின்றனர். “நான்” என்ற சொல் எங்கும் ஒலிப்பதில்லை; எங்கும் “நாம்” என்ற சமூக சிந்தனையே பிரதானமாக நிற்கிறது.



ஆனால் நாச்சியார் திருமொழியில், “கோழியழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்” என்று தோழியரை உடன் சேர்த்துப் பாடினாலும், அங்கே வெளிப்படுவது தனிப்பெண்ணின் அனுபவம். காதலும் கலவியும் குறித்த தெளிவுணர்வும், பெண்ணிய உணர்வும், சேர்க்கைக்காக ஏங்கும் உள்ளத்துடிப்பும் அப்பாடல்களில் நன்கு வெளிப்படுகின்றன. அது ஒருவகையில் தனிநபரின் அகக்குரல்.



இந்நிலையில், இப்போது நாம் இந்தத் திவ்யப் பிரபந்தத்தின் மூன்றாம் பிரிவினுள் பிரவேசிக்கின்றோம். பதினாறு முதல் இருபத்திரண்டு வரையுள்ள ஏழு பாசுரங்களில், நந்தகோபன் திருமாளிகையின் பிரதான வாயிலில் நின்று காவலனை எழுப்புவதிலிருந்து ஆரம்பித்து, உள்ளகக் காவலன், பின்னர் நந்தகோபர், யசோதை, பலதேவன், நப்பின்னை ஆகியோரைத் தொடர்ந்து, இறுதியில் ஸ்வயமேவ ஸ்ரீகிருஷ்ணனை எழுப்பும் முறையை ஆண்டாள் அருளிச் செய்கிறாள்.



முன்னருள்ள பத்து பாசுரங்களில், திருவாய்ப்பாடி முழுவதிலுமுள்ள கோபியரை ஆண்டாள் எழுப்பி, அவர்களனைவரையும் ஒருங்கிணைத்து, இப்போது அந்தக் கூட்டத்துடன் நந்தகோபருடைய திருமாளிகையை நோக்கி ஸ்ரீகிருஷ்ணனை எழுப்பச் செல்லும் நிலை விவரிக்கப்படுகிறது.



இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள், “செய்யாதன செய்யோம்” என்று, மூத்தோர் காட்டிய மார்க்கத்தை மீறி, தனிப்பட்ட முறையில் பகவத் தியானத்தில் ஈடுபடமாட்டோம் என்கிற விரதத்தை அறிவித்தாள். அதாவது, பக்தர்களின் துணை இன்றிப் பரமபதநாதனை அடைய முயல்வதில்லை என்பதே அதன் உள்பொருள். அந்த நியமத்தையே இப்பாசுரங்களிலும் அவர்கள் கடைபிடிக்கின்றனர்.



ஸ்வாமி நம்மாழ்வார், “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பதம் பணிந்து” என்று, பகவானை அணுக வேண்டிய மார்க்கத்தை மிக உன்னதமாக உபதேசிக்கிறார். வேதார்த்தங்களில் தேர்ந்த ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலோடே நித்யஸூரிகளின் நாதனான பரமாத்மாவின் திருவடிகளைச் சரணடைய வேண்டும் என்பதே அதன் தாத்பரியம். இதையே பாஞ்சராத்திர சாஸ்திரமும் உறுதிப்படுத்துகிறது — ஆலயத்தில் பிரவேசிக்கும் முன், வாயிற்காவலரின் அனுமதியைப் பெற்று உள்ளே செல்ல வேண்டும் என்று அது விதிக்கிறது.



இந்தச் சாஸ்த்ர நியமங்களை எழுத்தறிவால் அறிந்தவர்கள் அல்லாத இளங்கோபியர், ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறந்தவர்களாகையால், முன்னோர்களிடமிருந்து வழிவழியாக வந்த அனுஷ்டானங்களின் மூலம் இவ்வாசாரங்களை இயல்பாகவே உட்கொண்டவர்களாக விளங்குகின்றனர். ஆகையால், நேரடியாக ஸ்ரீகிருஷ்ணனை அணுகாது, முதலில் அவரைச் சூழ்ந்திருப்பவர்களை எழுப்பும் இம்முறை, அவர்களுடைய சமயநெறி பூரணத்தையும் பரம்பரை சார்ந்த பக்தி மரபையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.



திருப்பாவையின் அடுத்த ஐந்து பாசுரங்களும் கண்ணனைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றியே உரைக்கின்றன — வாயிற்காப்போன், கோயில் காப்போன், யசோதை, நந்தகோபன், பலராமன் முதலியோர். இவர்களிடையே முக்கியமானவளாக நப்பின்னைப் பிராட்டி விளங்குகிறாள். இறைவனிடம் சேர்வதற்கு பரிந்துரைக்கும் புருஷகார பூதையாக அவள் அமைந்திருக்கிறாள்.



“நமக்குத் தலைவனாய், அரணாய், அரசனாய் விளங்கும் நந்தகோபருடைய திருக்கோயிலுக்குக் காவலாய் நிற்பவனே! மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோரண வாயிலை காத்து நிற்பவனே! ஆயர்பாடியில் வாழும் கோபியருக்காக, மாணிக்க மணிகள் பதிக்கப்பட்ட கதவைத் திறந்திடுக. அதிசய குணங்களும், அதிசயச் செயல்களும் உடைய மாயனாகிய நீலமேனி மணிவண்ணன், நோன்புக்கான பறையைத் தருவதாக எங்களுக்கு நேற்றே வாக்களித்தான். அவனைத் துயிலெழுப்புவதற்காகத் தூய உடலும் தூய உள்ளமும் கொண்டு வந்துள்ளோம்.” எனவே, எவ்விதச் சச்சரவுமின்றி, மறுப்புமின்றி, காவலனாகிய நீ அந்தப் பெரும் வாயிற்கதவைத் திறந்து, நோன்பிருந்து கண்ணனை வழிபட எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகின்றனர்.



ஒருவர் ஏதோ ஒரு செயலைச் செய்ய வருகிறான் என்பதை அறிந்தபோது, அதனை உடனே மறுத்து, “இது ஆகாது, இதனால் பயன் இல்லை” என்று அபசகுன வார்த்தைகள் பேசக் கூடாது. முதலில் அவன் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொண்டு, பின்னர் சாந்தமாக அறிவுரை வழங்க வேண்டும். சொற்கள் மனித வாழ்வில் எத்துணை முக்கியமானவை என்பதைக் ஆண்டாள் இப்பாசுரத்தின் வாயிலாக எடுத்துரைக்கிறாள்.



“நாயகனாய் நின்ற நந்தகோபருடைய கோயில் காப்போனே! கொடி தோன்றும் தோரண வாயில் காப்போனே!” என்று காவலர்களை அழைத்து, மணிக்கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்குமாறு கோருகின்றனர்.



