“உந்து மதகளிற்றன்”
கிருஷ்ணனை அடைய விரகத்தால் துடித்த கோபிகைகள், தம்மையே மறந்த நிலையிலிருந்தவர்கள். தம்மையே மறந்தவர்களால் முறையையும் மறப்பது இயல்பே. ஆனால் பின்னர் அறிவு தெளிந்து, “பகவானை அடைவதற்கு அவன் தேவியின் மத்தியஸ்தமே எளியவும் நிச்சயமானவும் ஆன வழி” என்பதை உணர்ந்து, இப்பதினெட்டாம் பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியைத் துயிலெழுப்பத் தொடங்குகிறாள்.
பிராட்டியின் புருஷகார மகிமை
தீயை நீரால் அணைக்கலாம். ஆனால் நீரே வெப்பமடைந்தால், அதனை குளிரச் செய்ய மீண்டும் நீரே வேண்டுமல்லவா? அதுபோலவே, ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே ஏற்படும் இடைவெளியைச் சீர்செய்யக் கருணைமிகு தாயான திவ்ய மாதாவின் மத்தியஸ்தம் அவசியம். ஆனால் அந்தத் தாயை அடைய வேறு எந்த இடைச்செயலும் தேவையில்லை. அவள் எந்நேரமும் காரணமற்ற, எல்லையற்ற தயையால் ஜீவர்களை அருளால் மூடுபவள்.
ஆண்டவனுடைய அருளைப் பெற, அவன் தேவியின் புருஷகாரம் அவசியம் என்பதையே ஸ்ரீமத் ராமாயணம் முதலான சாஸ்திரங்கள் பல இடங்களில் வலியுறுத்துகின்றன. பத்திராச்சல ராமதாசர் ராமனைப் பற்றி எண்ணற்ற கீர்த்தனைகள் பாடினாலும், “நனு ப்ரோவுமணி செப்பவே…” என்று சீதாபிராட்டியைச் சரணடைந்த பின்பே ராமபிரான் அருள் புரிந்தார் என்பது இதற்குத் தெளிவான எடுத்துக்காட்டு.
நப்பின்னை யார்? – சாஸ்திர ஆதாரம்
திருமாலுக்கு திருமகள், பூமகள் போல மூன்றாவது தேவியாக நப்பின்னை விளங்குகிறாள். வடமொழி ஹரிவம்சம் நூலில் அவள் நீளாதேவி என அழைக்கப்படுகிறாள். கண்ணன் ஏழு ஏறுகளை வென்று அவளை மணந்தான் என அந்நூல் கூறுகிறது. அவள் நந்தனின் மைத்துனன் கும்பகன் (கும்பகோன்) என்பவனின் புதல்வி என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதாபாகம் தென்னிந்திய பிரதிகளில் விரிவாகக் காணப்படுகிறது. வடநாட்டில் “நீளாதேவி” என்ற பெயரே அறியப்படவில்லை என்று ஹார்டி தமது Viraha Bhakti என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
பராசர பட்டர்,
“நீளாதுங்க ஸ்தனகிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்”
என்று, நீளாதேவியின் திருமேனியில் தலை வைத்து துயில்கின்ற கண்ணனை வர்ணிக்கிறார். இதுவே ஆண்டாள் சொன்ன
“கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா”என்ற அடியின் வேதாந்த சாயல்.
தமிழ் இலக்கியங்களில் நப்பின்னை
சிலப்பதிகாரத்தில்,
“மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்…”என்று நப்பின்னை குறிப்பிடப்படுகிறாள்.
சீவக சிந்தாமணியில், முருகன் வள்ளியை மணந்ததுபோல கண்ணன் நப்பின்னையை மணந்தான் என்ற உவமை வருகிறது.
திருவள்ளுவமாலையில் அவள் “உபகேசி” என அழைக்கப்படுகிறாள்.
அவதார வேறுபாடுகளில் புருஷகாரம்
-
பரமபதத்தில் – மூன்று தேவிகளிடமும் சரணடைந்த பிறகே பரமாத்மனை அடைய முடியும்.
-
க்ஷீராப்தியில் – ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் திருவடிகளில் பணிந்த பின்பே நாராயணனை அணுக வேண்டும்.
-
ராமாவதாரத்தில் – சீதாபிராட்டியின் வழியே ஸ்ரீராமனை அடைய வேண்டும்.
-
வராகாவதாரத்தில் – பூதேவியின் மத்தியஸ்தமே வழி.
-
கிருஷ்ணாவதாரத்தில் – கோகுலத்தில் ஒரே தேவியாக இருந்த நப்பின்னைப் பிராட்டியே புருஷகார பூதையாக விளங்கினாள். ஆகவே ஆண்டாள் இப்பாசுரத்தில் அவளையே எழுப்புகிறாள்.
