Sunday, 21 December 2025

புள்ளும் சிலம்பினகாண்!

 புள்ளும் சிலம்பினகாண்!


நமது சனாதன மரபில் உறங்கும் இறைவனை எழுப்பும் பாடல்கள் எண்ணற்றவை. பகவான் உறங்குவானா என்ற கேள்வி எழலாம். நாம் பகவானை, நமது மனோபாவத்திற்கேற்ப அவனை பாவிக்கிறோம். ஆகையால், அவன் உறங்க முடியும், அவனை, துயிலெழுப்ப முடியும், அவனை குளிப்பாட்ட முடியும், அவனுக்கும் வித வித மாய் அலங்காரம் செய்து பார்க்க முடியும், என், அவனுக்கும் கலியாணம் கூட செய்து பார்க்க முடியும்.



திருப்பாவையிலும் பகவான் எழுப்பப்படுகிறான். அடுத்த பத்து பாடல்கள் தோழியரை எழுப்பும் விதமாக அமைகின்றன. ஆனால் அவன் எழுந்திருப்பதற்கு முன்னால் தோழியரை, நந்தகோபனை, யசோதையை, பலராமனை மற்றும் நப்பின்னையை ஆண்டாள் எழுப்புகிறாள். கிருஷ்ணானுபவத்தை தனியாகவன்றோ அனுபவிக்க வேண்டும்? தோழிகளோடு சேர்ந்து அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன? பக்தா சங்கம்ச்ச அன்யோன்யஹம்.. என்கிறது பாகவதம். பாகவதர்கள் அன்யோன்யமாய் ஒன்று கூடி சத்சங்கமாய் பகவானை அனுசரித்தல் வேண்டும்.


கண்ணன் பெருங்காற்று. பெருங்காற்றில் “காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும்” (பெரிய திருவந்தாதி- நம்மாழ்வார்). எனவே தனியாகச் செல்ல முடியாது. பெருந்துணை அவசியம். இன்னொருவிதமாகச் சொல்லப்போனால் ஆண்டாள் ‘இன்கனி தனியருந்தான்’ என்ற கோட்பாட்டில் பிடிவாதமாக இருப்பவர். கூடி இருந்து குளிர விரும்புபவர். அவர் எல்லோரையும் எழுப்புவதில் வியப்பில்லை.


இப்பாசுரத்தில் பஞ்சமூர்த்திகளும் பாடப்பட்டுள்ளனர்.
"வித்தினை" எனும்போது பரம்பொருளான வைகுண்டநாதனையும்,
"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த" எனும்போது பாற்கடல் வியூஹ மூர்த்தியையும்,
"சகடம் கலக்கழியக் காலோச்சி" எனும்போது விபவ அவதார கண்ணனையும்,
"புள்ளரையன் கோயில்" எனும்போது அர்ச்சவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும்,
"உள்ளத்துக் கொண்டு" எனும்போதுஅந்தர்யாமியான பரமனையும்


மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றுவது இயற்கை. ஆண்டாள் தன் தோழியிடம் ‘உலகம் விழித்துக் கொண்டு விட்டது, நீ உறங்காதே என்கிறார்’. ‘நீ கண்ணனையே நினைத்துக் கொண்டு உறங்காதிருக்கிறாய். உனக்கு இரவே கிடையாது. காலை வந்து விட்டது என்று எப்படி நம்புவது’ என்று தோழி கேட்க ஆண்டாள் யார் யாரெல்லாம் விழித்து கொண்டு விட்டார்கள் என்று சொல்கிறாராம்.


புள்ளரையன் கோவில என்றால் பக்ஷிராஜன், கருடனின் திருக்கோவில். புள் என்றால் கருடன் என்று பொருள் கொண்டு, கருடனுக்குத் அரையனான -தலைவனான- விஷ்ணுவின் கோவில் என்றும் பொருள் கொள்ளலாம். சங்கு என்றாலே வெள்ளை தானே? அது ஏன் வெள்ளை விளி சங்கு என்றால் விடிந்து விட்டதால் அதன் வெள்ளை நிறம் பளீரென்று தெரிகிறதாம். பூதனை உயிரை உறிஞ்சியும் வண்டியைக் காலால் உதைத்து முறித்த கண்ணன் தான் பாம்பின் மேல் அறிதுயில் கொண்டிருக்கும் வித்து. சகடத்தை, வண்டியை ஏன் கண்ணான் காலால் உதைக்கிறான்?


மூவாரியப்படி கூறுகிறது: முலை வரவு தாழ்த்ததென்று மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது. அதாவது தாய்ப்பால் வருவதற்கு தாமதமானதால் கால்களை உதைத்து கண்ணன் வீறிடுகிறானாம். அவன் ‘வித்து’. உழவர்கள் விதைக்கும் வித்து பயிராக மாறி பலன் தருவது போல, திரும்பத் திரும்ப அவதாரம் செய்து உலகிற்கு பலனளிக்கும் வித்து பகவான். இதைத்தான் துக்காராம் மஹராஜ் "ஆதி பீஜ ஏகளீம், பீஜ அங்குராலே ரூப வாடேலேம்.. என்கிறார்.


