Friday, 9 January 2026

ஒருத்தி மகனாய் பிறந்து…

 

ஒருத்தி மகனாய் பிறந்து…


கண்ணபிரானின் திருநாமம் முதன்முதலில் ஒலித்துத் தோன்றுவது சாந்தோக்ய உபநிஷத்தில். அங்கே அவன் தேவகியின் புதல்வன் எனக் குறிப்பிடப்படுகிறான். பாணினியின் அஷ்டாத்யாயி, வாசுதேவ–கிருஷ்ண வழிபாடு நிலவியதைச் சுட்டுகிறது. பதஞ்சலி, தமது உரையில் கம்சனை கண்ணன் வதைத்த வீரத்தை நினைவூட்டுகிறார். மகாபாரதத்தில் நமக்குத் தெரிந்த கண்ணனும், பகவத்கீதையில் உபதேசம் அருளிய பரமகுருவான கிருஷ்ணனும் ஒன்றே. மகாபாரதத்திற்குப் பின்வந்த விஷ்ணு புராணம், ஹரிவம்சம் முதலான புராணங்கள் அவனது லீலைகளை விரித்துரைக்கின்றன.



சில ஆய்வாளர்கள், ஒருகாலத்தில் பழங்குடி மக்களின் தெய்வமாக இருந்த கண்ணன், காலப்போக்கில் விஷ்ணுவின் அவதாரமாக இந்து சமயத்தின் மைய தெய்வமாக உயர்ந்தான் எனக் கருதுகின்றனர். உண்மையில், இன்றைய பெருந்தெய்வங்கள் பலவும், ஆதியில் எளிய மக்களின் ஆராதனைத் தெய்வங்களாகவே இருந்திருக்கின்றன.



கண்ணன் கோபியருடன் ஆடிய ராசக்ரீடை சமஸ்கிருத இலக்கியங்களில் மட்டுமன்றி, ஹரிவம்சத்திலும் தெளிவாகக் கூறப்படுகிறது. இளங்கோ அடிகள், பாலசரிதத்தில் சொல்லப்படும் குரவையை ஆய்ச்சியர்கள் நடனமாக ஆடிக் காட்டுவதாக மிகத் தெளிவாகக் கூறுகிறார்:

“ஆயர் பாடியில், எருமன்றத்து,
மாயவனுடன் தம்முன் ஆடிய
பால சரிதை நாடகங்களில்,
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்”
என்று சிலப்பதிகாரம் உரைக்கிறது.



இங்கே கண்ணபிரானின் அவதாரத்தைப் பேசும் சூழலில், ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்புக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கும் இடையே காணப்படும் சில ஒற்றுமைகளும் கவனிக்கத்தக்கவை. இருவரும் தெய்வீக அவதாரங்களாகவும், மனிதகுலத்தை உய்விக்கும் ரட்சகர்களாகவும் கருதப்படுகின்றனர்.


கண்ணனுக்குக் கம்சன், கிறிஸ்துவுக்குக் ஹேரோத்—இருவருமே கொடுங்கோலர்கள். தம் உயிருக்கு ஆபத்து விளையும் என்ற தீர்க்கதரிசன அச்சத்தால், ஆண் குழந்தைகளை அழிக்க ஆணையிட்டனர். இதனால் இருவருமே மறைக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் வளர்க்கப்பட்டனர். அரண்மனையில் அல்ல; கண்ணன் சிறைச்சாலையில், கிறிஸ்து கொட்டகை/குகையில்—எளிய சூழலிலேயே பிறந்தனர். அவர்களின் பிறப்புகள் தீர்க்கதரிசனங்களாலும், அதிசயங்களாலும் ஒளிவட்டம் பெற்றன. இருவரும் அன்பும் தியாகமும் நிறைந்த வாழ்விற்கு மனிதகுலத்தை வழிநடத்திய தெய்வீக உபதேசகர்களே.


முந்தைய பாசுரத்தில் ஆண்டாள் அருளிய மங்களாசாசனத்தைச் செவிமடுத்த கண்ணபிரான், சிரித்தபடியே வினவுகிறான்: “பறை கேட்டு வந்ததாகச் சொல்லிக் கொண்டு, அதே சமயம் எம்மையே மங்களமாக ஆசீர்வதிப்பதாகப் பாடுகிறீர்கள்; இதில் ஒரு முரண் இல்லையோ?”


அதற்கு ஆண்டாள், உள்ளார்ந்த உண்மையை வெளிப்படுத்தி,
“பறை கேட்கும் விண்ணப்பம் வெளிப்புறம் மட்டும்; நாங்கள் வந்தது உம்மையே வேண்டி, உம்மையே அடைவதற்கே” என்று தெளிவுபடுத்துகிறாள்.