அதற்கு காவலர்கள், “பயமுள்ள க்ஷேத்ரத்தில், மத்யராத்திரியில் வந்து கதவைத் திறக்கச் சொல்கிறீர்களே! நீங்கள் யார்?” என்று வினவுகின்றனர். பூர்வாசார்யர்கள், இந்த ஆய்ப்பாடியை திருஅயோத்தியுடன் ஒப்பிட்டு, ஆனால் அதைவிட ஆபத்துகள் நிறைந்த தலமாக விளக்குகின்றனர். அயோத்தி ராமனுக்குப் பாதுகாப்பானது; ஆய்ப்பாடி கண்ணனுக்கு எப்போதும் ஆபத்துகள் சூழ்ந்திருக்கும் இடம். அசையும் சகடம், அசையாத மரம், பெண் உருவிலான பூதனை, குதிரை, யானை, கொக்கு — அனைத்தும் தீங்கு விளைவிக்கக் கூடியவையே. ஆகையால் காவல் அவசியம்.



“நாங்கள் ஆயர் சிறுமியர்” என்று ஆண்டாள் பதிலளிக்கிறாள். அதற்கு காவலர்கள், “சிறுமியர் என்றாலே நம்ப முடியாது. பெண் வடிவில் வந்த பூதனை போல ஆபத்துகள் முன்பும் வந்துள்ளன. ஆயர்குலத்தவராகவே இருந்தாலும், இந்நேரத்தில் வருவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்கின்றனர்.



அதற்கு ஆண்டாள், “நாங்கள் பாவை நோன்புக்காக பறை முதலான சாதனங்களைப் பெறவே வந்தோம். அவற்றை வழங்குவதாக அந்த மாயன் மணிவண்ணன் எங்களுக்கு முன்பே வாக்கு தந்திருக்கிறான். அந்த வாக்கை அடைவதற்காகவே, தூய மனத்துடன் வந்துள்ளோம்; துஷ்கர்ம எண்ணம் எங்களுக்கில்லை” என்று உரைக்கிறாள்.



“பெருமானே வாக்கு தந்தானா? அப்படியானால் சரி; ஆயினும் சந்தேகம் இருக்கிறது” என்று காவலர்கள் தயங்க, கோபியர்கள், “வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!” என்று உருக்கத்தோடு விண்ணப்பிக்கிறார்கள். மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்; உள்ளே அவன் இருக்க, வெளியே நாங்கள் தவித்து நிற்கிறோம்; இனியும் சோதிக்க வேண்டாம் என்று உருகுகின்றனர்.



அவர்களின் பக்தியால் மனமிரங்கிய காவலர்கள் இறுதியில் அனுமதி அளிக்கிறார்கள். ஈச்வரன் வாசம் செய்யும் இம்மாளிகையில் அசேதனங்கள்கூட அவனுக்கு அனுகூலமாகவே செயல்படுகின்றன. இந்தக் கதவுகளே, வெளியிலிருந்து வரும் பகவத் விரோதிகளைத் தடுக்கவும், உள்ளே புகுந்த பக்தர்களை வெளியே விடாமல் அவனோடு சேர்த்தே வைத்திருக்கவும் செய்கின்றன.



பூர்வாசார்யர்கள் கூறுவது போல, “அநதிகாரிகளுக்கு பகவத் விஷயத்தை வெளிப்படுத்தாமல் மறைக்கும் இயல்பே ஸ்வரூப லக்ஷணம்.” அந்த வகையில், இந்தக் கதவுகளும் தம் இயல்பினாலேயே பக்தர்களைச் சோதித்து, தகுதியுள்ளவர்களையே உள்ளே அனுமதிக்கின்றன.



அதனால், “நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்” என்று, பகவத்ப்ரீதியால் நிரம்பிய இந்தக் கதவைத் தாங்களே திறந்து அருள வேண்டுமென அவர்கள் வேண்டுகின்றனர்; காவலர்களும் அதற்கு இசைந்து கதவைத் திறக்கின்றனர்.



பூர்வாசார்யர்கள் கூறுவதுபடி, இப்பாசுரத்தில் மூன்று தத்துவங்கள் வெளிப்படுகின்றன:

  1. பிரமாணம் – பிரமேயம் – பிரமாதா என்ற முக்கோணத் தத்துவம்.
    பிரமாணம்: வேதம், ஸ்ம்ருதி, புராணம், இதிகாசம், திவ்யபிரபந்தம், பிரம்மசூத்திரம்.
    பிரமேயம்: பரமபதத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமன் நாராயணன்; வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி.
    பிரமாதா: ஆச்சார்யர்.

    சுருக்கமாகச் சொன்னால், மந்திரம், பரதேவதை, ஆச்சார்யன் — இந்த மூன்றின்மேலும் பரிபூரண நம்பிக்கை அவசியம் என்பதே கருத்து.

  2. இப்பாசுரத்தில்
    – கோயில் காப்பான் → மூல மந்திரம்
    – கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் → த்வயம்
    – “நென்னலே வாய் நேர்ந்தான்” → சரம ஸ்லோகம்
    என மூன்று ரஹஸ்யங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

  3. “மணிக்கதவம் தாள் திறவாய்” என்பது, இந்த மூன்று மந்திரங்களையும் உபதேசிக்குமாறு சிஷ்யன் ஆச்சார்யனை வேண்டிக் கொள்வதைக் குறிக்கும்.

  4. “தூயோமாய் வந்தோம்” என்று கோபியர் சொல்வது, வாக்கு–மனம்–காயம் என முக்காரண சுத்தியோடு பகவானை அணுகும் அடியார்களின் நிலையை உணர்த்துகிறது.

  5. “துயிலெழப் பாடுவான்” என்பது, எம்பெருமானைத் துதித்து, அவன் புகழ் பாடுவதன் மூலம் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடும் மார்க்கத்தை எடுத்துரைக்கிறது.

  6. “மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்” என்பதன் உள்பொருள், ஒரு சிஷ்யன் ஆச்சார்யனை அடைந்து உபதேசம் பெறத் தயாராகும் அந்தக் கணத்திலேயே, அவன் பகவத் கருணைக்குப் பாத்திரனாகிவிடுகிறான் என்பதே.

  7. “நேய நிலைக் கதவம்” என்பது, இடையறாது வளர்கின்ற பகவத் ப்ரீதியையும், தடையற்ற பக்தி ஓட்டத்தையும் குறிக்கிறது.


Tuesday, 30 December 2025

எல்லே! இளங்கிளியே!....

 எல்லே! இளங்கிளியே!....



