Monday, 22 December 2025

கீசு கீசு என்று ....

 கீசு கீசு என்று ....




நகர வாழ்வில் இருப்பவர்களுக்கு இது சற்றே கடினமான அனுபவம்தான். விடியற்காலையில் “கீசு கீசு” என்று பறவைகள் பரஸ்பரம் உரையாடும் இனிய ஓசைகளை கேட்பது இன்று அரிதாகிவிட்டது. குருவிகளே காணாமற்போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், “ஆனைச்சாத்தன்” எனப்படும் கருங்குருவியை எத்தனை பேர் அறிவர்? ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, திருவல்லிக்கேணியில் நான் வாழ்ந்த காலத்தில், பறவைகளின் அரவம் என்கிற நினைவே இல்லை. அன்றைய காலையின் ஒலிகள் முற்றிலும் வேறுபட்டவை.


கனமான கரும்போர்வையைத் துளைத்துக்கொண்டு, திண்ணையில் படுத்திருந்த என்னை எழுப்பிய ஒலிகள் அவை. பெண்கள் கோலம் போடுவதற்காக வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளிக்கும் சப்தம், எதிர் வீட்டின் முன் பால்காரர் பசுமாட்டைக் கொண்டு வந்து பால் கறக்கும் ஓசை, சிறிது தூரத்தில் உஷத்கால பஜனை பாடப்படும் ஒலி, கோவிலில் ஒலிபெருக்கியில் ஒலித்த எம்.எல். வசந்தகுமாரியின் திருப்பாவை – இவை அனைத்தும் கலந்த அந்த ஒலிச்சூழலே தூக்கத்தை விரட்டியதாக நினைவில் நிற்கிறது. ஆண்டாள் காலத்திலும், தூங்கிக் கிடந்தவர்களின் காதுகளில் இதுபோன்ற பல ஒலிகள் கலந்து விழுந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.


ஆனைச்சாத்தன் பறவையை கிராமங்களில் “செம்போத்து” என்றும் அழைப்பார்கள்; குருவியிலேயே குட்டியான குருவி அது. அவை “கலந்து பேசின பேச்சு” என்றால், அது என்ன உரையாடல்?


பண்டையோர் இதற்கு நயமான விளக்கமொன்றைக் கூறுவர்.
ஒரு பறவை, “கீசு = க் ஏஷு? – யார் ஈசன்?” என்று கேட்கிறதாம்.
அதற்கு இன்னொரு பறவை, “கீசு = கிம் ஏஷு – அவனே ஈசன்” என்று பதில் சொல்கிறதாம்.

இப்படித்தான் “கீசு கீசு” என்று அவை கலந்துரையாடியதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.


ஆனைச்சாத்தன் பறவையை பரத்வாஜப் பறவை என்றும், ஆங்கிலத்தில் Greater Coucal என்றும் கூறுவர். சிவப்பு, ஊதா, கருப்பு நிறங்கள் கலந்து மின்னும் பறவை அது. சிலர் “ஆனைச்சாத்தன்” என்பது வலிமைமிக்க பறவையைக் குறிக்கும் என்பார்கள். வாலில் இருக்கும் இறகுகள் ஆங்கில ‘V’ எழுத்தைத் தலைகீழாகப் புரட்டியது போல் இரட்டைவால் தோற்றமுடையது. மற்றொரு வகை கரிய பறவையான Drongo என்றும் நினைக்கலாம். இது அதிகாலையில் “கீச் கீச்” என்று கூர்மையான குரல் எழுப்பும். அந்தக் குரல் சாதாரணமல்ல; அது மற்ற உயிர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை. அதிகாலை வேளையில் வனவிலங்குகள் வேட்டைக்கு நகரும் போது, அவற்றின் வரவை உணர்த்தி, மற்ற ஜீவராசிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஓசையே அது.


இந்தப் பாசுரத்தில், பகவானையே சிந்தித்துக் கொண்டு மெய்மறந்து கிடப்பவளை, அவள் தோழிகள் அவள் இல்லத்தின் வாசலில் திரண்டு வந்து எழுப்ப முயல்வதாக வர்ணிக்கப்படுகிறது. பகவத் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்கள் எப்போதும் சத்சங்கத்தையே நாடுவார்கள். இதை அறிந்தே ஆண்டாள், பாகவதர்களை ஒன்றுகூடச் செய்து தோழியை எழுப்புகிறாள். ஆனாலும் அவள் எழுந்து வராததால், “பேய்ப்பெண்ணே” என்று செல்லமாகக் கடிந்துகொள்கிறாள்.


