தூமணி மாடத்து!
Welcome to the world of my Web-logs! Hang around here for No-holds-barred stuff from moral stories to gossips, politics to current affairs, sports to games, films to documentaries, spiritual to management, yoga to laziness - everything you find around you in the form of fresh Blogs, almost, thrice a week!
Wednesday, 24 December 2025
தூமணி மாடத்து!
Tuesday, 23 December 2025
கீழ்வானம் வெள்ளென்று!
கீழ்வானம் வெள்ளென்று!
காலை நேரத்தை ஆண்டாளைப் போல் பாடல்களால் மகிமைப்படுத்தியவர்கள் அரிது. திருப்பள்ளியெழுச்சியால் காலைச் சிறப்பித்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருவெம்பாவையால் காலையைப் பாடிய மாணிக்கவாசகரும் நினைவிற்கு வருவர். ஆயினும் அவை அனைத்தும் ஆண்களின் காலை; ஆண் ஆதிக்கம் மேலோங்கிய காலைகள். பெண்கள் அவற்றில் மிகக் குறைவு. ஆனால் ஆண்டாளின் காலை வேறு. அது பெண்களின் காலை. இளம்பெண்களின் காலை. ‘விருத்தைகள்’ — வயது முதிர்ந்த பெண்கள் — எழுந்து, “இது உங்களுக்கு உரிய நேரமல்ல” என்று தடுக்கும் முன், கண்ணனை அடைய அவசரப்படும் இளமைத் துடிப்புள்ள பெண்களின் காலை அது.
முந்தைய பாசுரங்களைப் போலவே, இப்பாசுரத்திலும் ஒரு நுட்பமான கற்பனை உரையாடல் அமைந்துள்ளது. வெளியே நின்று ஆண்டாள் பேசுகிறாள்; உள்ளே துயில்கின்ற கோதுகலமுடைய பாவாய் பதிலளிக்கிறாள். இந்த உரையாடலின் ஊடே தான் ஆழ்ந்த வைஷ்ணவ தத்துவங்கள் மெதுவாக வெளிப்படுகின்றன.
அதைச் சிரிப்புடன் மறுத்து கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: நீங்கள் அனைவரும் கண்ணனைப் பிரிவில்லாமல் காண ஆவலுற்று, எப்போதும் கிழக்கையே நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் — திங்கள் திருமுகத்து சேயிழையார். உங்கள் முக ஒளியே வானில் பிரதிபலித்து வெண்மையாகத் தோன்றியிருக்கலாம். மேலும், பால், தயிர், மோர் போன்ற வெண்மையானவற்றையே நீங்கள் எப்போதும் காண்பதால், வானமும் உங்களுக்கு வெண்மையாகத் தோன்றுகிறது. வேறு ஏதாவது உறுதியான அறிகுறி உண்டா?
“வேதம் அறிந்தவர்களினூடேதேவர்களின் தலைவனை வழிபடுக”— திருவாய்மொழி 4.6.8
அக்ரூரன், கம்சனின் ஆணையால் கண்ணனை அழைத்து வரச் சென்றபோது, ஆனந்தமும் வருத்தமும் கலந்து இருந்தான் — பகவானை காணும் பேரானந்தம்; அந்தச் சந்திப்பின் நோக்கம் கொடூரமானது என்ற துயரம்.
‘கோதுகலமுடைய பாவாய்’ — கௌதுகலம் எனும் ஆனந்தமும் உற்சாகமும் நிறைந்தவள்; கண்ணனுக்கே மிக நெருக்கமானவள்.
பாடிப் பறை கொண்டு - ஆச்சார்யனைப் போற்றி தனியன்கள் பாடுவதும், அவர் மேன்மையை பரப்புவதும்
எவ்விஷயம் கண்ணனால் ஆராயப்படுகிறது? கோபியரின் கர்ம,ஞான,பக்தி யோகங்களை அல்ல, தாஸ்ய பாவம் மட்டுமே, பரிபூர்ண சரணாகதி... இந்தப் பாசுரம், கோஷ்டியாக (கூட்டாக) ஆச்சார்ய உபதேசத்திற்குச் செல்லும் சீடர்களை குறிப்பில் உணர்த்துகிறது.
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய் - ஆசார்யன், சீடர்களின் தகுதியை விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்து, அவரவருக்கேற்ற பிரபத்திப் பலன் கிட்டுவதற்கு உபாயங்களை அருளுதலை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது!
ஆண்டாள் திருவடிகளே சரணம்
Monday, 22 December 2025
கீசு கீசு என்று ....
கீசு கீசு என்று ....
