Tuesday, 23 December 2025

கீழ்வானம் வெள்ளென்று!

கீழ்வானம் வெள்ளென்று! 



காலை நேரத்தை ஆண்டாளைப் போல் பாடல்களால் மகிமைப்படுத்தியவர்கள் அரிது. திருப்பள்ளியெழுச்சியால் காலைச் சிறப்பித்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருவெம்பாவையால் காலையைப் பாடிய மாணிக்கவாசகரும் நினைவிற்கு வருவர். ஆயினும் அவை அனைத்தும் ஆண்களின் காலை; ஆண் ஆதிக்கம் மேலோங்கிய காலைகள். பெண்கள் அவற்றில் மிகக் குறைவு. ஆனால் ஆண்டாளின் காலை வேறு. அது பெண்களின் காலை. இளம்பெண்களின் காலை. ‘விருத்தைகள்’ — வயது முதிர்ந்த பெண்கள் — எழுந்து, “இது உங்களுக்கு உரிய நேரமல்ல” என்று தடுக்கும் முன், கண்ணனை அடைய அவசரப்படும் இளமைத் துடிப்புள்ள பெண்களின் காலை அது.


இந்த எட்டாவது பாசுரத்தின் உள்ளார்ந்த பொருளை விரித்து நோக்கும்போது, ஆண்டாள் தம் தோழியருடன் இணைந்து ஒரு விசேஷமான கோபியைத் துயிலெழுப்பச் செல்கிறாள். அந்தக் கோபி எத்துணை சிறப்புடையவள் என்றால், ஒருவரோ இருவரோ அல்ல; மிக்குள்ள பிள்ளைகளும் — எல்லா தோழியரும் ஒன்றுகூடி வந்து அவளை எழுப்ப வேண்டிய நிலை.
ஏன்? அவள் கண்ணனுக்கே மிகுந்த பிரியமானவள்; அலங்காரத்திலும், ஆனந்தத்திலும், உற்சாகத்திலும் பூரித்தவள்.


முந்தைய பாசுரங்களைப் போலவே, இப்பாசுரத்திலும் ஒரு நுட்பமான கற்பனை உரையாடல் அமைந்துள்ளது. வெளியே நின்று ஆண்டாள் பேசுகிறாள்; உள்ளே துயில்கின்ற கோதுகலமுடைய பாவாய் பதிலளிக்கிறாள். இந்த உரையாடலின் ஊடே தான் ஆழ்ந்த வைஷ்ணவ தத்துவங்கள் மெதுவாக வெளிப்படுகின்றன.


ஆண்டாள் கூறுகிறாள்: உலகியலில் மூழ்கிய சாம்சாரிகள் இரவில் உறங்கி, விடியற்காலத்தை எதிர்பார்த்து, மறுநாள் உலகச் செயல்களில் மூழ்க விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் — பகவத் அனுபவத்தில் திளைக்கும் அடியார்கள் — கண்ணனுடன் கூடி இருப்பதற்குக் கிடைக்கும் சிறு வாய்ப்பையும் பெரும் பேறாகக் கருதி, அதை விடாது பற்றிக் கொள்கிறோம். பெரியோரின் அனுமதியோடு, கண்ணனுடன் தெய்வீக அனுபவம் பெறுவதற்கான இத்தகைய அரிய நேரத்தில், நீ மட்டும் இன்னும் துயிலில் இருப்பது எவ்வாறு பொருந்தும்? பாராயோ! எங்கள் ஆன்மிக அனுபவத்தைத் தடுக்கிறவர்களே எழுந்துவிட்டார்கள். ஆனால் நீ மட்டும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்!


அதற்கு கோதுகலமுடைய பாவாய் கேட்கிறாள்: “இப்போது எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?


ஆண்டாள் பதிலளிக்கிறாள்: கீழ்வானம் வெள்ளென விளங்குகிறது. கிழக்குத் திசையில் வெண்மை தோன்றி, சூரிய உதயத்திற்கு முன்சூசனையாக நிற்கிறது — கீழ்வானம் வெள்ளென்று



அதிகாலையில் வானம் உடனே வெண்மையாகிவிடாது. இருளிலிருந்து சிவப்பு, மஞ்சள் எனப் பல நிறங்களைக் கடந்து, மெதுவாக முழு வெண்மையை அடையும். அதுபோலவே, அடியார்களும் ஆச்சார்ய சம்பந்தத்தின் துணையோடு பல அனுபவ நிலைகளைத் தாண்டி, இறுதியில் ஞானத் தெளிவை அடைகிறார்கள்.


ஒரு காலத்தில் “East is red” என்ற மேற்கத்திய சொல் பரவியது. ஆனால் இங்கே ஆண்டாள், “கிழக்கு வெளுத்தது” என்கிறாள். வெண்மை — சாத்வீகத்தின் சின்னம். சத்துவ குணம் ஓங்கும் காலம் அது. “அசேதனத்திற்கும் சைதன்யம் உண்டாகும் படி சத்த்வோத்தரமான காலமாயிற்று” என்று வியாக்யானம் கூறுகிறது. உயிரற்றவைகளுக்கும் உயிர் தரும் காலை. மீண்டும் இருள் சூழும் என்பதைக் ஆண்டாள் அறியாதவளா? அறிந்தவள்தான். ஆனால் இருளுக்குப் பின் மீண்டும் காலை வரும் என்பதையும் அவள் அறிந்திருக்கிறாள். “நாங்கள் காலைக்குக் காத்திருப்பவர்கள்; உங்களைப் போன்றவர்கள் இருளுக்குக் காத்திருப்பவர்கள்” என்ற நுட்பமான சுட்டுரை இங்கே மறைந்துள்ளது.


அதைச் சிரிப்புடன் மறுத்து கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: நீங்கள் அனைவரும் கண்ணனைப் பிரிவில்லாமல் காண ஆவலுற்று, எப்போதும் கிழக்கையே நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் — திங்கள் திருமுகத்து சேயிழையார். உங்கள் முக ஒளியே வானில் பிரதிபலித்து வெண்மையாகத் தோன்றியிருக்கலாம். மேலும், பால், தயிர், மோர் போன்ற வெண்மையானவற்றையே நீங்கள் எப்போதும் காண்பதால், வானமும் உங்களுக்கு வெண்மையாகத் தோன்றுகிறது. வேறு ஏதாவது உறுதியான அறிகுறி உண்டா?


அதற்கு ஆண்டாள் கூறுகிறாள்: பனித்துளிகள் படர்ந்த புல்லை மேய்வதற்காக எருமைகள் வயல்களில் பரவி விட்டன. இது விடியற்காலம் வந்ததற்கான அடையாளமல்லவா? இன்னும் கேட்டால் — இப்போது நீ எழவில்லை என்றால், பசுக்களின் பின்னே சென்று தன் தினசரி கடமையைச் செய்யக் கண்ணன் புறப்பட்டு விடுவான்.


‘சிறு வீடு’ என்ற சொல், வீட்டின் முன்புறத்தில் உள்ள புல்வெளி, தோட்டம் என்ற பொருளையும் தரும். காலையில் பனிப்புல் மேய விட்ட பிறகே ஆயர்கள் பாலைப் பறிப்பார்கள் என்பது ஆயர் மரபு. அக்னிஹோத்ரம், ஹோமம் முதலியவற்றில் வளர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பிராமண கன்னி, இத்தகைய ஆயர் வழக்கங்களை எவ்வாறு அறிந்தாள்?
அதற்கு ஒரே விடை — ஆண்டாள் தன்னை முழுமையாக கோபியாகவே வரித்துக் கொண்டாள். பெரியாழ்வார் மகளாகிய அவள், வேத விதிகளைக் காட்டிலும், ஆய்ச்சியரின் வாழ்வியலோடு ஒன்றிப் போனாள்.



எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் - பாகவத அனுபவத்தில் சதா சர்வகாலமும் திளைத்திருப்பதால், மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது. 'சிறுவீடு' என்பதை சிற்றின்பமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்। தொடர்ச்சியாக 'பரந்தன காண்' எனும்போது தமோ குணங்கள் விலகிப் போவதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் !!!


இதையும் மறுத்து கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: உங்கள் முக ஒளி வானில் பிரதிபலித்ததால் இருள் அகன்றது. அந்த இருளையே நீங்கள் எருமைகள் என்று தவறாக எண்ணிக் கொண்டீர்கள். 



ஆண்டாள் விடை தருகிறாள்:நாங்கள் அறியாமையால் மயங்கியவர்கள் என்று நீ கருதினாலும், இன்னும் இரவுதான் என்பதற்கான காரணத்தை நீயே சொல்ல வேண்டாமா?



அப்போது கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: திருஆய்ப்பாடியில் ஐந்து இலட்சம் கோபிகள் உள்ளனர். அவர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே இங்கு வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் இன்னும் உறங்குகிறார்கள் என்பதே விடியல் வரவில்லை என்பதற்குச் சான்று.



ஆண்டாள் பதிலளிக்கிறாள்:
மிக்குள்ள பிள்ளைகளும் — மற்றவர்கள் எல்லோரும் சென்றுவிட்டார்கள். 


மிக்குள்ள பிள்ளைகளும் - பக்தி யோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால், சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்த அடியவரை குறிப்பில் உணர்த்துகிறது.



அதற்கு பாவாய்: அவர்கள் என்னை புறக்கணித்துவிட்டுச் சென்றார்களா?



ஆண்டாள்: அப்படியல்ல. கூட்டம் பெரிதாக இருந்ததால், நீ வரவில்லை என்பதை அவர்கள் உணரவில்லை. உன்னை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.



பாவாய்: அவர்கள் எதற்குச் செல்கிறார்கள்?



ஆண்டாள்: போவான் போகின்றாரை — போக வேண்டும் என்பதற்காகவே போகிறார்கள்.
அது, ஜீவாத்மா அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பரமபதத்தை அடைவதைப் போல. கம்சனின் ஆணையால் கண்ணனைச் சந்திக்கச் சென்ற அக்ரூரனைப் போல. திருமலைக்குச் செல்லும் பக்தர்களைப் போல.


பாவாய்: அவர்கள் என்னை விட்டுச் சென்றிருந்தால், நான் ஏன் எழ வேண்டும்?



ஆண்டாள்: போகாமல் காத்து — அவர்கள் போகத் தொடங்கியபோது, நீ வரவில்லை என்று நான் சொன்னேன். உடனே அவர்கள் நின்றுவிட்டு, உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.