தானே தன்னை விதைத்துக் கொள்பவன். அவனை உள்ளத்தில் கொண்டவர்கள் முனிவர்களும் யோகிகளும். முனிவர்கள் இறைவன் பெயரை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். யோகிகள் இறைவனை நினைத்துக் கொண்டு பக்தர்களுக்கும் தேவையானவற்றை தயராது செய்து கொண்டிருப்பவர்கள். ராமனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த இலக்குவனையும் அவன் நினைவாகவே இருந்து ஆட்சி செய்துக் கொண்டிருந்த பரதனையும் போன்றவர்கள்.


அவர்கள் ஏன் மேல்ல எழுந்திருக்கிறார்கள்? பிள்ளைத்தாய்ச்சியாக இருப்பவர் குழந்தைக்கு ஊறு ஏற்பட்டு விடக் கூடாதே என்று மெல்ல எழுவது போல, இவர்கள் உள்ளத்தில் எம்பெருமான் இருப்பதால் அவன் ‘தளும்பாதபடி’ எழுந்திருப்பார்களாம். "மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்" என்பதற்கு இன்னொரு ரசமான விளக்கமிருக்கிறது! முனிவர்கள் யோகிகளின் உள்ளத்தில் பரமன் உறைந்திருப்பதால் ("உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்"), அவர்கள் தங்கள் தியானத்தைக் கலைக்கையில், பரமனின் யோக நித்திரை கலைந்து விடாத வண்ணம் கவனமாக "மெள்ள" எழுகின்றனர்!


அடியவரான முனிவர்களும் யோகிகளும், ஹரி மந்திரத்தை ஒரு தினசரி கடனாக, வாய் வார்த்தையாக உச்சரிக்கவில்லை, பரமனை "உள்ளத்துக் கொண்டு" ஆத்மார்த்தமாக அவன் பேர் பாடுகிறார்கள்! "மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்" என்பது சிறிய அளவில் ஆரம்பித்து பின்னர் பெரும் கோஷமாகும் crescendo-வை குறிக்கிறது! அப்பேரரவம் கேட்ட மாத்திரத்தில் எல்லா சங்கடங்களும் மறந்து போய், மனதில் மந்தகாசமான அமைதி ஏற்படுகிறது! (உள்ளம் குளிர்ந்தேலோர்) இங்கு பேரரவம் அமைதியைத் தருகிறது (oxymoron). பெருமானின் வெண்சங்கு 'பேரரவம்' செய்தாலும், அது செவிக்கு இனிமையான சப்தம் தான்.


ஆய்ப்பாடியில் முனிவர்களும் யோகிகளும் எங்கு வந்தார்கள்? கண்ணன் பிறந்த இடமானதால் அவர்கள் மாட்டுக் கொட்டில்களில் பாடு கிடக்கின்றார்களாம். கண்ணனின் தரிசனத்தை வேண்டி.


ரம்யமான அதிகாலைப் பொழுதில் பெருமாள் கோயில் கோபுர அழகும், மேலே பறக்கின்ற பறவைகள் சப்தமும், சங்கொலியும், அடியவர் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தபடி கோயிலுக்கு விரைவதும், பாற்கடலில் பள்ளி கொண்ட பரம்பொருள் வடிவும் என்று ஒரு அழகான காட்சி மனக்கண்முன் விரிகிறதல்லவா?


சக்கர வடிவில் அசுரன் வந்ததால் அது "கள்ளச்சகடம்" ஆயிற்று! 'கள்ளச் சகடம், கலக்கழிய, காலோச்சி' என்று அப்பாசுரவரியில் எதுகையில் ஒலிக்கும் 3 அழகான வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள்! பாற்கடல் ஆதிசேஷன் வெள்ளத்து அரவாம். அங்கு வித்தான பரம்பொருள் பள்ளி கொண்டிருப்பதை ரசமாக "துயிலமர்ந்து" என்கிறார் கோதை நாச்சியார். இங்கு "அமர்ந்து" என்பதற்கு ரட்சிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்! அதெப்படி உறக்கத்தில் இருந்தவாறு அடியவரைக் காப்பது? யோக நித்திரையில் இருக்கும் அம்மாயனுக்கு அது சாத்தியம், அவ்வளவு தான்!


இப்பாசுரத்தை தத்துவார்த்தமாக நோக்கும் பெரியோர், அடியாரின் சத்வ குணம் 'வெள்ளை விளிசங்காகவும்', அகங்காரமும் (கர்வம்) மமகாரமும் (உலகப்பற்று) 'பேய் முலையாகவும்', அவற்றால் விளையும் பாவங்கள் 'நஞ்சாகவும்', புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் உள்ளத்து உணர்வுகள் 'கள்ளச் சகடமாகவும்', சம்சார பந்தம் 'வெள்ளத்தரவாகவும்' உருவகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுவர். ஆகவே, நற்குணம் கொண்ட அடியார்கள் மற்றும் ஆச்சார்யனின் துணையோடு, அரி நாமத்தை விடாமல் ஓதுவதன் மூலம், ஆகாதவற்றை விலக்கும் வைராக்கியம் பெற்று (கலக்கழியக் காலோச்சி !) பரமனை பற்ற முடியும்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment

புள்ளும் சிலம்பினகாண்!

 புள்ளும் சிலம்பினகாண்! நமது சனாதன மரபில் உறங்கும் இறைவனை எழுப்பும் பாடல்கள் எண்ணற்றவை. பகவான் உறங்குவானா என்ற கேள்வி எழலாம். நாம் பகவானை, ந...