“காசும் பிறப்பும்” என்பது சங்கச் சின்னங்களான சங்கு, சக்கரம் பொறித்த தாலிகளைக் குறிக்கும் என்று சிலர் கூறுவர். மற்றொரு விளக்கமாக, பெரியாழ்வார் குறிப்பிட்ட “அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன்” என்ற ஆபரணத்தையும் நினைவூட்டலாம். கண்ணனுக்கு உகந்த ஆபரணங்களை ஆய்ச்சியர்கள் அணிவது இயல்பே. அவர்கள் தாலிகள் உரசி கலகல என்று ஒலிக்க, தயிர் கடையும் வேகத்தில் கூந்தல் அவிழ, தயிரின் மணத்தையும் மீறி பரிமளம் பரவுகிறது. அதனுடன் மத்தினின் ஒலியும் கலந்து எழுகிறது. இதுபோன்ற காட்சியை அன்னமாச்சாரியார் தமது ஒரு கீர்த்தனையில், அலர்மேல் மங்கை வீணை வாசிக்கும் போது அவளுடைய வளையல்கள் வீணையில் இடித்து ஒலித்ததும், குங்குமம் வியர்வையில் கரைந்து மணம் பரவியதையும் அழகாக வர்ணித்துள்ளார்.


“நாயகப் பெண் பிள்ளாய்” என்ற அழைப்பின் பின்னால், “எல்லோருக்கும் முன்னணியில் நிற்க வேண்டிய நீ, இவ்வாறு படுத்துக் கிடப்பது நியாயமா?” என்ற மறைமுகக் கேள்வி அடங்கியுள்ளது.


“கேசவன்” என்ற சொல்லுக்கு, கேசி என்ற குதிரை வடிவ அரக்கனை அழித்தவன் என்ற பொருளும் உண்டு; அடர்ந்த கூந்தல் உடையவன் என்ற பொருளும் உண்டு. இங்கு, ஆய்ச்சியர்களின் அவிழ்ந்த கூந்தலுக்கு ஒப்பாக அடர்ந்த கேசம் உடையவன் என்று பொருள் கொள்ளுதலே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.


“தேசம், தேசு, தேஜஸ்” என்பவை அனைத்தும் பளிச்சென்று ஒளிவீசுதலைக் குறிக்கும். “திருமா மணிவண்ணன் தேசு” என்பது பேயாழ்வார் வாக்கு. இங்கே, “பேய்ப்பெண்” தேசமுடையவளாக – தெய்வீக ஒளி கொண்டவளாக – மாறியிருப்பதை கவனிக்க வேண்டும். எப்படியாவது அவளை எழுப்ப வேண்டும் என்ற உந்துதலைக் கவிதை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.


“கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு” என்பது, பரமனுக்கும் திருமகளுக்கும் இடையே, அடியவர்களுக்கு அருள் வழங்கும் நோக்கில் நடைபெறும் தெய்வீக சம்பாஷணையைச் சுட்டிக்காட்டுகிறது.


“வாச நறுங்குழல் ஆய்ச்சியர்” என்ற சொல்லில், “வாச நறுங்குழல்” என்பது உபநிடதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றறிந்த அறிவைப் புலப்படுத்துகிறது; “ஆய்ச்சியர்” என்பது ஆச்சார்யர்களைக் குறிக்கும் உள்பொருளைக் கொண்டது.


“காசும் பிறப்பும்” என்ற ஆபரணங்கள், வேதங்களையும், அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதிகளையும் குறிக்கின்றன.


“மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ” என்பது, ஆழ்ந்த தேடலின் பின் மலர்ந்த ஞானத்தின் பயனாக, “நாராயணனே பரதேவதா” என்ற தெளிவை ஆச்சார்யர்கள் உரக்க அறிவிக்கும் நிலையைக் குறிப்பதாகும்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment

The “Mother of All Deals”: Why the India–EU FTA is Sending Shockwaves Through Global Trade

The “Mother of All Deals”: Why the India–EU FTA is Sending Shockwaves Through Global Trade In late January 2026, global trade watchers witne...