இதன் மூலம் ஒரு ஆழ்ந்த தத்துவம் விளங்குகிறது:
பிற பகவதர்களின் துணையின்றி பகவானை அணுகக் கூடாது. விபீஷணனும் வானரர்களின் உதவியோடு தான் ஸ்ரீ ராமனைச் சரணடைந்தான்.

“வேதம் அறிந்தவர்களினூடே
தேவர்களின் தலைவனை வழிபடுக”
— திருவாய்மொழி 4.6.8

அக்ரூரன், கம்சனின் ஆணையால் கண்ணனை அழைத்து வரச் சென்றபோது, ஆனந்தமும் வருத்தமும் கலந்து இருந்தான் — பகவானை காணும் பேரானந்தம்; அந்தச் சந்திப்பின் நோக்கம் கொடூரமானது என்ற துயரம்.


உன்னை கூவவான் வந்து நின்றோம்
அவர்களை அங்கே நிறுத்திவிட்டு, உன்னை அழைக்கவே இங்கு வந்தோம். அவர்கள் விரதஸ்தலத்திற்குச் செல்கிறார்கள்; நாங்கள் உன்னை எழுப்பவே வந்தோம்.



பாவாய்: என்னை எழுப்ப இவ்வளவு முயற்சி ஏன்?


‘கோதுகலமுடைய பாவாய்’ — கௌதுகலம் எனும் ஆனந்தமும் உற்சாகமும் நிறைந்தவள்; கண்ணனுக்கே மிக நெருக்கமானவள்.



பாவாய்’ — நீ பெண். பெண் படும் பாடு பெண்ணுக்கே தெரியும். எங்கள் விண்ணப்பங்களை கேட்க மறுக்கும் பகவானைப் போல நீயும் நடந்து கொள்வாயா?
எங்களுடன் வராவிட்டாலும், விழித்தெழும் போது உன் அழகையாவது காண விரும்புகிறோம். அல்லது உன் வாசலுக்கு வந்து உன்னை எழுப்பிய பேறாவது எங்களுக்கு கிடைக்கட்டும்.



பட்டர் வாக்கு இங்கே பொருந்தும்: “முலை எழுந்தார்படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே” — பெண் துன்பம் பெண்ணுக்கே தெரியும்.



உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் - 'கோதுகலமுடைய பாவாய்' என்ற பதம் கண்ணனுக்கு மிக நெருக்கமான, அவனது பேரன்புக்குரிய கோபியர் குலப்பெண்ணை குறிப்பில் உணர்த்துகிறது. அதனால் தான், மற்ற கோபியர், இவளை தங்களுடன் அழைத்துச் செல்வதன் வாயிலாக, கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.



பாவாய்:  நான் எழுந்தால் எனக்கு என்ன பயன்?



பாடிப் பறை கொண்டு — நாம் இப்போது கண்ணனை மனதுக்குள் அல்ல; நேரில் அனுபவிக்கப் போகிறோம். அவன் புகழை வெளிப்படையாகப் பாடப் போகிறோம். அதற்குப் பலனாக கண்ணன் பறை தருவான். மற்றவர்களுக்கு அது விரதப் பலன்; கோபிகளுக்கு — கைங்கரியம்.

பாடிப் பறை கொண்டு - ஆச்சார்யனைப் போற்றி தனியன்கள் பாடுவதும், அவர் மேன்மையை பரப்புவதும்


பாவாய்:  அவன் நிச்சயம் பறை தருவானா?


மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை
நித்யசூரிகள் சேவை செய்யும் தேவாதிதேவன் தான். ஆனால் நம் தடைகளை அகற்ற பூமிக்கு வந்தவன்.


கேசி — அகங்காரத்தின் உருவம்.
மல்லர்கள் — காமம், கோபம்.
இவை அனைத்தையும் வென்றவன் கண்ணன்.


சென்று நாம் சேவித்தால்
அவன் நம்மிடம் வருவதும் உண்டு; நாம் அவன் இடத்திற்குச் செல்வதும் உண்டு.
“பிரிவால் மெலிந்த நம் உடல்களை அவனுக்குக் காட்டச் செல்கிறோம்” என்று பெரியாச்சான் பிள்ளை விளக்குகிறார்.



ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்
நம் நிலையை ஆராய்ந்து, இரக்கம் கொண்டு, அவன் அருள் புரிவான்.



இறுதியாக, பக்தி தனிமையில் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் பிழை. பெரும்பாலும், ஒரே மனநிலையுள்ள பக்தர்களோடு கூடி அனுபவிப்பதே மனத்தை உறுதியாக வைத்திருக்கும்.
நண்பர்களையும் உறவினர்களையும் பகவத் அனுபவத்தில் சேர்த்துக் கொள்ள முயல்வதே, பகவானுக்குச் செய்யும் உயர்ந்த கைங்கரியம்.'


ஆண்டாள் கூறுவது போல:
“கோதுகலமுடைய பாவாய்!
மற்றவர்களை நிறுத்திவிட்டு,
உன்னையும் பகவத் அனுபவத்தில் சேர்க்கவே
நான் இங்கு வந்தேன்.”


எவ்விஷயம் கண்ணனால் ஆராயப்படுகிறது? கோபியரின் கர்ம,ஞான,பக்தி யோகங்களை அல்ல, தாஸ்ய பாவம் மட்டுமே, பரிபூர்ண சரணாகதி... இந்தப் பாசுரம், கோஷ்டியாக (கூட்டாக) ஆச்சார்ய உபதேசத்திற்குச் செல்லும் சீடர்களை குறிப்பில் உணர்த்துகிறது.


ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய் - ஆசார்யன், சீடர்களின் தகுதியை விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்து, அவரவருக்கேற்ற பிரபத்திப் பலன் கிட்டுவதற்கு உபாயங்களை அருளுதலை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது!


ஆண்டாள் திருவடிகளே சரணம் 


Monday, 22 December 2025

கீசு கீசு என்று ....

 கீசு கீசு என்று ....




நகர வாழ்வில் இருப்பவர்களுக்கு இது சற்றே கடினமான அனுபவம்தான். விடியற்காலையில் “கீசு கீசு” என்று பறவைகள் பரஸ்பரம் உரையாடும் இனிய ஓசைகளை கேட்பது இன்று அரிதாகிவிட்டது. குருவிகளே காணாமற்போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், “ஆனைச்சாத்தன்” எனப்படும் கருங்குருவியை எத்தனை பேர் அறிவர்? ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, திருவல்லிக்கேணியில் நான் வாழ்ந்த காலத்தில், பறவைகளின் அரவம் என்கிற நினைவே இல்லை. அன்றைய காலையின் ஒலிகள் முற்றிலும் வேறுபட்டவை.


கனமான கரும்போர்வையைத் துளைத்துக்கொண்டு, திண்ணையில் படுத்திருந்த என்னை எழுப்பிய ஒலிகள் அவை. பெண்கள் கோலம் போடுவதற்காக வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளிக்கும் சப்தம், எதிர் வீட்டின் முன் பால்காரர் பசுமாட்டைக் கொண்டு வந்து பால் கறக்கும் ஓசை, சிறிது தூரத்தில் உஷத்கால பஜனை பாடப்படும் ஒலி, கோவிலில் ஒலிபெருக்கியில் ஒலித்த எம்.எல். வசந்தகுமாரியின் திருப்பாவை – இவை அனைத்தும் கலந்த அந்த ஒலிச்சூழலே தூக்கத்தை விரட்டியதாக நினைவில் நிற்கிறது. ஆண்டாள் காலத்திலும், தூங்கிக் கிடந்தவர்களின் காதுகளில் இதுபோன்ற பல ஒலிகள் கலந்து விழுந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.


ஆனைச்சாத்தன் பறவையை கிராமங்களில் “செம்போத்து” என்றும் அழைப்பார்கள்; குருவியிலேயே குட்டியான குருவி அது. அவை “கலந்து பேசின பேச்சு” என்றால், அது என்ன உரையாடல்?


பண்டையோர் இதற்கு நயமான விளக்கமொன்றைக் கூறுவர்.
ஒரு பறவை, “கீசு = க் ஏஷு? – யார் ஈசன்?” என்று கேட்கிறதாம்.
அதற்கு இன்னொரு பறவை, “கீசு = கிம் ஏஷு – அவனே ஈசன்” என்று பதில் சொல்கிறதாம்.

இப்படித்தான் “கீசு கீசு” என்று அவை கலந்துரையாடியதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.


ஆனைச்சாத்தன் பறவையை பரத்வாஜப் பறவை என்றும், ஆங்கிலத்தில் Greater Coucal என்றும் கூறுவர். சிவப்பு, ஊதா, கருப்பு நிறங்கள் கலந்து மின்னும் பறவை அது. சிலர் “ஆனைச்சாத்தன்” என்பது வலிமைமிக்க பறவையைக் குறிக்கும் என்பார்கள். வாலில் இருக்கும் இறகுகள் ஆங்கில ‘V’ எழுத்தைத் தலைகீழாகப் புரட்டியது போல் இரட்டைவால் தோற்றமுடையது. மற்றொரு வகை கரிய பறவையான Drongo என்றும் நினைக்கலாம். இது அதிகாலையில் “கீச் கீச்” என்று கூர்மையான குரல் எழுப்பும். அந்தக் குரல் சாதாரணமல்ல; அது மற்ற உயிர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை. அதிகாலை வேளையில் வனவிலங்குகள் வேட்டைக்கு நகரும் போது, அவற்றின் வரவை உணர்த்தி, மற்ற ஜீவராசிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஓசையே அது.


இந்தப் பாசுரத்தில், பகவானையே சிந்தித்துக் கொண்டு மெய்மறந்து கிடப்பவளை, அவள் தோழிகள் அவள் இல்லத்தின் வாசலில் திரண்டு வந்து எழுப்ப முயல்வதாக வர்ணிக்கப்படுகிறது. பகவத் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்கள் எப்போதும் சத்சங்கத்தையே நாடுவார்கள். இதை அறிந்தே ஆண்டாள், பாகவதர்களை ஒன்றுகூடச் செய்து தோழியை எழுப்புகிறாள். ஆனாலும் அவள் எழுந்து வராததால், “பேய்ப்பெண்ணே” என்று செல்லமாகக் கடிந்துகொள்கிறாள்.


