Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Sunday, 22 December 2024

பாரதியின் ஞானப் பாடல்கள்

பாரதியின் ஞானப் பாடல்கள்



பாரதி ஒரு தன்னுணர்வு கவிஞன். இன்று நாம் FBயில் ஒரு பதிவிட்ட பின் பல பேர்களை டேக் செய்கிறோம். லைக்கும் கமெண்டும் வரவில்லையென்றால் சோர்வடைகிறோம். நம்முடைய பதிவு நன்றாக இல்லாவிடினும், யாரவது அதை சொன்னால் கோபம் கொள்கிறோம். ஆனால் பாரதியோ அப்படியல்ல. "எமக்கு தொழில் கவிதை" என்றான். இருந்தும் அவனுடைய கவிதைகளை யார் படிக்கின்றார்கள் என்று கூட அறிய வாய்ப்பற்று போனான். feedback அல்லது பின்னூட்டம் பற்றிய கவலைகள் இல்லாது கவிதை புனைவதையே தொழிலெனக் கொண்டவன். பாராட்டையும் ஏசல்களையும் மறப்போம், யாராவது படிக்கிறார்களா என்று கூட தெரியாத போதும் கவிதை பாடுவதை அவன் நிறுத்தவில்லை. அவனது கவிதைகளை படிக்க படிக்க ஞானம் நம்முள் ஊற்றெடுக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய பொருளை உணரும் வண்ணம் அவனது கவிதைகள் புனையப்பெற்றன. அவநதய ஞானப் பாடல்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம். (அலச என்னிடம் அறிவில்லை).


பாரதி ஒரு பன்முகக் கவிஞன். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, சொல் புதிது, பொருள் புதிதாய் கவிதை இசைத்தல், பெண் விடுதலை, சமூக நீதிக்குப் போராட்டம் இப்படிப் பல முகங்கள் உண்டு அவருக்கு. பல முகம் கொண்ட பாரதியின் உண்மை முகம் எது? எந்த முகத்தின் அடிப்படையில் மற்ற முகங்கள் அமைந்துள்ளன? வேதங்களின் மீது அவன் கொண்டிருந்த மரியாதை தான் அவனது உண்மையான முகம். அவன் சீர்திருத்தவாதி தான், புரட்சி பேசியவன் தான் அண்ணலும், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை கொண்டவன் என்பது நிதர்சனமான உண்மை.


ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.


“நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய், பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்போருக்கு பாரதி அறிவுறுத்துகிறார் -
"வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று வேதம் புகன்றிடுமே- ஆங்கோர்
வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ் வேதமறியாதே
நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்நான்மறை கண்டிலதே..."

வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ர-ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.


“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடிஅலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ”


வேதம் புகழ்ந்த பாரதி அத்வைத சித்தாந்தத்தை அசையாது பின்பற்றினான். “தமிழா, தெய்வத்தை நம்பு. அஞ்சாதே, வேதங்களை. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே” என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.


ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘…எல்லாமே இறைவன் தான்’ (ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்) என்ற கருத்தை அதில் காண்கிறார்.

“சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க
நல்லதொருமகன் சொல்வான் தூணிலுள்ளான் நாராயணன் துரும்பிலுள்ளான்
வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை
மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை
அல்லலில்லை அல்லலில்லை அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ
“கேளப்பா சீடனே கழுதை ஒன்றை கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம் மீளத்தான்
இதை மட்டும் விரித்துச் சொல்வேன் விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே”


யஜுர் வேதத்தின் ருத்ரம் சொல்வது போல் எல்லாமே ருத்ரனின் வடிவம் தான். இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப் பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம் மேலுமிங்குப்
பலபலவாம் தோற்றங் கொண்டேஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்; எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

இதைத்தான் உண்மையோ பொய்யோ என்ற கவிதையில் சொல்கிறார் (நிற்பதுவே நடப்பதுவே என்ற பாடலே அது...)

"சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யமோ, அதை சொல்லோடு சேர்ப்பாரோ...
காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைவதேல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை,
காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம்.."