நகர வாழ்வில் இருப்பவர்களுக்கு இது சற்றே கடினமான அனுபவம்தான். விடியற்காலையில் “கீசு கீசு” என்று பறவைகள் பரஸ்பரம் உரையாடும் இனிய ஓசைகளை கேட்பது இன்று அரிதாகிவிட்டது. குருவிகளே காணாமற்போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், “ஆனைச்சாத்தன்” எனப்படும் கருங்குருவியை எத்தனை பேர் அறிவர்? ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, திருவல்லிக்கேணியில் நான் வாழ்ந்த காலத்தில், பறவைகளின் அரவம் என்கிற நினைவே இல்லை. அன்றைய காலையின் ஒலிகள் முற்றிலும் வேறுபட்டவை.
கனமான கரும்போர்வையைத் துளைத்துக்கொண்டு, திண்ணையில் படுத்திருந்த என்னை எழுப்பிய ஒலிகள் அவை. பெண்கள் கோலம் போடுவதற்காக வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளிக்கும் சப்தம், எதிர் வீட்டின் முன் பால்காரர் பசுமாட்டைக் கொண்டு வந்து பால் கறக்கும் ஓசை, சிறிது தூரத்தில் உஷத்கால பஜனை பாடப்படும் ஒலி, கோவிலில் ஒலிபெருக்கியில் ஒலித்த எம்.எல். வசந்தகுமாரியின் திருப்பாவை – இவை அனைத்தும் கலந்த அந்த ஒலிச்சூழலே தூக்கத்தை விரட்டியதாக நினைவில் நிற்கிறது. ஆண்டாள் காலத்திலும், தூங்கிக் கிடந்தவர்களின் காதுகளில் இதுபோன்ற பல ஒலிகள் கலந்து விழுந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனைச்சாத்தன் பறவையை கிராமங்களில் “செம்போத்து” என்றும் அழைப்பார்கள்; குருவியிலேயே குட்டியான குருவி அது. அவை “கலந்து பேசின பேச்சு” என்றால், அது என்ன உரையாடல்?
இப்படித்தான் “கீசு கீசு” என்று அவை கலந்துரையாடியதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.
ஆனைச்சாத்தன் பறவையை பரத்வாஜப் பறவை என்றும், ஆங்கிலத்தில் Greater Coucal என்றும் கூறுவர். சிவப்பு, ஊதா, கருப்பு நிறங்கள் கலந்து மின்னும் பறவை அது. சிலர் “ஆனைச்சாத்தன்” என்பது வலிமைமிக்க பறவையைக் குறிக்கும் என்பார்கள். வாலில் இருக்கும் இறகுகள் ஆங்கில ‘V’ எழுத்தைத் தலைகீழாகப் புரட்டியது போல் இரட்டைவால் தோற்றமுடையது. மற்றொரு வகை கரிய பறவையான Drongo என்றும் நினைக்கலாம். இது அதிகாலையில் “கீச் கீச்” என்று கூர்மையான குரல் எழுப்பும். அந்தக் குரல் சாதாரணமல்ல; அது மற்ற உயிர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை. அதிகாலை வேளையில் வனவிலங்குகள் வேட்டைக்கு நகரும் போது, அவற்றின் வரவை உணர்த்தி, மற்ற ஜீவராசிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஓசையே அது.
இந்தப் பாசுரத்தில், பகவானையே சிந்தித்துக் கொண்டு மெய்மறந்து கிடப்பவளை, அவள் தோழிகள் அவள் இல்லத்தின் வாசலில் திரண்டு வந்து எழுப்ப முயல்வதாக வர்ணிக்கப்படுகிறது. பகவத் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்கள் எப்போதும் சத்சங்கத்தையே நாடுவார்கள். இதை அறிந்தே ஆண்டாள், பாகவதர்களை ஒன்றுகூடச் செய்து தோழியை எழுப்புகிறாள். ஆனாலும் அவள் எழுந்து வராததால், “பேய்ப்பெண்ணே” என்று செல்லமாகக் கடிந்துகொள்கிறாள்.