“காசும் பிறப்பும்” என்பது சங்கச் சின்னங்களான சங்கு, சக்கரம் பொறித்த தாலிகளைக் குறிக்கும் என்று சிலர் கூறுவர். மற்றொரு விளக்கமாக, பெரியாழ்வார் குறிப்பிட்ட “அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன்” என்ற ஆபரணத்தையும் நினைவூட்டலாம். கண்ணனுக்கு உகந்த ஆபரணங்களை ஆய்ச்சியர்கள் அணிவது இயல்பே. அவர்கள் தாலிகள் உரசி கலகல என்று ஒலிக்க, தயிர் கடையும் வேகத்தில் கூந்தல் அவிழ, தயிரின் மணத்தையும் மீறி பரிமளம் பரவுகிறது. அதனுடன் மத்தினின் ஒலியும் கலந்து எழுகிறது. இதுபோன்ற காட்சியை அன்னமாச்சாரியார் தமது ஒரு கீர்த்தனையில், அலர்மேல் மங்கை வீணை வாசிக்கும் போது அவளுடைய வளையல்கள் வீணையில் இடித்து ஒலித்ததும், குங்குமம் வியர்வையில் கரைந்து மணம் பரவியதையும் அழகாக வர்ணித்துள்ளார்.


“நாயகப் பெண் பிள்ளாய்” என்ற அழைப்பின் பின்னால், “எல்லோருக்கும் முன்னணியில் நிற்க வேண்டிய நீ, இவ்வாறு படுத்துக் கிடப்பது நியாயமா?” என்ற மறைமுகக் கேள்வி அடங்கியுள்ளது.


“கேசவன்” என்ற சொல்லுக்கு, கேசி என்ற குதிரை வடிவ அரக்கனை அழித்தவன் என்ற பொருளும் உண்டு; அடர்ந்த கூந்தல் உடையவன் என்ற பொருளும் உண்டு. இங்கு, ஆய்ச்சியர்களின் அவிழ்ந்த கூந்தலுக்கு ஒப்பாக அடர்ந்த கேசம் உடையவன் என்று பொருள் கொள்ளுதலே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.


“தேசம், தேசு, தேஜஸ்” என்பவை அனைத்தும் பளிச்சென்று ஒளிவீசுதலைக் குறிக்கும். “திருமா மணிவண்ணன் தேசு” என்பது பேயாழ்வார் வாக்கு. இங்கே, “பேய்ப்பெண்” தேசமுடையவளாக – தெய்வீக ஒளி கொண்டவளாக – மாறியிருப்பதை கவனிக்க வேண்டும். எப்படியாவது அவளை எழுப்ப வேண்டும் என்ற உந்துதலைக் கவிதை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.


“கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு” என்பது, பரமனுக்கும் திருமகளுக்கும் இடையே, அடியவர்களுக்கு அருள் வழங்கும் நோக்கில் நடைபெறும் தெய்வீக சம்பாஷணையைச் சுட்டிக்காட்டுகிறது.


“வாச நறுங்குழல் ஆய்ச்சியர்” என்ற சொல்லில், “வாச நறுங்குழல்” என்பது உபநிடதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றறிந்த அறிவைப் புலப்படுத்துகிறது; “ஆய்ச்சியர்” என்பது ஆச்சார்யர்களைக் குறிக்கும் உள்பொருளைக் கொண்டது.


“காசும் பிறப்பும்” என்ற ஆபரணங்கள், வேதங்களையும், அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதிகளையும் குறிக்கின்றன.


“மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ” என்பது, ஆழ்ந்த தேடலின் பின் மலர்ந்த ஞானத்தின் பயனாக, “நாராயணனே பரதேவதா” என்ற தெளிவை ஆச்சார்யர்கள் உரக்க அறிவிக்கும் நிலையைக் குறிப்பதாகும்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Sunday, 21 December 2025

புள்ளும் சிலம்பினகாண்!

 புள்ளும் சிலம்பினகாண்!


நமது சனாதன மரபில் உறங்கும் இறைவனை எழுப்பும் பாடல்கள் எண்ணற்றவை. பகவான் உறங்குவானா என்ற கேள்வி எழலாம். நாம் பகவானை, நமது மனோபாவத்திற்கேற்ப அவனை பாவிக்கிறோம். ஆகையால், அவன் உறங்க முடியும், அவனை, துயிலெழுப்ப முடியும், அவனை குளிப்பாட்ட முடியும், அவனுக்கும் வித வித மாய் அலங்காரம் செய்து பார்க்க முடியும், என், அவனுக்கும் கலியாணம் கூட செய்து பார்க்க முடியும்.



திருப்பாவையிலும் பகவான் எழுப்பப்படுகிறான். அடுத்த பத்து பாடல்கள் தோழியரை எழுப்பும் விதமாக அமைகின்றன. ஆனால் அவன் எழுந்திருப்பதற்கு முன்னால் தோழியரை, நந்தகோபனை, யசோதையை, பலராமனை மற்றும் நப்பின்னையை ஆண்டாள் எழுப்புகிறாள். கிருஷ்ணானுபவத்தை தனியாகவன்றோ அனுபவிக்க வேண்டும்? தோழிகளோடு சேர்ந்து அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன? பக்தா சங்கம்ச்ச அன்யோன்யஹம்.. என்கிறது பாகவதம். பாகவதர்கள் அன்யோன்யமாய் ஒன்று கூடி சத்சங்கமாய் பகவானை அனுசரித்தல் வேண்டும்.


கண்ணன் பெருங்காற்று. பெருங்காற்றில் “காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும்” (பெரிய திருவந்தாதி- நம்மாழ்வார்). எனவே தனியாகச் செல்ல முடியாது. பெருந்துணை அவசியம். இன்னொருவிதமாகச் சொல்லப்போனால் ஆண்டாள் ‘இன்கனி தனியருந்தான்’ என்ற கோட்பாட்டில் பிடிவாதமாக இருப்பவர். கூடி இருந்து குளிர விரும்புபவர். அவர் எல்லோரையும் எழுப்புவதில் வியப்பில்லை.


இப்பாசுரத்தில் பஞ்சமூர்த்திகளும் பாடப்பட்டுள்ளனர்.
"வித்தினை" எனும்போது பரம்பொருளான வைகுண்டநாதனையும்,
"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த" எனும்போது பாற்கடல் வியூஹ மூர்த்தியையும்,
"சகடம் கலக்கழியக் காலோச்சி" எனும்போது விபவ அவதார கண்ணனையும்,
"புள்ளரையன் கோயில்" எனும்போது அர்ச்சவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும்,
"உள்ளத்துக் கொண்டு" எனும்போதுஅந்தர்யாமியான பரமனையும்


மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றுவது இயற்கை. ஆண்டாள் தன் தோழியிடம் ‘உலகம் விழித்துக் கொண்டு விட்டது, நீ உறங்காதே என்கிறார்’. ‘நீ கண்ணனையே நினைத்துக் கொண்டு உறங்காதிருக்கிறாய். உனக்கு இரவே கிடையாது. காலை வந்து விட்டது என்று எப்படி நம்புவது’ என்று தோழி கேட்க ஆண்டாள் யார் யாரெல்லாம் விழித்து கொண்டு விட்டார்கள் என்று சொல்கிறாராம்.


புள்ளரையன் கோவில என்றால் பக்ஷிராஜன், கருடனின் திருக்கோவில். புள் என்றால் கருடன் என்று பொருள் கொண்டு, கருடனுக்குத் அரையனான -தலைவனான- விஷ்ணுவின் கோவில் என்றும் பொருள் கொள்ளலாம். சங்கு என்றாலே வெள்ளை தானே? அது ஏன் வெள்ளை விளி சங்கு என்றால் விடிந்து விட்டதால் அதன் வெள்ளை நிறம் பளீரென்று தெரிகிறதாம். பூதனை உயிரை உறிஞ்சியும் வண்டியைக் காலால் உதைத்து முறித்த கண்ணன் தான் பாம்பின் மேல் அறிதுயில் கொண்டிருக்கும் வித்து. சகடத்தை, வண்டியை ஏன் கண்ணான் காலால் உதைக்கிறான்?


மூவாரியப்படி கூறுகிறது: முலை வரவு தாழ்த்ததென்று மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது. அதாவது தாய்ப்பால் வருவதற்கு தாமதமானதால் கால்களை உதைத்து கண்ணன் வீறிடுகிறானாம். அவன் ‘வித்து’. உழவர்கள் விதைக்கும் வித்து பயிராக மாறி பலன் தருவது போல, திரும்பத் திரும்ப அவதாரம் செய்து உலகிற்கு பலனளிக்கும் வித்து பகவான். இதைத்தான் துக்காராம் மஹராஜ் "ஆதி பீஜ ஏகளீம், பீஜ அங்குராலே ரூப வாடேலேம்.. என்கிறார்.


தானே தன்னை விதைத்துக் கொள்பவன். அவனை உள்ளத்தில் கொண்டவர்கள் முனிவர்களும் யோகிகளும். முனிவர்கள் இறைவன் பெயரை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். யோகிகள் இறைவனை நினைத்துக் கொண்டு பக்தர்களுக்கும் தேவையானவற்றை தயராது செய்து கொண்டிருப்பவர்கள். ராமனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த இலக்குவனையும் அவன் நினைவாகவே இருந்து ஆட்சி செய்துக் கொண்டிருந்த பரதனையும் போன்றவர்கள்.


அவர்கள் ஏன் மேல்ல எழுந்திருக்கிறார்கள்? பிள்ளைத்தாய்ச்சியாக இருப்பவர் குழந்தைக்கு ஊறு ஏற்பட்டு விடக் கூடாதே என்று மெல்ல எழுவது போல, இவர்கள் உள்ளத்தில் எம்பெருமான் இருப்பதால் அவன் ‘தளும்பாதபடி’ எழுந்திருப்பார்களாம். "மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்" என்பதற்கு இன்னொரு ரசமான விளக்கமிருக்கிறது! முனிவர்கள் யோகிகளின் உள்ளத்தில் பரமன் உறைந்திருப்பதால் ("உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்"), அவர்கள் தங்கள் தியானத்தைக் கலைக்கையில், பரமனின் யோக நித்திரை கலைந்து விடாத வண்ணம் கவனமாக "மெள்ள" எழுகின்றனர்!


