Monday, 22 December 2025

கீசு கீசு என்று ....

 கீசு கீசு என்று ....




நகரங்களில் வாசிப்பவருக்கு கொஞ்சம் சிரமம் தான். காலையில் கீசுகீசென்று பறவைகள் பேசும் பேச்சரவம் கேட்பது துர்லபம். குருவிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் இந்நாட்களில் ஆனைச்சாத்தன் என்கிற கருங்குருவியை யார் அறிவர்? ஆனால் பல  ஆண்டுகளுக்கு முன்னால் திருவல்லிக்கேணியில் எனக்கு பறவைகளின் அரவத்தைக் கேட்ட ஞாபகமே இல்லை. அன்று காலையின் சப்தங்கள் - வேறு. கனத்த, கறுப்புப் போர்வையையும் துளைத்துக் கொண்டு திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த என்னை எழுப்பும் அவை. பெண்கள் கோலம் போடுவதற்காக வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளிக்கும் ஓசை, எதிர்த்த வீட்டின் முன்னால் பால்காரர் பசுமாட்டைக் கொண்டு வந்து பால் கறக்கும் ஓசை, சிறிது தொலைவில் உஷத்கால பஜனைக் பாடும் ஓசை, கோவிலில் போடப்பட்ட டேப்பில் MLV - இன் திருப்பாவை ஓசை  போன்றவை அவை. இவற்றின் கலவைதான் தூக்கத்தைப் போக்கியதாக நினைவு. ஆண்டாள் காலத்திலும் தூங்கியவர்கள் காதுகளின் விழும் ஓசைகள் எல்லாம் கலந்து விழுந்திருக்கும்.



ஆனைச்சாத்தன் பறவை = செம்போத்து ன்னு கிராமத்தில் சொல்லுவார்கள்; குருவியிலேயே குட்டிக் குருவி! அவை கலந்து பேசின பேச்சாம்! அப்படி என்ன பேசிச்சுங்க?


நய விளக்கமாச் சொல்வார்கள். 


"கீசு = க் ஏஷு? = யார் ஈசன்?" என்று ஒரு பறவை கேட்கிறது.


"கீசு = கிம் ஏஷு = அவன் தான் ஈசன்" என்று அதற்கு இன்னொரு பறவை பதில் சொல்கிறது!


இப்படித் தான் "கீசு கீசு" என்று கலந்து பேசினதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 



ஆனைச்சாத்தன் பறவையை பரத்வாஜப் பறவை என்றும் ஆங்கிலத்தில் Greater Coucal என்றும் சொல்வார்கள். சிவப்பு, ஊதா, கறுப்பு கலந்து மின்னுவது. சிலர் ஆனைச்சாத்தன் என்பது வலியன் பறவையைக் குறிக்கும் என்பார்கள். வாலில் இருக்கும் இறகு ஆங்கில v எழுத்தைத் தலைகீழாகக் கவிழ்த்தது போல இருக்கும் இரட்டைவால் குருவி. Drongo என்று நினைக்கிறேன். கரிய பறவை. இது அதிகாலையில், கீச் கீச் என்று குரல் கொடுக்கும் - சாதாரணமாக அல்ல - மற்ற விலங்குகளுக்கு ஒரு எச்சரிக்கையாய், (வன விலங்குகள், அதிகாலை வேளையில் தாம் வேட்டைக்கு போகும், அப்படி போகையில், இந்த குருவி, மற்ற ஜந்துக்களுக்கு எச்சரிக்கை விடும் ஓசையே இந்த ஓசை). 



பகவானை பற்றியே (பகவத் விஷயம்) சிந்தித்துக் கொண்டு மெய்மறந்து கிடப்பவரை தோழிகள் அவர் வீட்டு வாசலில் திரண்டு எழுப்ப முயல்வதாகச் சொல்கிறார்கள். பகவானை நினைத்து கொண்டிருப்பவர்கள் சத்சங்கத்தோடு இருப்பதையே விரும்புவார்கள். இதை அறிந்துதான் ஆண்டாள் பாகவதைகளைத் திரட்டிக் கொண்டு தோழியை எழுப்புகிறார். பாகவதைகள் கூட்டம் கூடியும் எழுந்து வராததால் பேய்ப்பெண்ணே என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறார்.