இப்பாசுரமே, திருப்பாவையில் பக்தர்களை எழுப்பும் அதிகாரத்தின் நிறைவுப் பாசுரமாக அமைந்துள்ளது. இங்கு எழுப்பப்படுகின்ற கோபி, சாதாரண பக்தி நிலையில் இல்லாமல், பரிபக்வமான பக்தி நிலையை அடைந்தவளாக இருப்பதால், தனித்திருந்து அனுபவிப்பதை விரும்பாது, தன்னுடன் எல்லாரையும் கூட்டிக்கொண்டு பரமபுருஷனை அடைய வேண்டும் என்ற பரந்த உள்ளத்துடன் விளங்குகிறாள். தனக்கான ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் அடக்கி வைத்துக் கொள்ளாத பகவத்ஸ்வபாவமே இவளின் இயல்பு.



இதுவரை வந்த பாசுரங்களில், ஒவ்வொரு பெண்ணையும் எழுப்பும் போது, வெளியில் நின்று கூப்பிடுவோரின் சொற்களே வெளிப்படையாக இடம்பெறுகின்றன; உள்ளே இருக்கும் பெண் என்ன பதில் கூறுகிறாள் என்பதை வாசகன் ஊகித்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் இப்பாசுரத்தில் மட்டும், உள்ளே இருப்பவளும் பேசுகிறாள்; வெளியே இருப்பவர்களும் பேசுகிறார்கள். இவ்வாறு இருபுறத்தாரின் சொற்களும் வெளிப்படையாகப் பதிவாகி, பரஸ்பர சம்வாத ரூபமாக அமைவது இதன் விசேஷம். திருப்பாவை முழுவதிலும் ஆண்டாளுக்கும் உறங்கும் கோபிக்கும் இடையே நேரடியான உரையாடல் தெளிவாக நிகழும் ஒரே பாசுரம் இதுவே. அதனாலேயே, இதனை ஆங்கிலத்தில் “dialogue poem” என்று குறிப்பிடுவார்கள்.



உண்மையில், இப்பாசுரத்தில் வெளிப்படையாகத் தோன்றும் இந்த உரையாடல் அமைப்பே, அதற்கு முந்தைய பாசுரங்களையும் ஆசார்யர்கள் “உள்ளுரையாடல்” (கற்பித சம்வாதம்) முறையில் விளக்கத் தூண்டிய அடிப்படைக் காரணமாக அமைந்தது. அதாவது, இப்பாசுரத்தில் வெளிப்படையாகத் தெரியும் உரையாடல் பாங்கையே ஆதாரமாகக் கொண்டு, முந்தைய பாசுரங்களிலும் கோபியரும் தோழியரும் பரஸ்பரம் பேசிக்கொள்வதுபோல வியாக்யானம் செய்யலாயினர்.



அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், “திருப்பாவையாவது இப்பாட்டிறே” என்று இந்தப் பாசுரத்தை விசேஷமாகப் புகழ்ந்து கூறுவார். மேலும், பதினைந்தாம் பாசுரமான இதனையும், இருபத்தொன்பதாம் பாசுரமான “சிற்றம் சிறுகாலே” என்பதையும் சுட்டிக் காட்டி, “இதுவே உண்மையான திருப்பாவை” என பரவசத்துடன் கூறுவார். காரணம், இப்பாசுரம் பாகவத தாஸ்யத்தை வெளிப்படுத்துவதாகவும், இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத் தாஸ்யத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதே. அதனால் இவ்விரண்டையும் அவர் தனித்துப் போற்றி உரைக்கிறார்.



முந்தைய பாசுரத்தில், “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு” என்று தோழியர் கூற, அந்தச் சொற்களை இப்பாசுரத்தில் உள்ள பெண்ணும் மீண்டும் உச்சரிக்கிறாள். “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணன்” என்று சொல்லிப் பார்த்தவுடனே, அந்தத் திருநாமங்களில் மனம் கரைந்து, அவற்றிலேயே லயித்துப் போய் அமர்ந்து விடுகிறாள். ஆண்டாள் மற்ற பெண்களுடன் அவள் இல்லத்தின் வாசலுக்கு வந்து, “எல்லே! இளங்கிளியே! இன்னும் உறங்குகிறாயோ?” என்று அழைக்க, இவள் உண்மையில் உறங்கவில்லை; அவர்களுக்காகவே காத்திருக்கிறாள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போகிறது.



“எல்லே” என்ற சொல்லே ஆச்சரியச் சுட்டு. “என்ன இது! இளங்கிளியே, இன்னும் உறங்குகிறாயா?” என்ற வியப்பின் வெளிப்பாடு அது. இங்கு “இளங்கிளி” எனப்படுவது, பகவத புராணத்தை பரீக்ஷித் மன்னனுக்கு உபதேசித்த சுகபிரம்மரின் கிளிப்போன்ற மொழிநடை நினைவூட்டுவதாகவும் வியாக்யானம் கூறும். இவள் இளங்கிளியென்றால் பாகவத புராணத்தை பரீக்ஷித் அரசனுக்குச் சொல்லும் சுகர் கிழக்கிளி.



அந்தக் கோபி, உள்ளே பகவந்நாம அனுசந்தானத்தில் ஆழ்ந்திருப்பதால், வெளியில் அவர்கள் பேசுவது அவளுக்கு இடையூறாகத் தோன்றுகிறது. ஆகவே, “சில்லென்று அழையாதீர்கள்; இதோ வந்து விடுகிறேன்” என்கிறாள். அதற்கு தோழியர், “உன்னுடைய சொல்வன்மையும் நுட்பமான பேச்சுத் திறனும் எங்களுக்கு தெரியாததா?” என்று சிரித்துப் பேசுகிறார்கள். அவள் பதிலுக்கு, “நீங்கள்தாம் சாமர்த்தியசாலிகள்; நானும் அப்படியே இருக்கட்டும்” என்று சொல்லி, குற்றத்தைத் தன் மேல் ஏற்றுக் கொள்கிறாள். இதையே வியாக்யானங்கள் “வைஷ்ணவ லக்ஷணம்” என்று கூறுகின்றன.



“இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தினாலும், மறுக்காமல் ஏற்றுக்கொள்வதே வைஷ்ணவ லக்ஷணம்” என்று ஆறாயிரப்படி விளக்குகிறது.



ஆனால் தோழியர் அவளது அந்த உயர்ந்த பண்பை உணராது, “சீக்கிரம் வா; நீ என்ன விசேஷமா?” என்று சொல்லி, “எல்லோரும் வந்துவிட்டார்கள்; சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்; கண்ணன் புகழ் பாட நேரமாகிவிட்டது” என்று அவளைத் தூண்டுகின்றனர்.



இவ்வாறு, இளம் பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் இயல்பான உரையாடலை, பரமார்த்த தத்துவத்தோடு இணைத்து, மிகச் சுவையாகக் கவிதையாக வடித்திருக்கிறாள் ஆண்டாள். இது அவளுடைய கவித்திறனின் உச்சம்.



அப்போது அந்தக் கோபி, “இப்படி என் அனுபவத்தின் நடுவே சில்லென்று அழைக்கிறீர்களே! சில்லென்று அழையாதீர்கள். பூரணத்துவம் பெற்ற நங்கைமீரே! நான் வந்து கொண்டிருக்கிறேன்; காத்திருங்கள்” என்று கூறுகிறாள்.