அடியவரான முனிவர்களும் யோகிகளும், ஹரி மந்திரத்தை ஒரு தினசரி கடனாக, வாய் வார்த்தையாக உச்சரிக்கவில்லை, பரமனை "உள்ளத்துக் கொண்டு" ஆத்மார்த்தமாக அவன் பேர் பாடுகிறார்கள்! "மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்" என்பது சிறிய அளவில் ஆரம்பித்து பின்னர் பெரும் கோஷமாகும் crescendo-வை குறிக்கிறது! அப்பேரரவம் கேட்ட மாத்திரத்தில் எல்லா சங்கடங்களும் மறந்து போய், மனதில் மந்தகாசமான அமைதி ஏற்படுகிறது! (உள்ளம் குளிர்ந்தேலோர்) இங்கு பேரரவம் அமைதியைத் தருகிறது (oxymoron). பெருமானின் வெண்சங்கு 'பேரரவம்' செய்தாலும், அது செவிக்கு இனிமையான சப்தம் தான்.


ஆய்ப்பாடியில் முனிவர்களும் யோகிகளும் எங்கு வந்தார்கள்? கண்ணன் பிறந்த இடமானதால் அவர்கள் மாட்டுக் கொட்டில்களில் பாடு கிடக்கின்றார்களாம். கண்ணனின் தரிசனத்தை வேண்டி.


ரம்யமான அதிகாலைப் பொழுதில் பெருமாள் கோயில் கோபுர அழகும், மேலே பறக்கின்ற பறவைகள் சப்தமும், சங்கொலியும், அடியவர் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தபடி கோயிலுக்கு விரைவதும், பாற்கடலில் பள்ளி கொண்ட பரம்பொருள் வடிவும் என்று ஒரு அழகான காட்சி மனக்கண்முன் விரிகிறதல்லவா?


சக்கர வடிவில் அசுரன் வந்ததால் அது "கள்ளச்சகடம்" ஆயிற்று! 'கள்ளச் சகடம், கலக்கழிய, காலோச்சி' என்று அப்பாசுரவரியில் எதுகையில் ஒலிக்கும் 3 அழகான வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள்! பாற்கடல் ஆதிசேஷன் வெள்ளத்து அரவாம். அங்கு வித்தான பரம்பொருள் பள்ளி கொண்டிருப்பதை ரசமாக "துயிலமர்ந்து" என்கிறார் கோதை நாச்சியார். இங்கு "அமர்ந்து" என்பதற்கு ரட்சிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்! அதெப்படி உறக்கத்தில் இருந்தவாறு அடியவரைக் காப்பது? யோக நித்திரையில் இருக்கும் அம்மாயனுக்கு அது சாத்தியம், அவ்வளவு தான்!


இப்பாசுரத்தை தத்துவார்த்தமாக நோக்கும் பெரியோர், அடியாரின் சத்வ குணம் 'வெள்ளை விளிசங்காகவும்', அகங்காரமும் (கர்வம்) மமகாரமும் (உலகப்பற்று) 'பேய் முலையாகவும்', அவற்றால் விளையும் பாவங்கள் 'நஞ்சாகவும்', புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் உள்ளத்து உணர்வுகள் 'கள்ளச் சகடமாகவும்', சம்சார பந்தம் 'வெள்ளத்தரவாகவும்' உருவகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுவர். ஆகவே, நற்குணம் கொண்ட அடியார்கள் மற்றும் ஆச்சார்யனின் துணையோடு, அரி நாமத்தை விடாமல் ஓதுவதன் மூலம், ஆகாதவற்றை விலக்கும் வைராக்கியம் பெற்று (கலக்கழியக் காலோச்சி !) பரமனை பற்ற முடியும்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

Saturday, 20 December 2025

திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு…

 திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு…







“வாசித்தும், கேட்டும், வணங்கியும், வழிபட்டும், பூசித்தும் காலத்தை கழித்தேன்” என்று ஆழ்வார் உரைப்பது வெறும் வார்த்தையல்ல. அது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் உண்மை. நாம் அனைவரும் காலத்தின் போக்கில் முதிர்ச்சியடைவோம். முதுமை வந்தபோது கண்கள் மங்கும்; வாசிப்பது கடினமாகும். காதுகள் செவிடாகும்; கேட்டுணர்வது சிரமமாகும். சாஷ்டாங்கமாக பெருமாளைச் சேவிக்க உடலும், காலும், முட்டிகளும் ஒத்துழைக்காது. இதைத்தான் திருமங்கை ஆழ்வார் ஆழமான வேதனையுடன்,

“ஏய்ப்பென்னை வந்து நலியும் போது, அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்...; அப்போதைக்குப்போதே சொல்லி வைத்தேன்...…”

என்று உரைக்கிறார்.


அதேபோல், (நேற்றைய தினம் திருநக்ஷத்திரம் கொண்ட) குலசேகர ஆழ்வாரும், முகுந்தமாலையில்,

“பிராணப் பிரயாண சமயே கப-வாத-பித்தைஹி கண்டா அவரோதன விதௌ ஸ்மரணம் குதஸ்தே”

என்று சொல்லி, உயிர் பிரியும் அந்த இறுதி நொடியில் கூட எம்பெருமானை நினைக்க முடியுமா என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.



அதனால்தான் ஆண்டாள், “அந்த நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம்; இப்போதே வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, பெருமாளை வேண்டுங்கள்” என்கிறாள். குறைந்தபட்சமாக இதையாவது செய்யக்கூடிய பாக்கியத்தை பகவான் நமக்குத் தரவேண்டும் என்பதே அவளின் வேண்டுகோள். ஆனால் இந்த அளவுக்கான பக்தி நிலை கூட எல்லாப் பக்தர்களுக்கும் ஒரே மாதிரியாக வாய்ப்பதில்லை.



திருவாய்மொழியில் நம்மாழ்வார், “உணர்ந்து உணர்ந்து, உரைத்து உரைத்து, இறைஞ்சுமின்” என்று அறிவுறுத்துகிறார். ஆனால் ஆண்டாள், “வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க” என்று சொல்கிறாள். கவனித்தால், முதலில் ‘பாடு’ என்கிறாள்; அதன் பின் தான் ‘சிந்தி’ என்கிறாள். ஏன் இந்த வரிசை? ஆழ்வார் வாழ்க்கை முழுவதும் அனுபவத்தில் ஊறியவர். ஆழமாக யோசித்து, ஆராய்ந்து, அனுபவத்தை வடித்து, அதன் பின் பாடல் வடிவில் பெருமாளைச் சேவித்தவர். ஆனால் ஆண்டாள் ஒரு சிறுமி. குழந்தைகளுக்கும் இளையோருக்கும் இயல்பாக இருக்கும் தன்மை – யோசனையை விட முன் வரும் இயல்பான உந்துதல் (spontaneity). அவர்கள் முதலில் உரக்கப் பாடுவார்கள்; பின்னர் தான் மனம் அதைச் சிந்திக்கத் தொடங்கும். ஆண்டாளின் வழிமுறை அதுதான்.



இந்தப் பாசுரத்தில் வழக்கில் இப்போது அதிகம் பயன்படுத்தப்படாத சில சொற்கள் வருகின்றன. உதாரணமாக, ‘செப்பு’ என்ற சொல் இன்றைய தமிழில் அரிது; அது தெலுங்கு வழக்கில் அதிகம் காணப்படுகிறது. அதுபோலவே, வைணவர்கள் பொதுவாக “பெருமாளைச் சேவிக்கிறோம்” என்பார்களே தவிர, “தொழுகிறோம்” என்று சொல்லமாட்டார்கள். ‘தொழுகை’ என்பது இன்று பெரும்பாலும் இஸ்லாமிய வழக்கிலும், சில பாலக்காட்டு பிராமணர்களிடமும் மட்டுமே பயன்படுகிறது.



முதல், இரண்டாம், மூன்றாம் பாசுரங்களில், ஆண்டாள் பர, வ்யூஹ, விபவ ரூபங்களாகிய திருமான் நாராயணன், பாற்கடலுள் பள்ளியுள்ள பரமன், வாமனன் ஆகிய தெய்வ வடிவங்களைப் போற்றிப் பாடுகிறாள். நான்காம் பாசுரத்தில் விபவ அவதாரங்களைத் தொடர்ந்து, இப்பாசுரத்தில் கிருஷ்ணனுடைய விபவ அவதாரத்தை மிக விரிவாகவும் ஆழமாகவும் புகழ்கிறாள்.



இந்தப் பாடலின் உள்ளடக்கம் மிக உயர்ந்த தத்துவ விசாரத்தைக் கொண்டது. ஒரு இடைப்பெண், இன்னொரு இடைப்பெண்ணிடம் கேட்பதாக அமைந்த கேள்வி மிக ஆழமானது:

“நாம் எல்லாம் கர்மவசப்பட்டவர்கள். விதியும் கர்மமும் தீர்மானிக்கும் உலகத்தில் வாழ்கிறோம். அப்படியானால் நாம் எப்படி பரமனை அடைய முடியும்? நம் பிழைகள் நம்மைத் தடுத்து நிறுத்தாதா? இத்தகைய விரதங்களால் என்ன பயன்? இதுவரை செய்த கர்மங்களின் பலன் நம்மை விட்டுப் போகுமா? கர்ம வாசனை நம்மை எங்கோ இழுத்துச் செல்கிறதே; இதிலிருந்து விடுபட வழி உண்டா?”

இந்தக் கேள்விக்கே ஆண்டாள் பதில் சொல்கிறாள்.



புரந்தரதாசரும் தம் ஒரு கீர்த்தனையில், “நா மாடித கர்மா, பலவந்த வாதரே, நீ மாடுவதேனோ ரங்கா…” என்று இதே வேதனையை வெளிப்படுத்துகிறார்; அதன் விடையையும் கடைசி சரணத்தில் தருகிறார்.



மகரிஷி வஸிஷ்டர் நன்னாளைக் கணித்திருந்தும், மன்னன் தசரதன் ஆவலுடன் விரும்பியிருந்தும், ஸ்ரீ ராமன் சீதையுடன் பெருமாளை வணங்கியிருந்தும், பட்டாபிஷேகம் தடைபட்டது. இதை எடுத்துக்காட்டிய தோழி, “இப்படிப் பெரியோருக்கே இப்படியென்றால், நமக்கெப்படி நிச்சயம்?” என்று அஞ்சுகிறாள்.



