பாரதியின் பன்முகம் – ஞானமும் ஆன்மிகமும்
நான் இதே தலைப்பில் முன்னரும் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். ஆனால் பாரதியை ஒரே கட்டுரைக்குள் அடக்கிவிட முடியுமா? அவருடைய பன்முகத் தன்மையைப் புரிந்துகொள்ள முயலும்போது, ஒவ்வொரு பரிமாணமும் இன்னொரு பரிமாணத்திற்கான கதவைத் திறக்கிறது. இதோ, அந்தத் தொடர்ச்சியில் இன்னொரு பார்வை.
பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சமயப் பற்று ஆகியவற்றுடன் முரண்படாத வகையில் உலகின் அனைத்து மக்களையும், அனைத்து மொழிகளையும், அனைத்து சமயங்களையும் நேசிக்கும் பரந்த மனம் அவரிடம் இருந்தது. புதுமையான சொற்களிலும் புதுமையான பொருள்களிலும் கவிதை படைத்த புலமை அவருக்கு இருந்தது. பெண் விடுதலை, சமூக நீதி, மனித சமத்துவம் என அவர் குரல் கொடுத்த தளங்கள் எண்ணற்றவை. ஆனால் இந்தப் பல முகங்களுக்குப் பின்னால் இருந்த அவரது ஆழமான சிந்தனை என்ன? எந்த அடிப்படையில் இந்தப் பல்வேறு பரிமாணங்கள் உருவாயின?
பாரதியின் படைப்புகளை ஆழ்ந்து நோக்கும்போது, வேதங்களின் மீதும், அவை வெளிப்படுத்தும் ஞானத்தின் மீதும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த மரியாதை, அவரது சிந்தனையின் அடித்தளங்களில் ஒன்றாகத் தோன்றுகிறது. தான் பிறந்த குலத்திற்குரிய பல ஆசாரங்களை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், தன் சாதியினரையும் விமர்சிக்கத் தயங்காத ஒரு புரட்சியாளர் அவர். அதே நேரத்தில், தனது குலத்தின் தொன்மையான அறிவுப் பாரம்பரியமான வேதத்தின் மீது அவர் வைத்திருந்த மரியாதை குறிப்பிடத்தக்கது.
தனது பாடல்கள், கட்டுரைகள், கதைகள் என பல்வேறு படைப்புகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் போற்றிப் பேசியிருப்பதாகக் காணப்படுகிறது. முக்கியமாக, இந்த வேதப் பார்வை அவரது பக்திப் பாடல்களுக்குள் மட்டுமே அடங்கிவிடவில்லை. சமூக விடுதலை, தேச விடுதலை, மனித சமத்துவம் போன்ற அவரது சிந்தனைகளிலும் அது ஊடுருவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
வேதம் – சடங்கு அல்ல, ஞானத்தின் ஊற்று
பாரதியின் பார்வையில் வேதம் என்பது வெறும் சடங்குகளின் தொகுப்பு அல்ல. அது இந்திய நாகரிகத்தின் ஆழமான அறிவு மரபின் அடித்தளம்.
அதேவேளை, காலப்போக்கில் வேதத்தின் பெயரில் பல தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் புகுந்துவிட்டதாக அவர் கருதினார். ஆகவே, அவரது நோக்கம் வேதத்தை நிராகரிப்பது அல்ல; மாறாக, அதன் மீது படிந்துவிட்ட தவறான விளக்கங்களை அகற்றி, அதன் தொன்மையான தூய பொருளை மீண்டும் வெளிக்கொணர்வது. இந்த எண்ணமே அவரது பாடல்களிலும், கதைகளிலும், கட்டுரைகளிலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஓர் அடிநாதமாகத் தோன்றுகிறது.
இந்த வேதாந்தப் பார்வையின் மையத்தில் இருப்பது "அனைத்தும் ஒன்றே" என்ற உணர்வு.
யஜுர் வேதத்தின் ருத்ரம் பகுதியைப் பற்றிப் பேசும்போது, உலகில் காணப்படும் ஒவ்வொரு மனிதனிலும், ஒவ்வொரு உயிரிலும், ஏன் உயிரற்ற பொருட்களிலும் கூட இறைநிலையைப் பார்ப்பதான ஒரு பார்வை வெளிப்படுகிறது. இறைவன் அவற்றுக்குள் இருக்கிறான் என்று மட்டும் கூறாமல், அவையே இறைவனின் வெளிப்பாடுகள் என்று பார்க்கும் பார்வை அது.