‘காசும் பிறப்பும்’ என்பது அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் என்பார்கள். அதாவது இறைவனின் சின்னங்களான சங்கும் சக்கரமும் அச்சிட்ட தாலி. மற்றது ‘அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்’ என்று பெரியாழ்வார் குறிப்பிட்ட ஆபரணமாக இருக்கலாம். கண்ணனுக்கு பிடித்த ஆபரணத்தை ஆய்ச்சியர்கள் அணிந்து கொண்டிருப்பது இயற்கைதானே. அவர்கள் தாலிகள் உரசி கலகல என்று சப்தமிட, மத்தினால் தயிர் கடையும் வேகத்தால் கட்டியிருந்த கூந்தல் அவிழ, தயிர் கடையும் போது எழும் முடை நாற்றத்தையும் மீறி பரிமளம் பரவுகிறதாம். கூடவே மத்தின் ஓசை. (அன்னமாயாவின் ஒரு க்ருதியில், இதுபோல் அலர்மேல்மங்கை வீணை வாசிக்கும் பொழுது எப்படி அவள் வளையல்கள் வீணையில் இடித்து ஓசை எழுப்பியது, எப்படி அவள் குங்குமம் வியர்வையில் கரைந்து, வாசம் வீசியது என்று பாடியுள்ளார்... வீனா வாயிஞ்சனே ..என்ற க்ரிதி அது.).



நாயகப் பெண் பிள்ளாய் என்பதன் பின்னால் எல்லோருக்கும் முன்னால் நிற்கக் கூடிய நீ இப்படிப் படுத்துக் கொண்டிருக்கிறாயே இது நியாயமா என்ற கேள்வி மறைந்திருக்கிறது.

கேசவன் என்ற சொல்லிற்கு கேசி என்ற குதிரை வடிவத்தில் வந்த அரக்கனை அழித்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். கேசம் அடர்ந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு ஆய்ச்சியர்களின் அவிழ்ந்த கூந்தலுக்கு இணையாக அடர்ந்த கேசம் உடையவன் என்று பொருள் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.



தேசம், தேசு – தேஜஸ் – பளீரென்று ஒளி வீசுவது. ‘திருமா மணிவண்ணன் தேசு’ என்பது பேயாழ்வார் வாக்கு. பேய்ப் பெண் தேசமுடையவளாக மாறி விட்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும். என்ன சொல்லியாவது அவளை எழுப்ப வேண்டும் என்ற உந்துதலை கவிதை மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறது.



"கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு" என்பது, பரமனுக்கும், திருமகளுக்கும் இடையே, (அடியவர்க்கு அருள் வழங்கும் நோக்கிலே) நடக்கும் சம்பாஷணையைக் குறிப்பதாகும்.


வாச நறுங்குழல் ஆய்ச்சியர்' --- 'வாச நறுங்குழல்' என்பது உபனிடதங்களையும் சாத்திரங்களையும் கற்றறிந்த தன்மையையும், 'ஆய்ச்சியர்' என்பது ஆச்சார்யர்களையும் குறிப்பில் உணர்த்துகிறது.


காசும் பிறப்பும்' என்ற ஆபரணங்கள் இங்கே வேதங்களை (அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதியை) குறிப்பில் உணர்த்துகின்றன.


மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ" --- மிகுந்த தேடலுக்குப் பின் ஏற்பட்ட ஞானத்தின் பயனால் விளைந்த, "நாராயணனே பரதேவதா" என்ற தெளிதலை, ஆச்சார்யர்கள் உரக்கக் கூறுகின்றனர்!


ஆண்டாள் திருவடிகளே சரணம். 

No comments:

Post a Comment

கீசு கீசு என்று ....

  கீசு கீசு என்று .... நகரங்களில் வாசிப்பவருக்கு கொஞ்சம் சிரமம் தான். காலையில் கீசுகீசென்று பறவைகள் பேசும் பேச்சரவம் கேட்பது துர்லபம். குருவ...