இதற்கு பூர்வாசார்யர்கள் ஒரு அழகிய உவமையைக் கூறுகிறார்கள்: ஒருவர் திருவாய்மொழி பாராயணம் செய்ய ஏற்பாடு செய்து, அதில் ஆழ்ந்து அனுபவிக்கும்போது, அதே ஏற்பாடு செய்தவரே இடையில் வந்து தடை செய்வது எவ்வளவு அசங்கதமோ, அதுபோல இந்தக் கோபி அனுபவத்தில் ஆழ்ந்திருக்க, மற்ற கோபியர் அவளை அழைப்பது அவளுக்கு இடையூறாகத் தோன்றுகிறது. இதனால், ஒரு பாகவதனுக்கே இன்னொரு பாகவதன் இடையூறாக ஆகிவிடும் நிலையும் உண்டு என்பதை உணர்த்துகிறது.



பெரியோர் இப்பாசுரத்தை “திருப்பாவையிலும் திருப்பாவை” என்று போற்றுவர். அதற்குக் காரணம், “நானே தான் ஆயிடுக” என்ற வாக்கியத்தின் ஆழம். இந்த ஒரு வாக்கியமே, வைஷ்ணவ ஒழுக்கத்தின் மையத்தைக் காட்டிவிடுகிறது. இல்லாத குற்றத்தை ஒருவர் நம்மீது சுமத்தினாலும், அதை மறுக்காமல், “அப்படியே ஆகட்டும்” என்று ஏற்றுக்கொள்வதே ஒரு வைஷ்ணவனின் உச்ச குணம் என்பதைக் குறிக்கிறது.



இப்பாசுரம் உரையாடல் வடிவில் அமைந்து, பாகவத கைங்கர்யம் பகவத் கைங்கர்யத்திற்கும் மேலானது என்பதை மிகவும் இனிமையாக வலியுறுத்துகிறது. பகவானைச் சேவிப்பது “சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்து” என இருபத்தொன்பதாம் பாசுரத்தில் உச்சமாகப் பேசப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே, இந்தப் பதினைந்தாம் பாசுரத்தில், கோதை நாச்சியார் பாகவத சேவையின் உன்னதத்தைக் குறிப்பாக நிறுவிவிடுகிறாள். அடியாருக்குச் சேவை செய்வதே பகவானுக்கு மிக உகந்த வழி என்பதே இதன் மையம்.



திருப்பாணாழ்வார், “அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்” என்று அரங்கனைப் போற்றிப் பாடியதும் இதே கருத்தையே. நம்மாழ்வாரும், அடியார்க்கு அடியாராக இருப்பதில் உள்ள மேன்மையைத் தனது திருவாய்மொழியில் உச்சமாக எடுத்துரைக்கிறார்:


“அடியார்ந்த வையமுண்டு.........அடியார் அடியார் தம் அடியார்…” என்ற பாசுரத்தில், ஏழு முறை “அடியார்” என்ற சொல்லைப் பயன்படுத்துவது, சப்தபர்வ தாஸ்யம் எனப்படும் – ஏழு பிறப்புகளிலும் அடியார்க்கு அடியாராக இருக்க வேண்டும் என்ற பேரவா.



குலசேகர ஆழ்வாரும் பிருதியஸ்ய பிருத்திய... என்கிறார் (தாசனுக்கு தாசன்...)



அடியார் சேவை என்பது சொல்லால் மட்டும் விளக்க இயலாதது; அனுபவத்தாலேயே அறியப்பட வேண்டியது. அதனால்தான் ஆண்டாள், இதனை நேரடி உபதேசமாகச் சொல்லாமல், உரையாடல் வடிவில் அமைத்து, சுவையாகவும் ஆழமாகவும் உணரச் செய்கிறாள்.



அடியார் சூழ்ந்து நிற்க, அவர்களுடன் கூடி பரமனின் திருவடிகளைச் சேவிப்பதே ஸ்ரீவைஷ்ணவத்தின் உயரிய லட்சியம். இதையே இப்பாசுரம் மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. பெரியாழ்வாரும், “எங்கள் குழாம் புகுந்து கூடு மனமுடையீர்” என்று அடியார்களை அழைத்ததையும் இங்கு நினைவு கொள்ளலாம்.



மேலும், ஒரு உத்தம ஸ்ரீவைஷ்ணவனின் பத்து குணாதிசயங்களும் இப்பாசுரத்தில் நுட்பமாகச் சுட்டப்படுகின்றன:


  • “எல்லே இளங்கிளியே” – இனிய வாக்கும் நற்பேச்சும்
  • “இன்னும் உறங்குதியோ” – அடியார் அருகில் இருக்கையில் பிற விஷயங்களில் ஈடுபடாமை
  • “சில்லென்றழையேன் மின்” – கடுஞ்சொல் தவிர்த்தல்
  • “நங்கைமீர்” – பணிவுடனும் மரியாதையுடனும் அணுகுதல்
  • “வல்லை உன் கட்டுரைகள்” – அடியார் கூறும் குற்றச்சாட்டுகளை மனமுவந்து ஏற்றல்
  • “வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக” – இல்லாத குற்றத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை
  • “ஒல்லை நீ போதாய்” – அடியாரை காத்திருக்க விடாதல்
  • “உனக்கென்ன வேறுடைய” – சாஸ்த்ரவழிக்கு மாறாக நடக்காமை
  • “எல்லாரும் போந்தாரோ” – அடியார் கூட்டமே உபாயம் என உணர்தல்
  • “வல்லானைக் கொன்றானை…” – பரமனின் கல்யாண குணங்களைப் பாடி அடியாரை மகிழ்வித்தல்



மேலும், இதற்கு இன்னொரு உள்ளார்ந்த பொருளும் உண்டு.