அப்போது எம்பெருமான், “அப்படியானால், உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற இடையூறுகள் இருக்கலாம்” எனச் சொல்ல, ஆண்டாள் அசையாமல் பதிலளிக்கிறாள்: “எண்ணிலடங்கா பெரும் தடைகளை நீக்கிய உமக்கு, இப்போது எஞ்சியிருக்கும் சிறு தடைகள் எவ்வளவு? அவற்றையும் நீக்கி எங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதே உமது இயல்பு” என்று உறுதியுடன் விண்ணப்பிக்கிறாள்.



இப்பாசுரம் கண்ணனின் அவதார காலச் சூழலையும் நினைவூட்டுகிறது. கம்சனின் சகோதரி தேவகிக்கும், வாசுதேவருக்கும் மகனாக அவன் அவதரித்தான். கம்சன் இருவரையும் சிறையில் அடைத்திருந்தபோதும், கண்ணன் பிறந்த அதே நொடியிலே சிறைக் கதவுகள் தாமே திறந்து, வாசுதேவர் குழந்தையை எடுத்துக் கொண்டு வ்ரஜபூமி நோக்கிச் செல்ல வழி அமைந்தது. அங்கே நந்தகோபனும் யசோதையும் அவனைத் தம் மகனாக ஏற்று வளர்த்தனர். கம்சன் அனுப்பிய அசுரர்கள் யாவரையும் தன் லீலையால் முறியடித்தவன் கண்ணபிரான்.



“ஒருத்தி மகனாய் பிறந்து” என்ற சொல்லால், ஆண்டாள் தேவகியைப் பெயரிட்டு அழைக்கவில்லை. அவள் ஒருத்தி—அவளைப் போல இன்னொருத்தி இல்லை என்பதாலே. ஆண்டாள் தேவகியை “ஒருத்தி” என்று பெயரின்றி அழைக்கிறாள். காரணம் உண்டு. பரமனைப் பெற்றெடுத்தவளாயினும், அவனைப் பிரிய வேண்டிய துன்பத்தை அனுபவித்த உத்தமத் தாய் அவள். தன் ஆறு குழந்தைகளை அண்ணன் கம்சன் கொன்ற கொடூரத்தைக் கண்ணால் கண்டவள்.



யசோதை—அவளைவிடப் பெருமைமிக்க தாய். கண்ணனைத் தாலாட்டி, வளர்த்து, அவன் பாலலீலைகளை அனுபவித்த பாக்கியம் பெற்றவள். அவன் வாயில் ஏழுலகையும் கண்டவள். அத்தகைய யசோதையும் “ஒருத்தி”யே!



ஜீவாத்மாக்கள் கர்மவசத்தால் பிறக்கின்றன. பரமன் மட்டும், தன் அடியவர்களை மீட்கவே பிறப்பெடுக்கிறான். மனிதரின் பிறப்பு அவரை பரமனிடமிருந்து விலக்குகிறது; பரமனின் பிறப்பு மனிதரை அவனுக்கு அருகில் கொண்டு வருகிறது.


உபநிஷதம் கூறும் “அஜாயமானோ பஹுதா விஜாயதே”—பிறப்பற்றவன் பல பிறப்புகள் எடுப்பான்—என்பதன் சாட்சியே இந்த அவதாரம். தேவகி, பிறந்த கணமே தன் தெய்வக் குழந்தையைப் பிரிய வேண்டியவள். அவளது தியாகமும் பக்தியும் அளப்பரியது.



அதேபோல், யசோதை—கண்ணனை வளர்த்து, அவன் பாலலீலைகளை அனுபவித்த புண்ணியவதி. அவள் கண்டது விஸ்வரூபம்; அவள் வாயிலே கண்டது வையம் ஏழு. பெரியாழ்வார், யசோதையின் அச்சம், அன்பு, தவிப்பு—allவற்றையும் பாசுரங்களில் உயிரோடு நிறுத்துகிறார். அதனால் தான் யசோதையும் “ஒருத்தி”.



பரமன் மறைந்து வளர்ந்தது அவன் சித்தம். கம்சனை அழிக்கும் காலம் வரும்வரை, ஆய்ப்பாடியில் ஆயராக வாழ அவனே தீர்மானித்தான். இதிலே அவனது சௌலப்யமும் வாத்சல்யமும் வெளிப்படுகிறது.