இந்த உணர்வை பாரதி எவ்வளவு எளிமையாகவும் அதே நேரத்தில் எவ்வளவு ஆழமாகவும் வெளிப்படுத்துகிறார் என்பதைப் பாருங்கள்:
“சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்”
இது வெறும் பக்தி அல்ல. இது ஒரு உலகப் பார்வை.
"அனைத்தும் கடவுள்" – கோபத்திலிருந்து ஞானத்திற்கு
இந்தப் பார்வையின் சமூக மற்றும் உளவியல் விளைவையும் பாரதி ஆராய்கிறார். மனிதனுக்கு கோபம் ஏன் வருகிறது? நம்மிடமிருந்து வேறுபட்டதாக, தனியானதாக இன்னொருவரை நாம் பார்க்கிறோம். "நான்" என்றும் "அவன்" என்றும் பிரித்துப் பார்க்கும் இடத்தில்தான் பகை, கோபம், வெறுப்பு ஆகியவை உருவாகின்றன.
ஆனால் நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் இறைவன் இருக்கிறான்; நாமும் அதே இறைநிலையின் ஒரு வெளிப்பாடுதான் என்ற உணர்வு நிலையாக இருந்தால், பிறரிடம் கோபம் கொள்ளுவதற்கான அடிப்படையே மாறிவிடுகிறது. இந்த ஆழமான வேதாந்தக் கருத்தை மூன்று வார்த்தைகளில் பாரதி சுருக்குகிறார்:
“சூழ்ந்தது எல்லாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே
சேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில்”
இங்கே பாரதி கூறும் முக்கியமான சொல் "ஞானத்தை மறத்தல்".
அதாவது, பிரச்சினையின் வேர் அறியாமை மட்டுமல்ல; நாம் ஏற்கெனவே அறிந்திருக்க வேண்டிய உண்மையை மறந்துவிடுவதும் ஆகும்.
வேற்றுமைகளுக்கு அப்பால் – ஒன்றே பொருள்
தனது வசனக் கவிதையில் பாரதி இந்தக் கருத்தை இன்னும் விரிவுபடுத்துகிறார்.
“இவ்வுலகம் ஒன்று ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே
ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி, குழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே
இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி
இஃதெல்லாம் ஒன்று
மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி இவை ஒரு பொருள்
வேதம், கடல்மீன், புயற் காற்று, மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம்
உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று இந்த ஒன்றின் பெயர் – தான்
தானே தெய்வம் தான் அமுதம் இறவாதது”
இதுவே பாரதியின் ஆன்மிக சிந்தனையின் மையத்தைத் தொடுகிறது: வேற்றுமைகள் பல; அடிப்படை உண்மை ஒன்று ("ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி"). அத்வைதத்தின் இந்தப் பார்வையில், தனிமனிதனும் உலகமும், உயிரும் இயற்கையும், மனிதனும் இறையும் அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல.
இந்த உணர்வு பாரதியிடம் அறிவார்ந்த தத்துவமாக மட்டும் நின்றுவிடவில்லை. அது அவரது அனுபவமாகவும் கவிதையாகவும் மாறுகிறது.
"நான்" என்பதன் விரிவாக்கம்
உபநிடதங்களில் வெளிப்படும் "அஹம் ப்ரம்மாஸ்மி" என்ற உணர்வை பாரதி மிகவும் எளிய, இயற்கையான மொழியில் வெளிப்படுத்துகிறார்.
இங்கு "நான்" என்பது தனிப்பட்ட அகங்காரத்தின் "நான்" அல்ல. எல்லாவற்றிலும் பரவியிருக்கும் அந்த ஒரே சைதன்யத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் "நான்".
“வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான், மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான்,
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான், வாரியிலுள்ள உயிரெலாம் நான்.