“காசும் பிறப்பும்” என்பது சங்கச் சின்னங்களான சங்கு, சக்கரம் பொறித்த தாலிகளைக் குறிக்கும் என்று சிலர் கூறுவர். மற்றொரு விளக்கமாக, பெரியாழ்வார் குறிப்பிட்ட “அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன்” என்ற ஆபரணத்தையும் நினைவூட்டலாம். கண்ணனுக்கு உகந்த ஆபரணங்களை ஆய்ச்சியர்கள் அணிவது இயல்பே. அவர்கள் தாலிகள் உரசி கலகல என்று ஒலிக்க, தயிர் கடையும் வேகத்தில் கூந்தல் அவிழ, தயிரின் மணத்தையும் மீறி பரிமளம் பரவுகிறது. அதனுடன் மத்தினின் ஒலியும் கலந்து எழுகிறது. இதுபோன்ற காட்சியை அன்னமாச்சாரியார் தமது ஒரு கீர்த்தனையில், அலர்மேல் மங்கை வீணை வாசிக்கும் போது அவளுடைய வளையல்கள் வீணையில் இடித்து ஒலித்ததும், குங்குமம் வியர்வையில் கரைந்து மணம் பரவியதையும் அழகாக வர்ணித்துள்ளார்.
“நாயகப் பெண் பிள்ளாய்” என்ற அழைப்பின் பின்னால், “எல்லோருக்கும் முன்னணியில் நிற்க வேண்டிய நீ, இவ்வாறு படுத்துக் கிடப்பது நியாயமா?” என்ற மறைமுகக் கேள்வி அடங்கியுள்ளது.
“கேசவன்” என்ற சொல்லுக்கு, கேசி என்ற குதிரை வடிவ அரக்கனை அழித்தவன் என்ற பொருளும் உண்டு; அடர்ந்த கூந்தல் உடையவன் என்ற பொருளும் உண்டு. இங்கு, ஆய்ச்சியர்களின் அவிழ்ந்த கூந்தலுக்கு ஒப்பாக அடர்ந்த கேசம் உடையவன் என்று பொருள் கொள்ளுதலே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
“தேசம், தேசு, தேஜஸ்” என்பவை அனைத்தும் பளிச்சென்று ஒளிவீசுதலைக் குறிக்கும். “திருமா மணிவண்ணன் தேசு” என்பது பேயாழ்வார் வாக்கு. இங்கே, “பேய்ப்பெண்” தேசமுடையவளாக – தெய்வீக ஒளி கொண்டவளாக – மாறியிருப்பதை கவனிக்க வேண்டும். எப்படியாவது அவளை எழுப்ப வேண்டும் என்ற உந்துதலைக் கவிதை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.
“கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு” என்பது, பரமனுக்கும் திருமகளுக்கும் இடையே, அடியவர்களுக்கு அருள் வழங்கும் நோக்கில் நடைபெறும் தெய்வீக சம்பாஷணையைச் சுட்டிக்காட்டுகிறது.
“வாச நறுங்குழல் ஆய்ச்சியர்” என்ற சொல்லில், “வாச நறுங்குழல்” என்பது உபநிடதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றறிந்த அறிவைப் புலப்படுத்துகிறது; “ஆய்ச்சியர்” என்பது ஆச்சார்யர்களைக் குறிக்கும் உள்பொருளைக் கொண்டது.
“காசும் பிறப்பும்” என்ற ஆபரணங்கள், வேதங்களையும், அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதிகளையும் குறிக்கின்றன.
“மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ” என்பது, ஆழ்ந்த தேடலின் பின் மலர்ந்த ஞானத்தின் பயனாக, “நாராயணனே பரதேவதா” என்ற தெளிவை ஆச்சார்யர்கள் உரக்க அறிவிக்கும் நிலையைக் குறிப்பதாகும்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
Sunday, 21 December 2025
புள்ளும் சிலம்பினகாண்!
புள்ளும் சிலம்பினகாண்!
நமது சனாதன மரபில் உறங்கும் இறைவனை எழுப்பும் பாடல்கள் எண்ணற்றவை. பகவான் உறங்குவானா என்ற கேள்வி எழலாம். நாம் பகவானை, நமது மனோபாவத்திற்கேற்ப அவனை பாவிக்கிறோம். ஆகையால், அவன் உறங்க முடியும், அவனை, துயிலெழுப்ப முடியும், அவனை குளிப்பாட்ட முடியும், அவனுக்கும் வித வித மாய் அலங்காரம் செய்து பார்க்க முடியும், என், அவனுக்கும் கலியாணம் கூட செய்து பார்க்க முடியும்.