அழகு தெய்வம் என்ற மற்றுமோர் பாடலில் (மங்கையதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்....), அவர் சக்தியை கேட்கிறார்,

"யோகந்தான் சிறந்ததுவோ, தவம் பெரிதோ? என்றேன், யோகமே தவம், தவமே யோகமென உரைத்தாள்
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ? என்றேன், "இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம் என்றாள்"
ஏகம் என்றால் ஒன்று என்று பொருள். அத்வைதம் என்றல் இரண்டு அல்ல என்று பொருள். இரண்டு அல்ல என்றால் ஒன்று என்றும் கொள்ளலாம், மூன்று, நான்கு என்று கூட கொள்ளலாம். பாரதி ஏகமோ இரண்டுமோ என்று த்வைதம், அத்வதாம் பற்றி கேட்கிறார். சக்தியோ, இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம் என்ன்றாள் என்று கூறி எல்லாமே சக்தி மாயம் என்கிறார். மேலும்,


"காலத்தில் விதி மதியை கடந்திடுமோ என்றேன், காலமே மதியினுக்கோர் கருவியும் என்றாள்
ஞாலத்தில் நண்ணியது நல்குமோ என்றேன், நாளிலே ஒன்றிரண்டு பலித்திடும் என்றாள்
ஏலத்தில் விடாவதுண்டோ எண்ணத்தை என்றேன், எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்
மூலத்தை சொல்லவோ வேண்டாவோ என்றேன், மகத்திலருள் காட்டினாள் மொகமது தீர்த்தேன்.."

எத்தனை அழகாய் பெரிய தத்துவங்களை எளிமையாக அவரால் கூற முடிகிறது. படிக்க படிக்க ஆர்வம் மேலோங்குகிறது. ஒவ்வொரு புரை படிக்கும் போதும் புது புது அர்த்தங்கள் புலப்படுகின்றது.

Monday, 11 December 2023

பாரதியும் பெண்ணுரிமையும்








நான் பாரதியின் ஆய்வாளன் அல்லன், அவரது கவிதை தொகுப்புகளை கரைத்து குடித்தவனும் அல்லன் - ஆம், அவரது படைப்புகளை, இரசித்து படிப்பவன், சுவைப்பவன். அவ்வளவே. அவரை பற்றி எழுத எனக்கு தகுதியும் இல்லை.



மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கட்டுரை, கவிதை, சிறுகதை, வசனகவிதை என பல்வேறு இலக்கிய படைப்புக்களை படைத்தவர். இருந்தாலும் அவர், "நமக்கு தொழில் கவிதை" என்று இறுமாப்பு கொண்டிருந்தார். அவர் இந்தியாவின் விடிவெள்ளி. விடுதலை உணர்வையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரவச் செய்த மகான். உரைநடையில் பத்து பக்கங்களில் சொல்லி விளக்கக்கூடிய விஷயங்களை ஒரே வரியில் கவிதையாய் கூறி வலிமையாய் நாட்டு மக்களின் உள்ளத்தில் வலியுறுத்தமுடியும் என்று நம்பியவர், செய்தும் காட்டியவர். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தேசிய உணர்வு ,மனிதநேயம் ஆகியவற்றை தம் கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியவர். 



பெண் என்பவள் ‘பேசும் தெய்வம்’ என்பதை வலியுறுத்தும் விதமாக அன்னை காளியை ஆயிரம் இடங்களில் சுட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் புதுமைப்பெண், பெண்மை, விடுதலைக்கும்மி போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண்மையைப் போற்றியும் உள்ளார். புதுமை பெண்கள் பற்றிய கவிதைகளில் காணப்படும், "சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்நாட்டிலே...." "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கே பெண் இளைப்பில்லை காண்...." என்பன மறக்க முடியாதவை.