அதற்கு ஆண்டாள் கூறுவது: “ராமனை அரசனாக்க விரும்பியவர்கள் ‘நாம் அவனை அரசனாக்குகிறோம்’ என்ற அகந்தையுடன் இருந்தனர். ஆனால் ஆய்ச்சியர்களான நாம் எந்த அகந்தையுமின்றி, கண்ணனுடன் இருப்பதே நமது ஆசை. எதற்கும் தகுதியற்றவர்கள் என்று நம்மையே எண்ணிக்கொண்டு, உலகியலான எந்தப் பலனையும் நாடாமல் இருப்பதே ‘அயோக்யானுசந்தானம்’.”



கர்ம, ஞான, பக்தி யோகங்களைச் சுய முயற்சியால் செய்து வசிஷ்டர், வாமதேவர் போல் முக்தி அடையக் கூடியவர்கள் நாம் அல்ல. வேதம் தெரியாது; வேதாந்தம் தெரியாது; சாஸ்திரம், சம்பிரதாயம் தெரியாது. ஆனால் நம்மால் செய்யக்கூடிய சில எளிய வழிகள் இருக்கின்றன.



பாசுர விசேஷம்: இந்தப் பாசுரத்தில் உபாயம், உபேயம், புருஷார்த்தம் – மூன்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.

உபாயம் – மலர் தூவி தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்

உபேயம் – மாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், ஆயர் குலத்து அணிவிளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்

புருஷார்த்தம் – போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகுதல்



இந்த வழியில் நடந்தால், பல ஜன்மங்களில் சேர்த்த பாவங்களும், இனி அறியாமல் சேரப்போகும் பாவங்களும் தீயில் போடப்பட்ட பஞ்சுபோல் முற்றிலும் அழியும் என ஆண்டாள் உறுதியாகச் சொல்கிறாள்.



“நாம் அசுத்தர்கள்; நமக்கு தகுதி இல்லை” என்ற எண்ணமே தேவையில்லை. உள்ள நிலையில், உள்ளபடியே அவனை அணுகலாம். அவன் வருவானா, நாம் போக வேண்டுமா என்ற குழப்பமும் வேண்டாம். உபேயமாக அவனை நினைக்கும் போது, அவனை அடைய வேண்டுமென்ற தணியாத ஆவலே மற்ற எல்லா பயங்களையும் கரைத்துவிடும்.



இந்தப் பாசுரம் முழுவதும் ப்ரபத்தி மார்க்கத்தின் சாரத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது. மனம், வாக்கு, காயம் என்ற த்ரிகரணங்களால் – கைகளால் மலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் அனுசந்தித்தால் – கர்ம கட்டு அவிழும். புண்யமும் பாவமும் இரண்டுமே மோக்ஷத்திற்கு தடையாக இருப்பதால், அவற்றை இரண்டையும் பகவதர்ப்பணமாக, க்ருஷ்ணார்ப்பணமாக மாற்ற வேண்டும் என்ற உபதேசமும் இதில் அடங்கியுள்ளது.



“மாயன்” லீலாவிபூதி நாதனையும், “மன்னு” பரத்துவ மூர்த்தியான வாசுதேவனையும், “வடமதுரை மைந்தன்” பரமபத நாதனையும் குறிப்பதாக உள்ளுரைப் பொருள் கூறப்படுகிறது. “யமுனைத் துறைவன்” என்பது வைகுண்டத்தில் பாயும் விராஜ நதிக்கரையில் எழுந்தருளியவனையும் குறிக்கும். இன்னொரு வகையில், யமுனை சம்சார பந்தத்தின் உருவகம்; அதை கடக்க உதவும் படகுத் தலைவனாக கண்ணன் துணையாக நிற்கிறான் என்பதே அதன் உள்ளர்த்தம்.



பகவத் ஞானம் வருவதற்கு முன் செய்த பிழைகளும், பக்தியான பின் அறியாமல் செய்த பாவங்களும், அவன் நாமத்தைச் செப்பினாலே தீயில் எரியும் பஞ்சுபோல் உடனடியாக அழிந்து விடும் என ஆண்டாள் அறிவுறுத்துகிறாள்.



“தூமலர்” என்பது வெளிப்புற மலரல்ல; அடியவரின் உள்ளத்திலிருந்து மலரும் எட்டு நற்குணங்களை உணர்த்துகிறது:

1.⁠ ⁠அகிம்சை

2.⁠ ⁠புலனடக்கம்

3.⁠ ⁠எல்லா உயிர்களிடத்திலும் நேசம்

4.⁠ ⁠பொறுமை, சமத்துவம்

5.⁠ ⁠ஞானம்

6.⁠ ⁠தியானம்

7.⁠ ⁠ஆன்மீக தவம்

8.⁠ ⁠சத்தியம்



எளிமையாகச் சொன்னால், பரமனை அடைய பெரிய அளவில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் அவசியமில்லை. மலர் தூவி வணங்கி, போற்றிப் பாடி, முடிந்த பொழுதெல்லாம் அவனைச் சிந்தித்துக் கொண்டிருப்பதே போதும். இந்த ப்ரபத்தி மார்க்கமே மோட்ச சித்தியை அளிக்கும் என்பது இப்பாசுரத்தின் சாரம்.



மோக்ஷம் அடைவதற்கான மூன்று வழிகள்:

1.⁠ ⁠கர்ம பாரதந்த்ரியம் – சுய முயற்சியால்

2.⁠ ⁠க்ருபா பாரதந்த்ரியம் – ப்ரபத்தி / சரணாகதி மூலம்

3.⁠ ⁠இச்சா பாரதந்த்ரியம் – எம்பெருமானின் சுய விருப்பத்தால்

திருவாய்ப்பாடியில் உள்ளவர்கள் மூன்றாம் வகை. நாம் அனைவரும் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள்.

பகவானே சரணம். ஆகையால், எம்பெருமானின் புகழைப் பாடுங்கள்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

அடியேன் தாசன்

Friday, 19 December 2025

திருப்பாவை பாசுரம் 4: ஆழி மழைக்கண்ணா...

 திருப்பாவை பாசுரம் 4: ஆழி மழைக்கண்ணா...


தமிழ் இலக்கியத்தின் அரிய மணிமகுடங்களில் ஒன்றாக விளங்குவது ஆண்டாளின் இப்பாடல். பதினொன்று முறை "ழ"கரம் இந்த பாசுரத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. கவிஞர்கள் பொதுவாக கண்களுக்கு எளிதில் புலப்படும் இயற்கை வடிவங்களையும் நிகழ்வுகளையும் உவமைகளாகக் கொண்டு, அவற்றின் வழியே இறையிருப்பின் பரிமாணங்களை நமக்கு உணர்த்த முயல்வார்கள். ஹிந்தி இலக்கிய மரபில் இவ்வகை அணுகுமுறை “சாயவாதம்” என அழைக்கப்படுகிறது. இயற்கையின் வாயிலாக இறைவனை அனுபவிப்பதே அதன் சாரம்.


“கார்மேகம் போன்றவன்”, “கடலினும் விரிந்த கண்கள்”, “பவளச் செவ்வாய்” போன்ற உவமைகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆனால் ஆண்டாள் இப்பாடலில் இதற்கு நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறாள். இங்கு மேகத்தின் நிறமே ஊழி முதல்வனின் உருவமாகிறது; மின்னலின் ஒளி, இறைவன் தன் கரத்தில் தாங்கியிருக்கும் ஆழியின் (சக்கரத்தின்) ஒளியாக மாறுகிறது; இடிமுழக்கம், அவன் இன்னொரு கையிலிருக்கும் வெண்சங்கமான பாஞ்சஜன்யத்தின் அதிர்வாக ஒலிக்கிறது; மழை பொழிவது, சார்ங்கம் என்னும் அவனது வில்லிலிருந்து புறப்படும் அம்புகளின் பெருக்காகக் காணப்படுகிறது.



முதல் மூன்று பாசுரங்களில் பரம், வியூகம், வைபவம் ஆகிய நிலைகளை நாம் கண்டோம். இப்பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்படையாகக் காட்டப்படுகிறது. பகவான் ஸர்வவ்யாபி; எங்கும் நிறைந்திருப்பவன். எம்பெருமான் இவ்வுலகை படைத்ததோடு நிற்காமல், அனைத்து ஜீவராசிகளின் உள்ளத்தின் உள்ளேயும் குடிகொண்டிருக்கிறான். சாந்தோக்கிய உபநிஷத்தில் சொல்லப்படும் “தத் தவம் அஸி” என்ற மகாவாக்கியம் உணர்த்தும் பரம்பொருள் நிலை இதுவே. இயற்கை எவ்வாறு எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறதோ, அதுபோலவே பகவானும் ஸர்வவ்யாபியாய் எங்கும் வியாபித்துள்ளான்.



முந்தைய பாசுரத்தில் “தீங்கின்றி மும்மாரி பெய்ய…” என்று ஆண்டாள் வேண்டினாள். இயற்கை நம்மை வாழ்விக்கவும் செய்யும்; அதே சமயம் வீழ்த்தவும் செய்யும். பகவான் ஆயுதபாணியாக இருப்பதன் உட்பொருளும் இதுவே. ஆகவே இங்கு “வாழ” என்ற சொல்லே முக்கியமானது. ஆண்டாள் இப்பாசுரத்தில் தெளிவாக வாழ்க்கைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பாடுகிறாள். மக்களை வாழ வைக்க மழை பெய்தால்தான் மகிழ்ச்சி ஏற்படும் என்று அவள் உரைக்கிறாள். உலகமெங்கும் மழை பொழிய வேண்டும் என்ற அவளது பிரார்த்தனை இதன் வெளிப்பாடு.



மாதவன், கேசவன், தாமோதரன், பத்மநாபன், நாராயணன், கோவிந்தன் போன்ற திருநாமங்கள் திருப்பாவையில் பல பாசுரங்களில் பாடப்பட்டிருந்தாலும், கிருஷ்ணாவதாரச் சம்பவங்கள் பல இடங்களில் சுட்டப்பட்டிருந்தாலும், இப்பாசுரத்தில்தான் கிருஷ்ணாவதாரப் பெயரான “கண்ணா” என்ற சொல்லை ஆண்டாள் நேரடியாக உச்சரிக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவள் இங்கு கோகுலக் கிருஷ்ணனை மட்டுமா “கண்ணா” என்று அழைக்கிறாள்? கோகுலத்தில் பகவான் கிருஷ்ணன் “கானா” (காந்ஹா) என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுவான். ஆனால் ஆண்டாளின் பாவனையில் அது மட்டும் அல்ல. இங்கு “மழைக்கண்ணா” என்று அவள் கூறுவது வருணதேவனை நோக்கியே எனலாம்.