கம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உருவெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம், எழில் நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாதரிசையுளேன் நான், இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,, பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங் கோடி இயக்குவோன் நான், இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளேன் நான், சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான், அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்ட பல சக்திக் கணமெலாம்நான், காரணமாகிக் கதித்துளோன் நான்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான், ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்,
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய், அறிவாய் விளங்கு முதற் சோதி நான்”
இந்தப் பாடலில் "நான்" விரிவடையும் விதத்தை கவனிக்க வேண்டியது அவசியம். அது தனிமனிதனிடமிருந்து இயற்கைக்கு, இயற்கையிலிருந்து உயிர்களுக்கு, உயிர்களிலிருந்து பிரபஞ்சத்திற்கு என விரிவடைகிறது. இறுதியில் "அறிவாய் விளங்கு முதற் சோதி" என்ற நிலையில் ஒன்றாகிறது. இதுவே பாரதியின் ஞானம்.
ஆன்மிகத்திலிருந்து மனித நேயத்திற்கு
இந்த அத்வைதப் பார்வை வெறும் தத்துவ விவாதமாக இருந்திருந்தால் அதன் தாக்கம் இவ்வளவு பரவலாக இருந்திருக்காது. எல்லாம் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடுகள் என்றால், "நண்பன்" – "பகைவன்", "உயர்ந்தவன்" – "தாழ்ந்தவன்", "நம்மவன்" – "அந்நியன்" போன்ற பிரிவுகளின் அடிப்படையே கேள்விக்குள்ளாகிறது. அதனால்தான் பாரதி பகைவனிடத்திலும் இறைநிலையைப் பார்க்கச் சொல்கிறார்.
அவர் எடுத்துக்காட்டும் உருவகங்கள் மிகவும் வலிமையானவை:
புகையின் நடுவே இருக்கும் தீ, சிப்பிக்குள் இருக்கும் முத்து, குப்பையின் நடுவே மலரும் கொடி. அதேபோல, தன்னைத் தாக்க வரும் புலியிடத்திலும் பசியின் வடிவில் பராசக்தியைப் பார்க்கச் சொல்கிறார்.
இதை அவர் பாடலாகச் சொல்கிறார்:
“பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே – பகைவனுக்கருள்வாய்
புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே”
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ?
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவான் என்ற சாத்திரம் கேளாயோ?
போருக்கு வந்தங்கெதிர்த்த கௌரவர் போல வந்தானும் அவன்
நேருக்கருச்சுனன் தேரிற் கசை கொண்டு நின்றதும் கண்ணனன்றோ?
தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக் கும்பிடுவாய்”
தேச விடுதலையும் ஆன்மிக ஞானமும்
இந்தப் பின்னணியில் பாரதியின் தேசப்பற்றையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர் போராடியது வெறுமனே "அந்நியர் நம்மை ஆளக்கூடாது" என்ற குறுகிய தேசிய உணர்வின் காரணமாக மட்டும் அல்ல என்று இந்தப் பார்வை விளக்குகிறது.
"நம்மவர்" – "அந்நியர்" என்ற வேற்றுமையையே அடிப்படையாக ஏற்றுக்கொள்ளாத அத்வைதப் பார்வையை அவர் கொண்டிருந்தார்.
அப்படியானால், இந்தியா ஏன் சுதந்திரம் பெற வேண்டும்?
அதற்கான பதில் அவரது ஒரு வேண்டுதலில் உள்ளது:
“பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக,
துன்பமு மிடிமையு நோவும், சாவு நீங்கிச்
சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க”
அனைத்து உயிர்களிலும் தெய்வத்தைக் காணும் நிலை உருவானால், அச்சம், பகைமை, கோபம், பொறாமை போன்றவை எவ்வாறு நிலைத்திருக்க முடியும்?
பாரதியின் தேசப்பற்று இவ்வாறு ஒரு விரிவான ஆன்மிக நோக்கத்துடன் இணைகிறது. இந்தியா தன் தொன்மையான ஞானத்தை உலகிற்கு வழங்க வேண்டிய தேசம் என்று அவர் கருதுகிறார். எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பதாகக் கூறும் வேதாந்த உணர்வை உலகிற்கு அளிப்பதில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பான பங்கு இருப்பதாக அவர் நம்புகிறார்.
அதனால்தான் இந்தியாவின் வீழ்ச்சி என்பது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல; உலகின் ஞானத்தையே பாதிக்கும் ஒன்றாக அவர் பார்க்கிறார்.
“சுதந்திர தேவியின் ஒளி பெறாவிடில் அங்கு அறிவுண்டோ, ஆக்கமுண்டோ? காவிய நூல்கள், ஞானக் கலைகள், வேதங்களுண்டோ?”