சமுதாயத்தில் பெண் என்பவள் ஒரு அங்கம். ஆனால் சமுதாய கோட்பாடுகள், இன்றளவும் பெண் என்பவள் பிறந்தது முதல் யாரையேனும் சார்ந்து, அண்டி வாழ வேண்டி உள்ளது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இளமைப்பருவத்தில் பெற்றோரையும், திருமணம் முடித்து பின் கணவனையும், அதற்குப்பின் தன்னுடைய மகனையும் சார்ந்து வாழ வேண்டிய நிலை உள்ளது அல்லது அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. பாரதியாரின் பெண்விடுதலை பற்றி கூறும் கருத்துக்கள் ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கு பாடமாக அமைந்துள்ளது எனில் மிகையாகது.




பெண் என்பவள் அழகானவள், மென்மைளானவள், இன்பம் தரக்கூடியவள், பொறுமையில் பூமாதேவி, ஐயத்திற்குரியவள் என்ற கருத்து நிலவி அந்த கால கட்டத்தில் இருந்தது. இப்போதும் கூட சில இடங்களில் இதை பார்க்க நேரிடலாம். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வீடுதிரும்பும் வரை பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகவேண்டி உள்ளது.



“பெண் என்பவள்  தெய்வம்...’’என்பதைத் தம் கவிதைகளில் சுட்டிக்காட்டி, “எங்கெங்குகாணினும் சக்தியடா…” என்று சக்தியின் உருவகமாகப் பெண்னைப் பார்க்கிறார்.



அறிவு நிரம்பப் பெற்றவர்கள் பெண்கள். ஆண்களின் அடிமைத்தனத்தினால் தான் பாமரர் முதல் படித்தவர் வரை அடிமை வாழ்வு எய்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடையில் கூட கட்டுப்பாடுகளைச் சந்திக்க வேண்டிய சூழலில் சில பெண்கள் இன்னும் வாழ்வை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். பெண்ணின் மனதை காயப்படுத்தும் செயல் புரிபவர்களைக் கண்ட முண்டாசுக் கவிஞர்,



“அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர்கள் பித்தராம்”. என்று தம் பாடலில் குறிப்பிட்டுள்ள பாரதி, மனைவியையும் தாயையும் மதிக்க வேண்டும் என்னும் கருத்தை,



“மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமன்றால் மனையாளும் தெய்வமன்றோ மதிகெட்டீரே
தாயைப் போல பிள்ளையென்று முன்னோர் வாக்கின் படி பெண்மை அடிமையுற்றால் மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பன்றோ”



என்று விளக்குகிறார். இதன் மூலம் ஒருவர் பண்பும், ஆத்மீகமும் மற்றவர்களால் உருவாகின்றன என்ற கருத்தை உணர்த்தியுள்ளார். பெண் எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதனை,


“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைத்தோங்குமாம்
பேணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்
நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாகும்”. என்கிறரர்.
மேலும்,
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
அமிழ்ந்து பேரிருள் அறியாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி உரைப்பது கேட்டீரோ”. என்கிறார்.



சமுதாயத்தில் ஒரு பெண் நல்லமுறையில் வாழவேண்டும் எனில் எதிர்த்து நிற்கும் துணிவு தன்னம்பிக்கை, முயற்சி ,ஊக்கம் , வைராக்கியம் போன்ற உயர்ந்த இலட்சியங்களைக் கைக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். தவறினைச் சுட்டிக்காட்டி எடுத்துரைக்கும் மனோதிடம் உள்ள பெண்களினால் கவலையின்றி வாழ முடியும் என்றும் அவளே மிகச்சிறந்த பெண் என்றும் கூறுகிறார்.



“பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா” என்று கூறிவிட்டு ஆண்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக,
“பெண்ணறத்தனை ஆண்மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை
கண்ணைக் காக்கும் இமை மிரண்டின்மை போலவே”
“உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்ந்திடும் உயிரினுக்குயிராய் இன்பமாகிவிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா”. என்கிறார்.