Saturday, 20 December 2025
திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு…
திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு…
“வாசித்தும், கேட்டும், வணங்கியும், வழிபட்டும், பூசித்தும் காலத்தை கழித்தேன்” என்று ஆழ்வார் உரைப்பது வெறும் வார்த்தையல்ல. அது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் உண்மை. நாம் அனைவரும் காலத்தின் போக்கில் முதிர்ச்சியடைவோம். முதுமை வந்தபோது கண்கள் மங்கும்; வாசிப்பது கடினமாகும். காதுகள் செவிடாகும்; கேட்டுணர்வது சிரமமாகும். சாஷ்டாங்கமாக பெருமாளைச் சேவிக்க உடலும், காலும், முட்டிகளும் ஒத்துழைக்காது. இதைத்தான் திருமங்கை ஆழ்வார் ஆழமான வேதனையுடன்,
“ஏய்ப்பென்னை வந்து நலியும் போது, அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்...; அப்போதைக்குப்போதே சொல்லி வைத்தேன்...…”
என்று உரைக்கிறார்.
அதேபோல், (நேற்றைய தினம் திருநக்ஷத்திரம் கொண்ட) குலசேகர ஆழ்வாரும், முகுந்தமாலையில்,
“பிராணப் பிரயாண சமயே கப-வாத-பித்தைஹி கண்டா அவரோதன விதௌ ஸ்மரணம் குதஸ்தே”
என்று சொல்லி, உயிர் பிரியும் அந்த இறுதி நொடியில் கூட எம்பெருமானை நினைக்க முடியுமா என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.
அதனால்தான் ஆண்டாள், “அந்த நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம்; இப்போதே வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, பெருமாளை வேண்டுங்கள்” என்கிறாள். குறைந்தபட்சமாக இதையாவது செய்யக்கூடிய பாக்கியத்தை பகவான் நமக்குத் தரவேண்டும் என்பதே அவளின் வேண்டுகோள். ஆனால் இந்த அளவுக்கான பக்தி நிலை கூட எல்லாப் பக்தர்களுக்கும் ஒரே மாதிரியாக வாய்ப்பதில்லை.
திருவாய்மொழியில் நம்மாழ்வார், “உணர்ந்து உணர்ந்து, உரைத்து உரைத்து, இறைஞ்சுமின்” என்று அறிவுறுத்துகிறார். ஆனால் ஆண்டாள், “வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க” என்று சொல்கிறாள். கவனித்தால், முதலில் ‘பாடு’ என்கிறாள்; அதன் பின் தான் ‘சிந்தி’ என்கிறாள். ஏன் இந்த வரிசை? ஆழ்வார் வாழ்க்கை முழுவதும் அனுபவத்தில் ஊறியவர். ஆழமாக யோசித்து, ஆராய்ந்து, அனுபவத்தை வடித்து, அதன் பின் பாடல் வடிவில் பெருமாளைச் சேவித்தவர். ஆனால் ஆண்டாள் ஒரு சிறுமி. குழந்தைகளுக்கும் இளையோருக்கும் இயல்பாக இருக்கும் தன்மை – யோசனையை விட முன் வரும் இயல்பான உந்துதல் (spontaneity). அவர்கள் முதலில் உரக்கப் பாடுவார்கள்; பின்னர் தான் மனம் அதைச் சிந்திக்கத் தொடங்கும். ஆண்டாளின் வழிமுறை அதுதான்.
இந்தப் பாசுரத்தில் வழக்கில் இப்போது அதிகம் பயன்படுத்தப்படாத சில சொற்கள் வருகின்றன. உதாரணமாக, ‘செப்பு’ என்ற சொல் இன்றைய தமிழில் அரிது; அது தெலுங்கு வழக்கில் அதிகம் காணப்படுகிறது. அதுபோலவே, வைணவர்கள் பொதுவாக “பெருமாளைச் சேவிக்கிறோம்” என்பார்களே தவிர, “தொழுகிறோம்” என்று சொல்லமாட்டார்கள். ‘தொழுகை’ என்பது இன்று பெரும்பாலும் இஸ்லாமிய வழக்கிலும், சில பாலக்காட்டு பிராமணர்களிடமும் மட்டுமே பயன்படுகிறது.
முதல், இரண்டாம், மூன்றாம் பாசுரங்களில், ஆண்டாள் பர, வ்யூஹ, விபவ ரூபங்களாகிய திருமான் நாராயணன், பாற்கடலுள் பள்ளியுள்ள பரமன், வாமனன் ஆகிய தெய்வ வடிவங்களைப் போற்றிப் பாடுகிறாள். நான்காம் பாசுரத்தில் விபவ அவதாரங்களைத் தொடர்ந்து, இப்பாசுரத்தில் கிருஷ்ணனுடைய விபவ அவதாரத்தை மிக விரிவாகவும் ஆழமாகவும் புகழ்கிறாள்.