மேலும்:
“வேத நூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி?”
அதற்கான காரணமாக அவர் குறிப்பிடுவது:
“மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்கு ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்”
எனவே, பாரதியின் பார்வையில் சுதந்திரம் என்பது வெறும் அரசியல் அதிகார மாற்றம் அல்ல. அறம், ஞானம், மனித கண்ணியம் ஆகியவை மீண்டும் தழைக்க வேண்டிய அவசியம்.
வர்ணம், சாதி – பாரதியின் சிக்கலான சமூகப் பார்வை
பாரதியின் ஆன்மிகப் பார்வையைப் புரிந்துகொள்ளும்போது, அவரது வர்ணம் மற்றும் சாதி குறித்த கருத்துகளையும் கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது.
வேதத்தின் வர்ணாசிரமக் கருத்தையும், பிறப்பின் அடிப்படையில் உருவான சாதிப் பிரிவுகளையும் பாரதி ஒன்றாகக் கருதவில்லை.
வர்ணாசிரமம் என்ற சொல்லில் வர்ணம் மற்றும் ஆசிரமம் என்ற இரு கருத்துகள் அடங்குகின்றன. ஆசிரமம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைப் பருவங்களைக் குறிக்கிறது—மாணவப் பருவம், இல்லறப் பருவம், வானப்ரஸ்தம், துறவுப் பருவம்.
பாரதி குறிப்பாக வர்ண முறையை தொழில் மற்றும் தகுதி சார்ந்த சமூகப் பிரிவாகக் கருதுகிறார். அறிவுத் துறையில் இருப்பவர்கள், ஆட்சி மற்றும் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள், வாணிபம் செய்பவர்கள், உற்பத்தித் தொழிலில் ஈடுபடுபவர்கள் என சமூகத்தின் பல்வேறு பணிகளை அவர் எடுத்துரைக்கிறார்.
அவரது பார்வையில் இவற்றில் எதுவும் மற்றொன்றை விட உயர்ந்ததல்ல. ஒரு இயந்திரத்தின் பல்வேறு பாகங்களைப் போல, ஒவ்வொன்றும் தன் பணியைச் சரியாகச் செய்தால்தான் சமூக அமைப்பு சீராக இயங்கும்.
“வேதமறிந்தவன் பார்ப்பான் – பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில் சோம்பலைப் போல் இழிவில்லை
நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி.
நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுறப் புரிந்தனர் மூடர்”
இங்கு அவர் வலியுறுத்துவது பணிகளின் வேறுபாடு; மனிதர்களின் மதிப்பில் வேறுபாடு அல்ல.
அவரது ஞானரதம் இந்தக் கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது. பகவத்கீதையின் "குண-கர்ம" அடிப்படையிலான வர்ணக் கருத்தை அவர் எடுத்துக்கொள்கிறார்.
“பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள். பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை. ஸகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது. பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது. அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி. இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர் வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”
இந்தக் கருத்துடன் இணைந்து, சமூகத்தில் வெவ்வேறு பணிகளைச் செய்பவர்கள் ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதையும் பாரதி வலியுறுத்துகிறார்:
“சீலம் அறிவு தருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்
‘ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை,
மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை,
ஏவல்கள் செய்பவர் மக்கள்”
நிறத்தின் வேறுபாடு – தரத்தின் வேறுபாடு அல்ல
பாரதி தனது கருத்தை மிக எளிய பூனைக்குட்டிகளின் உருவகத்தின் மூலம் சொல்கிறார்.
“வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறமாகும்
சாம்பல் நிறமொரு குட்டி கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது ஏற்றமென்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானிடர் வேற்றுமை இல்லை”
இந்த உருவகத்தின் மூலம் அவர் சொல்லும் கருத்து எளிமையானது: வேற்றுமை இருக்கலாம்; ஆனால் வேற்றுமை என்பது உயர்வு–தாழ்வை நிரூபிப்பதில்லை.
அவரது பார்வையில் வர்ணம் பிறப்பால் நிர்ணயிக்கப்படுவதில்லை; மனிதனின் தகுதி, இயல்பு, பயிற்சி, செயல் ஆகியவற்றுடன் அது தொடர்புடையது. அதையே அவர் ஞானரதம் வழியாகக் காட்டுகிறார்:
“எனது பிதா க்ஷத்திரியர்.நான் பிராமணன்.என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன்.மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன்.”
