Wednesday, 24 December 2025

தூமணி மாடத்து!

 தூமணி மாடத்து!





உறக்கத்திலிருந்து எழுப்புதல், உறக்கத்திலிருந்து எழுதல் – இவை பற்றிய கவிதைகள் உலக இலக்கியத்தில் எண்ணற்றவை. மனித வாழ்வில் இன்பம்–துன்பம், பிறப்பு–மரணம் மாறிமாறி நிகழ்ந்தாலும், “இந்தக் கணமே இனிமையானது; இதை உணர்ந்து பேச வேண்டும்; வாழ்க்கையின் எளிய செயல்களே உயிரையும் உற்சாகத்தையும் தருகின்றன” என்று தொடர்ந்து நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பவள் ஆண்டாள்.


தூங்குபவர்களை எழுப்புவது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வே. ஆனால் அதன் முறைகள் விதவிதமாக இருக்கின்றன. உள்ளே தாளிட்டு உறங்கியவரை எழுப்ப முடியாமல் கதவை உடைத்து எழுப்பிய நிகழ்வுகளையும், மெதுவாக அழைத்தாலே அலறிக்கொண்டு எழுபவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆண்டாளின் பாசுரங்களில் எழுப்பப்படுபவர்கள் உண்மையில் தூங்கிக்கொண்டிருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. கண்ணனை நாள் முழுதும் நினைத்துக்கொண்டிருப்பவர்கள் எவ்வாறு உறங்க முடியும்? இருப்பினும், “எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவனான இறைவன் எங்கேயாவது விலகிவிடுவானோ” என்ற அச்சம் பக்தர்களுக்கு இயல்பானதே. அந்த அச்சத்தைப் போக்குவதற்கே ஆண்டாளின் பாடல்கள் முயல்கின்றன.


இந்தப் பாசுரத்தில், ஆண்டாள் ஆத்மஸ்வரூப ஞானம் நிறைந்த ஒரு கோபிகையை எழுப்புகிறாள். அந்தக் கோபிகை, சீதாதேவியைப் போலவே, ஜீவாத்மாவெனும் தமது சொத்தைத் தேடி வந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஸ்வாமியான பரமாத்மனின் கடமை என்ற உறுதியான நம்பிக்கையுடன் விளங்குகிறாள். "எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் சொல்லினார்ச்சுடுவேன், அது தூயவன் வில்லனுக்கு மாசென்று வீசினேன்..." என்றும், ஜானகி என்று ஒரு தழல் நடுவண் தங்களால், அனகன் கையெனும் அளவில் ஊதையால், கனகம் நீடு இலங்கை நின்றுருக கண்டியால்..." என்ற கம்பனின் வரிகள் மூலம் சீதாதேவி, என்னால் இங்கிருந்து மீண்டு வர முடியும் ஆனாலும் ஸ்வாமியின் கடமை என்னை மீட்பது ஆகையால் காத்திருப்பேன் என்று சொன்ன மனோபாவமே இந்த சகியிடம் காணப்படுகிறது...


வெளியில் இருந்த கோபிகைகள், இலக்குவனைப் போல இடைவிடாத கைங்கர்யமே தம் ஸ்வரூபம் எனக் கருதி சேஷத்வ நிஷ்டையில் நிலைத்திருந்தனர். ஆனால் உள்ளே இருந்த இக்கோபிகை, பரமாத்மனுக்குத் தன்னை முழுமையாக ஒப்புவித்தல் என்பதே உத்தம நிலை என எண்ணி, பரதனைப் போல பரதந்திரிய நிஷ்டையில் திளைத்திருந்தாள். வெளியில் இருந்தவர்கள் புருஷார்த்தத்தின் இனிமையால் ஈர்க்கப்பட்டனர்; உள்ளே இருந்த கோபிகை, அந்தப் புருஷார்த்தத்தை அடையும் உபாயத்தின் மஹிமையிலேயே முழுமையாக மூழ்கியிருந்தாள். வெளியில் இருந்தவர்கள் எம்பெருமானை உடனடியாக அடைய வேண்டிய ஆவலுடன் இருந்தனர்; ஆனால் உள்ளே இருந்த கோபிகை, கபீரின், "மாலி சீன்சை சௌ கடா, ருது ஆயி பல் ஹோய்.. (ஆயிரும் குடம் நீரிறத்தாலும், நேரம் வந்தால் மட்டும் பூ பூக்கும்)" என்ற வரிகளுக்கேற்ப, காலம் கைகூடும் பொழுது நிச்சயமாகப் புருஷார்த்தம் கிட்டும் என்ற அமைதியான உறுதியுடன் இருந்தாள்.