இந்தப் பாடலின் உள்ளடக்கம் மிக உயர்ந்த தத்துவ விசாரத்தைக் கொண்டது. ஒரு இடைப்பெண், இன்னொரு இடைப்பெண்ணிடம் கேட்பதாக அமைந்த கேள்வி மிக ஆழமானது:
“நாம் எல்லாம் கர்மவசப்பட்டவர்கள். விதியும் கர்மமும் தீர்மானிக்கும் உலகத்தில் வாழ்கிறோம். அப்படியானால் நாம் எப்படி பரமனை அடைய முடியும்? நம் பிழைகள் நம்மைத் தடுத்து நிறுத்தாதா? இத்தகைய விரதங்களால் என்ன பயன்? இதுவரை செய்த கர்மங்களின் பலன் நம்மை விட்டுப் போகுமா? கர்ம வாசனை நம்மை எங்கோ இழுத்துச் செல்கிறதே; இதிலிருந்து விடுபட வழி உண்டா?”
இந்தக் கேள்விக்கே ஆண்டாள் பதில் சொல்கிறாள்.
புரந்தரதாசரும் தம் ஒரு கீர்த்தனையில், “நா மாடித கர்மா, பலவந்த வாதரே, நீ மாடுவதேனோ ரங்கா…” என்று இதே வேதனையை வெளிப்படுத்துகிறார்; அதன் விடையையும் கடைசி சரணத்தில் தருகிறார்.
மகரிஷி வஸிஷ்டர் நன்னாளைக் கணித்திருந்தும், மன்னன் தசரதன் ஆவலுடன் விரும்பியிருந்தும், ஸ்ரீ ராமன் சீதையுடன் பெருமாளை வணங்கியிருந்தும், பட்டாபிஷேகம் தடைபட்டது. இதை எடுத்துக்காட்டிய தோழி, “இப்படிப் பெரியோருக்கே இப்படியென்றால், நமக்கெப்படி நிச்சயம்?” என்று அஞ்சுகிறாள்.
அதற்கு ஆண்டாள் கூறுவது: “ராமனை அரசனாக்க விரும்பியவர்கள் ‘நாம் அவனை அரசனாக்குகிறோம்’ என்ற அகந்தையுடன் இருந்தனர். ஆனால் ஆய்ச்சியர்களான நாம் எந்த அகந்தையுமின்றி, கண்ணனுடன் இருப்பதே நமது ஆசை. எதற்கும் தகுதியற்றவர்கள் என்று நம்மையே எண்ணிக்கொண்டு, உலகியலான எந்தப் பலனையும் நாடாமல் இருப்பதே ‘அயோக்யானுசந்தானம்’.”
கர்ம, ஞான, பக்தி யோகங்களைச் சுய முயற்சியால் செய்து வசிஷ்டர், வாமதேவர் போல் முக்தி அடையக் கூடியவர்கள் நாம் அல்ல. வேதம் தெரியாது; வேதாந்தம் தெரியாது; சாஸ்திரம், சம்பிரதாயம் தெரியாது. ஆனால் நம்மால் செய்யக்கூடிய சில எளிய வழிகள் இருக்கின்றன.
பாசுர விசேஷம்: இந்தப் பாசுரத்தில் உபாயம், உபேயம், புருஷார்த்தம் – மூன்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.
உபாயம் – மலர் தூவி தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்
உபேயம் – மாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், ஆயர் குலத்து அணிவிளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்
புருஷார்த்தம் – போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகுதல்
இந்த வழியில் நடந்தால், பல ஜன்மங்களில் சேர்த்த பாவங்களும், இனி அறியாமல் சேரப்போகும் பாவங்களும் தீயில் போடப்பட்ட பஞ்சுபோல் முற்றிலும் அழியும் என ஆண்டாள் உறுதியாகச் சொல்கிறாள்.
“நாம் அசுத்தர்கள்; நமக்கு தகுதி இல்லை” என்ற எண்ணமே தேவையில்லை. உள்ள நிலையில், உள்ளபடியே அவனை அணுகலாம். அவன் வருவானா, நாம் போக வேண்டுமா என்ற குழப்பமும் வேண்டாம். உபேயமாக அவனை நினைக்கும் போது, அவனை அடைய வேண்டுமென்ற தணியாத ஆவலே மற்ற எல்லா பயங்களையும் கரைத்துவிடும்.
இந்தப் பாசுரம் முழுவதும் ப்ரபத்தி மார்க்கத்தின் சாரத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது. மனம், வாக்கு, காயம் என்ற த்ரிகரணங்களால் – கைகளால் மலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் அனுசந்தித்தால் – கர்ம கட்டு அவிழும். புண்யமும் பாவமும் இரண்டுமே மோக்ஷத்திற்கு தடையாக இருப்பதால், அவற்றை இரண்டையும் பகவதர்ப்பணமாக, க்ருஷ்ணார்ப்பணமாக மாற்ற வேண்டும் என்ற உபதேசமும் இதில் அடங்கியுள்ளது.