பாசுர விளக்கம்
“நந்தகோபாலன் மருமகளே” என்ற அழைப்பு
ஆண்டாள், “நந்தகோபாலன் மருமகளே” என்று சொல்லுவதில் ஆழ்ந்த நயம் உள்ளது. பிறந்த வீட்டைவிட புகுந்த வீட்டிலேயே நப்பின்னை பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தாள் என்பதை உணர்த்தும் சொல் அது.
மேலும், “உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்” என்று நந்தகோபரின் வீரத்தைப் போற்றி, அத்தகைய வீரனின் மருமகளாகிய நப்பின்னையை அழைத்தால் அவள் மனம் உருகாதா? — அதுவே கோபியரின் நம்பிக்கை.
பந்தார்விரலி – புலன்களின் உவமை
“பந்தார் விரலி” என்று சொல்லும்போது, கண்ணனுடன் பூப்பந்து விளையாடி, அவனை வென்று, ஒரு கையால் கண்ணனையும் மற்றொரு கையால் பந்தையும் தழுவிக் கிடந்த நப்பின்னையின் அழகிய நிலை வர்ணிக்கப்படுகிறது.
ஐம்புலன்களும் இங்கு நுட்பமாகக் குறிக்கப்படுகின்றன:
-
கந்தம் கமழும் குழலி – மூக்கு
-
உன் மைத்துனன் பேர் பாட – நாக்கு
-
சீரார் வளையொலிப்ப – செவி
-
வந்து திறவாய் – கண்
-
பந்தார்விரலி – தொடுதல்
அனைத்து புலன்களும் பரமனில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் தத்துவம்.
ஏக சேஷித்வம்
“கோழி” என்ற குறியீடு
“வந்து எங்கும் கோழி அழைத்தன காண்” — இங்கு கோழி ஒரு உவமை.
என்று பெரியோர் கூறுவர்.
-
திருமந்திரம்
-
த்வயம்
-
சரமச்லோகம்
-
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் – சரணாகதியை ஏற்றுக் கொள்ளத் தகுந்த பரமபுருஷன்
-
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! – புருஷகார பூதையான திருமகளைச் சுட்டுகிறது
-
கந்தம் கமழும் குழலி! கடை திறவாய் – தடைகளை நீக்கி வழி செய்
-
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் – உன்னைச் சரணடைந்துள்ளோம்
-
மாதவிப் பந்தல் மேல் குயிலினங்கள் – வேத–உபநிஷத்துக்கள் நாதமெழுப்புகின்றன
-
பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாட – மாயை அகன்று சேவைக்கு உரியவர்களாக எங்களை ஆக்கு
-
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப – மங்களகரமான அனுக்ரஹம் அருள
-
வந்து திறவாய் – பரமனிடம் எங்களைச் சேர்த்து வை
உடையவர் ராமானுஜர், திருப்பாவையுடன் உயிரோடு இணைந்தவர். அதனால் அவருக்கு “திருப்பாவை ஜீயர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. பிக்ஷைக்கு செல்லும் போதும் அவர் திருப்பாவையைச் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்; பாதுகைகள் அணிவதையும், அதனால் திருப்பாவைக்கு அபசாரம் நேரும் என எண்ணி தவிர்த்தார்.
ஒருமுறை திருக்கோட்டியூரில் “உந்து மதகளிற்றன்” பாசுரத்தைப் பாடியபடி பெரிய நம்பியின் இல்லத்திற்குச் சென்றார். கதவைத் திறந்தது பெரிய நம்பியின் மகள் அத்துழாய். அவளது கைவளையொலி கேட்டவுடன், “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப” என்ற அடியைப் பாடி முடித்த ராமானுஜர், அவளை நப்பின்னையாகவே பாவித்து, உடனே சாஷ்டாங்கமாக விழுந்து மயங்கினார்.
அந்த நிகழ்வை அறிந்த பெரிய நம்பி, “இது உந்துமத களிற்றன் பாசுரத்தின் மஹிமை” என்று உணர்ந்தார். ஆகவே இந்தப் பாசுரம் இருமுறை பாடப்பட வேண்டும் என்ற மரபும் ஏற்பட்டது.
இந்தப் பாசுரம் வலியுறுத்தும் மையக் கருத்து ஒன்றே:
👉 நப்பின்னையைப் புருஷகாரமாக ஏற்றுக்கொள்ளாமல் பகவானை அடைய முயன்றால், அது பயனற்றது.
.jpeg)
No comments:
Post a Comment