முந்தைய பாசுரத்தில், ஆண்டாள் ஒருகாலத்தில் இச்சம்சார லீலா விபூதியில் வாழ்ந்து, பின்னர் விடுதலை பெற்று பரமபதம் அடைந்த முக்த ஜீவாத்மாவைப் போன்ற மனநிலையுடைய கோபிகையை எழுப்பினாள். இப்பாசுரத்தில் உள்ள கோபிகையோ, எப்போதும் எம்பெருமானின் திவ்ய தாமத்தில் கைங்கர்யத்தில் நிலைத்து நிற்கும் நித்ய ஜீவாத்மாவைப் போன்ற உயர்ந்த மனநிலையுடன் விளங்குகிறாள். அதனால், இப்பாசுரம் உபேயத்தைவிட உபாயத்தின் மஹிமையை முன்னிறுத்தி, பரமாத்மனின் கருணையிலும் ஜீவாத்மாவின் பரதந்திரியத்திலும் உறுதியான நம்பிக்கையை உபந்யாச நயத்துடன் வெளிப்படுத்துகிறது.


இந்தப் பாடலில், கண்ணனுக்கு மிகப் பிரியமான ஒரு கோபிகையை எழுப்புவதற்காக, அவளது தாயாரை துணை வேண்டுவதைப் போல், இதே சூழலில் நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடியுள்ளார். பராங்குச நாயகியைப் பற்றி, அவளது தோழி அவளது தாயாரிடம் உரையாடுவதாக அமைந்துள்ள அந்தத் தொலைவில்லிமங்கல பாசுரங்கள் ஒப்புநோக்கத்தக்கவை. அவற்றின் முதல் பாசுரம் “துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்” என்று தொடங்குகிறது. இதனைப் பூர்வாசார்யர்கள் “தூமணி மாடத்து” என்ற பதத்துடன் இணைத்து அற்புதமான அர்த்த விசேஷங்களை அருளியுள்ளனர்.


‘தூமணி மாடம்’ என்பதை ‘துவளில் மாமணிமாடம்’ என்ற நம்மாழ்வார் வாக்கோடு அண்ணங்கராச்சாரியார் ஒப்பிடுகிறார். ‘துவள்’ என்றால் தோஷம்; ‘துவளில்’ என்றால் குற்றமற்ற தூய்மை. ஆண்டாளே ‘தூ’ என்ற சொல்லை ‘தூமலர்’, ‘தூ சாகும்’ என்பதுபோல் பயன்படுத்தியுள்ளார். தமிழில் ‘தூ’ என்பதற்கு தூய்மை, ஒளி, வெண்மை, தசை, இறைச்சி, இறகு எனப் பல பொருள்கள் உண்டு.


தேவாதிதேவனான பெருமானிடம் தேவர்கள் முத்து, பவளம், ரத்தினங்களை சமர்ப்பிக்கின்றனர். அவற்றில் தோஷமுள்ளவற்றைச் சுத்திகரித்து ‘துவளில் மாமணி’களாக மாற்றி பெருமான் தன் மாளிகையில் வைத்துக் கொள்கிறான் என்றும், தோஷமே இல்லாத ரத்தினங்களைக் கொண்டு ‘தூமணி மாடம்’ கட்டி தன் நாயகிக்கு அருள்கிறான் என்றும் ஆச்சார்யர்கள் விளக்குகின்றனர். அத்தகைய தூமணி மாடத்தில் விளக்குகள் சுற்றிலும் எரிந்து, தூபம் கமழ, துயிலணையில் ஆனந்தமாக அந்த கோபிகை உறங்குகிறாள்.