“மாயன்” லீலாவிபூதி நாதனையும், “மன்னு” பரத்துவ மூர்த்தியான வாசுதேவனையும், “வடமதுரை மைந்தன்” பரமபத நாதனையும் குறிப்பதாக உள்ளுரைப் பொருள் கூறப்படுகிறது. “யமுனைத் துறைவன்” என்பது வைகுண்டத்தில் பாயும் விராஜ நதிக்கரையில் எழுந்தருளியவனையும் குறிக்கும். இன்னொரு வகையில், யமுனை சம்சார பந்தத்தின் உருவகம்; அதை கடக்க உதவும் படகுத் தலைவனாக கண்ணன் துணையாக நிற்கிறான் என்பதே அதன் உள்ளர்த்தம்.
பகவத் ஞானம் வருவதற்கு முன் செய்த பிழைகளும், பக்தியான பின் அறியாமல் செய்த பாவங்களும், அவன் நாமத்தைச் செப்பினாலே தீயில் எரியும் பஞ்சுபோல் உடனடியாக அழிந்து விடும் என ஆண்டாள் அறிவுறுத்துகிறாள்.
“தூமலர்” என்பது வெளிப்புற மலரல்ல; அடியவரின் உள்ளத்திலிருந்து மலரும் எட்டு நற்குணங்களை உணர்த்துகிறது:
1. அகிம்சை
2. புலனடக்கம்
3. எல்லா உயிர்களிடத்திலும் நேசம்
4. பொறுமை, சமத்துவம்
5. ஞானம்
6. தியானம்
7. ஆன்மீக தவம்
8. சத்தியம்
எளிமையாகச் சொன்னால், பரமனை அடைய பெரிய அளவில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் அவசியமில்லை. மலர் தூவி வணங்கி, போற்றிப் பாடி, முடிந்த பொழுதெல்லாம் அவனைச் சிந்தித்துக் கொண்டிருப்பதே போதும். இந்த ப்ரபத்தி மார்க்கமே மோட்ச சித்தியை அளிக்கும் என்பது இப்பாசுரத்தின் சாரம்.
மோக்ஷம் அடைவதற்கான மூன்று வழிகள்:
1. கர்ம பாரதந்த்ரியம் – சுய முயற்சியால்
2. க்ருபா பாரதந்த்ரியம் – ப்ரபத்தி / சரணாகதி மூலம்
3. இச்சா பாரதந்த்ரியம் – எம்பெருமானின் சுய விருப்பத்தால்
திருவாய்ப்பாடியில் உள்ளவர்கள் மூன்றாம் வகை. நாம் அனைவரும் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள்.
பகவானே சரணம். ஆகையால், எம்பெருமானின் புகழைப் பாடுங்கள்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அடியேன் தாசன்
Friday, 19 December 2025
திருப்பாவை பாசுரம் 4: ஆழி மழைக்கண்ணா...
திருப்பாவை பாசுரம் 4: ஆழி மழைக்கண்ணா...
தமிழ் இலக்கியத்தின் அரிய மணிமகுடங்களில் ஒன்றாக விளங்குவது ஆண்டாளின் இப்பாடல். பதினொன்று முறை "ழ"கரம் இந்த பாசுரத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. கவிஞர்கள் பொதுவாக கண்களுக்கு எளிதில் புலப்படும் இயற்கை வடிவங்களையும் நிகழ்வுகளையும் உவமைகளாகக் கொண்டு, அவற்றின் வழியே இறையிருப்பின் பரிமாணங்களை நமக்கு உணர்த்த முயல்வார்கள். ஹிந்தி இலக்கிய மரபில் இவ்வகை அணுகுமுறை “சாயவாதம்” என அழைக்கப்படுகிறது. இயற்கையின் வாயிலாக இறைவனை அனுபவிப்பதே அதன் சாரம்.
“கார்மேகம் போன்றவன்”, “கடலினும் விரிந்த கண்கள்”, “பவளச் செவ்வாய்” போன்ற உவமைகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆனால் ஆண்டாள் இப்பாடலில் இதற்கு நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறாள். இங்கு மேகத்தின் நிறமே ஊழி முதல்வனின் உருவமாகிறது; மின்னலின் ஒளி, இறைவன் தன் கரத்தில் தாங்கியிருக்கும் ஆழியின் (சக்கரத்தின்) ஒளியாக மாறுகிறது; இடிமுழக்கம், அவன் இன்னொரு கையிலிருக்கும் வெண்சங்கமான பாஞ்சஜன்யத்தின் அதிர்வாக ஒலிக்கிறது; மழை பொழிவது, சார்ங்கம் என்னும் அவனது வில்லிலிருந்து புறப்படும் அம்புகளின் பெருக்காகக் காணப்படுகிறது.