அந்தர்யாமித்துவத்தை வெளிப்படுத்தும் விதத்தில், இயற்கையான மழையையும், வருணனையும், பகவானின் உருவமாக ஆண்டாள் கண்டிருப்பாள் போலும். அதனால் வருணனை “கண்ணா” என்று அவள் அழைத்திருக்கலாம். அல்லது, வாஞ்சையோடு அவனை கொஞ்சி, கெஞ்சி, மக்கள் வாழ மழை பெய்ய வேண்டும் என்று யாசித்திருக்கலாம்.



அதனால்தான் “கைகரவேல்” என்ற சொல்லையும் ஆண்டாள் பயன்படுத்துகிறாள். கொடுக்க வேண்டியதை தாராளமாகக் கொடு; குறைத்துக் கொடுத்து விடாதே என்ற அவளது வேண்டுகோள், பகவானின் வள்ளல்தன்மையையும் கருணைப் பெருக்கையும் எடுத்துக் காட்டுகிறது.



மழை தேவனே, நீ எவ்வாறு மழை பொழிய வேண்டும் என்பதை நாங்கள் ஆய்ச்சியர்கள் உனக்குச் சொல்கிறோம். நீ முதலில் சமுத்திரத்துக்குச் செல். கரையோரத்தில் கால் நனைப்பதுபோல் அல்ல; ஆழமாகச் செல். முழுமையாக மூழ்கி வேண்டிய அளவு நீரைப் பருகி, கறுத்த உடலுடன் எழுந்து வா. எந்தக் கறுப்பு என்றால், ஊழிக்காலம் முதலே இருக்கும் அந்தக் கார்மேக வண்ணனைப் போல. அவனின் திருமேனி போன்ற கருமை மட்டும் போதாது; அவனின் பராக்கிரமமும் வேண்டும். பத்மநாபனின் கையில் திகழும் இணையற்ற சக்கராயுதத்தைப் போல மின்ன வேண்டும். அதனால் உண்டாகும் இடிமுழக்கம் சாதாரணமாக இருக்கக் கூடாது; பாரதப் போரில் பகைவர்களை நடுங்கச் செய்த பாஞ்சஜன்யம் போல முழங்க வேண்டும். கோதண்ட ராமனின் தாழாத சாரங்கத்திலிருந்து இடைவிடாது பொழியும் சரமழைபோல், நீ பொழியும் மழையும் இடைவிடாது இருக்க வேண்டும்—என்று கோபியர்கள், ஆண்டாளின் தோழியர்கள், வேண்டிக்கொண்டனர்.



•⁠  ⁠மேகம் – ஆசாரியர்கள்

•⁠  ⁠கடல் – வேதம், உபநிஷத்துகள்

•⁠  ⁠மழை நீர் – எம்பெருமான்


“ஆழி மழைக் கண்ணா” எனும் தொடரின் உட்பொருள் இதுவே. மழை எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் பாரபட்சமின்றி பொழிவதுபோல், ஆசாரியர்களும் ஞான அர்த்தங்களை அனைவருக்கும் சமமாக வழங்குவார்கள். கடல் நீரை மேகம் பருகி, அதைத் தூய்மையான மழை நீராக மாற்றி நமக்குப் பொழிவது போலவே அவர்களின் செயல்பாடும் அமைகிறது.

“ஆழியுள் புக்கு” என்பது, வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம சாஸ்திரங்கள், தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தம் ஆகிய ஞானப் பெருங்கடலில் ஆழ்ந்து புகுதல்.

“முகந்து கொடு” என்பது, அவற்றின் தேர்ந்த பொருளையும் ஆழ்ந்த அர்த்தங்களையும் உணர்ந்து பெறுதல்.

“ஆர்த்தேறி” என்பது, கம்பீரமாகவும் உறுதியுடனும் எழுந்து, பெருமானின் பகவத் குணங்களை இடையறாது சிந்தித்தல்.

“ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து” என்பது, பரமனை எப்போதும் சிந்தையில் நிறுத்தியதால், ஆசாரியர்களும் அவனைப் போலவே கருநிறமும் தயாள குணமும் பெற்றவர்களாக விளங்குதல்.



எல்லையற்ற இறைவனின் குணக்கடலில் ஆழ்ந்து, அதனை அனுபவித்து, உள்ளத்தில் அடக்கிக் கொண்டு, உலகமெங்கும் சென்று பிறருக்கு வழங்குவோர் அறிஞர்களே மேகமாக உவமிக்கப்படுகிறார்கள். “திருமாலின் திருமேனி ஒக்கும்” பேற்றைப் பெற்று எங்கும் சஞ்சரிப்பவர்கள் அவர்கள். கடல் நீரை மேகம் பருகி, தூய்மையான மழை நீராக மாற்றி நமக்குப் பொழிவதுபோல, அவர்கள் ஞானத்தைச் சுத்தமாக்கி உலகிற்கு வழங்குகின்றனர்.



இவ்வாறு தேர்ந்த ஞானத்தை அருளவல்ல ஆசாரியர்களின் திருவடிகளை நாம் சரணடைவோம்.



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!

Thursday, 18 December 2025

திருப்பாவை 3 – ஓங்கி உலகளந்த…

 திருப்பாவை 3 – ஓங்கி உலகளந்த…



ஒரு கவிஞனின் படைப்பை வாசிக்கும் போது, ஒரு அடிப்படை உண்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவன் படைக்கும் உலகம், அவன் மனத்தில் உருவான உலகமே. அவன் வாழ்ந்த சமூகம், காலம், சூழல் ஆகியன அவன் பாடல்களில் நிழலாகப் பிரதிபலிக்கலாம்; ஆயினும், அவன் உள்ளத்தில் உருவான உலகமே முதன்மை பெறுகிறது. ஆண்டாள் தனக்காகப் பாடியவள் அல்ல; வையத்து வாழும் உயிர்களுக்காகவே அவள் பாடினாள். அவர்களுக்கெல்லாம் இறையருள் நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியோடு அவள் பாடல்கள் பிறந்தன.


ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் எவ்வளவு நுட்பமாக, அழகாக, திருப்பாவை பாசுரங்களின் கட்டமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது என்பதை, இப்பாசுரங்களை ஆழ்ந்து நோக்கினால் விளங்கும். இந்த சித்தாந்தம், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவற்றை மோக்ஷத்திற்கான நேரடி சாதனங்களாக ஏற்கவில்லை. ‘ப்ரபத்தி’ எனப்படும் முழு சரணாகதியையே மோக்ஷ சாதனமாகக் கூறுகிறது. அந்த சரணாகதியும், அர்ச்சிராதி மார்க்கம் வழியாகவே ப்ரஹ்மத்தை அடையச் செய்யும் என்று விளக்குகிறது.


வைஷ்ணவ மரபில், இறைவனின் நிலைகள் ஐந்தாகக் கருதப்படுகின்றன. அவை: பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை. இதனை நம்மாழ்வார்,

“விண்மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய்,

கடல்சேர்ப்பாய், மண்மீதுழல்வாய்,

இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்”

என்று அருமையாக எடுத்துரைக்கிறார்.


விண்மீது, பரமபதத்தில் நாராயணனாக இருப்பது ‘பரம்’.

கடல்சேர்ப்பாய் – பாற்கடலில் பள்ளிகொண்ட நிலை ‘வியூகம்’.

மண்மீது உழல்வாய் – அவதாரங்களை எடுத்து உலகில் உலாவுவது ‘விபவம்’.

மறைந்துறைவாய் – அனைத்திலும் அந்தர்யாமியாக இருப்பது ‘அந்தர்யாமி’.

மலைமேல் நிற்பாய் – அர்ச்சாவதாரமாக கோவில்களில் நிலைபெறுவது ‘அர்ச்சை’.


இதனை ராஜாஜி,

“கல்லினார்க்கு இறங்கி, கல்லிலே இறங்கி,

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா”

என்று பாடுகிறார். இங்கு ‘சிலை’ அல்ல, ‘நிலை’ என்பதே பொருத்தமான சொல்; ஏனெனில் பகவான் சிலையாக இல்லை, நிரந்தர நிலையாக நிற்கின்றான்.


திருப்பாவையின் முதல் பாசுரத்தில் ஆண்டாள், ‘நாராயணன்’ என்று பரமபத நாதனைச் சுட்டினாள். இரண்டாம் பாசுரத்தில், ‘பாற்கடலில் பையத்துயின்ற பரமன்’ என்று வியூக மூர்த்தியைப் பாடினாள். இம்மூன்றாம் பாசுரத்தில், ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று விபவ அவதார மூர்த்தியை எடுத்துரைக்கிறாள்.


உத்தமன் யார்?

பிறரைத் துன்புறுத்தி தன் வாழ்வை அமைத்துக் கொள்பவன் ‘அதமன்’.

தானும் பிறரும் வாழ வேண்டும் என்று எண்ணுபவன் ‘மத்தியமன்’.

தன்னை வருத்திக் கொண்டு பிறர் வாழ வேண்டும் என்று விரும்புபவன் ‘உத்தமன்’.


இங்கே ஆண்டாள் ‘உத்தமன்’ என்று வாமனனையா குறிப்பிடுகிறாள்? தீவிரமான கிருஷ்ண பக்தையான ஆண்டாள், வாமனனை ஏன் பாட வேண்டும்? ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று அவள் குறிப்பிட்டது பகவான் கிருஷ்ணரைத்தான் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.


வாமன அவதாரத்தில், மகாபலியிடம் மூன்றடி நிலம் யாசகமாகக் கேட்கப்பட்டது சூழ்ச்சியால்தான். மேலும், தானம் தடுக்க முயன்ற சுக்ராச்சாரியரின் கண், தர்ப்பைப் புல்லால் சேதப்படுத்தப்பட்டது. இவ்வாறு யாசகமாகப் பெற்ற அவதாரத்தை ஆண்டாள் ‘உத்தமன்’ என்று புகழ்ந்திருப்பாளா என்பது கேள்வியாகிறது.