முந்தைய பாசுரத்தில் “கீழ்வானம் வெளுத்து விட்டது” என்று ஆண்டாள் அறிவித்துவிட்டாள். விடிந்த பிறகும் விளக்குகள் எரிகின்றன என்பதை உணராமலேயே உறங்கும் நிலையை இங்கு சுட்டுகிறார். காலை ஒளியில் புகை கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அதன் மணம் உணரப்படுகிறது. பார்ப்பது விளக்குகளையே; நுகர்வது அவற்றின் புகை தரும் சுகந்தத்தை.


தூமணி மாடம் என்பது, அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய நான்மறையை (வேதம்) குறிப்பில் சொல்கிறது. "சுற்றும்" என்பது வேதத்தின் ஆறு அங்கங்களை (சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) குறிக்கிறது. விளக்கு என்பது வேதசாரத்தை புரிந்து கொள்ள உதவும் ஸ்மிருதி, புராண, உபநிடதங்கள் சார்ந்த ஞானத்தை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது. இப்போது உறங்குபவளின் ஞானச் சூழல் புரிகிறதல்லவா ? "தூபம் கமழ" என்பது ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக கூறுவார். "துயிலணை மேல் கண் வளரும்" என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் (அப்பெண்ணின்) பகவத் ஞானத் தன்மையைக் குறிக்கிறது!


இந்தப் பாசுரத்தில் ஆண்டாளுடன் கூடிய கோபிகைகள், கண்ணனுக்குப் பெரிதும் பிரியமானவளை எழுப்பச் செல்கின்றனர். ஆயர் குலத்தில் ஒருவருக்கொருவர் சொந்தக்காரர்கள்; அதுபோலவே பகவத் பக்தர்கள் அனைவரும் பாகவத பந்துக்கள். பரமாத்மா அனைவருக்கும் ஆத்ம பந்து. அந்த உரிமையில்தான் ஆண்டாள் “மாமன் மகளே!” என்று அன்புடன் அழைக்கிறாள்.


அந்தக் கோபிகை கண்ணனை மறந்தவள் போல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால், ஆண்டாள் அவளது தாயாரை நோக்கி “மாமீர்! அவளை எழுப்புங்களேன்” என்று வேண்டுகிறாள். இங்கு சொல்லப்படும் தத்துவம்: உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷத்தை அடைய புருஷகாரம் தேவை; அதற்காக ஆசார்ய அனுக்ரஹம் அவசியம் என்பதே.


பரமன் இருக்குமிடமான தூமணிமாடத்தில் தன் ஞானத்தால் ப்ரஹ்மானந்தத்தை அனுபவித்தபடி அந்த கோபிகை இருக்கிறாள். அந்த தூமணி மாடத்தினுள் நுழைய வெளியே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. அதனால் உள்ளே இருக்கும் கோபிகையையே பார்த்து மணிக்கதவை திற! என்று கேட்கிறார்கள். “மாமன் மகளே! மணிக்கதவைத் திற!” என்ற அழைப்பு, எளிதில் உணர இயலாத பகவத் விஷயங்களை உபதேசிக்குமாறு சீடன் ஆசார்யனை உள்ளத் தூய்மையுடன் வேண்டுவதை குறிக்கிறது. ஆசார்யனே நமது தமோ குணங்களும் வினைப்பயன்களும் எனும் கதவுத் தாளை அகற்றி, மோட்ச சித்திக்கு வேண்டிய ஞானத்தை அருள வல்லவர்.