சாதிக்கு எதிரான பாரதியின் குரல்
இங்கே ஒரு முக்கியமான வேறுபாட்டை பாரதி முன்வைக்கிறார்: வர்ணம் மற்றும் சாதி ஒன்றல்ல. பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் சாதி முறையை அவர் தீவிரமாக எதிர்க்கிறார். பிறப்பின் காரணமாக ஒருவன் உயர்ந்தவன், இன்னொருவன் தாழ்ந்தவன் என்று தீர்மானிப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
“சாதிப் பெருமையில்லை பாப்பா – அதில் தாழ்ச்சி உயர்ச்சி செய்தல் பாவம்
நீதி தெளிந்தமதி அன்பு – இவை நிறைய வுடையவர்கள் மேலோர்”
மேலும்:
“மேலவர் கீழவரென்றே வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்
சாதிப் பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு தன்னில் செழித்திடும் வையம்.”
இங்கே மீண்டும் நாம் அவரது ஆன்மிக அடிப்படைக்குத் திரும்புகிறோம். மனிதர்கள் அனைவரும் ஒரே இறைநிலையின் வெளிப்பாடுகள் என்றால், பிறப்பின் அடிப்படையில் உயர்வு–தாழ்வு எவ்வாறு நியாயப்படுத்தப்பட முடியும்?
அதனால்தான் பாரதி மனிதர்களை மட்டும் ஒரே சமூகமாகப் பார்க்காமல், அனைத்து உயிர்களையும் அந்த ஒருமையின் வட்டத்திற்குள் கொண்டு வருகிறார்.
“காக்கை குருவி எங்கள் சாதி காடும் மலையும் எங்கள் கூட்டம்”
என்று அவர் பாடும்போது, மனித சமத்துவத்தைத் தாண்டி உயிர்களின் ஒருமை என்ற இன்னும் பரந்த தளத்திற்குச் செல்கிறார்.
அதன் உச்சமான வெளிப்பாடாக:
“பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம். எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.”
என்று அவர் கூறுகிறார்.
பாரதியின் ஞானம் – ஒரு முடிவற்ற பயணம்
பாரதியை வெறும் தேசியக் கவிஞராகவோ, புரட்சிக் கவிஞராகவோ, பெண் விடுதலைக் கவிஞராகவோ, சமூக சீர்திருத்தக் கவிஞராகவோ மட்டும் வாசித்தால், அவருடைய ஒரு பரிமாணத்தை மட்டுமே நாம் காண்கிறோம்.
அவருடைய இந்தப் பல்வேறு முகங்களுக்குப் பின்னால் ஒரு ஆழமான ஆன்மிகப் பார்வை இருப்பதை அவரது படைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
அனைத்திலும் இறைவன். அனைத்தும் ஒன்றே.
வேற்றுமைகள் தோற்றத்தில் மட்டுமே.
பகைமை அறியாமையிலிருந்து பிறக்கிறது.
அன்பு அந்த அறியாமையை அகற்றுகிறது.
எல்லா உயிர்களிலும் ஒரே சைதன்யத்தைப் பார்ப்பதே ஞானம்.
இந்த ஞானம் அவரிடம் தனிமனித ஆன்மிக அனுபவமாக மட்டும் நின்றுவிடவில்லை. அது அவரது சமூக சிந்தனையாகவும், சமத்துவக் குரலாகவும், பெண் விடுதலைக் குரலாகவும், தேச விடுதலைக் கனவாகவும் வெளிப்படுகிறது.
அதனால்தான் பாரதியின் ஆன்மிகத்தை அவரது மற்ற பரிமாணங்களிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது.
பாரதியின் பன்முகங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்தப் பல முகங்களுக்குப் பின்னால் ஒளிரும் "ஞானச் சுடரை" முதலில் காண வேண்டும்.
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்; சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் முதலில் நாம் மறந்துவிட்ட பாரதியை மீண்டும் வாசிக்க வேண்டும். அவரது படைப்புகளை வெறுமனே படிப்பதற்காக அல்ல—படித்துணர்ந்து, சிந்தித்து, நம் வாழ்வில் அந்த ஞானத்தின் பொருளைத் தேடுவதற்காக.