பாடறியேன் படிப்பறியேன் பாட்டிற்கு முன்னோடி பாட்டு...உங்களுக்காக....
70' களின் பிற்பகுதியில் வெளிவந்த திரைப்படம், "அவர் எனக்கே சொந்தம்". இப்படத்தின் ஒரு பாடல் “தேவன் திருச்சபை மலரிது / மலர்களே” ஆகும். “ஜனனி ஜனனி ஜகம் நீ” பாடல் இசைக்கும் வரை, இந்தப் பாடலையே இளையராஜா தமது மெல்லிசை கச்சேரிகளில் அறிமுகப் பாடலாகப் பாடி வந்தார்.
நமது இந்த போஸ்டில் நாம் இதே படத்தில் வந்த வேறு ஒரு பாடலை பற்றி அலசுவோம். இன்றைய தேதியில் நாம் அனைவருக்கும் அறிமுகமாகிய பாடல் சிந்து பைரவி படத்தில் வந்த "பாடறியேன் படிப்பறியேன்". இந்த பாடலில் பாரம்பரிய நாட்டுப்புற பண்ணிசையோடு கர்நாடக சங்கீதத்தை கலந்து நம் செவிகளுக்கு விருந்தளித்தார் ராஜா. ஆனால், அது போன்ற ஒரு பிரமிக்கவைக்கும் சோதனையை அவர் 70களிலேயே செய்திருக்கிறார். இந்தப்பாடல் அப்படி பட்ட சோதனையின் பலனே.
ஒரு பாகவதர் கச்சேரிக்கு பாட வருகிறார், ஆனால் அவரது பக்க வாத்தியக்காரர்கள் நேரத்திற்கு வர இயலாது போக, சபா செக்கரடரி அவரை கடிந்து கொள்கிறார். கச்சேரிக்குப் பின்னால் பாடப் போகும் லைட் மியூசிக் வாத்தியக்காரர்களோடு சேர்ந்து பாட சொல்கிறார். இவரும் ஒப்புக்கொண்டு செய்யும் சோதனையே இப்பாடல்.
நினைவில் கொள்க. இது ராஜாவின் சொந்த இசையமைப்பு கிடையாது. தியாகப்ரம்மம் மற்றும் கய்யாமின் கலவை பிசைந்தது. முற்றிலும் அசல் இல்லை, ஆம். நீங்கள் பார்ப்பது போல் ஒரு வேடிக்கையான பாடல். பாடகர் ஒரு மூலையில் தள்ளப்பட்டு, கித்தார் மற்றும் டிரம்ஸுடன் தியாகப்ரம்மம் அவர்களின் கீர்தனையைப் பாடி, மிருதங்கம் மற்றும் வயலினுடன் கபீ கபீ என்ற ஹிந்தி பாடலுக்கு செல்கிறார்.
மற்றவர் படைப்பே ஆனாலும் ராஜா தான் இருப்பதை வெளிப்படுத்துகிறார். ஏற்கனவே கேட்ட பாடல்களுடன் வித்தியாசமாக அதே பாடல்களை நமக்கு அளிக்கிறார். “கோகிலத்வனி” இராகத்தில் அமைந்த க்ருதி. TMS இராக ஆலாபனை செய்து முடித்தவுடன் லீட் கிடார், நான் இருக்கிறேன் என்று பறை சாற்றுவது அருமை.
பல்லவி முடிந்தவுடன், லீட் கிட்டார், டிரம்ஸ் மற்றும் ட்ரம்பெட் ஆகிய கருவிகளின் கூட்டிசை இடைஇசையாய் (interlude) செவிக்கு விருந்து. நினைத்துப் பாருங்கள், தியாகப்ரம்மத்தின் க்ருதிக்கு கிட்டரும் ட்ரும்ஸும்! என்னே ஒரு கற்பனை? அதை எங்ஙனம் சிதைக்காமல் சீரழிக்காமல் தந்திருக்கிறார்.
அனுபல்லவியில் கோரஸில் இருந்து "யேலா வேசிதி" யுடன் Bluesன் கூறுகளை (Blues notes) இணைப்பது (பின் பாடுபவர்கள் செய்யும் இராக ஆலாபனை) அசாத்திய கற்பனை மற்றும் இசை அறிவு. மறுபடியும் இடை இசையில் கிட்டர்களின் நர்த்தனம் வெகு அருமை. இந்த க்ருதியில் தியாகய்யர் தனது போறாத காலத்தை நிந்தித்து பாடுகிறார், இந்த படத்திலும் பாகவதரின் போறாத வேளை (பக்கவாதியாக்காரர்கள் வரவில்லை) பற்றி பாடுவதாய் எடுத்துக்கொள்ளலாம்.
பின்னர் வாதியாக்காரர்கள் வந்தடைந்ததும், மற்றும் ஒரு பாடல். கல்யாணியில் ஆலாபனை செய்து கீர்த்தனம் தொடங்கும் முன், இரசிகர்கள், ஹிந்திப் பாடலை பாட சொல்கின்றனர் (நினைவிருக்கட்டும் அக்கால கட்டத்தில் தமிழ் இரசிகர்கள் ஹிந்தி திரை இசையின் பால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தனர்). பாகவதரும் கல்யாணியிலேயே அச்சமயத்தில் பிரபலமாயிருந்த “கபீ கபீ மேரே தில் மே” என்ற பாடலை பாடுகிறார். “கபீ கபீ” என்ற இந்த ஹிந்தி பாடல் யமன் இராகத்தில் இசையப்பெற்றது.
கல்யாணியில் ஒரு கர்நாடக ஆலாபனைக்குச் செல்வது முதல் இந்துஸ்தானி யமனை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலில் இருந்து, முக்கியமாக தமிழ் நாட்டுப்புறத்துடன் முடிவடையும் வரை, ஒரு இனிமையான இசைக்கலவையை நமக்கு விருந்தளித்த இந்த மா மனிதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
No comments:
Post a Comment