அவளோ வாய் திறந்து பேசவில்லை. ஒருவேளைஅவளுக்கு காதே கேட்கவில்லையோ? அல்லது நிஷ்காம்யமாக அப்படியே ப்ரஹ்ம நிஷ்டையில் உட்கார்ந்து விட்டாளோ? அல்லது அனந்தலோ? அனந்தல் என்பதற்கு கர்வம், இறுமாப்பு என்றும் பொருள் கொள்வர். க்ருஷ்ணனை விட்டால் வேறு யார் நம்மை ரக்ஷிக்க தக்கவர் இருக்கிறார்கள்என்ற இறுமாப்பில் இவள் இருக்கிறாளோ? அன்யபரையாக பிறரது கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டாளோ? சரி அவள்தான் பேச மறுக்கிறாள். மாமீர்..நீங்களாவது அவளை எழுப்பீரோ? அவள் எதாவது மந்திரத்தினால் கட்டப்பட்டு பெருந்துயிலில் ஆழ்ந்துவிட்டாளோ? என்று ஆண்டாள் கேட்கிறாள்.


அவ்வடியவளை எழுப்ப வைணவ ஆச்சார்யர்களிடம் (மாமீர்) வேண்டுகோள் வைக்கப்படுகிறது! பகவத் ஞானத்தால் உண்டான தண்ணொளி மிகு நிலையானது (state of enlightenment), "ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்பதன் உள்ளர்த்தமாம்! "உன் மகள்" என விளிக்கப்படுவதால், அவ்வடியவள் வைணவ ஆச்சார்ய சம்பந்தம் உடையவள் என்பது புலப்படுகிறது...


இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ? அந்த பெண்ணின் தாயார் – நம்மாழ்வார் சொன்னபடி – கண்ணனின் நாமந்தவிர வேறெதுவும் அவள் காதுகளில் விழுவதில்லை – அவன் பெயரை சொல்லிப்பாருங்கள் என்று சொல்கிறாள். ‘மாமாயன் – மாதவன் – வைகுந்தன் என்றென்று ‘ எனும்போது ஒவ்வொரு நாமத்தையும் முதலில் வைத்து ஒவ்வொரு சகாஸ்ரனாமமே பாடுகிறோம் என்கிறாள் ஆண்டாள் .


இங்கே ‘மாமாயன்’ என்பது நமக்கு பிறப்பு கொடுத்து நமது முன் ஜென்ம நிலைகளையும் அவனுடனான சம்பந்தத்தையும் மறைத்தான்.
‘மாதவன்’ என்பது மா – லக்ஷ்மியின், தவ – கணவன், ஸ்ரீ:பதி என்று பொருள் – அப்படி பிராட்டியுடன் கூடி எங்களை ரக்ஷிக்கிறான்.
‘வைகுந்தன்’ என்ற திருநாமம், இங்கிருந்து நாம் சரணாகதி செய்து, பிரபத்தி மார்க்கத்தில் அவனை அடையப்போகிற இடம்.


ஆக நாம் வந்தது, இருந்தது, போக போவது ஆகிய எல்லா நிலைகளுக்கும் காரணன் அவனே என்பது தேறும். இவ்வாறு அவன் நாமங்களை பாட அந்த கோபிகையும் தன் துயில் விடுத்து இவர்களுடன் இணைந்தாள்.


‘மாமாயன்’ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு: ஆயர் குலத்தில் சிறந்தவன்; திருமகள் சம்பந்தம் உடையவன்; தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த மகாவிஷ்ணு. இவ்வாறு ‘மாமாயன்’ பற்றி மாய்ந்து மாய்ந்து சொல்ல வேண்டிய அளவுக்கு இந்தப் பாசுரம் ஆழமும் இனிமையும் கொண்டதாக விளங்குகிறது.


6 ம் பாடல் முதல் 15 ம் பாடல் வரை, பள்ளியெழுச்சி பாடல்கள். இவை ஆண்டாளை தவிர்த்து மற்ற ஆழவர்களை எழுப்புவதாக ஆச்சார்யர்கள் விளக்கமளித்துள்ளார். 6 ம் பாடல் பெரியாழவார், 7 - தொண்டரடிப்பொடி; 8 - நம்மாழவார்; 9 - திருமழிசை என்று விளக்குகின்றனர். எப்படி என்பதை நேரம் கிடைக்கும்போது நாம் பார்க்கலாம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment

The “Mother of All Deals”: Why the India–EU FTA is Sending Shockwaves Through Global Trade

The “Mother of All Deals”: Why the India–EU FTA is Sending Shockwaves Through Global Trade In late January 2026, global trade watchers witne...