முதல் மூன்று பாசுரங்களில் பரம், வியூகம், வைபவம் ஆகிய நிலைகளை நாம் கண்டோம். இப்பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்படையாகக் காட்டப்படுகிறது. பகவான் ஸர்வவ்யாபி; எங்கும் நிறைந்திருப்பவன். எம்பெருமான் இவ்வுலகை படைத்ததோடு நிற்காமல், அனைத்து ஜீவராசிகளின் உள்ளத்தின் உள்ளேயும் குடிகொண்டிருக்கிறான். சாந்தோக்கிய உபநிஷத்தில் சொல்லப்படும் “தத் தவம் அஸி” என்ற மகாவாக்கியம் உணர்த்தும் பரம்பொருள் நிலை இதுவே. இயற்கை எவ்வாறு எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறதோ, அதுபோலவே பகவானும் ஸர்வவ்யாபியாய் எங்கும் வியாபித்துள்ளான்.
முந்தைய பாசுரத்தில் “தீங்கின்றி மும்மாரி பெய்ய…” என்று ஆண்டாள் வேண்டினாள். இயற்கை நம்மை வாழ்விக்கவும் செய்யும்; அதே சமயம் வீழ்த்தவும் செய்யும். பகவான் ஆயுதபாணியாக இருப்பதன் உட்பொருளும் இதுவே. ஆகவே இங்கு “வாழ” என்ற சொல்லே முக்கியமானது. ஆண்டாள் இப்பாசுரத்தில் தெளிவாக வாழ்க்கைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பாடுகிறாள். மக்களை வாழ வைக்க மழை பெய்தால்தான் மகிழ்ச்சி ஏற்படும் என்று அவள் உரைக்கிறாள். உலகமெங்கும் மழை பொழிய வேண்டும் என்ற அவளது பிரார்த்தனை இதன் வெளிப்பாடு.
மாதவன், கேசவன், தாமோதரன், பத்மநாபன், நாராயணன், கோவிந்தன் போன்ற திருநாமங்கள் திருப்பாவையில் பல பாசுரங்களில் பாடப்பட்டிருந்தாலும், கிருஷ்ணாவதாரச் சம்பவங்கள் பல இடங்களில் சுட்டப்பட்டிருந்தாலும், இப்பாசுரத்தில்தான் கிருஷ்ணாவதாரப் பெயரான “கண்ணா” என்ற சொல்லை ஆண்டாள் நேரடியாக உச்சரிக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவள் இங்கு கோகுலக் கிருஷ்ணனை மட்டுமா “கண்ணா” என்று அழைக்கிறாள்? கோகுலத்தில் பகவான் கிருஷ்ணன் “கானா” (காந்ஹா) என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுவான். ஆனால் ஆண்டாளின் பாவனையில் அது மட்டும் அல்ல. இங்கு “மழைக்கண்ணா” என்று அவள் கூறுவது வருணதேவனை நோக்கியே எனலாம்.
அந்தர்யாமித்துவத்தை வெளிப்படுத்தும் விதத்தில், இயற்கையான மழையையும், வருணனையும், பகவானின் உருவமாக ஆண்டாள் கண்டிருப்பாள் போலும். அதனால் வருணனை “கண்ணா” என்று அவள் அழைத்திருக்கலாம். அல்லது, வாஞ்சையோடு அவனை கொஞ்சி, கெஞ்சி, மக்கள் வாழ மழை பெய்ய வேண்டும் என்று யாசித்திருக்கலாம்.
அதனால்தான் “கைகரவேல்” என்ற சொல்லையும் ஆண்டாள் பயன்படுத்துகிறாள். கொடுக்க வேண்டியதை தாராளமாகக் கொடு; குறைத்துக் கொடுத்து விடாதே என்ற அவளது வேண்டுகோள், பகவானின் வள்ளல்தன்மையையும் கருணைப் பெருக்கையும் எடுத்துக் காட்டுகிறது.