அப்படியெனில், கிருஷ்ணன் எவ்வாறு ‘ஓங்கி உலகளந்தவன்’ ஆனான்? ‘ஓங்கி உலகளந்த’ என்பதற்கு, உடல் பெரிதாகி உலகத்தை அளந்தது என்ற ஒரே பொருள் இல்லை. பிரபஞ்சமெங்கும் வியாபித்து நிற்பதும், அதாவது விசுவரூபம் காட்டுவதும், உலகத்தை அளந்ததற்குச் சமமானதே.


குழந்தையாக மண்ணுண்டபோது, யசோதை அவன் வாயைத் திறக்கச் சொல்லி கண்ட காட்சி—அந்தச் சிறு வாயினுள் முழுப் பிரபஞ்சமும் தோன்றியது. கௌரவர்களின் சபையில், திருதராஷ்டிரனுக்கு விசுவரூபம் காட்டியது. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் செய்யும் முன், விசுவரூப தரிசனம் அளித்தது—இவையெல்லாம் கிருஷ்ணன் உலகத்தைத் தன்னுள் அளந்தவன் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆகவே, ஆண்டாள் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று கூறியது கிருஷ்ணரைத்தான் என்பதில் ஐயமில்லை.


எனினும், த்ரிவிக்ரம அவதாரத்தைக் குறிப்பதற்கும் ஒரு ஆழ்ந்த பொருள் உண்டு. அசுரனான மகாபலியை கொல்லாமல் வாழ்வளித்த அவதாரம் அது. நல்லவன்–கெட்டவன், ஆஸ்திகன்–நாஸ்திகன் என்ற வேறுபாடின்றி, எல்லோரின் தலையிலும் தன் திருவடியை வைத்த அவதாரம். ஆகவே, சர்வவ்யாபகத்துவம், சர்வஞ்ஞத்துவம் ஆகிய பண்புகள் வெளிப்பட, ஆண்டாள் அவனை ‘புருஷோத்தமன்’ என்று அழைத்திருக்கலாம்.


பகவான் நாமத்தை இடையறாது அனுசந்திப்பதால் விளையும் நன்மைகளை ஆண்டாள் இப்பாசுரத்தில் எடுத்துரைக்கிறாள். அந்த வகையில், இது ஒரு மங்களாசாசனப் பாசுரமாகும். பகவந்நாமம் சொல்லிக்கொண்டே நீராட வேண்டும் என்று அவள் வலியுறுத்துகிறாள். ‘திங்கள் மும்மாரி’ என்பது அளவோடு பெய்யும் மழை. மிகுதியான மழையும் தீங்கு; மழையின்மையும் தீங்கு. எவருக்கும் தொல்லை இல்லாத மாரி வேண்டும் என்பதற்காகவே, உத்தமனின் நாமத்தை ஆண்டாள் ஏந்துகிறாள்.


பகவான் ஓங்கி வளர்ந்ததுபோல், நெற்பயிர்கள் வயல் முழுவதும் செழித்து வளர்கின்றன. அந்த வயல்களில் ஓடும் நீரோடைகளில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. குவளை மலர்களின் தளிர்களில் வண்டுகள் துயில்கின்றன. இவ்வுருவகங்கள், பரமனின் அருளால் ப்ரபன்னர்களிடையே ஞானம் பயிர்போல் செழித்து வளர்வதை உணர்த்துகின்றன. ஆசார்யர்களை அண்டிய சிஷ்யர்கள், அந்த ஞான இன்பத்தில் துள்ளும் கயல்களைப்போல் களிப்படைகின்றனர். பாகவதர்களின் இதயக் கமலத்தில், அந்த பரமன் வண்டுபோல் துயில்கிறான்.


அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் குடம் குடமாக பாலைச் சொரிகின்றன. அவற்றின் மடி பெருத்திருப்பதால், இரு கைகளாலும் பற்றியே பாலை கறக்க முடிகிறது. தயக்கமின்றி பாலை கறக்க ஆய்பாடி இடையர்கள் தயாராக நிற்கிறார்கள்.


இங்கே பசுக்கள் ஒரு உருவகம்—பகவானுக்கே உரிய உருவகம். வள்ளன்மை அவன் இயல்பு. எவ்வளவு கொடுத்தாலும் குறையாத வள்ளல் அவன். கன்றுகளும் இடையர்களும் பாலை வாங்காவிடில் பசு தவிப்பதுபோல், ஜீவாத்மாக்கள் அவனை ஏற்றுக்கொள்ளாவிடில், பரமனும் தவிக்கிறான். ஜீவாத்மாக்கள் அவனை எவ்வளவு அனுபவிக்கிறார்களோ, அவ்வளவே அவனும் அவர்களால் இன்புறுகிறான் என்பது இதன் சாரம்.


‘வாங்கக் குடல் நிறைக்கும் வள்ளல் பெருபசுக்கள்’—கையில்பட்டவுடன் பாற்குடத்தை நிரப்பும் பசுக்கள். அவற்றின் வள்ளன்மைக்கு காரணம் என்ன? கண்ணனின் அருளும், அவன் குழலோசையும் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.


சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்  செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக

குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது

பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் 

கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்  கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே


பெரியாழ்வாரின் திருமொழியில், கண்ணன் குழலூதும் போது, மயங்கிய பசுக்களின் பால் பெருகும் காட்சி விரிவாகப் பாடப்படுகிறது. “புல்லால் வளருகிறவை என்றே, தீங்குழலோசை அசையிட்டிறே வளருவது” என்று வியாக்கியானம் உரைக்கிறது.


இவ்வாறு, ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்ற நாமத்தைச் சொல்லி, பாடி, நீராடி, நோன்பிருந்து, இத்தகைய செல்வங்கள் எந்நாளும் விட்டு நீங்காமல் கிடைக்க வேண்டும் என்று ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் மங்களாசாசனம் செய்கிறாள்.




Wednesday, 17 December 2025

ஆண்டாள்





ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் ஆன்மீகப் பயணத்தைத் திருப்பாவைப் பாசுரங்கள் சின்னமாக எடுத்துரைக்கின்றன.

பாசுரங்களில் வெளிப்படையாகத் தோன்றும் பொருளைத் தாண்டி, அவற்றின் ஆழத்தில் உள்ளார்ந்த அர்த்தம்—ஸ்வாபதேசம்—ஒளிந்திருக்கிறது என்பதை வியாக்கியானங்கள் வழியாக அறிகிறோம்.


பக்தி நோக்கில் அணுகாவிட்டாலும், திருப்பாவைப் பாசுரங்களில் காலத்தையும் சூழலையும் உணர்த்தும் நுண்ணிய சித்திரம் தெளிவாக வெளிப்படுகிறது. அந்தக் காலத்தில் நாம் வாழவில்லை என்ற ஏக்கம் கூட இப்பாடல்களை அனுபவிக்கும்போது மனத்தில் எழுகிறது.


ஆனால் மார்கழியின் கடைசி சில நாட்கள் ஒரு வித சோகத்தைத் தருகின்றன. திருப்பாவையும் அதன் வியாக்கியானங்களையும் அனுபவித்த முப்பது நாள் ஆன்மீகப் பயணம் நிறைவடையும் போது, மனத்தில் பெரும் வெறுமை தோன்றுவது ஒவ்வொரு மார்கழியிலும் தவிர்க்க முடியாத அனுபவமாகிறது. ஆண்டாளுடன் அந்தப் பயணத்தை மேற்கொண்டு பாருங்கள்—உணர்வீர்கள்.


வேதங்களைப் படிக்க இயலவில்லையா? கவலை வேண்டாம். கீதையைப் படியுங்கள். அதுவும் சாத்தியமில்லையா? ஒன்றும் வருத்தம் கொள்ள வேண்டாம். திருப்பாவையைப் படியுங்கள். அதுவே போதும். ஏனெனில், திருப்பாவை “பாதகங்களை நீக்கும், பரமனின் திருவடியை காட்டும், அனைத்துவேதங்களுக்கும் வித்தாக விளங்கும்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் திருப்பாவையை எவ்வாறு “அனைத்துவேதங்களுக்கும் வித்து” என்று கூற முடியும்?


அதற்கான விடை, “மார்கழித் திங்கள்” என்று தொடங்கும் முதல் பாசுரத்திலேயே உள்ளது.


“நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று ஆண்டாள் கூறுகிறாள்.


இங்கே “நாராயணன் பறை தருவான்” என்று இல்லாமல், “நாராயணனே” என்று ‘ஏ’காரத்துடன் வலியுறுத்தப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

அதன் பொருள்—நாராயணன் ஒருவனே மோட்சத்தை அளிப்பவன்.


இது, கீதையில் வரும் “மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்ற வாக்கியத்துடன் முழுமையாக ஒத்துப் போகிறது. கீதை வேதத்தின் சாரம். ஆகவே, கீதையில் கண்ணன் எடுத்துரைக்கும் “மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்ற உண்மையை, ஆண்டாள் “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று எளிமையாகவும் ஆழமாகவும் உணர்த்துகிறாள்.


இதையெல்லாம் ஏற்றுக்கொண்டாலும், “திருப்பாவை தெரியாதவர்களுக்கு என்ன?” என்ற கேள்வி எழலாம். அதற்கும் பதில் உள்ளது.


“ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு”


அதாவது, திருப்பாவையின் மகிமையை அறியாத மனிதரை இந்த உலகம் சுமப்பதே வீண் என்பதே அதன் கருத்து.


நாம் வீணானவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நாமே. ஆகையால், வாரீர்— கூடியிருந்து திருப்பாவையைப் பாடுவோம்.


ஆண்டாள் “பறை” என்ற சொல்லை பலமுறை பயன்படுத்துகிறார். வியாக்கியானக்காரர்கள் இதனை “வ்யாஜம்” என விளக்குகிறார்கள். அதாவது ஒரு காரணம், ஒரு முன்னோக்குப் போக்கு (pretense) என்று கொள்ளலாம். இறைவன் அருள் புரிவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கும் காரணம் எனவும் இதை பார்க்கலாம். ஆனால் தென்கலை மரபில் அதுபோன்ற காரணங்களே தேவையில்லை என்பதே கருத்து. நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டிருந்தாலே, இறைவன் தானாகவே பறையையும் அருளையும் அளிப்பான் என்று ஆண்டாள் சொல்லுவதாகவும் புரிந்து கொள்ளலாம். இதையே நம்மாழ்வார் அருளிச்செய்த “வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே” என்ற வாக்கியமும் உறுதிப்படுத்துகிறது.