கண்ணன் கோகுலத்தில் வளர்கிறான் என்ற செய்தியே கம்சனைத் தீயாய் எரியச் செய்தது. அதனாலே ஆண்டாள் ஒரே சொல்லில்—“தரிக்கிலானாகி”—அவனது துயரைச் சொல்கிறாள். தேவகி–வாசுதேவருக்கு அபயம்; கம்சனுக்கோ பயமே உணவானது. அவன் செய்த தீமைகளுக்கான கர்மபலன் அதுவே.



இறுதியாக, கோபியர், “உன்னையே உன்னிடம் வேண்டி நிற்கிறோம். உனக்கும், உன் மார்பில் குடியிருக்கும் பிராட்டிக்கும் எந்நாளும் கைங்கர்யம் செய்வதே எங்கள் செல்வம்” என்று விண்ணப்பிக்கிறார்கள். “உன்னை அருத்தித்து வந்தோம்” என்பதில், நாங்கள்–நீ என்ற வேற்றுமையே கரைந்து, நீயே நாங்கள் என்ற பரமநிலை வெளிப்படுகிறது.


யமுனை வழிவிட்டு விலகிய அந்த கரிய இரவையும், “தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை” என்று கோதை நாச்சியார் ஏன் அழைத்தாள் என்பதையும் இப்பாசுரம் நினைவூட்டுகிறது.



கண்ணன் பிறந்த அந்த கரிய இரவில், வசுதேவர் அந்த தெய்வக் குழந்தையை ஒரு கூடையிலிட்டு கோகுலத்திற்கு எடுத்துச் சென்றபோது, யமுனை நதியாள் விலகி வழி விட்டு கண்ணனின் அருளுக்கு உகந்தவள் ஆனாள் ! கோதை நாச்சியார், 5-வது பாசுரத்தில், "தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை" என்று மாயனை விளிப்பது இதனால் தானோ !


இப்பாசுரத்தில், ஆண்டாள் தேவகியையும், யசோதையையும், பெயரிட்டுக் கூறாமல், 'ஒருத்தி' என்றே குறிப்பிட்டுள்ளார். 'ஒருத்தி' என்பது இங்கே மரியாதைக்குரியதே.


'ஓரிரவில்' என்பது சம்சார பந்தமான இருட்டை உள்ளர்த்தமாக குறிக்கிறது !


'ஒருத்தி மகனாய் பிறந்து' காயத்ரி மந்த்ரத்தையும், 'ஒருத்தி மகனாய் வளர' மூல மந்த்ரத்தையும் குறிப்பில் உணர்த்துவதாக பெருக்காரணை சுவாமிகள் கூறுவார் !


'ஒளித்து வளர' என்பதற்கு இரண்டு உள்ளர்த்தங்கள் கூறப்படுகின்றன.
(i) கண்ணன், பகவத் பெருமைகளை வெளிக்காட்டாமல், ஆயர்களோடு ஆயராக வளர்ந்தது
(ii) அடியார் சிற்றின்ப எண்ணங்களை கைவிட்டு பரந்தாமனை சிந்தையில் நிறுத்த வேண்டியது



தரிக்காலானாகி - சம்சார பந்தத்தை கைவிட்டு



தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து - நமது தீவினைகளை எண்ணி மருகி, அப்பாவ பலன்களிலிருந்து விடுபட அப்பரமனைப் பற்றுவதே உபாயம் என்றுணர்ந்து



உன்னை அருத்தித்து வந்தோம் - பரமபதம் சேர உன்னை நாடி வந்துள்ளோம்



திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி - கண்ணனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு முன், அப்பரமனின் மார்பில் குடியிருக்கும் தாயாரை முதலில் போற்றி வணங்க வேண்டியதை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். 'திருத்தக்க செல்வம்' என்பதற்கு திருவை (திருமகளை) உடைமையால் வந்த செல்வம் என்றும், திருவும் விரும்பத்தக்க செல்வம் (அதனால் தான் திருமார்பன்!) என்றும் கூட பொருள்படும் !



வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து - உலகப்பற்றை உதறி, பரிபூர்ண ஆனந்த நிலையை அடைவதை உள்ளர்த்தமாகக் குறிக்கிறது.



இதல்லவோ நயத்திற்கெல்லாம் நயம், பக்திக்கும் தத்துவத்துக்கும் பாலமாய் நிற்கும் ஆண்டாள் அருளிசெய்த பேருரு!


No comments:

Post a Comment

Rupee Weakening vs USD: Not a Sign of India’s Decline — Often a Feature of Strategy, Not a Bug of Failure

Rupee Weakening vs USD: Not a Sign of India’s Decline — Often a Feature of Strategy, Not a Bug of Failure Every time the Indian Rupee weaken...