  1. இளங்கிளியே – சம்சாரத்தில் சிக்கிய ஜீவன்
  2. இன்னும் உறங்குதியோ – பல பிறவிகளாக ஞானம் பெற இயலாத நிலை
  3. எல்லே – அத்தகைய ஜீவனுக்கும் சத்சங்கம் கிடைப்பது ஒரு அதிசயம் என்பதைக் குறித்தல்
  4. நங்கைமீர் – ஞானம் பெற்ற அடியவர்கள்
  5. சில்லென்றழையேன் மின் – அஞ்ஞானத்தால் நிகழும் தவறுகளுக்காக கடிந்துகொள்ள வேண்டாம்
  6. போதருகின்றேன் – பகவத், பாகவத, ஆசார்ய சேவைகளில் நுழையத் தயாராகிறேன்
  7. வல்லை உன் கட்டுரைகள் – ஆசார்ய உபதேசங்களை நினைவில் கொள்ளுதல்
  8. வல்லீர்கள் நீங்களே – அந்த உபதேசங்களை அடியார்கள் பகிர்வது
  9. நானேதான் ஆயிடுக – விஷய சுகங்களில் மனம் செல்லும் என் குறை
  10. ஒல்லை நீ போதாய் – உலகப் பற்றை விட்டு விரைந்து வருக
  11. எல்லாரும் போந்தாரோ – எல்லா அடியாரும் இதே மார்க்கத்தை ஏற்றார்களா?
  12. போந்தார் போந்தெண்ணிக் கொள் – ஆம், அடியார்கள் அனைவரும் இதையே உபாயமாகக் கொண்டுள்ளனர்
  13. வல்லானைக் கொன்றானை… – நம் பாபங்களை அழித்து, மாயையை நீக்கி, பகவத்–பாகவத சேவையில் ஈடுபடுத்தும் பரமனைப் பாடுவோம்


இவ்வாறு, இந்தப் பாசுரம் திருவெம்பாவையில் வரும் “ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ…” என்ற பாடலின் பொருள்நடையை ஒத்ததாக உள்ளது என்று அண்ணங்கராச்சாரியர் குறிப்பிடுகிறார்.


Monday, 29 December 2025

“உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்…”

 

“உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்…” 



திருப்பாவையில் ஐந்தாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரையிலான பத்து பாசுரங்களில், ஆண்டாள் பத்து கோபியரை எழுப்புகிறாள். இவற்றுள் சில பாசுரங்களில் விடியற்காலத்தின் லக்ஷணங்களை வெளிப்படையாகக் கூறியும், சிலவற்றில் அவற்றைச் சொல்லாமலேயே உட்கருத்தாக உணர்த்தியும் பாடியிருப்பது விசேஷம். இவ்வகையில், “உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்” எனத் தொடங்கும் இப்பதினான்காம் பாசுரம், புறவுலக நிகழ்வுகளையும் அகநிலை உண்மைகளையும் ஒருங்கே விளக்கும் ஆழ்ந்த தத்துவப் பொருளை உடையதாகும்.



ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையில் மகத்தான ஆசார்யராக விளங்கிய ஸ்ரீ மணவாள மாமுனிகள், தமது உபதேச ரத்னமாலையில், ஓர் ஆசார்யனுக்குத் தேவையான முதன்மை லக்ஷணம் யாதெனில் — ஞானமும் அனுஷ்டானமும் சம்யக்ப்ரகாரமாக ஒருங்கிணைந்து நிற்றல் என அருளிச் செய்கிறார். வெறும் ஞானம் மட்டும் போதாது; அதனை வாழ்க்கையிலே நடைமுறையாக்கிக் காட்டும் அனுஷ்டானமும் அவசியம். ஞானம் அனுஷ்டானமின்றி இருந்தால் அது பிறருக்குப் பயனளிக்காது.



இவ்வாறு இருக்க, இக்காலச் சூழ்நிலையில் இதனுடன் இன்னொரு அம்சமும் மிக முக்கியமாகத் தோன்றுகிறது. அதாவது, ஞானத்தை வெளிப்படுத்தும் முறை — விவரிக்கும் பாங்கு. ஒருவன் பரிபூரணமான ஞானத்தையும், அதனை அனுஷ்டிக்க வல்ல ஆற்றலையும் பெற்றிருந்தாலும், அதனை உரிய முறையில் எடுத்துரைக்கும்போதுதான் அது பிறருக்குப் பயன்படும். உரிய வடிவிலும் முறையிலும் வெளிப்படாத ஞானம், பரலோகோபகாரமாயினும், லோகோபகாரமாக விளங்காது.



இப்பாசுரத்தில், “உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்” என்று சொல்லப்படுவது, அந்த கோபியின் இல்லப்புறத்திலுள்ள சிறு குளத்தைச் சுட்டுகிறது. அங்கு செங்கழுநீர் மலர்கள் இதழ் விரிந்து மலர்ந்து, ஆம்பல் மலர்கள் இதழ் குவிந்து மூடிக்கொண்டிருப்பதைத் தோழியர் காண்கிறார்கள். இது தினசரி அனுபவத்தின் அடிப்படையிலான வர்ணனை. செங்கழுநீர் பகலில் மலரும்; ஆம்பல் இரவில் மலரும். சூரியன் உதயிக்கத் தொடங்கியதைக் மலர்களே உணர்ந்து விட்டன. அதனால், “நாங்கள் வெளியிலிருந்து உணர்கிறோம்; நீ மட்டும் உள்ளே இருப்பதால் உணராமல் உறங்குகிறாய்” என்ற நுண்ணிய சுட்டுரை இதில் அடங்கியுள்ளது.



“செங்கல் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்” என்ற தொடரில் வரும் தவத்தவர் யார் என்பதைக் குறித்து வியாக்யானங்களில் பலவித விளக்கங்கள் உள்ளன. சிலர் இவர்களை சிவபக்தர்கள் எனக் கூறுவர். காலை பொழுது வந்துவிட்டது என்பதை உணர்ந்து, சிவாலயங்களில் சங்கொலி எழுப்பச் செல்லும் சிவபக்தர்களையும் குறிக்கலாம். சில வியாக்யானங்கள் இதனைச் சற்றே நகைச்சுவை கலந்த முறையில் எடுத்துக் கொண்டு, “சோம்பலுற்றவர்களாகக் கருதப்படும் சிவபக்தர்களுக்கே இப்போது விடியல் தெரிந்துவிட்டது” என்று தோழியர் சொல்லுவதாகக் கூறுகின்றன.



ஆனால், திருமலை நம்பி முதலிய ஆசார்யர்கள், இதனைச் சத்த்வநிஷ்டர்களான வைஷ்ணவ சந்நியாசிகளையே குறிப்பதாக எடுத்துரைக்கின்றனர். “வெண்பல்” என்பது அவர்களது உள்ளத் தூய்மையையும், “காவியுடை” என்பது வைராக்யத்தையும் சுட்டுவதாக விளக்கப்படுகிறது. அண்ணங்கராச்சாரியர், “வம்பற்ற அத்தவர்” என்ற பாடாந்தரத்தையும் எடுத்துக் காட்டி, சம்சார வம்புகளற்ற தவத்தவரையே இது குறிக்கிறது என்கிறார். “சங்கிடுவான்” என்பது சங்கை ஊதுதல் என்றும், திருக்கோயிலைத் திறத்தல் என்றும் இருவகைப் பொருள் பெறும்.



இப்பாசுரத்தின் இன்னொரு நுட்பமான பொருள் என்னவென்றால் — குற்றம் செய்தவர்களாக இருந்தாலும், கண்ணனைச் சரணடைந்து அவனிடம் முகம் திருப்பினால், அவன் அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்பதே. மற்ற கோபியரை எழுப்புவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, அதை நிறைவேற்றாமல் உறங்கிக்கொண்டிருக்கும் பெண்ணையுமே ஆண்டாள், “கண்ணன் புகழைப் பாட வருவாயாக” என்று அழைப்பதிலிருந்து இந்தக் கருணைத் தத்துவம் வெளிப்படுகிறது.