பெண் விடுதலை பற்றிப்பேசும் போது அடிமை வாழ்வு வாழ்ந்த பெண்களின் அவல நிலையை எண்ணி வருந்துகிறார். படிப்பறிவு இல்லாத நிலை திருமண வாழ்வின் அவலநிலை சமுதாய உரிமை ஆகியவற்றிறைப் பற்றியும் கூறியிருக்கிறார். கல்வி கற்க முடியாத நிலையையும் விருப்பமில்லா திருமண வாழ்வையும் நினைத்துக் குமுறும் முண்டாசு கவிஞர்,

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”



என்பதனையும், பெண் தன்னை விட படிப்பில் சிறந்தவளாக ஆளுமைமிக்க பெண்ணாக இருப்பதைக் கண்டு குமுறும் ஆண்களுக்காகவே எழுதப்பட்ட வரியாக அமைந்துள்ளது. மேலும் திருமணத்தில் பெண்களின் ஒப்புதலைக் கேட்க வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டும் கவிஞர்,

“நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டி வைத்தார் பழி சுட்டிவிட்டார்”
என்கிறார்.


பெற்றோர்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் கடமை முடிந்துவிடுகிறது என்று வரன்களை நன்கு விசாரிக்காமல் திருமணம் செய்து வைத்துவிட்டு மீளாத்துன்பத்தில் மாட்டிக்கொள்கின்றனர். ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுகிடக்கும் பெண்களுக்கு விடுதலைப் பெற்றுதரப் பாடுபட்டவர் இந்தியாவில் ஏராளம், இல்லாளின் மாண்பைப் போற்றிவந்த வள்ளுவர் ‘பெண்ணிற் பெருந்தக யாவுள?’ எனக் கேட்பதிலிருந்து பெண்ணின் பெருமையை அறிந்து கொள்ளமுடிகிறது.


எல்லாத்துறைகளிலும் கனிமாக உயர்ந்து நிற்கின்ற பெண்களின் பெருமையை அன்றே பாரதி கோடிட்டு காட்டிச் சென்றுள்ளார்....

Sunday, 10 December 2023

தெரிந்த கதை தெரியாத விஷயம் - பாரதியார்

 

பாரதி சின்னப்பயல்


எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவராக இருந்த காந்திமதிநாதருக்கு பாரதி மேல கொஞ்சம் கோபம், பொறாமை. அதனால அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றெண்ணி 'பாரதி சின்னப்பயல்' என்று ஈற்றடி தந்து உடனே ஒரு வெண்பா பாடல் இயற்றச் சவால் விடுத்தார். பாரதி அதற்கு உடனே பாடல் ஒன்றை எழிதினார். அப்பாடல் இதோ:


"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்."


அதாவது, தன்னை விட வயதில் இளையவன் நான் என்று அந்த அகந்தையினால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்த, பெருமை அற்ற, கருமையான இருள் போன்ற உள்ளம் கொண்ட காந்திமதி நாதனைப் பார், மிகவும் சின்னப் பயல் என்று பொருள் தருகின்ற பாடல் அது. (பாரதி சின்னப் பயல் = பார் அதி சின்னப் பயல்).


இந்தக் கதை நாமெல்லோரும் அறிந்ததே. அண்ணல் அறியாத (வெகுவாக அறியாத) ஒன்று இதோ...


காந்திமதிநாதன் மிகவும் வருத்தமுற்று பாரதியிடம் தன் வருத்தத்தைத் தெரிவிக்க, பாரதி பாட்டை கொஞ்சம் மாத்திப் பாடுறார் இப்படி:


"ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்."


வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். கார் அது போல உள்ளத்தான் - மழை மேகம் போல கருணை மிக்க உள்ளம் கொண்டவன். இங்க பாரதி, தன்னையே சின்னப் பயல் ன்னு சொல்லிக்கொள்கிறார். சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர்.


இந்த நிகழ்வு நடைபெறும் போது பாரதிக்கு வயது 14. இதுவே அவரின் இளமையில் புலமைக்கு ஓர் சான்று. புலமை மட்டுமல்ல அவரது மாண்பிற்கும் ஓர் உதாரணம்.


Dharmendra Pradhan's Resignation: A Political Compulsion or a Strategic Failure?

  Dharmendra Pradhan's Resignation: A Political Compulsion or a Strategic Failure? At last, Dharmendra Pradhan has resigned. But the obv...