மழை தேவனே, நீ எவ்வாறு மழை பொழிய வேண்டும் என்பதை நாங்கள் ஆய்ச்சியர்கள் உனக்குச் சொல்கிறோம். நீ முதலில் சமுத்திரத்துக்குச் செல். கரையோரத்தில் கால் நனைப்பதுபோல் அல்ல; ஆழமாகச் செல். முழுமையாக மூழ்கி வேண்டிய அளவு நீரைப் பருகி, கறுத்த உடலுடன் எழுந்து வா. எந்தக் கறுப்பு என்றால், ஊழிக்காலம் முதலே இருக்கும் அந்தக் கார்மேக வண்ணனைப் போல. அவனின் திருமேனி போன்ற கருமை மட்டும் போதாது; அவனின் பராக்கிரமமும் வேண்டும். பத்மநாபனின் கையில் திகழும் இணையற்ற சக்கராயுதத்தைப் போல மின்ன வேண்டும். அதனால் உண்டாகும் இடிமுழக்கம் சாதாரணமாக இருக்கக் கூடாது; பாரதப் போரில் பகைவர்களை நடுங்கச் செய்த பாஞ்சஜன்யம் போல முழங்க வேண்டும். கோதண்ட ராமனின் தாழாத சாரங்கத்திலிருந்து இடைவிடாது பொழியும் சரமழைபோல், நீ பொழியும் மழையும் இடைவிடாது இருக்க வேண்டும்—என்று கோபியர்கள், ஆண்டாளின் தோழியர்கள், வேண்டிக்கொண்டனர்.
• மேகம் – ஆசாரியர்கள்
• கடல் – வேதம், உபநிஷத்துகள்
• மழை நீர் – எம்பெருமான்
“ஆழி மழைக் கண்ணா” எனும் தொடரின் உட்பொருள் இதுவே. மழை எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் பாரபட்சமின்றி பொழிவதுபோல், ஆசாரியர்களும் ஞான அர்த்தங்களை அனைவருக்கும் சமமாக வழங்குவார்கள். கடல் நீரை மேகம் பருகி, அதைத் தூய்மையான மழை நீராக மாற்றி நமக்குப் பொழிவது போலவே அவர்களின் செயல்பாடும் அமைகிறது.
“ஆழியுள் புக்கு” என்பது, வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம சாஸ்திரங்கள், தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தம் ஆகிய ஞானப் பெருங்கடலில் ஆழ்ந்து புகுதல்.
“முகந்து கொடு” என்பது, அவற்றின் தேர்ந்த பொருளையும் ஆழ்ந்த அர்த்தங்களையும் உணர்ந்து பெறுதல்.
“ஆர்த்தேறி” என்பது, கம்பீரமாகவும் உறுதியுடனும் எழுந்து, பெருமானின் பகவத் குணங்களை இடையறாது சிந்தித்தல்.
“ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து” என்பது, பரமனை எப்போதும் சிந்தையில் நிறுத்தியதால், ஆசாரியர்களும் அவனைப் போலவே கருநிறமும் தயாள குணமும் பெற்றவர்களாக விளங்குதல்.
எல்லையற்ற இறைவனின் குணக்கடலில் ஆழ்ந்து, அதனை அனுபவித்து, உள்ளத்தில் அடக்கிக் கொண்டு, உலகமெங்கும் சென்று பிறருக்கு வழங்குவோர் அறிஞர்களே மேகமாக உவமிக்கப்படுகிறார்கள். “திருமாலின் திருமேனி ஒக்கும்” பேற்றைப் பெற்று எங்கும் சஞ்சரிப்பவர்கள் அவர்கள். கடல் நீரை மேகம் பருகி, தூய்மையான மழை நீராக மாற்றி நமக்குப் பொழிவதுபோல, அவர்கள் ஞானத்தைச் சுத்தமாக்கி உலகிற்கு வழங்குகின்றனர்.
இவ்வாறு தேர்ந்த ஞானத்தை அருளவல்ல ஆசாரியர்களின் திருவடிகளை நாம் சரணடைவோம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!
தூமணி மாடத்து!
தூமணி மாடத்து! உறக்கத்திலிருந்து எழுப்புதல், உறக்கத்திலிருந்து எழுதல் – இவை பற்றிய கவிதைகள் உலக இலக்கியத்தில் எண்ணற்றவை. மனித வாழ்வில் இன்...
-
Bhakti, Bhajans & Boundaries: Reflections on a Recent Judgment This morning, a post by Shri Cuddalore Gopi Bhagavatar caught my eye. I...
-
US Imposes 25% Tariff on Indian Imports: Trade Tensions Escalate Amid Geopolitical Crosswinds In a significant development in global trade...
-
11 Years of Modi Government: Transformation and the Road Ahead Under the leadership of Prime Minister Narendra Modi (2014–2025), India ha...
.jpeg)

.jpeg)