மேலும், அந்தப் பெண் உண்மையில் உறங்கவில்லை; கிருஷ்ணானுபவத்தில் திளைத்து, தியான நிலையில் இருக்கிறாள் என்றும் வியாக்யானம் கூறும். இரவு–பகல் என்ற வேறுபாடே அவளுக்கு மறந்துவிட்டது. பரமானந்தத்தில் ஆழ்ந்திருப்பவளுக்கு காலபேதம் எங்கே?



அத்துடன், எழுப்பப்படுகின்ற அந்த கோபி, துடுக்குடன் பேசினாலும், அதே நேரத்தில் இனிமையும் நுட்பமும் நிறைந்த வாக்காற்றல் உடையவள். “செங்கழுநீர் மலர, ஆம்பல் மூட” எனத் தோழியர் சொல்வதைக் கேட்டு, “நான் பேசாததை ஆம்பலோடு ஒப்பிட்டு, நீங்கள் பேசுவதை செங்கழுநீரோடு ஒப்பிடுகிறீர்களா?” என்று நகைச்சுவையோடு கேட்கிறாள். இவ்வாறு, இனிய சொற்களால் பிறரை வசப்படுத்தும் சாதுர்யம் அவளிடம் இருப்பதாக மற்ற கோபியர் நம்புகிறார்கள். அதனால் தான், அவள் தங்களை ஏமாற்றினாலும், “நாணாதாய், நாவுடையாய்” என்று சிறு சினத்தோடும் அன்போடும் அழைத்துக் கொண்டு, தங்களுடன் அழைத்துச் செல்ல ஆவலுறுகின்றனர்.



இதனூடே, “நாவுடையாய்” என்ற சொல்லின் ஆழ்ந்த பொருளை ஆண்டாள் உணர்த்துகிறாள். நாவு என்பது வெறும் உண்பதற்கோ, வீண் பேச்சுக்கோ அல்ல; பரமனின் திருநாமங்களைப் பாடவும், நல்விஷயங்களைப் பிறருக்குச் சொல்லவும் உரிய கருவி. ஆகவே, நல்வாக்கு உடையவளாக இருப்பதே உயர்ந்த பண்பாகும்.



கர்மபலன் என்பது மனம்–வாக்கு–காயம் என்ற மூன்றின் சார்புடையது. இப்பாசுரத்தில் உறங்கும் கோபி, “நாவுடையாள்” எனப் போற்றப்படுவதால், அவளிடம் வாக்குத் தூய்மை நிலைபெற்றுள்ளது என்றும், அதற்குக் காரணமான மனத் தூய்மையும் பெற்றுவிட்டாள் என்றும் அறியலாம். இனி அவளுக்குக் குறைவாக இருப்பது, பூரண சரணாகதிக்கான செயல் மட்டுமே.



“நங்காய்” என்ற சொல்லும் இங்கே அவளது மேன்மையைச் சுட்டுகிறது. உயர்ந்த ஞானமும் குணமும் உடைய ஆண்களை “நம்பி” என அழைப்பது போல, அரிய குணச் செல்வம் பெற்ற மகளிரை “நங்கை” என்று அழைப்பது மரபு. ஆகவே, இவள் சாதாரண பெண் அல்ல; ஞானநிலை பெற்ற சிறப்புமிக்கவள் என்பதே கருத்து.



மேலும், இப்பாசுரத்தில் மூன்று பிரமாணங்களும் நுட்பமாக சுட்டப்படுகின்றன:
  • பிரத்யட்சம், 
  • அனுமானம், 
  • சப்தம்.


பிரமாணம் என்பது ஞானம் பெறும் வழி. பிரமேயம் என்பது அந்தப் பிரமாணங்களால் அறியப்படும் பொருள். சப்தப் பிரமாணம் என்பது வேதம் போன்ற அபௌருஷேய சாஸ்திரத்தைச் சார்ந்தது. வேதத்திற்குச் செயற்படுத்தியவர் எவரும் இல்லை; வியாசர் அவற்றைத் தொகுத்தளித்தார் மட்டுமே. ஆகையால் அதுவே குறையற்ற பிரமாணம்.


பிரத்யட்சமும் அனுமானமும் குறைபாடுகளுக்குட்பட்டவை.
“உங்கள் புழைக்கடை” — அனுமானப் பிரமாணம்.
“தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்” — பிரத்யட்சப் பிரமாணம்.
“எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்” — ஆப்தவாக்கியம்; அதாவது சப்தப் பிரமாணம்.


மேலும், உள் பொருளாக:

  • “செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து” — உலக விஷயங்களில் மூழ்கியவர்க்கு ஞானம் முளைக்கத் தொடங்குதல்.

  • “ஆம்பல் வாய் கூம்பின” — காம, க்ரோதாதி அஞ்ஞான விருத்திகள் ஒடுங்குதல்.

  • “செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்” — உத்தம ஆசார்ய சம்பந்தம் ஏற்படுதல்.

  • “எங்களை முன்னம் எழுப்புவாய்” — சம்சார நித்திரையிலிருந்து எங்களை எழுப்ப உத்தம அதிகாரியான நீயே அருள் புரிய வேண்டும் என்பதாம்.


“நாணாதாய்” என்பது வெட்கமின்மையை அல்ல; அகங்கார–மமகார ரஹிதத்துவத்தைக் குறிக்கிறது. தன்னைச் சார்ந்த பெருமிதம் அற்றவள் என்பதாலேயே அந்தச் சொல் பொருத்தமாகிறது.



“நாவுடையாய்” என்பது சகல சாஸ்திரங்களிலும் நிபுணத்துவம் பெற்ற, நல்வாக்கு வழங்க வல்ல சான்றோரைச் சுட்டும். ஹனுமான் முதலியோர் “நாவுடையார்” என அழைக்கப்படுவது இதனால் தான். ஆகவே, இது உறங்கும் கோபியின் சிறப்பையே வெளிப்படுத்துகிறது என்று அண்ணங்கராச்சாரியர் முதலியோர் விளக்குவர்.



“சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்” — சங்கமும் சக்கரமும் பரமனின் பரத்துவத்தையும், அவனே உபாயமும் உபேயமும் என்பதையும் அறிவிக்கின்றன. அவனை உபாசிக்கும் மார்க்கத்தை எடுத்துரைப்பதே இச்சொற்றொடரின் உள்நிலை.