அந்த வகையில் பார்க்கும்போது, பாவை நோன்பும் ஒரு வகையான வ்யாஜம்தான். With this, she gives lead to the second poem….


வையத்து வாழ்வீர்காள்....


ஆண்டாள் திருப்பாவை முழுவதும், வையத்தில் வாழ்பவர்கள் எல்லோரையும், கருத்தில் கொண்டுதான் பேசுகிறார். அவருடைய தந்தை  “தொண்டக்குலம்” (வைணவ அடியார்கள் கூட்டம்) என்று சொன்னால், இவர் ஒருபடி மேலே சென்று வையம் முழுவதையும் சேர்த்துக் கொள்கிறார்.


 எல்லோராலும் வேதம் ஓதமுடியாது, எல்லோராலும் நித்தியானுசந்தானம் (தினப்படிச் சொல்லும் பாடல்கள்) செய்ய முடியாது. ஆனால் எல்லோராலும் இறைவனைத் தொழ முடியும், காலையில் நீராட முடியும். சங்கீர்த்தனம் எனும் பகவானின் புகழ் பாட/ படிக்க முடியும். ஆந்தனையும் என்றால் முடிந்த அளவு. முடிந்த அளவு தானம் செய்ய முடியும்.


ஆண்டாள் ப்ரவிருத்தி, நிவிருத்தி என்பதைப் பற்றி சொல்கிறார் என்று வியாக்கியானக்காரர்கள் கருதுகிறார்கள். 


பிரவித்தி என்றால் பற்றிக் கொள்ள் வேண்டியவை. பரமன் அடி பாடுதல். காலையில் நீராடுதல். ஐயம், பிச்சையிடுதல். 


நிவிருத்தி என்றால் விட வேண்டியவை. “நெய், பாலுண்ணாமை. கண்மையிடாமை. பூச்சுடாமை. செய்யத்தகாதவை என்று கருதுப்படுபவற்றைச் செய்யாமை. தீய சொற்களைப் பேசாமை. “இன்னுரைதான். தீக்குறள் அன்று, கடுஞ்சொற்களைச் சொல்ல மாட்டோம்.” என்று ஆண்டாள் சொல்கிறார்.


ஏன் மையிடக் கூடாது? கண்ணனைக் காணாமல் கண்கள் அழகு பெறக் கூடாது. கண்ணனை காணாத கண்ணென்ன கண்ணே...ஆதலால், கண்ணனைக் காணாத கண்ணிற்கு அழகெதற்கு செய்ய வேண்டும்? சரி, கண்ட பின்? கண்ணனை கண்ட பின் அந்த கண்களுக்கு அழகெதற்கு செய்ய வேண்டும்? தேவையே இல்லையே....


ஏன் மலர் சூடக் கூடாது? இயற்கை தந்த வரம் மலர்கள், அன்றலர்ந்த மலர்கள். அதன் மீது முதலுரிமை பகவானுக்கே! அவனுக்கு சமர்பித்தபின் நாம் அணியலாம். அவன் காலடியில் கிடந்த மலரைத்தான் முதலில் சூடிக் கொள்ள வேண்டும். ஆண்டாள் மட்டும்தான் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. இங்கு அவர் தன்னைப் பற்றிப் பேசவில்லை. வையத்தில் வாழ்பவர்கள் அனைவரையும் பற்றிப் பேசுகிறார் என்பதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்


ஐய்யமிட்டு உண் என்றாள் தமிழ் மூதாட்டி.. ஐயம் என்றால் தகுதியுடைய பெரியவர்களுக்கு வேண்டும் காலத்தில் உதவுவது. பிச்சை என்றால் வேண்டி வருபவர்களுக்கு கொடுப்பது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மேலும் ‘ஆந்தனையும் கைகாட்டி’ என்பதற்கு பொருள் பெறுபவர்கள் மனநிறைவு பெறும் வரையில் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நாம் நிறையக் கொடுத்து விட்டோம் என்ற நிறைவு நமக்கு வந்து விடக்கூடாது என்பதும்தான்.


ஐயம் என்றால் பெருமானின் புகழ் பாடுதல் என்றும் பொருள். பிச்சை என்றால் பாகவதர்களின், அதாவது அடியார்களின் புகழ் பாடுதல். இரண்டையும் முடிந்த அளவிற்குச் செய்ய வேண்டும் என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள்


“ஆயர் குலத்தவர் என்று தங்களை எண்ணிக் கொண்டிருப்பவரை பாலும் நெய்யும் உண்ணாதே என்று சொல்வது, ஐயங்கார்களை புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் பக்கம் போகாதே என்று சொல்வதைப் போன்றது. அது நடக்கக் கூடியதா?”


இவையெல்லாம் நிச்சயம் செய்ய வேண்டுமா? கட்டாயம் என்று ஆண்டாள் சொல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன். முடிந்த அளவு – ஆந்தனையும் – என்று தான் சொல்கிறார். விரத நாட்களில் குழந்தைகள் விரதம் இருந்தாலும், பசி தாங்காதே என்று அம்மா ரகசியமாக அப்பாவுக்குத் தெரியாமல் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கொடுப்பதில்லையா? அதே போலத்தான் ஆண்டாள் சொல்பவையும். முடியாவிட்டால் இறைவன் அளிப்பான் என்பது உட்பொருள். 


ஆண்டாள் திருவடிகளே சரணம்

Friday, 5 December 2025

The IndiGo Crisis Is Not an “Accident.” It’s a Management Failure Unfolding in Public.

 

The IndiGo Crisis Is Not an “Accident.” It’s a Management Failure Unfolding in Public.


What travellers are experiencing today at Indian airports is not bad luck or a temporary snag.


The current IndiGo meltdown is the result of poor planning meeting tighter safety rules — and passengers are paying the price.



What Triggered the Chaos?

The immediate cause is the second phase of new Flight Duty Time Limitation (FDTL) rules that came into effect on November 1, 2025. Introduced by the DGCA, the norms mandate longer pilot rest periods and tighter overnight flying limits to reduce fatigue and enhance safety.




The problem? - IndiGo didn’t prepare. Casual or lethargic approach! 


Despite getting a two-year window to recruit and train pilots, crew associations allege the airline froze hiring and delayed scaling capacity. IndiGo’s business model relies on lean staffing and high aircraft utilisation. That margin for error vanished the moment the new rules went live. Lean does not mean everything has to be zero. If the Lean is not customer focussed, why one has to practice Lean? Lean does not mean Less Employees Are Needed - It is about customer centric approach done in an effective manner. 


The result: mass flight cancellations across the country. - Customers are thrown out in air. 


The Domino Effect: From Policy Change to Nationwide Disruption

Once the new norms kicked in, IndiGo didn’t have enough pilots to crew its own network. Cancellations cascaded. Delays mounted. Schedules collapsed.


Major airports — Delhi, Mumbai, Bengaluru, Chennai, Hyderabad — became pressure cookers.


At one point:

  • On-time performance fell to just 19.7%

  • Hundreds of flights were cancelled daily

  • Thousands of passengers were stranded



Social media turned into a real-time complaint board: angry videos, sleepless nights at terminals, unanswered phones, and airline counters overwhelmed.


Adding insult to injury:

  • Other airlines raised fares sharply

  • Alternate flights became unaffordable

  • Passenger welfare was clearly not the priority



Has the DGCA Been Silent? Not Quite — But Is It Enough?

The DGCA did act — but after damage was already done.


The regulator stepped in with:

  • Emergency meetings with IndiGo management

  • Directives to submit a cancellation mitigation plan

  • Orders to increase airport support staff

  • Demands for a pilot recruitment roadmap

  • Instructions to avoid unchecked fare increases

  • Mandatory fortnightly progress reports



IndiGo has now:

  • Announced flight cuts from December 8

  • Promised normal operations only by February 10, 2026

  • Requested a temporary relaxation of safety rules — a move strongly opposed by pilot unions

The regulator is reviewing the request.




This Isn’t Just an Operational Crisis — It’s a Trust Crisis

A new LocalCircles survey shows the frustration didn’t begin this month.
It’s been building for a year.


Survey Snapshot (15,938 responses across 301 districts):

  • 54% complained of poor on-time performance

  • 45% reported rude or indifferent staff behaviour

  • 42% flagged baggage issues

  • 32% criticised customer communication

  • 27% questioned aircraft condition

  • 23% were unhappy with food quality

  • Complaints about grievance handling shot up from 27% in 2024 to 45% in 2025


On-time performance fell:

  • 92.4% in 2021

  • 85.4% in 2023

  • 69.7% in 2024
    It has only partially recovered to the low 80s.



This wasn’t a sudden breakdown. This was slow erosion disguised by growth.



Monopoly Is Showing. So Is Arrogance.

There’s an old saying: If you don’t take care of your customers, someone else will.”


But what if “someone else” is also failing? With limited real competition, IndiGo appears to have grown complacent — confident that passengers have nowhere else to go. Market dominance without discipline breeds arrogance.



And when service rides on monopoly, customers suffer quietly — until they don’t.



Where Does the Government Stand?

This is where silence speaks loudly. When an airline becomes systemically critical, government inaction becomes complicityPassengers need regulation that protects them — not just airlines. If oversight becomes passive, travellers become collateral.



The Bigger Risk: The End of the “Buyer’s Market”

If competitors fail to capitalise on IndiGo’s stumble,
Indian aviation will slide into a seller’s market where:

  • Prices stay high

  • Choices stay few

  • Accountability disappears

  • Flyers lose bargaining power

That’s the real danger.


Final Word

This crisis didn’t come from turbulence in the air - It came from complacency on the ground.


IndiGo must fix more than schedules - It must rebuild trust.


And regulators must remember: when safety improves but service collapses, innovation has failed its purpose.


Because in aviation — excuses don’t fly.


கீழ்வானம் வெள்ளென்று!

கீழ்வானம் வெள்ளென்று!  காலை நேரத்தை ஆண்டாளைப் போல் பாடல்களால் மகிமைப்படுத்தியவர்கள் அரிது. திருப்பள்ளியெழுச்சியால் காலைச் சிறப்பித்த தொண்டரட...