இவ்வாறு, ஆண்டாள் தமது பதினான்காம் பாசுரத்தின் மூலம் வாக்கின் மகிமையை விசேஷமாக வெளிப்படுத்துகிறாள். “நாவுடையாய்” என்ற ஒரே சொல்லின் வழியே, பேசுவதில் விவேகம், மரியாதை, இனிமை, பொறுப்பு ஆகிய அனைத்தும் இருக்க வேண்டுமென்று உபதேசிக்கிறாள். தனிநலத்திற்காக அல்ல; உலக நலனைக் கருத்தில் கொண்டு, சாஸ்த்ரப்ரமாணமுள்ள சத்கிரந்தங்களில் இருந்து பெற்ற ஞானத்தைப் பிறருக்குப் பகிர வேண்டுமென்பதே அவள் கருத்து. புகழ் அல்லது பிரதிஷ்டை பெறுவதற்காக இனிய சொற்களைப் பயன்படுத்துவது பாபமே ஆகும்.



ஆகையால், ஆண்டாள் அருளிய “நாவுடையாய்” என்ற உபதேசத்தை மனத்தில் உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டு, யாரிடம், எதனை, எவ்வாறு பேச வேண்டுமோ — அதனைச் சரியான முறையில் பேசும் பயிற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

Sunday, 28 December 2025

புள்ளின்வாய் கீண்டானை...

 புள்ளின்வாய் கீண்டானை...




இந்தப் பாசுரத்தில் ஆண்டாள், தன் கண்களின் சௌந்தர்யத்தினால் உரிமை உணர்ச்சியுடன் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோபியை எழுப்புகிறாள். பகவத் சம்பந்தத்தால் தோன்றும் அகங்காரம், செருக்கு, வாதம் முதலியன லௌகிக தோஷங்களாகக் கொள்ளப்படாது; அவை அனைத்தும் தெய்வீகத்தோடு கலந்தவையாகவே ஆகின்றன. கண்ணனோடு தொடர்புபட்ட யாவும் சுத்த சத்த்வமயமாகவே விளங்கும் என்பது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம்.


அந்தக் கோபி தன்னுள்ளே இவ்வாறு எண்ணுகிறாள்: “என் கண்கள் இவ்வளவு அழகாக இருந்தால், கண்ணனே வந்து என்னோடு நட்பு கொள்ள வேண்டாமா? நான் ஏன் அதிகாலையில் எழுந்து நோன்பு முதலிய அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டும்?” என்று. இவ்வகையான உரிமைச் சிந்தனையோடு கூடிய பெருமையினால் விளங்கும் அவளை ஆண்டாள் “போதாரிக் கண்ணினாய்” என்று சாலப்போற்றிக் கூறி எழுப்புகிறாள்.


“போதாரிக் கண்ணினாய்” என்னும் சொல்லை ஆசார்யர்கள் பலவாறு பிரித்து அனுபவிக்கின்றனர். போது என்றால் பூ; அரி என்றால் வண்டு — பூவின்மேல் வண்டு மொய்ப்பதுபோல அலைபாயும் கண்களையுடையவளே என ஒரு பொருள். அல்லது போது பூ, அரி மான் எனக் கொண்டு, மான்போன்ற மெல்லிய விழிகளை உடையவளே என்றும் கொள்ளலாம். மேலும், போது என்றால் பூ, அரி என்றால் அழிப்பது — பூவின் அழகையும் மிஞ்சும் கண்களை உடையவள் என்ற அர்த்தமும் கூறப்படுகிறது.


இன்னொரு நுட்பமான விளக்கமாக, வடமொழி “போத” (bodha) என்னும் சொல்லிலிருந்து ஞானத்தை உணர்த்துவதாகக் கொண்டு, அறிவில் நாட்டமுடைய, ஞான விசாரத்தில் ஈடுபடும் பாகவதர்களையே “போதரி” எனக் குறிப்பதாகவும் வியாக்யானம் செய்கின்றனர்.


இப்பாசுரப் பகுதியில் கோபிகளுக்கிடையே சிறு வாக்குவாதம் எழுகிறது. “இராமனையே பாடலாமா, அல்லது கண்ணனைப் பாடலாமா?” என்பதே அதன் காரணம். முந்தைய பாசுரங்களிலிருந்தே ஒருபுறம் இராமனையும், மறுபுறம் கண்ணனையும் கலந்து பாடி வருகின்றனர். அதைக் கேட்டு இந்தக் கோபி, “நீங்கள் எல்லோரும் ஸ்ரீ ராமனைத்தானே பாடுகிறீர்கள்?” என்று கேட்கிறாள். அதற்கு ஆண்டாள், “ஸ்ரீ ராமனை மட்டும் அல்ல; இதுவரை நாம் ஸ்ரீ ராமனையும் ஸ்ரீ க்ருஷ்ணனையும் பாடியே வந்தோம். இது ராமாயண–மகாபாரத மரபின்படியும், க்ஷீராப்தியில் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் பரமாத்மனின் வ்யூஹ அவதாரங்களை விரிவாக எடுத்துரைக்கும் பாஞ்சராத்திர ஆகம மரபின்படியும் அமைந்ததே” என்று விளக்குகிறாள்.


பகாசுரன் கொக்கு வடிவம் கொண்டு வந்து வதைக்கப்பட்டதை நினைவூட்டியும், முன் அவதாரத்தில் பத்துத் தலை கொண்ட ராவணனை “இலைகளைப் பறிப்பது போல” எளிதில் அழித்த பெருமையையும் ஆண்டாள் சுட்டிக்காட்டுகிறாள். ‘பொல்லா அரக்கன்’ என்று ராவணனைச் சொல்லுவதற்குக் காரணம், தந்தையையும் தாயையும் பிரித்த கொடிய குணம் அவனிடத்தில் இருந்ததாலே என்று உரையாசிரியர்கள் கூறுவர்.


“புள்ளின் வாய் கீண்டான்” என்பது க்ருஷ்ணாவதாரத்தில் பகாசுரனை வதைத்ததையும், “பொல்லா அரக்கனை” என்றது ராமாவதாரத்தில் ராவணனை அழித்ததையும் குறிக்கும் என்பது ஒரு வகை விளக்கம். மற்றொரு வகையில், ‘புள்’ எனப்படும் ஜடாயுவை கொன்ற ராவணனையே “புள்ளின் வாய் கீண்டான்” என எடுத்துக்கொண்டு, முழுவதுமாக ராமாவதாரத்தையே இந்த இடத்தில் ஆண்டாள் சுட்டுகிறாள் என்றும் பெரியோர் உரை வழங்குகின்றனர். அரக்கன் என்றாலே தீயவன் என்றாலும், விபீஷணன், பிரகலாதன், மாவலி போன்றோர் அரக்க குலத்தில் பிறந்திருந்தும் பகவத் பக்தர்களாக விளங்கியதை நினைவூட்டி, “பொல்லா” என்ற விசேஷணத்தின் அவசியத்தை உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.


“வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்ற சொல்லால் காலநிலையும் தத்துவமும் இரண்டுமே சுட்டப்படுகின்றன. வெள்ளி தோன்றும் நேரத்தைப் புறநானூறும் குறிப்பிடுகிறது. தமிழர் வழக்கில் வெள்ளி எழுந்ததும் நீராடுதல் மரபு. ஆனால் இங்கு ஆண்டாள், வியாழம் உறங்கிற்று என்றும் கூறுகிறாள். அறிஞர்கள் (லூயிஸ் டொமினிக் சுவாமிக்கண்ணுப் பிள்ளை முதலியோர்) கணக்கின்படி, வெள்ளி உதயமும் வியாழன் அஸ்தமனமும் ஒரே நாளில் நிகழ்ந்த காலம் கி.பி. 731 டிசம்பர் 18 எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஆண்டாளின் காலமும் எட்டாம் நூற்றாண்டு என்பதற்குச் சான்று கிடைக்கிறது.


மேலும், வியாழன் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். சார்வாகம் போன்ற நாஸ்திக மதங்களுக்கு ப்ரஹஸ்பதியே ஆசார்யன் எனக் கூறப்படுவதால், “வியாழம் உறங்கிற்று” என்பது நாஸ்திகப் போக்கு ஒழிந்து, சாஸ்த்ரபூர்வமான ஞானம் எழுந்ததைக் குறிப்பதாகவும் வியாக்யானம் செய்யப்படுகிறது.


“பாவைக்கலம்” என்பது பெண்கள் கூடும் இடம் என்பதோடு, கண்ணனுக்காகப் போட்டியிடும் களமாகவும் பொருள் தரும். மேலும், அது சிஷ்யர்கள் கூடும் காலக்ஷேப மண்டபத்தையும் குறிக்கும். “பிள்ளைகள்” என்று ஆண்டாள் அழைப்பது, பருவம் அடைந்தும் குழந்தைத்தன்மை நீங்காத நிர்மலமான பக்த நிலையையே சுட்டுகிறது. பெரியாழ்வார் “செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்று கூறுவதும் ஆண்டாள் இளமையிலேயே பரமபதம் அடைந்ததை உணர்த்துகிறது.


“புள்ளும் சிலம்பின காண்” என்று ஆறாம் பாசுரத்தில் சொன்னது கூண்டிலிருந்த பறவைகளின் ஒலியைக் குறித்தால், இங்கு இரை தேடச் செல்லும் பறவைகளின் ஓசையைக் குறிக்கிறது.


“குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே” என்ற சொற்றொடர் மிக நுண்ணிய அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. நீரில் இறங்கியவுடன் உடல் சுருங்கும் குளிரை “குள்ளக் குளிர” என்றும், பழகியபின் நீருக்குள் முழுகித் திளைப்பதை “குடைந்து” என்றும் ஆண்டாள் சொல்கிறாள். ஆனால் இங்கு அது வெறும் உடல் நீராட்டை மட்டும் குறிக்கவில்லை; கண்ணனைப் பிரிந்த விரக்தியின் தாபம் இன்னும் தணியாத நிலையில், காலம் கடந்து விடுவதற்கு முன், பாசாங்கான உறக்கத்தை விட்டுவிட்டு, நோன்பின் முதற்கரியமான நீராட்டிற்கு வருமாறு அழைக்கும் உருக்கமான வேண்டுகோளாகும்.


“கள்ளம் தவிர்த்து கலந்து” என்றால், பகவத் விஷயத்தைத் தனிப்பட்ட அனுபவமாக மட்டுமே வைத்துக் கொள்ளாமல், சஹபாகவதர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதே. காலக்ஷேபத்தில் கலந்து, எம்பெருமானுடைய குணாநுபவங்களை ஒன்றாகச் சுவைப்பதே ஸம்பிரதாய மரபு.


ஒரு பக்தனுக்குத் தலைசிறந்த அடிப்படை ஸ்ரத்தையே. அந்த ஸ்ரத்தையை வளர்க்கவே ஸ்ரீமத் ராமாயணமும் ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீமன் நாராயணனின் பிரதான அவதாரங்களான ஸ்ரீ ராமன், ஸ்ரீ க்ருஷ்ணன் ஆகியோரின் சரிதங்களை விரிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றைச் செவியுறக் கேட்போரின் உள்ளத்தில் பகவத் விஷயத்தில் நிலையான நம்பிக்கை உறுதிப்பட வேண்டும் என்பதே அவற்றின் பரம நோக்கம்.


திருப்பாவையின் பதின்மூன்றாம் பாசுரத்தில், பகாசுர வதமும் ராவண வதமும் எடுத்துக்காட்டப்பட்டு, நம் சாதனப் பாதையில் எதிர்கொள்ளும் எல்லா இடையூறுகளையும் அகற்றுவது எம்பெருமானுக்கு எளிதான காரியம் என்பதைக் காட்டுகிறது. ஆனால் அந்த அகற்றல் நிகழ்வதற்கு, நாம் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன் இருக்க வேண்டும். அந்த ஏற்றுக்கொள்ளுதல் உபாயமல்ல; ஆனால் பகவான் எவரிடமும் பாகுபாடு இன்றிப் கருணை புரிவதற்கான அவசியமான நிபந்தனையாகும். ஆகவே, எத்தனை தடைகள் இருந்தாலும், அவற்றை ஒரே நொடியில் நீக்கி, பரமபதத்துக்குச் செல்லும் தெளிந்த பாதையை நமக்கு அனுபவிக்கச் செய்ய வல்ல பரமகருணாளன் ஒருவன் நமக்கு சரணாகதி ரூபமாக இருக்கிறான் என்பதை ஒவ்வொரு பக்தனும் உறுதியாக உணர வேண்டும்.


“வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்ற சொல்லாட்சி, அவித்தை ஒழிந்து ஞானம் உதித்த நிலையையும் குறிக்கிறது. ஆத்மாவை மட்டும் அறியும் உலர்ந்த ஞானத்தை விட, க்ருஷ்ணனை அனுபவிக்கும் பிரேமையோடு கூடிய ஞானமே மேலோங்குகிறது என்பதையும் அது சுட்டுகிறது. “கண்” என்ற சொல்லால் ஞானமே குறிக்கப்படுகிறது என்பது பூர்வாசார்யர்களின் வாக்கு. உடலழகு ஒருநாள் மங்கிவிடும்; ஆனால் ஞானத்தால் உண்டாகும் அழகு மட்டுமே நம்மை இலக்கான பரமபதத்துக்குக் கொண்டு சேர்க்கும். ஆகையால் தெய்வ விஷயங்களில் ஞானத்தை வளர்த்துக் கொள்வதே ஒவ்வொரு சாதகனுக்கும் முதன்மையான கடமையாகும்.


அம்பரமே, தண்ணீரே....

அம்பரமே, தண்ணீரே.... ஆடை, நீர், அன்னம் — இம்மூன்றும் உலகில் வாழும் யாவருக்கும் தடையின்றி, குறையின்றி கிடைக்க வேண்டுமென்ற தர்மத்தைத் தன் உள்ள...